Saturday, December 06, 2008

அறிவுமேதை அம்பேத்கார்!


தந்தையை பார்க்க சென்ற இரண்டு சிறுவர்கள் மராத்திய மாநிலத்தின் மசூர் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள். இன்னும் பயணம் தொலைவு. வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். பயணத்தில் வண்டிக்காரனுக்கு சிறுவர்களது சாதியை அறிந்து கொண்டான். வண்டியை உடனே நிறுத்துகிறான். வண்டியின் ஒரு பக்கத்தை தூக்கி மகர் சாதியில் பிறந்த இரு சகோதர்களையும் தரையில் தள்ளிப்போடுகிறான் வண்டிக்காரன். சிறுவர்களை பார்த்து சத்தம் போட்டு வாயில் வந்தபடியெல்லாம் அசிங்கமாக திட்டுகிறான்.

அந்த நண்பகல் வேளை வீதியில் விழுந்த சிறுவர்களுக்கு தண்ணீர் தாகமெடுக்கிறது. அருகிலிருந்த வீடுகளில் தண்ணீர் கேட்டு கெஞ்சுகிறார்கள். ஒருவரும் தண்ணீர் கொடுக்கவில்லை. பல மணி நேரம் கழிந்தும் கூட தண்ணீர் கொடுக்க ஆளில்லை. ஆதிக்க சாதியினரின் தண்ணீர் தொட்டிகள், கிணற்றடி அருகே செல்ல அந்த சிறுவர்களுக்கு அனுமதியில்லை. காரணம், அவர்கள் மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள். அவர்களில் இளையவனின் பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பவடேகர்.


ஒருமுறை, கிணற்றிலிருந்து பீம்ராவ் தண்ணீர் குடித்த போது ஆதிக்க சாதியினர் அடித்து துன்புறுத்தினார்கள். எருமை மாட்டை சிரைப்பவர் கூட பீம்ராவுக்கு தலைமயிர் வெட்ட தயாராக இல்லை. சிறுவனாக இருந்த போது ஆதிக்க சாதியினரின் அனைத்து கொடுமைகளையும் அனுபவித்து வளர்ந்த பீம்ராவ் பின்னாளில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இளம் வயதில் சாதியை ஒழிப்பது எப்படி?’ (Annihilation of Caste) என்னும் அவரது பேசப்படாத உரை இந்திய சாதி ஆதிக்கத்தின் அடிப்படையை, பார்ப்பனீய ஆதிக்கத்தை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்து மதத்தின் கோட்பாடுகளை தோலுரித்துள்ளது. சாதி எதிர்ப்பு போராளிகளும், பார்ப்பனீய பயங்கரவாதத்தை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் அவர் வழங்கியுள்ள மிக சிறந்த ஆய்வு நூல்களில் சாதியை ஒழிப்பது எப்படி?’ மிகசிறப்பானது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்திய சிறப்பான பணியை நிறைவேற்றினார் அவர். அவர் தான் பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கார். இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுமேதை. இன்று டிசம்பர் 6 அவரது நினைவு தினம்.

பின்குறிப்பு: பாபர் மசூதியை இடிக்க இந்த நாளை தேர்ந்தெடுத்து அம்பேத்காரை இழிவுபடுத்தியது அத்வானி, பா.., சங்க்பரிவார கும்பல்.