Sunday, August 12, 2007

படங்களில் சில...

பூங்காவில் குடியிருக்கும் அழகிய பறவைகளும், ஒரு முழுமதி இரவில் என் அறையின் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவும். படங்களை பெரிதாக காண படங்களின் மீது அழுத்தவும்.

Goose

Moon


Pigeon


Goose

Wednesday, August 08, 2007

பத்திரிக்கையாளர் மாலனுக்கு...

ஈழத்தமிழர், ஈழப்போராட்டம் பற்றியும் தாங்கள் வலைப்பதிவுகளில் எழுதியதை படித்து இந்திய தேசியம், இந்திய இறையாண்மை பற்றிய சில கேள்விகள் வருகின்றன. ஈழம் பற்றிய பதிவு எழுதுவதாக அறிவித்திருந்தீர்கள். இந்த சூழலில் ஈழத்தமிழர்களது பாஸ்போர்ட் பற்றி வேறு அக்கறைப்படுகிறீர்கள். தமிழீழ மக்களின் போராட்டங்களும், வேதனைகளும் வேடிக்கைக்காக எழுதவோ, பேசவோ வேண்டிய சாதாரண பிரச்சனையல்ல. இந்த நிலையில் பத்திரிக்கையாளர், பிரபலம் என்ற முத்திரை கொண்ட உங்களது வார்த்தைகள் எந்த அடிப்படையில் எழுகின்றன?

2002 ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை காலங்களின் போதே தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்துமஸ் அன்று இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏன்? ஆயுதம் தாங்கிய போராளியா அவர்? அப்போது என்ன யுத்தகாலமா? பேச்சுவார்த்தையில் கையை நீட்டிக்கொண்டே பேசும் தரப்பை உடைத்து துண்டாடும் 'சாணக்கிய' பார்ப்பனீய தந்திரத்தை சிங்கள அரசு கையாண்டு அதன் விளைவாக கருணா தலைமையில் துணைப்படையை உருவாக்கியது யாரை அச்சுறுத்த? யாருக்கு இதனால் இழப்பு? இன்றைய மோதல்களும், கட்டுகளற்ற வன்முறையும் உருவாக காரணமாக அமைந்ததே பேச்சுவார்த்தை நடக்கும் போது இலங்கை அரசு திரைமறைவில் நிகழ்த்திய இந்த கேவலமான அரசியல் விளையாட்டு தானே? துணைப்படைகளின் வெறியாட்டத்திற்கு பலியாவது அப்பாவி ஈழத்தமிழர்கள் தானே! நமெக்கன்ன? வீட்டு வாசலில்/வீதியில் 'வெள்ளை வேன்' எப்போது வருமோ என்ற மரண பயத்தில் கடத்தல் காரகளிடமிருந்து தப்பித்து பிழைக்கும் போராட்ட வாழ்க்கை கடலுக்கு அப்பால் வாழும் யாரோ சில மனிதர்களுக்கு தானே? நமக்கென்ன? இந்திய தேசிய/ இறையாண்மை அரசு தானே இந்த கடத்தல்கார படுகொலைகாரர்களின் நாயகர்களான சிங்கள அரசிற்கு மனித உரிமை பேரவையில் ஆதரவு கொடுத்தது?

பிரபல ஊடகவியலாளர் தராக்கி என்கிற சிவராம் அவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஏன்? யாரால்? ஊடக சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், மனித உரிமை, மாற்று அரசியல் பற்றி போதிக்க சிங்கள அரசுக்கு என்ன தகுதி? சிவராம் கொலை முதல் கடத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் அடக்கப்படும் பலரது குரல்கள் கேட்கின்றன. சிவராமின் கல்லறையிலிருந்து எழும் பலமான கேள்விக்கு 'இந்து ராம்' மட்டுமல்ல; இலங்கை அரசின் பதிலும் மௌனமான கள்ளத்தனமே பதிலாக இருக்கும்.
செஞ்சோலையில் கடந்த ஆண்டு 51 குழந்தைகளை விமான குண்டுகள் பொழிந்து படுகொலை செய்யப்பட்டனர். யார் இந்த படுகொலைகளை நிகழ்த்தியது? சாகும் தருவாயிலும் அந்த மழலைகளின் குரல்கள் 'பெரியம்மா' எனவே கதறியிருக்கும். அந்த பெரியம்மா யார் தெரியுமா? நமக்கு இதெல்லாம் தெரிய அவசியமும் இல்லை.

உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களை தடுத்து பொருளாதார தடையில் பசியால் வாடும் நிலைக்கு தள்ளி, அவர்கள் மீதே குண்டுகளை பொழிந்த பயங்கரவாத அரசை எதிர்ப்பது இந்திய இறையாண்மைக்கும், தேசியத்திற்கும் எதிரானது? அப்படிப்பட்ட மக்களுக்காக அய்யா.நெடுமாறன் அவர்களும் பலரும் திரட்டிய ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் வழி கூட அனுப்ப அனுமதி வழங்காமல் இருப்பதா இந்திய தேசியம்? இந்திய இறையாண்மை? அதே வேளை கொள்கையை மீறி இரகசியமாகவும், நேரடியாகவும் ஆயுதப்பயிற்சி, ஆயுதங்கள் என சிங்கள இராணுவத்திற்கு வழங்கும் கள்ளத்தனத்தின் பெயரா இறையாண்மையும், தேசியமும்? யாரை கொல்வதற்கு இவை? யார் மீது குண்டு பொழிய?

ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வலைப்பதிவில் எழுதியிருந்தால் பொது விவாதத்தை எழுப்பியிருக்கும். ஈழத்தமிழர் பதில் சொல்ல இல்லாத பதிவர் பட்டறையில் ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட் பற்றிய உங்களது பேச்சின் அவசியம் என்ன? வலைப்பதிவுகளின் நன்னடத்தைக்கு உதாரணமாக நடந்த பல பெரிய பிரச்சனைகள் இருக்க 'இந்து ராம்'க்கு கொடி பிடிக்க வசதியாக களத்தை பயன்படுத்தியது உங்களது ஊடக அனுபவ பலம். 'தானாடா விட்டாலும் தன் தசையாடும்' என்பார்கள்.

//விடுதலைப் புலிகளை விமர்சிப்பது கூட இலங்கை அரசை ஆதரிக்கும் செயலாகிவிடக் கூடும் என்று நீங்கள் வாதிடலாம். அதே அடிப்படையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போரை ஆதரிப்பது, இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் இவற்றை பலவீனப்படுத்தும் என்பதனால் அதை எதிர்ப்பது சரிதான் என்றாகிவிடும்.//
இது உங்களது பதிவில் இட்ட பின்னூட்டத்தில் கண்டவை. உங்களது இந்த பின்னூட்டம் தடா/பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் குரலையொத்து அமைகிறது. இது தான் பத்திரிக்கையாளனின் கடமை?

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை ஆதரிப்பது இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்னும் கருத்தாக்கத்தை பலவீனப்படுத்தும் என்பது எதனடிப்படையிலான வாதம்? இந்திய இறையாண்மையின் வரையறை என்ன? தமிழக அரசியல் தலைமைகளில் பலரும், பெரும்பான்மை தமிழக மக்களும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தை 1970களிலிருந்து வெளிப்படையாகவும், (சட்டரீதியான அடக்குமுறை காலங்களில்) மறைமுகமாகவும் ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவாளர்கள் அனைவரும் இந்திய தேசிய மாயையை எப்படி பலவீனப்படுத்தினார்கள்? தமிழக மக்கள் இந்திய தேசிய சோதியில் ஐக்கியமானார்களே தவிர தங்களுக்கென தனியான அரசியலை, கட்டமைப்புகளை நிலைநிறுத்தவில்லை. மாநில சுயாட்சி உரிமையை பேசியவர்கள் கூட காலப்போக்கில் டெல்லி வாலாக்களாக மாறியது தான் நடந்தது. இந்திய இறையாண்மைக்கு இதில் எங்கே ஆபத்து?

இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? மாலனுக்கு தெரிந்த 'இரகசியத்தை' சொல்வாரா? அடுத்த இலங்கை ரத்னா விருது உங்களுக்கு கொடுத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


திரு
டிஸ்கி: என்ன பாஸ்போர்ட் என கேட்காதீர்கள்.

Tuesday, August 07, 2007

சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்

"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் விசாரித்துவரும் இந்த வழக்கு வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கொலை செய்ததில் சங்கராச்சாரியின் பங்கு சம்மந்தப்பட்டதல்ல. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. பாலசுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மாத்தூர் தலைமையில் விசாரணணயில் இருப்பது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு தடை கோரி காஞ்சி சங்கராச்சாரி தரப்பில் தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனிமனிதனாக ஒருவர் நான் பக்தன் என அறிவிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தனது தலைமையின் கீழ் நடந்து வரும் வழக்கு சம்பந்தமாக நீதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிகரமானது. 'இந்திய நீதித்துறை சட்டத்திற்கு கட்டுப்பட்டதா? சாமிகளுக்கு கட்டுப்பட்டதா?' என சாமானியனையும் கேட்க தூண்டுகிறது நீதிபதியின் இந்த அறிவிப்பு.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சங்கராச்சாரி வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதி சங்கராச்சாரியின் பக்தனாக மாறியிருக்கிறார். மேலும் சங்கராச்சாரியார் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என அறிவித்து சங்கராச்சாரி மனு மீதான விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றம் செல்லாமல் காலம் கடத்துவதும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுமாக இழுக்கப்படுகிறது. பிரதான குற்றவாளியாக கருதப்படும் சங்கராச்சாரி சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிவதும், சங்கரராமனின் ஆவி துரத்துவதுமான இந்த தொடர் விளையாட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ. பாதிக்கப்பட்ட சங்கரராமனின் குடும்பத்தினருக்கு நீதி எப்போது?

நீதிமன்றம் புனிதமானது, நீதிமன்றங்களை அதனால் விமர்சிக்க கூடாது என்பதான பார்வை நம்மிடையே பரவலாக இருக்கிறது. உண்மையில் நீதிமன்றங்கள் புனிதமானவை தானா? மனிதகுல பரிணாம வளர்ச்சியில் வல்லவனின் வார்த்தைகளே தீர்ப்பாக ஆதிகாலம் தொட்டு மக்களாட்சி வரை தொடரவே செய்கிறது. தற்கால நீதிமன்ற நடைமுறையானது 'சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் குற்றம் செய்தவரா? இல்லையா?' என்று நடைபெற்ற சம்பவங்கள், சாட்சிகள் வழி விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் சட்டரீதியான அணுகுமுறையாகவே தீர்ப்புகள் அமைதல் வேண்டும். இதில் நீதிபதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற பார்வை நீதிபதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கே 'அனைவரும்' என்பது குற்றம் செய்தவன் அரசனோ, ஆண்டியோ, சங்கராச்சாரியோ எவராக இருப்பினும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதாக பொருள். ஆனால் நீதிமன்ற நடைமுறையில் என்ன நடக்கிறது?

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடியரசு தலைவரை கைது செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் நீதிபதி ஒருவர். அந்த உத்தரவு பிறப்பிக்க லஞ்சம் பெறப்பட்டிருந்ததும், குற்றச்சாட்டு உண்மையா? குற்றம் சாட்டப்பட்டவர் யார் என எந்த விசாரணணயும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. நீதிபதிகளை நியமனம் செய்வதில் எந்தவிதமான வெளிப்படையற்ற தன்மையும் இல்லாதது இதற்கு மிக முக்கியமான காரணம். லஞ்சம், சட்டத்துக்கு எதிரான செயல்கள் என சில நீதிபதிகள் செய்யும் செயல்களால் நீதிமன்றம் மீதான கேள்விகள் பலமாக எழுகின்றன.தான் சார்ந்திருக்கும் மதம், சாதி, அரசியல் சார்ந்த உணர்வுகளும், வெறித்தனமும் நீதிபதிகளையும் ஆட்டிவைக்கிறது. இப்படிப்பட்ட நீதிபதிகள் வழங்கிய/வழங்கும் தீர்ப்புகள் தங்களது தனிமனித விருப்பு/வெறுப்புகள் அடிப்படையில் அமைகிறதே தவிர சட்டத்தின் பார்வையில் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமையும்.

வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியவர் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை விட்டு கீழிறங்கியிருக்கிறார். நீதிபதிக்கான முதன்மையான பண்பை இழந்த ஒருவர் இனி வழக்குகளில் எந்த அடிப்படையில் நீதிபதியாக இருக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் நீதித்துறையிலிருந்து நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் புது வரவு.

சட்டத்தின் முன்னர் விசாரிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் கடத்த சங்கராச்சாரி தரப்பு எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த உச்சநீதிமன்ற வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகவே நீதிபதியின் இந்த நடவடிக்கை அமைகிறது. 'சட்டம் ஒரு இருட்டறை' என்பதால் சங்கராச்சாரிகள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கண்ணாமூச்சியாட்டம் ஆட வாய்ப்புகள் அதிகம். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் குடும்பத்திற்கு நீதி எப்போது?

Monday, August 06, 2007

ஈழப்பயணம் - என் மனங்கவர் எட்டு-3

எட்டாம் வகுப்பு படிக்கும் முதலே தமிழர்களின் இனப்பிரச்சனையும், 1983 கருப்பு ஜூலை இனக்கலவரம், தமிழர் பிரச்சனையில் இந்திரா அம்மையார் ஆற்றிய பங்கு, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களது 'சித்து வேலைகள்', புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், இலங்கை அரச தலைவர் ஜெயவர்த்தனே, பிரேமதாசா போன்றவர்கள் என ஈழம் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டேன். 9ம் வகுப்பில் தமிழாசிரியர் மாணவர் மலருக்காக எழுத சொன்ன வேளை முதல் முதலாக எழுதிய கட்டுரை ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியது. அந்த காலகட்டத்தில் இராமேசுவரம் பகுதியில் மட்டும் அகதிகளாக தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கரைசேர்ந்தனர். ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா இன்னும் அதிகமான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கவேண்டும் என்ற போது அதை தடுத்த அதிகாரமைய்யம் ஆர்.வெங்கட்ராமனை சுற்றி இயங்கியது. 12ம் வகுப்பு படிக்கும் போது ஈழத்தில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. எனது பள்ளியில் ஆங்கில கவிதைப் போட்டியை முதல் முதலாக துவங்கினார்கள். போட்டி நேரத்தில் தான் கவிதைத் தலைப்பை தருவதாக கூறினார் ஆசிரியர். போட்டி நாளன்று ஆங்கிலக் கவிஞன் William Wordsworth எழுதிய "The Daffodils" என்னும் கவிதையிலிருந்து "I Wandered Lonely as a Cloud..." என்ற முதல் வரியை எடுத்து I Wandered Lonely as a Cloud among the fires and smokes of Eelam என முதல் வரியாக கவிதை எழுத சொன்னார். தொடர்ந்து 7 வரிகள் எழுதவேண்டும் என குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு தேர்வு போலவே நாடந்தது. ஒரு மேகம் போல கற்பனையாக பறந்தேன் என் நெஞ்சம் நிறைந்த ஈழத்திற்கு. எழுதிய கவிதையின் உணர்ச்சிமிகு வரிகள் முதல் பரிசை வாங்கியது (காலப்போக்கில் அந்த கவிதை தொலைந்து போனதும் சான்றிதழ் மட்டும் மிஞ்சியதும் வருத்தமானது). அந்த கற்பனை பயணத்திலிருந்து என்றாவது ஈழம் செல்லவேண்டும் என்ற கனவு உருவானது. தொடர்ந்து ஈழப்பிரச்சனை பற்றி தமிழகத்தில் நடந்த வெளிப்படையான சில போராட்டங்களில் பங்கெடுத்து வந்தேன்.

2002 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு. கட்டுநாயகே சர்வதேச பயணியர் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்த இராணுவ விமானதளத்தில் பல விமானங்கள் போராளிகளால் தாக்கி அழித்து இலங்கை பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது. இதில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'க்கு சொந்தமான பல விமானங்களும் (பயணிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல்) அழிக்கப்பட்டிருந்தது. தமிழர் தரப்பின் இராணுவ பலம் எழுந்து நின்ற பலமான சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் நார்வே தரப்பின் நடுநிலையுடன் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதுவரை சுமார் 3 முறை பணி நிமித்தமாக இலங்கை சென்றிருந்தாலும் சிங்கள நண்பர்களுடன் கொழும்பு, நீர்க்கொழும்பு பகுதிகளில் மட்டும் தங்கியிருந்தேன்.

சமாதானத்திற்கான காலம் பிறந்த இந்த சூழலில் எனக்கு நெருக்கமான குடும்பத்தினர் அவர்களது விடுமுறையில் தங்களது சொந்த மண்ணிற்கு செல்ல திட்டமிட்டனர். நானும் வர ஆர்வமாக இருப்பதை அறிந்து என்னையும் சேர்த்துக்கொண்டனர். 2002 டிசம்பர் 10 கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய போது வழக்கமான அளவு இராணுவ நிலைகளோ, இராணுவ துருப்புகளின் நடமாட்டமோ இல்லை. சிலநாட்கள் நீர்க்கொழும்பில் தங்கிய பின்னர் ஒரு அதிகாலை வேளை அந்த இனிய பயணம் துவங்கியது. காற்றை கிழித்து மரங்கள் அடர்ந்த சாலையில் காலை இருளில் அந்த வாகனம் செல்லும் போது காலத்தால் மறக்க முடியாத அளவு உணர்ச்சிகளின் சங்கமம் எனக்குள். வாகனத்தில் இருந்த உறவுகளின், கதைகளும், அனுபவங்களும், நினைவுகளும் தமிழ் ததும்ப என்னை குளிப்பாட்டியது.

A9 சாலை வழியாக சாவகச்சேரி, யாழ்ப்பாணம் செல்வது எங்களது பயணத்திட்டம். அகலம் குறைந்த அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள். இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து செல்லவேண்டிய எல்கை வந்தது. சோதனைச்சாவடியில் இராணுவ அதிகாரிகள் கடவுச்சீட்டு, கைப்பை, புகைப்படக்கருவி, பயணப்பெட்டி என அனைத்தையும் சோதனையிட்டனர். பதிவேட்டில் என்னைப் பற்றிய தகவல்களை எழுதிய பின்னர் போக அனுமதித்தனர். அதற்குள் எங்களது வாகனம் சோதனை முடித்திருந்தது.

அடுத்ததாக செஞ்சிலுவை சங்க முகாமை கடந்து புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நுளைந்தோம். 'தமிழீழம் உங்களை வரவேற்கிறது' என வரவேற்பு பலகை காணப்பட்டது. சோதனைச்சாவடியில் போராளிகள் சோதனையிட்டு கொண்டிருந்தார்கள். சின்ன கொட்டகைகளில் அவர்களது சோதனை அலுவல்கள் நடந்துகொண்டிருந்தன. வெளிநாட்டவர்களுக்கு என தனி குடிபெயர்வு பகுதி இருந்தது. அங்கே எனது கவடுச்சீட்டை கொடுக்க சென்றதும், இனிமையான வரவேற்பு, கடவுச்சீட்டை நீட்டினேன். 'இதெல்லாம் உங்கட கடவுச்சீட்டா என கேட்டார்' அந்த போராளி. காரணம் அப்போது ஏற்கனவே பக்கங்கள் முடிந்து போன கடவுச்சீட்டுகளும் சேர்த்து 3 கடவுச்சீட்டுகள் வைத்திருந்தேன். ஆம் என பதில் சொல்லவும். 'என்ன வேலை செய்கிறீர்கள்?', 'இந்தியாவில் எங்கே?'..... என வழக்கமான குடிபெயர்வு விசாரணைகள். தொடர்ந்து ஒரு இளம் போராளி விசாரித்தார். புலிகள் இயக்கம் நடைமுறையில் வைத்திருந்த குடிபெயர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்தேன். தமிழீழம் ஒரு நாடாக அங்கீகாரம் பெறாததால் கடவுச்சீட்டில் முத்திரை பதிப்பது தவிர அனைத்துவிதமான குடிபெயர்வு முறைகளும் நடைமுறையில் இருந்தது. பயணப்பொருட்கள் சோதனைக்கு பின்னர் தொடர்ந்து பயணம் செல்ல அனுமதி கிடைத்தது. இந்த நடவடிக்கைகள் புலிகளின் நடைமுறை அரசின் திறனையும், கட்டமைப்பையும் அந்த முதல் அனுபவமே சொல்லியது.

யுத்தம் நடத்திய பாதிப்புகள் தமிழீழ சாலையோரங்களின் இருப்பக்கமும் காணமுடிந்தது. தென்னந்தோப்புகளில் விழுந்த குண்டுகள் மரங்களை சிதைத்திருந்தன. கல்லூரிகள், கோவில்கள், வீடுகள் என தமிழர்களின் வாழ்விடங்கள், கலாச்சார அடையாளங்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டிருந்தது. ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த பகுதியில் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட டாங்கி, சிதைந்த ஆயுதம் என போரின் அடையாளங்கள் மனதை வாட்டியது. வரும் வழியில் உறவுகளை கண்டு, உணவருந்திய பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் வந்து சேர்ந்தோம்.

குறைந்த அளவு பொருட்களில் இயற்கையான வாழ்க்கையும், பழக இனியவர்களாகவே மக்கள் இருந்தனர். தமிழீழத்தின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சோகம் நிறைந்த கதை பல உண்டு. எல்லா உறவுகளையும் இராணுவத்தின் குண்டு வீச்சிற்கு இளந்து இன்னும் சோகத்தை மட்டும் சுமக்கும் ஒருவரை பார்த்தேன். அந்த சோகமயம் இன்னும் நெஞ்சை பிளிகிறது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் கல்லறைகள் இருந்தது. முந்தைய கால யுத்தத்தில் மாவீரர்களின் கல்லறையை இலங்கை அரச படைகள் உடைத்தெறிந்ததாகவும், பின்னர் அவை புதுப்பிக்கப்பட்ட்டதாகவும் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு உயிர்களையும் நினைக்கையில் கனமான மௌனம் மட்டுமே மனதில் மிஞ்சியது.

யாழ் கோட்டை, யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என அனைத்து இடங்களிலும் தமிழர் வாழ்வின் வேதனைகளும், போராட்ட வரலாறும் இருப்பதை நேரடியாக உணர்ந்தேன். யுத்தம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழீழ மக்கள் வாழ்க்கை இனிப்பாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் மனதை குடைகிறது. இந்த பயணத்தின் போது சிறார் இல்லங்களுக்குச் சென்றோம். பெற்றோர், உறவினர்களை யுத்தத்தில் இழந்து அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை பார்த்த போது மனது கனமானது. அவர்களது வேதனையான சூழலிலும் தன்னம்பிக்கையுடன் வளர்வதை கண்டேன் (குருகுலம் என்னும் சிறார் இல்லம் பற்றிய முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் குருகுலம் சிறார் இல்லம்).

'இறைமை', 'தேசநலன்','தேசியம்' என்ற பெயரில் மக்களை கொன்று குவிக்கும் எந்த அரசும் பயங்கரவாத அரசு தான். மக்களின் வாழ்வும், உரிமையும் மறுக்கப்படும் போது தேசமும் இல்லை; அங்கு இறைமையும் இல்லை. இறைமை என்பது எல்லைக் கோடுகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதல்ல.

கோடை வெயிலையே நம்மால் தாங்க இயலாது. சுமார் 23 வருடம் தொடர்ந்து நடக்கிற யுத்தத்தின் வலியையும், வேதனையையும் தமிழகத்தில்/அயலகத்தில் வாழும் நமக்கு புரியுமா? தமிழீழ பயணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்க்கை, கனவுகள், ஏக்கம், நம்பிக்கைகள் என அனைத்தும் என்னை தொட்டது!

----
மனதை கவர்ந்த எட்டு எழுத தோழி.பத்மா கேட்டிருப்பினும் இதுவரை 4 மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். இத்துடன் முடிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் பத்மா!

இதுவரை மனதை கவர்ந்த எட்டு எழுத அழைக்கப்படாத நண்பர்கள் அனைவரையும் எழுத அழைக்கிறேன்.

Wednesday, August 01, 2007

படங்கள் சில

Camel

chic

Gloriosa Lily

Tiger

Hippos

Ring-Tailed Lemur

Bird

Alli poo

Marching

Tiger

Elephants

திருவின் மனங்கவர்ந்த எட்டு -2

1995ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது வீட்டில் சமைப்பதற்கு அம்மாவிற்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்பாவும், தம்பியும் என்னை தவிர்த்துவிட்டு ஊருக்கு பொதுவான ஒற்றையடி பாதையை சீரமைக்க ஊர்க்காரர்களோடு சென்றிருந்தனர். நானும் சென்றிருந்தால் எதாவது வம்பு வந்துவிடும் என்பதாலோ என்னமோ எனக்கு வீட்டில் 'தடா' போட்டிருந்தனர். திடீரென ஒரு உறவினர் வந்த சத்தமாக என்னை அழைத்தார். வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கவும் 'லேய்! ஒனக்கு வீட்டுக்கு கரண்ட் எடுக்க என்னோட சொத்து தான் கிடைச்சிதா? நான் சாவுற வரை நீ இனி கரண்ட் எடுக்க மாட்டலே பாரு!' என வந்து விழுந்தது குரல். குரல் கொடுத்தவர் உறவு முறையில் சித்தப்பா. நான் சம்பந்தப்படாவிட்டாலும் எதிர்ப்பாளர்களின் தலைவர் நம்மை தான் தேடி வருகிறார் என்ன செய்வது என சில நிமிடம் புரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டு பாதை சீரமைக்கும் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சுமார் 100 வருடங்களாக பொதுப்பாதையாக இருந்து வரும் பகுதி அது. அந்த பாதையின் ஒரு குறுகிய நிலப்பகுதி மட்டும் பொதுவானதல்ல, யாரும் அந்த தடுப்பதும் இல்லை. ஏறக்குறைய 10 குடும்பத்தினர் 40 வருடங்களாக மின்சாரம் எட்டுக்கவும், பொதுவான ஒரு நடைபாதை மட்டும் அமைக்கவும் எடுத்த முயற்சிகளை கரம் உயர்ந்தவர்கள் தடுத்து வந்திருந்தனர். இதற்கு அந்த மக்களின் மனநிலை தான் முக்கிய காரணம். குறிப்பாக 'எனது சொத்தில் யாரும் நடக்க கூடாது, எனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் வந்தால் போதும் அடுத்த வீட்டிற்கு மின்சாரமோ, பாதையோ செல்லக்கூடாது.' 'எங்கள் முற்றம் வழி யாராவது நடக்கிறதை நாம பார்த்திருக்க முடியுமா?'.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதை பிரச்சனைகள் ஏராளம். அதன் பின்னால் நிலவுடமை, சாதி, ஒற்றுமையின்மை, குடும்ப பகை என பல காரணங்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையை தகர்க்க தானாகவே ஊர்மக்கள் எடுத்த சிறிய அளவிலான முயற்சியே இந்த பாதை திருத்தும் முயற்சி. அன்றைய வேலை சுமுகமாக வன்முறைகளில்லாமல் முடிந்தது. மாலையில் வழக்கமாக சந்திக்கும் நண்பர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சார்ந்த சிறுவன் மூச்சிரைக்க ஒடி வந்தான். 'அண்ணா! சீக்கிரம் வீட்டுக்கு வரணுமாம். எல்லாரும் உங்களை தேடி இருக்காங்க. போலீஸ் வந்து போச்சு. உங்க பேரு தான் முதல் பேரு.' என கொட்டித் தீர்த்தான். நான் திகைத்து நின்றேன் சில நிமிடம்.

குடும்பத்திலிருந்து அதுவரை ஊதியமில்லா ஆசிரியர் போராட்டத்தில் அக்கா சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்திருந்தார். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் அப்பா 2 நாட்கள் சிறையில் இருந்தார். சில போராட்டங்களுக்கு அனுமதி வாங்க காவல் நிலையம் சென்றதும், சில காவலர்கள் நண்பர்களாக அமைந்ததும் தவிர எனக்கும் காவல் நிலையத்திற்கும் தொடர்பு இருக்கவில்லை. இதையெல்லாம் மனதில் நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தால் ஊரே எனக்காக காத்திருந்தது. தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் வீடுகளில் இரவு வேளைகளில் கூட்டப்பட்டது. பகல் வேளைகளில் காவல்த்துறை அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், பேரூராட்சி, கிராம அலுவலகங்கள் என புகார் மனுக்கள், ஆதாரங்கள் மற்றும் வரைபடம் திரட்டுதல் என பகல் வேளைகள் கழிந்தன. அந்த பகுதியின் முழு வரைபடமும் திரட்டி ஆதாரங்களை ஒன்று குவித்து மனுக்கள் அனுப்ப பலர் உதவினர். எதிர்ப்பாளர்கள் வீடுகளில் அடியாட்களுடன் வந்தி மிரட்டுவதும், வீட்டைச்சுற்றி முள்வெலி அமைப்பதும் என தொடர்ந்தது. இரு தரப்பிலிருந்தும் காவல்த்துறையில் மனுக்கள் குவிந்தன. எதிர்தரப்பிற்கு ஆதரவாக அப்போதைய வனத்துறை அமைச்சரே நேரடியாக தலையிட்டார். தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த காவல் அதிகாரி எங்களது நியாயத்தை உணர்ந்ததால் அழுத்தத்திற்கு பணியவில்லை. இந்த நடவடிக்கைகளில் சூமார் 10 மணிநேரம் காவல்நிலையத்தில் எந்த வழக்கும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். காவலர்களில் பலர் எதிர்தரப்பிலிருந்து பணம் வாங்கிய விசுவவதத்திற்காக பேசிய அநாகரீக வசைமொழிகள், மிரட்டலில் அந்த 10 மணிநேரம் கழிந்து வெளியே வந்த போது மனித உரிமையின் மகத்துவம் புரிந்தது. தொடர்ந்த நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு பின்னர் இன்று அனனத்து வீடுகளிலும் மின்சாரம், சுமார் 15 அடி அகலமுள்ள பேரூராட்சி சாலை, தொலைபேசி வசதி என கிடைத்திருக்கிறது. அந்த போராட்ட அனுபவங்களின் விளைவாக அந்த பகுதியிலிருந்து 2 பெண்கள் பேரூராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் இரவு நேரங்களில் அந்த சாலையில் நடந்து செல்வது நினைவுகளை மீட்டுவது மட்டுமல்ல நான் கடந்து வந்த பாதையை மனதில் வைத்திருக்க உதவுகிறது...

*******
மனதை கவர்ந்த பல இருந்தாலும் நேரமின்மையால் இன்னும் ஒரு நினைவை பகிர்ந்துகொள்வேன். அது எனது தமிழீழப் பயணம் பற்றியது.