Thursday, October 30, 2008

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்3

தமிழராக மட்டும் பிறக்க கூடாது… எங்கட வலியும், துயரமும் அவ்வளவு பெரியது…” மட்டகளப்பில் வாழும் தமிழ் சகோதரி ஒருவர்.


டந்த 25 வருடங்களாக இலங்கை பேரினவாத அரசுகளுக்கு நெருக்கடிகள் வரும்போதெல்லாம் இந்திய ஆளும், அதிகார வர்க்கமும், மேட்டுக்குடி ஊடகங்களும் ஆதரவாக களத்தில் இறங்கிவிடுகின்றன. ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கிற இலங்கை அரசின் யுத்தத்தை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் விடுக்கிற கோரிக்கைக்கு ‘இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது’ என்று சால்சாப்பு கதைகளை சொல்லும் ஜெயலலிதா, ஞானசேகரன், புதுடில்லியின் அதிகார வர்க்கம் எதற்காக ஆயுதங்களையும், பயிற்சிகளையும், பெரும் பண உதவிகளையும், வல்லுநர்களையும் இலங்கை அரசுக்கு வழங்கியது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். யுத்தத்தை நிறுத்த தலையிட முடியாது என்று நழுவுகிற இந்தியா எந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் படியான தீர்வை இனப்பிரச்சனைக்கு முன்வைக்கிறது?


பாசில் ராஜபக்சேவின் புதுடில்லி வருகைக்கு பின்னர் கூட்டாக இந்தியா-இலங்கை வெளியிட்ட அறிக்கை; //Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that terrorism should be countered with resolve. The Indian side called for implementation of the 13th Amendment and greater devolution of powers to the provinces.//


இந்தியா இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கிற 13வது திருத்தம் தமிழர்களுக்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமையை கூட வழங்கவில்லை. மாகாண கவுன்சில்களை உருவாக்கவும், அந்த மாகாண கவின்சில்களுக்கு சில சிவில் உரிமைகளை வழங்கவும் 13வது திருத்தம் வழி ஏற்படுத்துகிறது. ஆனால் 13 சட்ட திருத்தம் ஈழத்தமிழர்களது அரசியல் உரிமைகளையும், விருப்பங்களையும் முன்னெப்போதையும் விட சிங்கள ஆதிக்கம் நிறைந்த கொழும்புவின் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் முடக்குகிறது. மாகாண கவின்சில்களில் முதலமைச்சர்கள் பதிவியும், கவர்னர் பதவியும் உருவாக்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சரை விடவும் இலங்கை அரச அதிபரால் நியமிக்கப்படும் கவர்னருக்கு செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எக்காலத்திலும் தமிழர் ஒருவரால் இலங்கையின் அதிபராவதை நினைத்தும் பார்க்க இயலாத அரசியல் சட்ட பொறிமுறையில், நினைத்த நேரம் சிங்கள அதிபரால் தமிழர் பகுதிகளின் முதலமைச்சர்களையும், செயல்திட்டங்களையும் முடக்க இயலும். 13வது சட்டத்திருத்ததால் தமிழர்களுக்கு சுயமாக நிதியை கையாண்டு திட்டங்களை உருவாக்கவோ, மாகாணத்தின் நிலம் உள்ளிட்ட வளங்களில் அதிகாரம் செலுத்தவோ, காவல்த்துறையையும் சட்டம் ஒழுங்கு, உயர்கல்வி போன்றவற்றை நிர்வகிக்கவோ அதிகாரமில்லை. இலங்கை அரசு நினைத்தால் மாகாண கவின்சில்கள் சம்பந்தமான சட்டத்தை எளிதாக திருத்தங்களை உருவாக்க அனுமதி வழங்குகிறது. புதுடில்லியின் வழிகாட்டுதலில் தான் இந்த 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு உருவக்கியது. தமிழகத்தின் பேரூராட்சி தலைவருக்கு உள்ள அதிகாரத்தையும் விடவும் குறைந்த அளவு அதிகாரத்தை கொண்ட மாகாண கவுன்சில் கொண்ட 13வது சட்டத்திருத்ததை காட்டி ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைப் போராட்டமான தமிழீழ கனவை இந்தியா தொடர்ந்து நசுக்குகிறது.


13வது சட்டத்திருத்ததின் வழியை பின்பற்றி ராஜபக்சே உருவாக்கிய கிழக்கு மாகாண அரசால் தற்போது மனித உரிமையும், சமாதானமும், மக்களாட்சியும் மலர்ந்து பாலாறும், தேனாறும் பருகுகிறார்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள்? கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்களின் ஆயுதம் தாங்கிய படையினர் வீடு வீடாக சென்று மக்களை இழுத்துச் செல்வதும், இளையோரையும், சிறுவர்களையும் ஆயுதகுழுக்களில் சேர்ப்பதையும், ஆட்கடத்தல், படுகொலைகளை தொடர்வதையும் அவர்களுக்கு வழங்கியுள்ள எம்.பி மற்றும் முதலமைச்சர் பதவிகளில் மறைக்க இயலாது. இலங்கை அரசு படைகளது கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும், கொடுமைகளோடு நிறுத்தாமல் ஆயுதக்குழுக்களை ஆதரித்து, உருவாக்கி தமிழர்களை தமிழர்களை வைத்தே கொலை செய்கிறது. கிழக்கு பகுதியின் இயற்கை வளங்களை கொள்ளையிடும் நோக்குடன் இந்தியா ஆதரிக்கும் தீர்வு சாதாரண பொதுமக்களான தமிழ் மக்கள் எவரும் மட்டக்களப்பில் பாதுகாப்பில்லாத நிலையை இன்று உருவாகியிருக்கிறது. யுத்தமும், பாதுகாப்பற்ற நிலையும் நீடிக்கும் போதே கிழக்கு பகுதியில் வளங்களை சுரண்ட மின்நிலையங்கள், எண்ணை அகழ்வு என்று இறங்கிவிட்டது இந்தியா.


ஆயுத போராட்டத்தை பயங்கரவாதம் என்று வரையறுக்கும் போது ஆயுதக்குழுக்களின் தலைவர்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா எப்படி காந்தியின் மறுபிறப்பானார்கள் என்று யார் கேட்கப்போகிறார்கள்? இந்தியா சமாதானவாதிகளாக சித்தரிக்கும் இவர்களைப் பற்றி மனித உரிமை அமைப்புகள் குற்றப்பட்டியலே வைத்திருக்கின்றன. இலங்கை அரசு கள்ளத்தனமாக பிரித்தானியாவுக்கு அனுப்பி சிறையிலடைக்கப்பட்ட போது கருணாவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கவேண்டுமென மனித உரிமை அமைப்பு முறையிட்டது. கடந்த ஜூன் மாதம் ஜெனிவாவில் நடந்த விவாத கூட்டமொன்றில் இலங்கை தூதுவரிடம் கிழக்கு மாகாணத்தில் ஆயுதகுழுக்கள் இலங்கை படையினரின் ஆதரவுடன் சிறார்களை ஆயுததாரிகளாக மாற்றுவது பற்றிய குற்றச்சாட்டும், கடத்தப்பட்ட சிறார்கள் எண்ணிக்கையும் மனித உரிமை அமைப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்டன. இலங்கை தூதுவரால் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறினார்.


தமிழ்தேசிய கூட்டணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆயுதம் தாங்கியவர்களில்லை. அவர்களை தொடர்ந்து இலங்கை அரசு படுகொலை செய்த போதெல்லாம் இந்தியா மௌனமாகவே இருந்தது. இந்த படுகொலைகள் நடந்த போதும் இந்தியாவின் ஆதரவு சர்வதேச மனித உரிமை கூட்டங்களில் தொடர்ந்தன.


ஈழத்தமிழர்களது விருப்பத்துக்கு எதிரான 13வது சட்டத்திருத்தத்தை உடும்பு பிடியாக இந்தியா பிடித்திருக்க காரணமென்ன?


ஈழத்தமிழர்களை மறைவான யுத்ததில் கொல்கிறது இந்தியா!

நேரடியாக யுத்தத்தில் கொல்கிறது இலங்கை!

நாளை பார்க்கலாம்…

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்2

"சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே, தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு"
1976 ஆம் ஆண்டு நவம்பர் 19 இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் தந்தை.செல்வநாயகம்.

“This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.”

Political Resolution unanimously adopted at the First National Convention of the Tamil United Liberation Front held at Pannakam (Vaddukoddai Constituency) on 14 May 1976 presided over by Mr. S.J.V. Chelvanayakam, Q.C, M.P.

ஈழத்தமிழர்களுக்காக மனிதசங்கிலி நடைபெற்ற நாளிற்கு முன்னர் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தையும், சுப்பிரமணியசாமியின் மதுரை அலுவலகத்தையும் கோபமடைந்த வழக்கறிஞர்களும், மாணவர்களும் தாக்கினர். ஈழத்தமிழர்களது போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாளர்கள் மீது வெளிப்படையான கோபமுமாக தமிழக மக்களின் எழுச்சி உருவான சூழலில், ஜெயலலிதா தனது மோசமான அரசியலை அறிக்கைகள் வழி தொடர்ந்தார். உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவின் அறிக்கை ‘உணர்ச்சிவசப்பட்டு’ உரையாற்றிய வைகோவை கைது செய்ய வைத்தது. ஜெயலலிதாவை வாய்மூட வைப்பதாக நினைத்து வைகோவை சிறைக்கு அனுப்பும் அரசியல் நடவடிக்கையை கலைஞர் செய்தார். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு கலைஞர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க என்ன அவசியம்? ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு மக்களிடம் குப்பை காகிதங்களின் மதிப்புமில்லை என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா?

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் விடுத்த அறிக்கைகளும், பேட்டிகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நடத்திய கூட்டமும் சேர்ந்து கலைஞரின் நாற்காலி கால்களை வெட்ட துவங்கியிருந்தது. புதுடில்லிக்கு அரசியல் கெடு வைத்த கலைஞருக்கு தமிழக எம்.எல்.ஏக்கள் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் கேடு வைக்க துவங்கியது. காங்கிரசையும், ஜெயலலிதாவையும் எதிர்கொள்ள மனிதச்சங்கிலி முடிந்து மழைவெள்ளம் காயும் முன்னர் சீமானையும், அமீரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது கலைஞரது அரசு. மனிதசங்கிலியில் இணைந்த ஒவ்வொருவரையும் இன்னும் ஏன் தமிழக அரசு கைது செய்யவில்லை என்ற கேள்வி ஜெயலலிதா அல்லது காங்கிரசிடமிருந்து வருமானால், அதையும் செய்து முடிக்கும் கடமையுணர்வு கலைஞருக்கு (!) வருமென நம்பலாம். இந்த கைது படலங்கள் துவங்கியதிலிருந்து கலைஞரது அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகள் காற்றில் கரைந்து போனது. புதுடில்லி மற்றும் தமிழக அரசின் நிலையான தன்மையை காரணமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலில் நழுவ துவங்கியது மட்டுமல்ல; சிங்கள பேரினவாத அரசால் யுத்தத்தில் கொல்லப்படும் ஈழத்தமிழர்களையும், சிங்கள பேரினவாத அரசின் கடற்படையால் கொல்லப்படும் தமிழக மீனவர்களையும் பாதுகாக்க எந்த உறுதியான அழுத்தத்தையும் தொடர்வதாக தகவலில்லை. உயிருக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உருவாக்க துவங்கிய தமிழகத்தின் எழுச்சியை பசிக்கொடுமைக்கு உணவு சேகரிக்கும் நிவாரண பணியாக மாற்றியது கலைஞரின் அரசியல். புதுடில்லிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழர்களின் எழுச்சியை கலைஞரின் கைது நடவடிக்கை மிரட்டுகிறது. ஈழத்தமிழர்கள் விசயத்தில் கலைஞரை இழுக்கும் கயிற்றை ஜெயலலிதாவின் பொய்யறிக்கைகளும், காங்கிரசும், உளவுத்துறையும் பெற்றிருப்பது தமிழக அரசியலின் வேதனை நிகழ்வுகளில் ஒன்று. ஈழப்பிரச்சனையில் கலைஞர் ஏன் ஜெயலலிதா மற்றும் புதுடில்லி முன்னால் எழுந்து நிற்க தயங்குகிறார்? அவருக்கே வெளிச்சம்!

ராஜபக்சேயின் சகோதரர் பாசில் ராஜபக்சே புதுடில்லிக்கு பறந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர் கலைஞரை சென்னையில் பிரணாப் முகர்ஜி சந்தித்த போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த அரசியல் சரணடைந்திருக்கிறார் கலைஞர். ‘மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்’ என்ற கலைஞரது வார்த்தைகள் மழைவெள்ளத்தில் மனிதசங்கிலியாக இணைந்த பல இலட்சம் மக்களையும் சேர்த்து புதுடில்லி பாதுசாவின் கால்களில் அடமானம் வைத்தது. கலைஞர் இப்படி ஒரு உறுதியை கொடுக்க புதுடில்லி ஈழத்தமிழர் பிரச்சனையில் கொடுத்த உத்தரவாதம் என்ன? ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சனையில் ‘மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை ஏற்பதாக’ கலைஞர் அறிவித்ததன் விளைவு தான் இந்தியா மறைமுகமாக இலங்கையில் யுத்தம் நடத்த காரணமானது. தற்போது, தமிழர்களை துல்லியமாக அழித்தொழிக்க வழங்கி வருகிற இரகசிய பயிற்சிகளையும், தகவல்களையும், உதவிகளையும், அனுப்பியிருக்கும் இந்திய இராணுவ வல்லுநர்களையும், ஆயுதங்களையும் இலங்கையிடமிருந்து திரும்ப பெறுவதாக புதுடில்லி அறிவித்ததா? வட்டியில்லா கடனாகவும், குறைந்த வட்டிக்கும் தமிழ் மக்களது வரிப்பணத்தை இலங்கைக்கு வழங்கி தமிழர்களை கொல்ல ஆயுதம் வாங்குவதை ஊக்குவிப்பதை நிறுத்துவதாக மன்மோகன்சிங் அரசும், பா.சிதம்பரமும் அறிவித்தனரா? தமிழ்மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகள், காடுகழனிகளில் தாக்குதலை நிறுத்தி மக்கள் மீதான இராணுவ, துணைப்படைகளின் நெருக்குதலை பின்வாங்குவதாக இலங்கை அறிவித்ததா? இந்தியா இலங்கை கூட்டறிக்கையில் இதற்கான எந்த உறுதியும் கண்டனமும் இல்லை.

//India conveyed its concern at the humanitarian situation in the northern part of Sri Lanka, especially of the civilians and internally displaced persons caught in the hostilities and emphasised the need for unhindered essential relief supplies. Mr. Rajapaksa briefed the Indian authorities of the efforts by the Sri Lanka Government to afford relief and ensure the welfare of the civilian population in the North. He assured that the safety and wellbeing of the Tamil community in Sri Lanka is being taken care of.

As a gesture of goodwill, India has decided to send around 800 tonnes of relief material to Sri Lanka for the affected civilians in the North. The Government of Sri Lanka will facilitate the delivery. Both sides agreed to consult and cooperate with each other in addressing these humanitarian issues.//

இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுக்கிற தாக்குதலை நிறுத்த அறிக்கையில் எந்த உறுதியும் இல்லை. மேம்போக்கான யுத்ததால் பாதிக்கப்படும் மக்கள் மீது அக்கறை செலுத்துவதாக தெரிவித்து விட்டு, ‘தடையில்லாமல் நிவாரண பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது’ இந்தியா. நமது வீடுகள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், கடைகள், கோயில்கள் மீது வான், தரை வழி குண்டு தாக்குதல்கள் தொடர்வதை தடுக்க வேண்டாம். ஆனால் பிரியாணி பொட்டலம் தடையில்லாமல் கிடைக்க வழிசெய்தால் போதும் என்றால் தமிழக மக்களும், புதுடில்லி மக்களும் ஏற்றுக்கொள்வார்களா? அதுவும் அந்த நிவாரண பொருட்களை தாக்குதலை தொடுத்து வருகிற சிங்கள பேரினவாத இலங்கை அரசு வழியாகவே வழங்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர் புதுடில்லியும், கலைஞரும். சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா அமைப்புகள் போன்ற பாரபட்சமற்ற அமைப்புகளை கூட குறிப்பிடவில்லை. இந்தியா, தமிழர்களது பணத்தில் நிவாரண பொருட்கள் வழங்கி தனது ஆதரவு ஆயுதகும்பல்களை வளர்க்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் போல தொடர்கிறது. கலைஞரும் ஆமாம் சாமி போட்டுவிட்டார். இனி என்ன ஈழத்தமிழர்களுக்கு கொத்துக்கறியும், கோழி பிரியாணியும் தான்!

இந்தியாவில் இருப்பிடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் அனைத்திலும் விமான தாக்குதலில் சிதைத்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் கொன்றொழிக்கும் அதே வேளை 800 டன் அல்ல 80,000 டன் சப்பாத்தியும், பருப்பு குழம்பும், சோறும் வழங்கினால் புதுடில்லி மற்றும் சென்னையில் உள்ள அரசுகள் ஏற்றுக்கொள்ளுமா? இந்த முரண்பாட்டிற்கு பெயர் நல்லெண்ண நடவடிக்கையாம். யார் மீது நல்லெண்ணம்? சிங்கள பேரினவாதம் மீதா? இந்தியா-இலங்கை கூட்டறிக்கையில் என்ன அரசியல் தீர்வு சொல்லப்பட்டுள்ளது? ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசியல் தீர்வு எப்படிப்பட்டது?

...நாளை பார்ப்போம்…


Tuesday, October 28, 2008

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்1

தமிழக அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானம், மக்கள் போராட்டங்கள், மனிதசங்கிலி நடவடிக்கைகளின் அழுத்தத்தால் மன்மோகன்சிங் அரசு தமிழர் இனப்பிரச்சனையில் நீண்ட மௌனத்தை கலைத்தது. தொடர்ந்து இலங்கையின் இராஜபக்சே அரசு புதுடில்லிக்கு பாசில் ராஜபக்சேவை அனுப்பி இயற்கை பேரிடரினால் தமிழ்மக்கள் பட்டினியால் வாடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிருக்கிறது. இலங்கை அரசின் யுத்த வெறியில் உயிருக்கு போராடி, பட்டினியால் வாடி, பதுங்கு குழிகளில் முடங்கி, மரங்களுக்கடியில் அகதிகளாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டதை பற்றிய கண்டனமோ, கவலையோ இந்திய-இலங்கை தரப்பு அறிவிப்புகளில் துளியும் இல்லை. பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு உணவு பொருட்களை திரட்டி அனுப்புவது போன்று பிரணாப் முகர்ஜி 800 டன் உணவுப் பொருட்களை அனுப்புவதாக அறிவித்துள்ளார். கிடைத்தவரை இலாபம் என்று இலங்கை அரசும் இந்தியாவிடமிருந்து உணவை பெற முடிவு செய்திருக்கிறது. உணவுப் பொருட்கள் தமிழீழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேருமா, சுனாமி நிவாரண பொருட்கள் கொள்ளையிடப்பட்டது போன்று இராணுவ முகாம்களுக்குள்ளும், அரசியல்வாதிகளின் பைகளிலும் முடங்குமா என்பதை வரும் நாட்களில் அறியலாம்.

கலைஞரிடம் ‘ஈழத்தமிழர் பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம்’ வாக்குறுதியை பெற்று பிரணாப் முகர்ஜி புதுடில்லிக்கு சென்ற பின்னர், இன்று காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் மிக் 27 விமானக்குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேரை கொன்றுள்ளது. இத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலையில் படித்து வருகிற சுமார் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். கடந்த வாரத்தில் புதுடில்லி-கொழும்பு அரசியலில் ஏமாற்றப்பட்டார் அல்லது அவரும் இணைந்து தமிழினத்தை ஏமாற்றியிருக்கிறார் என்ற பழிச்சொல் ஏற்படாமலிருக்க அரசியல் அழுத்தத்தை தொடரும் பொறுப்பு தற்போது கலைஞருக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.

இலங்கை அரசு நாள்தோறும் தமிழர்களது குடிசைகளில், பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், காடுகழனிகளில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளால் துளைப்பதையும், வான்வெளியாக விமான குண்டுகளை வீசி அழிப்பதையும், ஆயுதமுனையில் சிறார்களை கடத்தி துணைப் படைகளின் ஆயுத வன்முறைக்கு உள்ளாக்குவதையும், பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு செய்வதையும் எதிர்க்காமல் உணவு பொருட்கள் மட்டுமே வழங்கும் புதுடில்லியின் அரசியலை தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் கொண்டவர்கள் புரிந்துகொள்வர். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கண்மூடித்தனமான விமான தாக்குதல்களை நிறுத்த இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. இலங்கை படைகளுக்கான பயிற்சிகள், தொழில்நுட்பம், தகவல் பறிமாற்றம், தொழில்நுட்பவியலாளர்கள், ஆயுதங்கள், பண உதவி, உலக அரசியல் அரங்குகளில் இலங்கைக்கு ஆதரவு என அனைத்தையும் செய்து இலங்கை அரசிற்கான யுத்தத்தை இந்தியா மறைமுகமாக நடத்துவதால் அப்படி ஒரு அழுத்தத்தை கொடுக்கும் நிலையில் இந்தியா இன்று இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவால் இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் ஆதரவு நாடாக மட்டுமே செயல்பட முடியும்.

ஈழத்தமிழர் போராட்டத்தை இன்று பயங்கரவாதம் என்ற மாயப்பெட்டிக்குள் அடைக்க முனைகிற புதுடில்லியின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களும், அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் ஈழத்தின் முதற் பகுதி வரலாற்றை வசதியாக மறைத்து இலங்கைத் தீவின் சிங்கள ஆதிக்கத்தை ஆதரிக்கிற தவறை தொடர்ந்து செய்கிறார்கள். இலங்கையை விட்டு பிரித்தானியர்கள் வெளியேறியது முதல் இன்று வரையிலும் ஈழத்தில் தமிழர்கள் அமைதியான பல வழிகளிலும் உரிமைக்காக போராடினார்கள். அவர்களோடு பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது இலங்கை அரசுகள். ஒவ்வொரு ஒப்பந்தமும் சிங்கள பேரினவாதத்தின் அரசியலால் முறிக்கப்பட்டன. சிங்கள பேரினவாத இலங்கை அரசுகள் தொடர்ந்து ஏமாற்றியதன் விளைவாகவே ஆயுதம் தாங்காத அரசியல் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருவாகின. ஆயுதம் தாங்கியவர்களை ஆதரிப்பதில்லை என்று அறிக்கைகள் விடுப்பதற்கு முன்னர் இலங்கை அரசியலில் தமிழீழ போராட்டத்தின் அடிப்படை அம்சங்களான ஆயுதங்களற்ற போராட்டங்களை தமிழக/இந்திய தலைவர்கள் அறிவ வேண்டும். தமிழீழம் என்ற கோரிக்கையை முதலில் முன் வைத்தவர் யார் தெரியுமா? வேலுபிள்ளை பிரபாகரனா? விடுதலைப் புலிகளா? ஏன் தமிழீழ கோரிக்கை எழுந்தது?


நாளை பார்ப்போம்…