Tuesday, July 31, 2007

படங்காட்டுதல் (போட்டிக்காக அல்ல)

Honeybee

butterfly

Zeebra

Vulture

Eagle

Grassing

Seal

Leopard

Good catch

Gull

Gull

திருவின் மனதிற்கினிய எட்டு - 1

நீண்ட நாட்களாக வேலை நிமித்தமான பயணம், கூட்டங்கள் என அலைந்து வலைப்பதிவிலிருந்து காணாமல் போன வேளை, மனநிறைவை தந்த எட்டு எழுத தோழி. பத்மா அர்விந்த் அழைத்திருந்தார் (ஏற்கனவே நண்பர். ரவிசங்கர் நாடு நல்ல நாடு எழுத அழைத்தது காத்திருக்கிறது. மன்னிக்கவும் ரவி!). அது ஏன் எட்டாக இருக்க வேண்டும்? காரணம் இன்னும் பிடிபடாவிட்டாலும் அன்பின் அழைப்பை ஏற்று நினைவுகளில் மூழ்கி எழுந்த எட்டுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

திருச்சியில் தங்கியிருந்து தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட கிராமங்களில் இளம் வயதினரோடு பழகி பணி புரிந்த காலம் மிகவும் மனநிறைவான காலம். 1996 ஜனவரி மாதம் திருச்சியில் தங்கியிருந்து இளம் தொழிலாளர்களை திரட்டி அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை தரும் பணி கிடைத்தது. கையில் ஒரு பையுடன் களம் வந்து சேர்ந்த போது ஒரு நல்ல மனிதரின் நட்புடன் துவங்கிய களப்பணியில் மனநிறைவு கிடைத்தது. கிராமங்கள் தோறும் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்சனைகளை உணர்ந்த போது எனக்குள் மனிதநேயம், கோபம், ஆழ்ந்த சமூக பார்வை என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் சாதி கட்டமைப்பிற்கும் பிற மாவட்டத்தின் சாதி ஆதிக்கத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. செருப்பு தைக்கும், சவம் அடக்கம் செய்யும் நண்பரிடமும் சாதிப்பிரச்சனைகளின் தாக்கம் எதார்த்த வாழ்வை, சமூக உறவுகளை மனிதாபிமானமற்று சிதைத்திருப்பதை உணர்ந்தேன். சாதி பற்றிய அனுபவங்களையும், பார்வையையும் எனக்குள் சுரக்க வைத்தவர்கள் தலித் மக்கள். தொடர்ந்து எதிர்ப்புகளுக்கிடையே அந்த மக்களுடன் சில ஆண்டுகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் போராட்ட களங்கள் வழி பலர் நான் பணியாற்றிய அமைப்பில் தலைமை ஏற்ற போது மனநிறைவை தந்தது.

********

மனதை நிறைத்த இனிய நிகழ்வு இன்னொன்று கமலுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும். ஒரு மாலைப்பொழுது நண்பர் ஒருவர் "திரு! ஆங்கிலம் அல்லது மலையாளத்தில் பேச உங்களுக்கு தெரியும் தானே? எனது அறையில் ஒருவரை வந்து சந்தித்து பேசுங்களேன்" என்றார். 'சரி! வருகிறேன்' என்று அவருடன் நடந்தேன்.

நண்பரது அறையில் ஒருவர் இருந்தார். பார்த்த நிமிடத்தில் இவர் ஒரு வாகன பராமரிப்பாளராக இருப்பாரோ என எண்ணினேன். அவரது உடல் மற்றும் உடையெங்கும் கருப்பாக அழுக்கு படிந்திருந்தது.

நண்பர் அறிமுகம் செய்தார். 'ஐயாம் கமல்' என்றார் அவர்.

'கமல் மலையாளம் அறியுமோ?' தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகம்.

'உங்கள் ஊர் எங்கே? என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?'

'சொந்த ஊர் கேரளத்தில், கண்ணூர். வீட்டை வீட்டு வெளியேறிவிட்டேன்......' என்றார் அவர்.

'சாப்பிட போகலாமா' என அழைத்தேன்.

'சரி வருகிறேன் அதற்கு முன்னர் குளிக்கவேண்டும்' என்றார்.

எனது அறையில் அவருக்கு குளிக்க ஏற்பாடு செய்து, மாற்று உடைகள் கொடுத்த போது, 'சவரம் செய்ய பிளேட் கிடைக்குமா?' என்றார்.

குளித்து முடித்து அவர் வரும் வரை நண்பரது அறையில் காத்திருந்தேன். அதற்குள் முகமலர்ச்சியுடன் முந்தைய அடையாளம் தெரியாத அளவு கமல் மாறியிருந்தார். தொடர்ந்து கமல் சொன்ன சோகங்களை மௌனமாக கேட்டேன். அம்மாவின் பாசம் உணராததால் வீட்டை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி இந்தியா முழுவதும் பல மடங்களில் சென்று பின்னர் வெளியேறியதாக அந்த 24 வயது இளைஞன் சொன்ன போது கவலையாக இருந்தது.

தொடர்ந்து கமல் தங்கும் அறையாக எனது அறை, கமலுக்கு உடைகள், உணவு, படிக்க ஆங்கில நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் என அவர் விருப்பப்படியே தொடர்ந்தது. திடீரென கமலின் குணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. பேச்சில் தொடர்ச்சியின்மை இல்லை. ரயில் பெட்டிகளை இணைப்பது போல ஆங்கில சொற்களை இணைத்து அவர் பேசிய நீளமான வாக்கியங்களில் அர்த்தம் இருப்பதை விட கோபமும், விரக்தியும் அதிகமாக இருந்தது. ஆங்கிலத்தில் penis என கமல் போட்ட கையெழுத்தும் அதற்கான காரணமும் முதல் முறையாக கமலை கவனிக்க வைத்தது.

குடும்பநல உளவியல் துறையில் பணிசெய்த தோழி ஒருவர் கமல் கதையை அறிந்து மருத்துவரிடம் அழைத்து செல்ல அறிவுரை சொன்னார். கமலின் சம்மதத்துடன் ஒரு மனநல மருத்துவரை அணுகி பரிசோதனையில் கமலுக்கு Schizophrenia என்னும் மனவியாதி இருப்பதாக அறிந்ததும் உடைந்து போனேன். இதற்குள் கமல் வந்து சேர்ந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்திருந்தன. இதற்குள் கமல் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தான். என்னிடம் உரிமையாக எதையும் கேட்பதும், கோபம், பாசம் என தொடர்ச்சியில்லாமல் உணர்ச்சிகளை மாறுபடுத்துவது என கமல் தொடர்ந்தான். எப்படியாவது இவனை குணப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் கமல் தந்த குடும்ப முகவரிக்கு தந்தி கொடுத்து காத்திருந்தேன், தகவல் இல்லை. அனுப்பிய அவசர பதிவு தபால் திரும்ப வந்தது. அவரது மருத்துவத்திற்கான ஆயத்தங்களை செய்ய துவங்கிய போது கமல் கோபம் அதிகமாகிக்கொண்டே போனது. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு மருத்துவமனைக்கு செல்வதே இயலாத விசயமானது. பணி நிமித்தமாக சில நாட்களுக்கு சென்னைக்கு பயணமானேன். கமல் அங்கிருந்து வெளியேறி விடுவதாக என்னிடம் தெரிவித்த போது நான் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டென்.

சென்னையிலிருந்து திரும்பி வந்த போது கமலிடமிருந்து நன்றி கடிதம் மட்டும் இருந்தது. எங்கோ தொலைதூரமாக கமல் காணாமல் போயிருந்தான். மனது கனமாக தான் இருந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து கமல் திடீரென என்னை பார்க்க மட்டுமே வந்து சில மணித்துளிகளில் திரும்பினான். கமல் எதிர்காலம் மீது நம்பிக்கையை தந்த ஆச்சரியமான நிகழ்வு இது. சில மாதங்களில் திருச்சியிலிருந்து நெல்லைக்கு இடம் மாறியிருந்தேன். திருச்சியி இருந்த எனது பொருட்களை எடுத்து அறையை ஒப்படைப்பதற்காக சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் திரும்பியிருந்தேன். நேர்த்தியாக, மிடுக்குடன் உடையணிந்து கழுத்தில் டை, பிரெஞ்ச் தாடியுடன் ஒரு இளைஞன் வந்து பேசவும். 'கமல்?' என்றேன். ஆம்! ஹைதராபாத் அருகே ஒரு பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பணியில் இருப்பதாகவும், என்னை காண்பதற்காக வந்ததாகவும் சொன்னான். என்னை காண்பதற்காக மட்டுமே தேடி வந்த கமலின் அன்பு என் மனதை தொட்டது. ஒரு நாள் மட்டும் என்னோடு தங்கியிருந்து விடைபெற்றான் கமல். கமலுடன் எனக்கு அது கடைசி சந்திப்பு. சில மாதங்களுக்கு பின்னர் நான் பணி நிமித்தமாக ஹாங்காங்-கிற்கு இடம் பெயர வேண்டிய நிலை வந்தது.

கமலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த சந்திப்பிற்காக...

(அடுத்த பதிவில்...)

===========

நண்பர் ஒருவருக்கான குறிப்பு:

நண்பர் ஒருவர் அவரது rediffmailக்கு மின்னஞ்சல் அனுப்ப எழுதியிருந்தார். Rediffmail ஒழுங்காக செயல்படவில்லை, அதனால் அனுப்பிய மடல் வந்து சேரவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் gmail கொடுங்கள் மடல் அனுப்ப வசதியாக இருக்கும்.

திரு

Saturday, July 07, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-5

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.

-o0o00o000o00o0o-


அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

(வரலாறு வளரும்)


திரு