Saturday, March 30, 2024

பாசிச குற்றக்கும்பலை வீழ்த்துவோம்!

தங்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தையும், பணத்தையும், சொகுசையும் முறையற்ற, மோசடி வழிகளில் சேர்ப்பதற்காக எதையும் செய்யத் துணிந்த இரண்டு ரவுடிகள். அதற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தேர்ந்தெடுத்து செய்துவருபவை தேர்ந்த குற்றக்கும்பல்களை மிஞ்சுபவை. பாசிசத்தின் அத்தனைக் கூறுகளையும் உடையவை. 

ஆசையைத் தூண்டினால் பணிபவர்களிடம் ஆசை காட்டுதல். அதற்கு எத்தனையோ வழிகள். பதவி, பணம், முறைகேடான வழிகளில் சொத்து சேர்க்க அனுமதி, வழக்குகளிலிருந்து விடுதலை செய்ய வைத்தல் அல்லது வழக்குகளைத் தேங்க வைத்தல், பதவிகாலம் முடிந்ததும் உயர் அவைகளில் பதவி, உயர் பொறுப்புகள்.“அத்தனைக்கும் ஆசைப்படு மொத்தமாக எங்கள் காலடியில் உன்னைக் கொடு” என்பது தாரக மந்திரம். 

இவர்கள் மிரட்டலுக்கு அச்சமடைந்து மோசடிகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றறிந்தால் அவர்களிடம் விதவிதமான வழிகளில் மிரட்டல். அது பொதுமேடைகளில், நீதிமன்றங்களில், சோதனை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் வழி சிரித்தபடியும், எச்சரித்த படியும் என விதவிதமாக மிரட்டல்கள். அந்த மிரட்டலில் கூட பல வகை, பல கட்டங்கள். அதற்கும் அடங்காதவர்களை உரகத்தைவிட்டே மர்ம வழிகளில் தீர்த்துக்கட்டுதல். அவர் நீதிபதியே ஆனாலும் கூட… அதை மற்றவர்கள் கண்டு, கேட்டு மிரள வைத்தல். அந்த வழக்கையும் மிரட்டல், உருட்டல் வழி நீர்த்துப்போக வைத்தல். 

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளானாலும் ஆசைத் தூண்டியும், அச்சத்தைக் காட்டியும் பணிய வைத்தல். கடந்த பத்தாண்டுகளில் ஆசை, அச்சம் இரண்டையும் பாசிசத்தின் அத்தனைக் கூறுகளோடு ஆட்சியதிகாரத்தின் ஆயுதமாக்கியது இக்கும்பல். கூட்டணியை சேர்க்க, கூட்டணிகளை பிளக்க, கட்சிகளை பிரிக்க, மக்கள் பிரதிநிதிகளை அபகரித்து ஆட்சிகளைக் கைப்பற்ற, ஊடகங்களை மௌனமாக்க/பல்லக்குத் தூக்க வைக்க, நீதிமன்ற தீர்ப்புகளை எழுத வைக்க, நிதி மூலங்களை தகர்க்க என எத்தனையோ குற்றங்களை அதிகாரத்தின், சட்டத்தின் எல்லைகளை ஆயுதமாக இக்கும்பல் பயன்படுத்தியது. 

ஒரு சிற்றூரின் நிர்வாகத்தைக் கூட ஆட்சிசெய்ய திறன் இல்லாதவர்கள். குரூரமும், பாசிசமும் மூலதனமாகக் கொண்ட குற்றக்கும்பல். அதுவே அவர்கள் சித்தாந்தம், கொள்கை. இந்த பத்தாண்டு ஆட்சி என்பது வெறும் முன்னோட்டம் மட்டுமே. இன்னும் தொடருமானால் மாறாத தீங்கும், தீராத இன்னலும் பெருமடங்காகும். 

பாசிச குற்றக்கும்பலை வீழ்த்துவோம்!