Sunday, November 12, 2006

வலையுலகமும் சமூகக் கடமையும்...

நண்பர்களே,

சீனர்கள் கொண்டாடும் லாந்தர் விளக்கு பண்டிகை பற்றி தெரிந்திருக்கிறீர்களா? அது நம்மூர் தீபாவளி பண்டிகை போன்ற பண்டிகை. இதன் துவக்கம் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. சீன மொழியில் யுயான் சியாஒ ஜியே என்று அழைக்கப்படுகிற இந்த பண்டிகை ஆங்கிலத்தில் Lantern Festival எனப்படுகிறது. சீன வருடத்தின் முதல் மாதத்தின் 15வது நாளில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். சீனர்கள் இந்த பண்டிகையை கி.மு 206-221 கி.பி வரையான காலத்திலிருந்து கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இப்போதும் இந்த பண்டிகை கால இரவுகளில் வண்ண விளக்குகளை கையிலேந்திய படியே தெருக்களில் குழந்தைகளையும் பெரியவர்களையும் காணலாம். டிராகன் ஆட்டம், பலவித சீன நடனங்கள், வாணவேடிக்கை என கோலாகலமாக நடைபெறும் விழா இது (கானடா வாழ் நண்பர்கள் இந்த பண்டிகையை காணலாம். அமெரிக்காவில் இது நடைபெறுவதாக தெரியவில்லை). இந்த பண்டிகைக்காக முட்டை மற்றும் தாமரையின் கிழங்கை பயன்படுத்தி ஒருவித கேக் செய்வார்கள். மன்னராட்சி காலங்களில் பக்கத்து நகரங்களை எதிரிகளின் படைகளிடமிருந்து காப்பாற்ற இந்த விளக்குகளை விதவிதமாக செய்து செய்திகளை பரிமாறினார்கள். மாவோவின் தலைமையிலான கலாச்சார புரட்சியின் காலத்தில் இந்த விளக்குகள் தடை செய்யப்பட்டது.ஆனாலும் மக்கள் கேக் செய்து தங்களுக்குள் பரிமாறினார்கள். இந்த கேக்கிற்குள் மறைத்து வைத்து செய்திகளும் பரிமாறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டாலும் செய்திகளை பரிமாற வழிகளை உருவாக்கி வந்திருக்கிறது மனித சமுதாயம். ஒலியெழுப்ப கற்றுக்கொண்டதிலிருந்து ஒலிகளை கூட்டுக் கோர்வையாக்கி அவற்றிற்கு பொருள், இலக்கணம், மொழி என வளர்ந்திருக்கிறது மொழியியல். மொழியின் வளர்ச்சி இசை, நாடகம், நாட்டியம் என பல வடிவங்களை பெற்றது. இவை அனைத்தும் செய்திகளை பல வடிவங்களில் பரிமாற ஆதிகாலம் தொட்டு உதவி வருகின்றன. செய்திகளை பரிமாற பல வடிவங்களில் நமது திறமைகளால் ஊடகங்களை (media)உருவாக்கியிருக்கிறோம்.

பனை ஓலை, தேங்காய், கல்வெட்டுகள், செப்புத்தகடுகள், பாறை, சித்திரங்கள், சிற்பங்கள், புறாக்கள், மரம் என பலவும் செய்திகளை சேகரிக்கவும், பரிமாறவும் பயன்பட்டிருக்கிறது. வரலாற்றையும் இலக்கியங்களையும் நமக்கு கொண்டுவந்து சேர்க்க இவை பயன்பட்டிருக்கிறது. இந்த ஊடகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனவோ அவர்களைச் சுற்றிய செய்திகளையே பெரும்பாலும் பிரதானமாக தாங்கி வந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் அச்சுக்கலை வளர்ந்து, பத்திரிக்கைகளாக வெளிவந்த போது மன்னர்களை சார்ந்திருந்த ஊடகங்கள் செல்வம் படைத்தவர்களின் கையில் சேர்ந்தது. அவரவரது கொள்கைகளுக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப சமூகத்தின் வளர்ச்சியில்/மாற்றத்தில் அச்சுமுறையிலான ஊடகம் பங்காற்றியிருக்கிறது.ஆனால் எழுத்து சுதந்திரத்தை தீர்மானிக்கும் வல்லமை யார் பத்திரிக்கைகளை நடத்தி வருகிறார்களோ அவர்கள் ஆதரிக்கிற கொள்கைக்கு ஆதரவாக செய்திகளை தாங்கி வருகிறது. தொடர்ந்த வளர்ச்சியில் வானொலி, தொலைக்காட்சி என பல வடிவங்களை கண்ட போதும் மக்களின் கையில் இல்லாமல் முதலாளிகளின் கைகளில் அவர்களுக்கு சாதகமான கொள்கைகளுக்காக பயன்படுகிறது. எப்படிப்பட்ட செய்திகளை பரப்புவது, அதை எப்படி பரப்புவது அதன் வழி மக்களை எந்த வழிக்கு கொண்டு செல்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலாளித்துவம் விளங்கிவருகிறது. விதிவிலக்காக சில ஊடகங்கள் மட்டும் மக்கள் அமைப்புகளால் அல்லது மக்கள் சார்பாக இருந்தாலும் பிரதான ஊடகங்களின் பிரச்சாரங்களால் விழுங்கப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஊடகம் அடுத்த பரிணாமமாக இணையவலைத் தளங்களாகவும் வலைப்பூக்களாகவும் வளர்ந்திருக்கிறது. இன்றைய காலத்தில் எழுத்தாளர்களது சுதந்திரம் கடந்த காலங்களை விட அதிகமாக நிறுவனமயமான ஊடகத்தின் அதிக்கத்தை கடந்து வளர்கிறது. அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் இணையத்தளங்களின் உருவாக்கம், வலைப்பூ என பரந்த எல்லைகள் உதவுகிறது. பொதுஜன ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள், பதிப்பகங்கள் முதலியன தங்களுக்கு பிடித்தமான/ஆதரவான கருத்துக்களை பரப்புவதில் கவனம் செலுத்தியே வந்திருக்கிறது. அந்த வளையத்தை உடைத்த வல்லமை இணையத்தள ஊடகத்திற்கு உண்டு. இன்றைய சமுதாயம் இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான கேள்வி.

பேனா முனை வாள் முனையை விட பலம் வாய்ந்தது. உலக மற்றும் இந்திய வரலாற்றில் மக்களின் விடுதலைக்காக எழுத்தாளர்கள் பங்கு மிக முக்கிய பங்கை தந்திருக்கிறது. உண்மை செய்திகளை கொண்டு சேர்ப்பதற்காக உயிரையும் கொடுத்த மாவீரர்களை சரித்திரத்தில் காண்கிறோம். அந்த நல்ல மனிதர்கள் மட்டும் இந்த அளப்பரிய பணியை செய்யாமலிருந்தால் இன்றும் நாம் ஒரு காலனியாதிக்க, அடிமைகள் கால உலகில் இருந்திருப்போம். இந்திராகாந்தி அடக்குமுறை சட்டத்தை கொண்டுவந்த வேளைகளில் பல சவால்களை சந்தித்து நமது ஊடகங்கள் மக்களின் விடுதலையை மையமாக வைத்து அரசை எதிர்த்து செய்திகள் வெளியிட்டன.

நமது ஊர்களின் சாலை, தண்ணீர், பேருந்து வசதி இல்லாமை போன்ற பிரச்சனைகளை எழுதும் போது ரசித்து அதற்கு காரணமான அரசியல்வாதிகளை விமர்சிக்கிறோம். கண்டன குரல்களை எழுப்புகிறோம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாமும் காரணமாக இருந்து பிறரை அடிமைப்படுத்துகிற மத,சாதி விடயங்களை பகிர்ந்துகொள்வதை நம்மால் திறந்த மனதுடன் ஆராய முடியாத அளவு நமது வழியில் மட்டுமே உண்மை இருப்பதாக சாதிக்க முனைகிறோம். இதுவே ஆதிக்க அரசியலின் முதல் படி. இந்த தடையான எண்ணம் ஏன்? காலங்காலமாக நாம் நம்பி வருகிற அல்லது கடைபிடிக்கிற வழிமுறைகள், விதிகள் என பலவற்றின் உண்மை உருவம் வெளிப்பட்டால் நம் கலாச்சாரத்தின் மனிததன்மை பற்றிய கேள்வியெழும் என்ற தயக்கமா?

இதற்காகவே தனக்கு சாதகமாக செய்திகளை பரப்புவதிலும், உண்மை போல செய்திகளை பிறரை நம்பவைக்க பல யுக்திகளை வெகுஜன முதலாளித்துவ நிறுவன ஊடகங்களின் பாதையில் வலைப்பூவிலும் ஆதிக்க சிந்தனை வளர்கிறது. இந்த சிந்தனைக்கு எதிரான கருத்துக்களை பொதுவான விவாத தளத்தில் வர விடாமல் தடுக்க போலிப்பெயர்களிலும் அநாகரீக வழிகளிலும் பல வடிவங்களில் வலைப்பதிவுகளில் ஆதிக்க கருதுக்கள் வளர்கிறது. மக்களின் வாழ்வியல் சார்ந்த உண்மை செய்தியை தரும் விதமாக வலைப்பூக்கள் என்கிற ஊடக வடிவம் வளருமா?

சமூக மாற்றம் என்கிற சமூகக் கடமையில் வலையுலக எழுத்தாளர்கள் பங்கு என்ன? மக்கள் வாழ்வை மாற்றும் சக்தி நம்மிடம் என்பதை உணர்கிறோமா? தவறு எங்கிருந்தாலும் சுட்டுவதும், நல்லவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஊடக நேர்மையையும், தரத்தையும் வலையுலகம் என்று பெறும்? அரசுகளின் கொள்கைகளை மாற்றும் வல்லமை படைத்த ஆயுதத்தை துருப்பிடிக்க வைப்பதா? வரலாற்றிலிருந்து பாடம் கற்போம். பரந்த வெளியில் பாடித்திரியும் பறவைகளாக கூடுகளை விட்டு வெளியேறுவோம்!

2 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

கருத்துள்ள நல்ல பதிவு!
எதிலும் விழிப்பும் விடாமுயற்சியும் தேவை என்பதில் கவனமாக இருப்போம்.

BadNewsIndia said...

நல்ல பதிவு!
பதிவில் சொல்ல வந்த விஷயம் மூணு பத்தி தாண்டி வருது. இன்னும் சுருக்கி நச்சுன்னு சொன்னீங்கன்னா நிறைய பேர் முழுசா படிப்பாங்க.

நல்ல விஷயங்கள்!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com