Thursday, November 27, 2008

வி.பி.சிங்: சில குறிப்புகள்!

மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர்.

விஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார். ஐந்தாவது நாடாளுமன்றத்திற்காக 1971ல் முதல் முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகத்துறை அமைச்சர். உ.பி.மாநில முதலமைச்சர். இந்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகிய பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். 1984 தேர்தலில் ராஜீவ் வெற்றியின் பின்னர் நிதியமைச்சரானார். அப்போது திருபாய் அம்பானி மற்றும் அமிதாப் பச்சனின் வரி மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதனால் ராஜீவி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். அவரது செல்வாக்கு காரணமாக பாதுகாப்பு துறை அமைச்சராக்கப்பட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து நடந்த தேர்தலில் அவரது ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தேசிய முன்னணி வெற்றிபெற்றது. டிசம்பர் 2, 1989 முதல் 10 நவம்பர் 1990 வரையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையும், இலங்கை கொள்கையும் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய்களை செலவிட்டு இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் சுமார் 10,000 பேரை கொன்றுகுவித்தது. பலநூறு தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. தமிழர்களது உடமைகளை கொள்ளையிட்டன. அமைதிப்படை என்ற பெயரில் ஆட்கொல்லி படைகளாக மாறியது இந்திய படைகள். திரும்பிச்செல்ல பிரேமதாசா கடும் அழுத்தம் கொடுக்கவும் இந்திய படைகளை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைத்தார்.

அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடப்பங்கீட்டை வழங்க மண்டல் விசாரணைக் குழு அறிக்கையை அமல்படுத்தி அதுவரையில் எல்லா அரசுகளும் புறக்கணித்த மக்களுக்கு சமூகநீதியை வழங்கினார். மண்டல் விசாரணை அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாபர் மசூதியை இடிக்க மதவெறி பிரச்சாரத்தை அத்வானி தலைமையில் ரதயாத்திரை துவங்கியது. அத்வானியை கைது செய்ய வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அதனால் பாரதீய ஜனதா கட்சி அவரது அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது. மதவெறி அரசியலுக்கு எப்போதுமே எதிராக இருந்த அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மிக உறுதியாக செயல்பட்டு மசூதியை பாதுகாத்தார். மதச்சார்பின்மையை காப்பாற்ற போராடிய அவரது அரசை கவிழ்க்க நடந்த அனைத்து அரசியல் குழப்பங்களிலும், சதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் இறங்கின. ஆனாலும் சமரசமில்லாமல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் வி.பி.சிங். 142-346 என்ற வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் இடப்பங்கீடு அமலாக்கம் வழியாக சமூக நீதிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அவர் ஆற்றிய பணியின் பலன்கள் பல கோடி மக்களுக்கு மிக்க பலனுள்ளவை. காஸ்மீர் பிரச்சனி அவரது ஆட்சியின் போதும் வலுவாக இருந்தது. பொற்கோயிலில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாக மன்னிப்பு கேட்டார் வி.பி.சிங். பஞ்சாபில் அமைதியை உருவாக்க அவரது ஆட்சி பெரும் பங்காற்றியது.

ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் குழப்பம் நிறைந்த சிறுபான்மை ஆட்சியை திரு.சந்திரசேகர் அவர்களை தலைமை அமைச்சராக்கி ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் துவக்கி வைத்தது. மோசமான பொருளாதார கொள்கையும், அரசியல் பித்தலாட்டங்களும் நிறைந்த இந்த ஆட்சியின் முடிவில் தேர்தல் வந்தது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத முற்போக்கு கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். மரண இரக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் பல தலைவர்கள் தோல்வியுற்றனர் ஆனாலும் வி.பி.சிங் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் தேர்தல் அரசியலில் ஒதுங்கியிருந்தார். ஆனாலும் 1996ல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் அவரை தலைமை அமைச்சராக்கும் முயற்சி நடந்தன. அவற்றை ஏற்க மறுத்து ஆட்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். சிறுநீரக கோழாறு, இரத்தப்புற்று நோய் காரணமாக அவர்து உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புதுடில்லியில் மக்கள் குடியிருப்புகள் அகற்றம், உணவு வினியோக அட்டைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மக்களது நிலங்களை அபகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மக்களோடு நின்று வீதியில் போராடினார். குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் நிலம் கைப்பற்றுவதற்கு போதிய நிவாரணம் கேட்டு கிளர்ச்சி செய்த விவசாயிகளோடு போராடியதால் உத்தரப்பிரதேசத்தில் 2007ல் காசியாபாத்தில் அரசு கைது செய்தது.

மன்னர் குடும்பத்தில் பிறந்தும் இந்திய மக்களின் மாபெரும் தலைவரான வி.பி.சிங் இன்று மறைந்தார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு!



Monday, November 24, 2008

‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!

கிழக்கு பதிப்பகத்தின் பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘யுத்தம் சரணம்’ தொடரை குமுதத்தில் துவங்கியுள்ளார். எல்லா பக்கமும் இந்தியா போன்ற உலக நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் சூழந்து ஈழத்தமிழர்களை கொன்றழிக்கும் போர்ச்சூழலில் அவதிப்படுகிற நேரத்தில் குமுதத்தில் பா.ராகவனின் தொடர் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவது இயல்பு. இத்தொடரின் முதல் பகுதியை படிக்கும் போதே வாசகர்களுக்கு ஈழத்தின் அரசியல் பற்றிய நேர்மையான பார்வை கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

‘யுத்தம் சரணம்’ தொடரின் முதல் பகுதி திகில், பரபரப்பு, விறுவிறுப்பு என்று வார்த்தை அலங்காரங்களால் ‘பாக்கட் நாவல்கள்’ படிப்பது போன்று வாசகனை பரபரப்பாக்க உதவும். அதற்காக நிச்சயம் எழுத்தாளரின் மொழி நடையை பாராட்ட தான் வேண்டும். தொடரின் துவக்கம் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிதைந்த வாகனம் ஒன்றை காட்சிப்படுத்துவதிலிருந்து துவங்குகிறது.

//முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.

இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.

இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா (Sarath Fonseka) தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.// யுத்தம் சரணம், முதல் பகுதியிலிருந்து.

சிதைந்த வாகனத்துக்கும், தாக்கப்பட்ட ராணுவ தளபதிக்கும் எவ்வளவு வலித்திருக்கும்? ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சேவும் வன்னியிலும், கிளிநொச்சியிலும் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து குழந்தைகள் முதல் முதியவர் வரையில் கொல்வதற்கு சரத்பொன்சேகா மீதான தாக்குதலை பிரதான ஏதுவாக்குகிறார் ராகவன்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கி விட்ட தமிழர்களின் போராட்டத்தை இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலில் துவங்குவது கதையாசிரியனின் அரசியலை உடைக்கிறது. எங்கிருந்து கதை சொல்லத் துவங்குவது என்பது எழுத்தாளனின் சுதந்திரம். ஆனால் ஈழத்தின் இனப் பிரச்சனையை சொல்லத் துவங்கும் கதையாசிரியர் 2002 நார்வே தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது முதலில் ஆயுதங்களை தூக்கியது புலிகள் என்று கட்டமைக்க முனைவது பின்வரும் பத்திகளில் பல்லிழிக்கிறது.

//2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?//

நார்வே தலைமையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு பல சுற்று பேச்சுக்கள் நடந்த சூழலில், அமெரிக்காவும், ஜப்பானும் இந்த பேச்சுக்களில் நுழைந்ததும், இந்தியா மறைமுகமாக இலங்கையை இயக்கி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தி கருணாவை பயன்படுத்தி தொடர்ந்த படுகொலைகளை நாமும் ‘வசதியாக’ மறந்துவிடலாம். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புதிய இடங்களில் இலங்கை இராணுவம் முகாம்களை போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக உருவாக்கியதையும் மறந்துவிடுவோம். சுனாமி மீள்கட்டமைப்பிற்கான இடைக்கால அதிகார சபை ஒன்று பேசப்பட்டு வந்த நிலையில் இலங்கை அரசு நடத்திய இப்படுகொலைகளையும் வாசித்து மறந்துவிடுவோம். 2002 போர் நிறுத்தத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்கும் “இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை என்கிறார் பா.ராகவன். ஈழம் பற்றிய அறிவில் உண்மையா இவ்வளவு அப்பாவியா இவர்? சரத் பொன்சேகா தாக்கப்பட்ட நாள் 25 ஏப்பிரல் 2006. ஆனால் அதற்கும் முன்னர் இலங்கை இராணுவம் பல தமிழ் அரசியல் தலைவர்களை, போராளி தலைவர்களை, ஊடகவியலாளர்களை, பொதுமக்களை படுகொலை செய்தது. ஆனால் அத்தனை படுகொலைகளையையும் கதை சொல்லும் நடையில் மறைத்து புலிகளும், தமிழர் தரப்பையும் கொலைகாரர்களாக, வன்முறையாளர்களாக சித்தரிக்கும் கேவலமான, நேர்மையற்ற அரசியலை தொடரின் முதல் பகுதியில் துவங்கி வைத்திருக்கிறார் பா.ராகவன். பா.ராகவனுக்கு இல்லாவிட்டாலும், வாசகர்களுக்காக இடைப்பட்ட காலத்தில் இலங்கை அரசு செய்த படுகொலைகள் சிலவற்றை சொல்வது நமது கடமை.

மட்டு-அம்பாறையில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக செயலாற்றிய கௌசல்யன் அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் சில புலிகளையும் கிளிநொச்சியில் சுனாமி புனரமைப்பு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணிவெடி வைத்து 8 பெப்ருவரி 2005 இரவு 7.15 மணியளவில் கொன்றது இலங்கை இராணுவ உடையணிந்த சிப்பாய்கள்.

2005 டிசம்பர் திங்கள் 25ம் நாள் நள்ளிரவில் மட்டகளப்பில் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமைப் போராளி) புனித மரியாள் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் நற்கருணை பெற்று திரும்பும் போது, வழிபாட்டில் வைத்து மனைவிக்கு அருகில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர், கருணா, ஈ.பி.டி.பி குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பாதக படுகொலை நடந்த போது தேவாலயம் முழுவதும் பீதியும் பதட்டமும் நிறைந்திருந்தது. ஜோசப் பரராஜசிங்கம் ஆயுதம் தூக்கியவரா? அது யுத்த காலமா? ஏன் இந்த படுகொலை? தமிழர்களின் உரிமைகளுக்காக தேசங்களெல்லாம் பறந்தும், இலங்கை நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்த அமைதியானவரை கொன்று அவரது குரலை அடக்கியது இலங்கை அரசு.

//ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்.

யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?//

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ‘விடுதலைப் புலிகள்’ கதையும் திருப்பெரும்புதூரில் இராஜீவ் கொலலயிலிருந்து துவங்குகிறது. செய்தியை எங்கிருந்து சொல்லத் துவங்குவது என்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும், தமிழின எதிர்ப்பாளர்களுக்கும் தமிழர் இனப்பிரச்சனையின் துவக்கம் ராஜீவ் மரணத்தில் துவங்கி அங்கேயே முடிந்துவிடுகிறது. காங்கிரஸ்காரர்களது ஈழப் பார்வையும், தற்போதைய ஈழப் போர் நிலவரத்திற்கு சரத் பொன்சேகா மீதான தாக்குதலை முன்னிறுத்தும் பா.ராகவன் எழுத்தரசியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. ஈழத்தமிழர்களின் போராட்டத்தை வன்முறை, படுகொலைகள், சகோதர யுத்தம் என்று காட்சிப்படுத்தி, அரசியல் அதிகாரத்திற்கான போராட்ட நியாயங்களை மறைக்கும் இவ்வகை எழுத்துக்களின் அரசியல் இனங்காணப்படவேண்டும்.

Friday, November 21, 2008

ஈழப்பிரச்சனையில் இந்திய/தமிழக முரண்கள்-பகுதி5

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டு கொழும்புவிலிருந்து இந்தியா திரும்பிதும் இராஜீவ் காந்தி “உலக நாடுகளில் இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதுவரையில் உருவாகவில்லை” என்று மெரினா கடற்கரை கூட்டத்தில் முழங்கினார். வழக்கமாக இரு தரப்பினரிடையே யுத்தம் நடக்கும் போது இரு தரப்பினரையும் பேச வைத்து அவர்களுக்குள் ஒப்பந்தத்தை உருவாக்குவது தான் உலக நடைமுறை. ஆனால் இனப்பிரச்சனைக்கு காரணமான ஒரு தரப்பினரோடு மட்டும் பேசி, பேச்சுவார்த்தைக்கு உதவ முயற்சியெடுத்த மூன்றாம் நாடு ஒப்பந்தம் கையெழுத்திட்ட வரலாறு இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிற்குமில்லை. விபரீதமான முறையில் உருவாக்கிய ஒப்பந்தத்தை தான் இன்றும் காங்கிரஸ்காரர்களும், மார்க்சீய கம்யூனிஸ்டுகளும், இந்து ராம் போன்ற ஊடகவியலாளர்களும் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக முன்வைக்கின்றனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்கள்:

  1. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பது.
  2. வடகிழக்கு மாகாண இடைக்கால கவுன்சிலை உருவாக்குவது. இந்த கவுன்சிலில் ஆளுநர் ஒருவர், முதலமைச்சர் ஒருவர் மற்றும் ஒரு அமைச்சரவை உருவாக்கப்படும்.
  3. 1988ம் ஆண்டு 31 டிசம்பருக்குள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி கிழக்கு பகுதி மக்கள்: வடக்கு மாகாணத்துடன் இணைந்து ஒரே மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா; அல்லது தனி மாகாணமாக இடைக்கால மாகாண சபை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது. இந்த வாக்கெடுப்பை இலங்கை அதிபர் விரும்பினால் காலநீட்டிப்பு செய்யலாம்.
  4. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை எந்த சூழ்நிலையிலும் 31டிசம்பர் 1987ற்குள் முடிப்பது. இந்திய அதிகாரிகள் பார்வையில் தேர்தல்.
  5. ஆகஸ்டு 15, 1987ற்குள் வடகிழக்கு மாகாணங்களின் அவசர சட்டங்கள் ரத்து செய்யப்படும். ஒப்பந்தம் நிறைவேறிய 48 மணி நேரத்திற்குள் இலங்கை தீவு முழுவதும் சண்டை நிறுத்தம் செய்யப்படும். போராளி குழுக்களின் அனைத்து ஆயுதங்களும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
  6. சண்டை நிறுத்தம் துவங்கிய 72 மணி நேரத்தில் இலங்கை இராணுவ மற்றும் பாதுகாப்பு படைகள் தங்களது முகாம்களுக்குள் முடங்க வேண்டும்.
  7. இலங்கையின் பிற பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பயன்படுத்தும் அமைப்புமுறையை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை அரசு பயன்படுத்தவேண்டும்.
  8. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுக்கும் போராளி இயக்கங்களை கட்டுப்படுத்தும் படை நடவடிக்கைகளுக்கு இந்திய படைகள் உதவுவது. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தேவைப்படும் இந்திய இராணுவ உதவிகள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது சண்டையை நிறுத்துவது போன்ற மேலோட்டமான தோற்றத்தை உருவாக்கினாலும், தமிழர் தரப்பின் அரசியல் தன்னாட்சி உரிமையை மறுத்தது. நிரந்தரமான தீர்வை அடையும் முன்னரே போராளிகளின் ஆயுதங்களை பறித்து தன்னாட்சி உரிமையை அடைய போராடும் வழிமுறையை முடக்கியது. தமிழர்களின் அரசியல் குரலை உள்வாங்க மறுத்ததுடன் அவர்களது விருப்பத்திற்கு எதிரான திட்டங்களை இவ்வொப்பந்தம் முன்வைத்தது. அரசியல் அடிப்படையில் தமிழர்களது உரிமையை வழங்காமல் அவர்களது ஆயுதங்களை கழைந்து, முடக்குவதை புலிகளும், பிற இயக்கங்களும் எதிர்த்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தது தமிழர்களின் பூர்வீக தாயம், ஆகவே அவற்றை இருமாகாணங்களாக பிரித்து தமிழர்களை பிளவுபடுத்தக்கூடாது என்பதுவும் அவர்களது எதிர்ப்பாக அமைந்தது. ஆனால் தமிழர் தரப்பின் ஆயுத, அரசியல் பலத்தை முடக்க காத்திருந்த ஜெயவர்த்தனேவுக்கு இந்தியா செய்த ஒப்பந்தம் வலுவான ஆயுதமானது. இலங்கையின் அரசியல் சட்டம் பெரும்பான்மை இனமான சிங்களவர்களினால் மத்திய அரசில் தலைமையேற்கும் ஆட்சிமுறையை கொண்டிருக்கிறது. பேரினவாத எண்ணம் சிங்கள அரசியல் தலைவர்களிடமும், பௌத்த பிக்குகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஊறிப்போயிருக்கிறது. இலங்கை அரசு முறையில் அதிபருக்கான அதிகாரம் கட்டுப்பாடுகளற்ற அளவு குவிந்து கிடக்கிறது. 'இலங்கை சிங்களவர்களுக்குரியது, சிங்கள மொழி, பௌத்தம் மட்டுமே அதன் கலாச்சார அடையாளங்கள்' என்னும் இன அடிப்படைவாதமும், மகாவம்ச சிந்தனையும் இருக்கும் வரையில் தமிழர் ஒருவரை இலங்கையின் அதிபராக வாய்ப்புகளில்லை. அதிபர் மட்டுமல்ல முக்கிய துறைகளின் பதவிகளில், அமைச்சுகளில் சார்பற்று செயல்பட முடியாது.

அப்படிப்பட்ட சிங்கள பேரினவாத ஆதிக்கம் கொண்ட அமைப்பின் கீழ் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார பலனற்ற மாகாணசபை தேர்தல்களை தீர்வாக முன்வைத்து, இரண்டு மாகாணங்களை வைத்து உங்களுக்குள் முடங்கி கொள்ளுங்கள் என்பது என்ன தீர்வு? இலங்கை-இந்திய ஒப்பந்தம் அதை தான் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின் முன்னர் இந்தியாவிற்கும்-ஜெயவர்த்தனேவுக்கும் மத்தியில் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்களில் இந்த சதி வெளிப்படுத்துகிறது. ஜே.என். தீட்சித் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தெரிவித்த புதுடில்லியின் தேவைகளை குறிப்பிட்டுள்ளார்.

//When Jayewardene asked me to be specific about India's concerns, I said that Sri Lanka should give assurances to India on the following points:

  1. Reduction and phasing out of foreign military and intelligence personnel in Sri Lanka from the United Kingdom, Pakistan, Israel, South Africa and so on.
  2. Sri Lanka should reorganise its foreign and defence policies and reduce its involvement with USA, Pakistan, China, Israel and South Africa.
  3. Sri Lanka should give some assurances to India that its seaports and airports would not be utilised by foreign powers which were antagonistic towards India or which affected India's security interest negatively.
  4. Sri Lanka should fulfil the assurances which it gave in 1985 that India would be given an opportunity to maintain the Trincomalee Oil Tank Farms and that Sri Lanka would prevent foreign broadcasting stations like the Voice of America from being utilised for military purposes by countries like the United States, West Germany, etc.

Jayewardene said that these were excessive demands being made at the last moment. He was, however, reminded politely that these concerns of India were specifically mentioned to him between April 29 and May 5, 1985 by Minister Chidambaram. I recalled that I had repeated these concerns and requests to Jayewardene on June 9, 1985. Minister of State Natwar Singh did the same on November 24, and again between December 17 and 19, 1986. I pointed out that India's co-operation with Sri Lanka to solve the ethnic problem was predicated on Sri Lanka giving positive responses on these important concerns of India. The President consulted Minister Gamini Dissanayake and Finance Minister Romaie de Mel over the phone on these points raised by me. He then directed me to proceed immediately to the offices of the two Ministers to discuss details of how this particular issue should be dealt with.

At the end of the meeting with these Ministers, it was agreed that the points raised could be covered by means of a letter which should be carefully drafted. I said I would get a Draft Letter covering these points prepared when I proceeded to Delhi for consultations on the proposed Agreement and bring it back for approval...."// Reference : Assignment Colombo by J N Dixit, Konarak Publishers, 1998,

ராஜீவ் காந்தியும் இந்த விசயங்களை வலியுறுத்தி ஜெயவர்த்தனேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ராஜீவ் காந்தியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகள் அனைத்தும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அன்றும், இன்றும் இந்திய மத்திய அரசை இயக்கும் நாயகர்களாக புதுடில்லியின் அதிகாரிகள் இருக்கிறார்கள். ராஜீவின் கடிதத்தில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை இன்றும் இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

ராஜீவின் கடிதம், இந்திய அமைதிப்படை…

...அடுத்த பகுதிகளில்…