Sunday, August 01, 2010

அருந்ததிராய் உரை: வெற்றி மக்களுக்கே!

கீற்று இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் அருந்ததிராயின் உரை தண்டகாரண்ய காட்டில் கார்ப்பரேட் இந்தியப் பேரரசு  நடத்தி வருகிற அழித்தொழிப்பு, படுகொலை அரசியலை பதிவு செய்கிறது. சனநாயகம், மக்களின் உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் வாசிக்க வேண்டியது. நன்றி: கீற்று.காம் 
 
கீழே அருந்ததிராய் பேசுகிறார்.
-----
(சென்னையில் 2010 சூன் 4ஆம் நாள் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய அரங்கக் கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) தொகுப்பு : வேல்முருகன்
 
அனைவருக்கும் வணக்கம். இங்கு உங்கள் முன் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரிந்ததுதான், நான் எழுத்தாளரே தவிர, பேச்சாளர் அல்ல. ஆகவே, என் பேச்சில் குற்றங்குறைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
எடுத்த எடுப்பில் நாம் கருத்தளவில் சிலவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஊடகங்கள், உள்துறை அமைச்சர், இந்திய அரசு ஆகியோர் நாட்டில் அமைதியின்மை நிலவுவதாகவும், அமைதியை மீட்கவும் நடுத்தர வர்க்கத்தினரையும் அமைதி விரும்புவோரையும் சாமானிய கிராமப்புற மக்களையும் பாதுகாக்கவும் வேண்டுமானால் போர் தொடுக்கவும் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்தவும் வேண்டிய தேவை இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இராணுவத்தை அழைத்தாக வேண்டும் என்று பேசப்படுவதை நேற்றைய செய்தியேடுகளில் படித்திருப்பீர்கள். நேர்மாறானதே உண்மை. அரசுக்குத்தான் போர் தேவைப்படுகிறது, அவசரமாகத் தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதே இல்லாமற் போய்விட்டது. இப்போதிருப்பது ஒரு பெருங்குழும அரசுதான். இந்தப் பெருங்குழும அரசுக்குப் போர் தேவைப்படுகிறது; அவசரமாகத் தேவைப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் 
2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடனே பிரதமர் முதலில் வெளியிட்ட கருத்துகளில் ஒன்று மாவோயிஸ்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று; உண்மையில், அவர் அப்படிப் பேசிய நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் அநேகமாய் அடியோடு துடைத்தெறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இழந்து அம்மாநிலத்தை விட்டுத் துரத்தப் பட்டிருந்தார்கள். மாவோயிஸ்டுகள் அநேகமாய்த் தம் வரலாற்றிலேயே மிகவும் தாழ்வுற்றிருந்தார்கள்.

ஆனால், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே சுரங்கக் குழுமங்களின் பங்கு விலை திடீரென்று உயர்ந்தது. அவர்கள் பங்குச் சந்தையிலே பெருத்த இலாபம் ஈட்டினார்கள். ஏனென்றால் அந்தப் பகுதிகளில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக அதைக் கருதினார்கள். சில மாதங்களுக்குள் 2005-06 வாக்கில் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பெரிய சுரங்கக் குழுமங்களோடும், பெரிய அகக் கட்டமைப்புக் குழுமங்களோடும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 

சல்வா ஜுடும் 
பஸ்தாரில், டாடா, எஸ்ஸார் குழுமங்களோடு ஒருங்கிணைந்த உருக்கு தயாரிப்பதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிச் சில வாரங்களுக் குள்ளேயே ஒரு செய்தி வந்தது. நக்கலைட்டுகள் குறித்துச் சலிப்புற்ற பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து சல்வா ஜுடும் என்கிற தன்னெழுச்சிப் படையை அமைத்திருப்பதாக அந்தச் செய்தி கூறியது. சல்வா ஜுடும் என்பதை அமைதி வேட்டை என்றோ, தூய்மை வேட்டை என்றோ மொழி பெயர்க்கலாம். முதலில் பலரும் இந்தக் கதையை நம்பிவிட்டனர். இவர்களுக்கு அரசே ஆயுதம் கொடுக்கும் செய்தி வெளியான பிறகுதான் உண்மை வெளிவந்தது. இந்த சல்வா ஜுடும் படைக்கு டாடா, எஸ்ஸார் குழுமங்கள் நிதியுதவி செய்வதாக இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையே தெரிவித்தது. பிறகு இந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுச் சில வாரங்களுக்குள் சல்வா ஜுடும் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சல்வா ஜுடும் ஊர் ஊராகச் சென்றது. அடிப்படையில் அதன் பணி என்பது மக்களைக் கிராமங்களிலிருந்து துரத்தியடிப்பதே. அது கொலையிலும,; தீவைப்பிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது. மக்களைச் சாலையோரத்திய முகாம்களுக்குள் விரட்டியது. இது 'நிலச்சுத்திகரிப்பு நடவடிக்கை" என்று அழைக்கப்பட்டது.

இதற்கான இராணுவ உத்தியைக் கண்டுபிடித்தவர் பிரித்தானியப் படைத் தளபதி ஜெனரல் கிரீக்ஸ். அவர் மலேசியாவில் கம்யூனிஸ்டு களுக்கு எதிராகப் பிரித்தானியர் நடத்திய போரில் இந்த உத்தியைத்தான் கையாண்டார்.

மக்களை அச்சுறுத்தி ஊரை விட்டு வெளியேற்றிக் காவல்துறையின் முகாம்களுக்குள் அடைப்பதுதான் அது. தண்டகாரண்யப் பகுதியில் இந்த உத்தியைக் கொண்டு 660 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. 50,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் காணாமற் போய் விட்டார்கள். இன்று வரை அவர்களைக் காணவில்லை. சிலர் அடுத்திருந்த ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் விட்டார்கள். ஆனால் பலர் அஞ்சி நடுங்கிக் காடுகளில் ஒளிந்துள்ளார்கள். ஆனால் முப்பதாண்டுகளாக மாவோயிஸ்டு இயக்கம் அந்தப் பகுதியில் வளர்ந்து வருகிறது. அது சுரங்கம் வெட்டுவதை எதிர்ப்பதற்கான இயக்கமன்று. பெருங்குழுமங்களின் சுரங்க வேட்டை தொடங்குவதற்கு ஏழாண்டு முன்பே மாவோயிஸ்டு இயக்கம் வந்துவிட்டது என்பதை நாமறிவோம். பழங்குடி மக்கள் போராடத் தொடங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகே மாவோ பிறந்தார் என்பதையும் நாமறிவோம்.

தண்டகாரண்யத்தில் என்ன நடந்தது என்றால், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், மிருகத்தனமான நிலச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான் இடம் பெற்றது. சல்வா ஜுடும் எதிர்விளைவையே உண்டு பண்ணியது. அதன் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் வளர்ந்தார்கள் என்பதே உண்மை. அவர்களின் படைவீரர் தொகை பன்மடங்கு பெருகியது. ஏனென்றால், கொள்ளைகளும் தீவைப்புகளும் பாலியல் வன்கொடுமைகளும் பழங்குடி மக்களைச் சீற்றமடையச் செய்து, மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் விடுதலை கெரில்லாப் படையில் சேர்ந்தார்கள்.

பச்சை வேட்டை 
இன்று இந்திய நாடெங்கும் பச்சை வேட்டை என்பது 'நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையேல் எங்கள் பகைவனின் பக்கம் இருக்கிறாய்" என்ற புஷ் கொள்கையை அடியொற்றியே நடைபெறுகிறது. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய் என்றால் பெருங்குழுமங்களை ஆதரிக்க வேண்டும். நீ எங்களை எதிர்க்கிறாய் என்றால், நீ மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, காந்தியவாதியாக இருந்தாலும் சரி, காந்திய சோசலிசவாதியாக இருந்தாலும் சரி, உள்ðர்ப் பழங்குடி இளைஞராக இருந்தாலும் சரி, நீ ஆயுதம் தரித்தவன் என்றாலும் சரி, தரிக்காதவன் என்றாலும் சரி, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றாலும் சரி, இல்லாதவன் என்றாலும் சரி, நிலத்தையும் இயற்கைச் செல்வாதாரங்களையும் பெருங்குழுமங்கள் எடுத்துக் கொள்வதை எதிர்க்கிறாய் என்றால் நீ ஒரு பயங்கரவாதி.

இப்படித்தான் மாவோயிஸ்டு என்ற சொல்லுக்கான, இலக்கண வரையறையை விரிவுபடுத்தி விட்டார்கள். அநீதியை எதிர்க்கிற எவரையும் குறிக்கும் வகையில் அதன் பொருளை விரிவுபடுத்தி விட்டார்கள். இவ்வாறு நம் உள்துறை அமைச்சரே மாவோயிஸ்டு இயக்கத்துக்கு மிகவும் வெற்றிகரமான, மிகப் பெரிய ஆள்சேர்ப்பு முகவர் என்று சொல்லலாம். சிதம்பரம் 'ஒரு மறைமுக மாவோயிஸ்டு" என்றும் கூட சிலர் வேடிக்கையாகச் சொல்கின்றனர். எந்த அரசியல் கட்சிதான் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பாது? அந்த அழைப்பை அவர்கள் ஏன் மறுக்கப் போகிறார்கள்?

ஆனால், இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்; தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் மைய சேம காவல் படையைத் தாக்கிய செய்தியைப் பெருங்குழும ஊடகங்;கள் திரும்பத் திரும்ப வெளியிட்டன. அடுத்து நடந்த விபத்தில் தொடர்வண்டி தடம்புரண்ட போது, யார் செய்தது என்று தெளிவாகத் தெரியாத போதே, இது மாவோயிஸ்டுகளின் வேலைதான் என்று ஊடகங்களும், உள்துறை அமைச்சகமும் உறுதியாக நம்புகின்றன. சாதாரண மக்களை எப்படித் தாக்கலாம்? என்று அவைக் கூக்குரலிட்டன. சாதாரண மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அப்படி நியாயப்படுத்துவதற்காக நான் வரவில்லை. ஆனால் நாம் இன்று இங்கே பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கான ஆயுதக் காவல்படையினர் கலிங்காநகரிலும், ஜகத்சிங்புரத்திலும், ஜார்க்கண்டிலும் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ள செய்தியை யாரும் வெளியிடவில்லை. அங்கெல்லாம் டாட்டாக்களும், ஜிண்டல்களும், மிட்டல்களும் இன்னும் இவைபோன்ற பெருங்குழுமங்களும் நிலப்பறிப்புச் செய்வதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். 

ஊடகங்களின் பங்கு 
இப்படிப் போராடுகிற ஒவ்வொருவரையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்துவதன் வாயிலாகப் பச்சை வேட்டை நடவடிக்கை நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அது நம் எல்லோரையும் குறி வைக்க முயல்கிறது. சுவாரசி யமான வழிகளில் இது நடப்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்:

மும்பையில் இதே போன்ற ஒரு கூட்டத்தில் நேற்று முதல்நாள் உரை யாற்றினேன். இங்கு போலவே ஏராளமான பத்திரிகை யாளர்கள் வந்திருந்தனர். மறுநாள் காலை இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பைப் பதிப்பு போன்ற பல்வேறு ஏடுகளில் அக்கூட்டம் பற்றி விரிவான செய்திகள் இடம் பெற்றிருந்தன. எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி இடம்பெற்றது. ஆனால் மறுநாள் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி முகமையாகிய பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (Pவுஐ) மட்டும் வேறு மாதிரியாக இந்தச் செய்தியை வெளியிட்டது. அருந்ததி சொல்கிறார்: 'நான் ஒரு மாவோயிஸ்டு' என்று; 'என்னைக் கைது செய்து பாருங்கள்' என்று அரசுக்குச் சவால் விடுகிறார், என்ற செய்தியை பி.டி.ஐ. வெளியிட்டது. இது முழுக்க முழுக்கப் பொய்ச் செய்தி. இதை நான் குறிப்பிடுவது நான் கைதுக்கு அஞ்சுகிறேன் என்பதால் அன்று. நான் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவள் என்பதாலும் அன்று. 

என்னைப் பற்றி . . . 
 நான் எவ்விதச் சார்புமற்ற சுதந்திரமான எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நின்று கொண்டே கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். திட்டவட்டமாக நான் எதிர்ப்பியக்கத்தின் பக்கம்தான் நிற்கிறேன். ஆனால் காந்தியவாதிகள், காந்திய சோசலிசவாதிகள், ஆயுதப் போராளிகள், போர்க் குணமிக்க மாவோயிஸ்டுகள் என்று பலதரப்பட்டவர் களாலும் ஆனதே இந்த எதிர்ப்பியக்கம். ஆனால் அனைவரும் பெருங்குழுமக் கொடுந்தாக்கு எனும் ஒரே பகையை எதிர்த்தே போராடி வருகிறார்கள். ஆனால் நான் பேசாததைப் பேசியதாகப் பி.டி.ஐ. செய்தி வெளியிட்ட உடனே முன்பு சரியாகச் செய்தி வெளியிட்ட ஏடுகளும் இப்போது பொய்ச்செய்தியைப் படியெடுத்து வெளியிட்டு விட்டன. தொலைக் காட்சிகளும் செய்தியை மாற்றி வெளியிட்டன. இதெல்லாம் முத்திரை குத்துகிற முயற்சியே என்கிறேன். இந்த விவாதத்தை அவர்கள் முடிந்த வரை அசிங்கப்படுத்த முயல்கிறார்கள். அவதூறுகளை அள்ளித் தெளிக்க முயல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சாயம்பூசி மூலையில் தள்ளி அச்சுறுத்தி, வாயடைக்கச் செய்ய முயல்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருத்திக்கே அவர்களால் இதையெல்லாம் செய்ய முடியும் என்றால், பிலாஸ்பூரிலும், கலிங்கா நகரிலும், ராய்ப்பூரிலும் பிற இடங்களிலும் போராடுகிற கிராம மக்களுக்கும் செயல்முனைவர்களுக்கும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். எங்கள் பக்கம் இல்லாதவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரானவர்களே என்ற புஷ் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். இதெல்லாம் எப்படித் தொடங்கியது? எப்போது தொடங்கியது? இந்தப் பெரிய பெரிய அகக் கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டன என்பது நமக்குத் தெரிந்ததே. பெரும் பெரும் அணைகள் கட்டியதால் மட்டும் மூன்று கோடியே நாற்பது இலட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து புலம் பெயர்ந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்த நாட்டின் பழங்குடி மக்கள் தொகை மட்டுமே உலகில் பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலாகும். நலிந்து கிடக்கிற இந்த மக்கள்தாம் இன்று அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்க அணியில் இந்தியா ஆனால் பின்னோக்கி எண்ணிப் பார்த்தால்… 1989இல் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளில் சோவியத்துக் கம்யூனிசத்துக்கு எதிரான புனிதப் போரில் முதலாளியம் வெற்றி கண்டபோது இந்த நாடு உட்பட உலகமுழு வதும் அணி மாறியது. அதுவரை அணி சாரா நாடாக இருந்த இந்தியா இப்போது முழுக்க முழுக்க அணி சார்ந்த நாடாகி விட்டது. அது இசுரேல் போன்ற ஒரு நாட்டிற்கே கூட்டாளி ஆகி விட்டது. பாலத்தீனத்தை ஆதரித்து வந்த இந்தியா இன்று வெட்கங்கெட்ட முறையில் இசுரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூட நேச நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங்.

காங்கிரசுக் கட்சியால் இரண்டு பூட்டுகள்; திறந்து விடப்பட்டன. ஒன்று பாபர் மசூதியின் பூட்டு, இன்னொன்று இந்தியச் சந்தைகளின் பூட்டு. இந்த இரு பூட்டுகளையும் திறந்து இரு வகையான முற்றாதிக்கங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். ஒன்று இந்து அடிப்படைவாதம். மற்றொன்று சந்தை அடிப்படைவாதம். இந்த இரு அடிப்படைவாதப் போக்குகளுக்கும் இறுதியில் அததற்குப் பொருத்தமான பயங்கரவாதிகள் தேவைப்பட்டார்கள். ஆகவே ஒருபுறம் இசுலாமியப் பயங்கரவாதிகளையும் மறுபுறம் இப்போது மாவோயிஸ்டுப் பயங்கர வாதிகளையும் தயாரித்தார்கள். இந்த இரண்டுக்கும் நடுவில் இந்த அரசாங்கத்தின் பொருளியல் கொள்கைகள் முன்தள்ளப்படுகின்றன. இராணுவ அரசு இல்லாவிட்டால், போலீஸ் அரசு இல்லாவிட்டால் இதற்குமேல் இந்தக் கொள்கையை முன்தள்ள முடியாது. ஏனென்றால் இந்த வளர்ச்சி வீதமும் சனநாயகமும் ஒத்துப் போகக் கூடியவை அல்ல. இதனால் எங்கு வந்து நிற்கிறோம் என்றால், எத்தனையோ ஆண்டுகளாக இராணுவ ஆட்சியில் இருந்துள்ள பாகிஸ்தானில் சனநாயகம் வேண்டும் என்று மக்கள் போராடும் அதே போது, நமக்கு சனநாயகம் இருப்பதாக நாம் நினைத்த இந்தியாவில் நடுத்தர வர்க்கமும் பெருங்குழும ஊடகங்களும் இராணுவ ஆட்சி, காவல்துறை ஆட்சி வேண்டுமென்று கூக்குரலிடு கின்றன. இராணுவம் வரட்டு மென்று அவர்கள் வெளிப் படையாகக் கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் இராணுவத் தளபதியும் வான்படைத் தளபதியும் சற்றே தயக்கம் காட்டியபோது, இராணுவத்தை சனநாயகமய மாக்குவது என்றும், சனநாயகத்தை இராணுவமய மாக்குவது என்றும் பகட்டுறப் பேசப்பட்டது. ஆனால் உண்மையில், கிலானி இங்கே கூறியது போல், இராணுவம் சனநாயகத்தன்மை கொண்டதன்று. 

மக்கள் மீது போர் 
நம் மக்கள் மீதான புதிய போர் என்று எல்லோரும் குறிப்பிடுகிறோம். இது புதியதன்று. ஏனென்றால் - நம் மக்கள் என்பது யாரைக் குறிக்குமோ நானறியேன் - இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே போர் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அது ஆட்சிப் பரப்புகளைக் கைப்பற்றிச் சேர்த்துள்ளது. மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், காசுமீர், தெலங்கானா, பஞ்சாப், கோவா, ஐதராபாத், நக்சல்பாரி இயக்கம்… என்று காலமெல்லாம் போர்தான். இந்த நாடு தன் மக்கள் மீதே போரில் ஈடுபடாத ஆண்டு எதுவுமில்லை. இது என்ன வகையான போர்? நாகர்களுக்கு எதிராக, மணிப்பூரிகளுக்கு எதிராக, காசுமீரிகளுக்கு எதிராக, சீக்கியர்களுக்கு எதிராக, ஏழை எளியவர்களுக்கு எதிராக, தெலங்கானாவில் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் எதிராக, மேற்கு வங்கத்தில், பெரும்பாலும் பழங்குடிகளான நக்;சலைட்டுகளுக்கு எதிராக… எப்போதுமே கீழ்ச்சாதியினருக்கு எதிராக, முசுலீம்களுக்கு எதிராக, கிறித்தவர்களுக்கு எதிராக, பழங்குடி மக்களுக்கு எதிராக இந்தப்;போர் நடந்து வருகிறது. இந்த அரசு பிறந்த நாள் முதல் தன் மக்கள் மீதே போர் புரிந்து வரும் மேல்சாதி அரசாகும். இது புதிய போர் அல்ல என்று பேராசிரியர் சாய்பாபா இங்கே எடுத்துக்காட்டினார். இது இயற்கைச் செல்வாதாரங்களுக்கான போர். இலங்கையில் நடைபெற்றவை குறித்து நீங்கள் அனைவரும் அடைந்துள்ள வேதனையை நானறிவேன். அங்கு நடைபெற்ற இனப்படுகொலையில் பத்தாயிரக் கணக்கானத் தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான போர்தான், அதில் ஐயமில்லை. ஆனால் அது பெருங்குழுமப் போரும் ஆகும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

இன்று இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பாகிய 'ஃபிக்கி' இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் எப்போதுமே முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. இது குறித்து ஏதாவது செய்திருக்க வேண்டியவை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளே. ஆனால் அவை எதுவும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு! ஏனென்றால் அவர்கள் இதை நிறுத்தியிருக்க முடியும். என்றாலும் நிறுத்தவில்லை. அவர்கள் ஒதுங்கி நின்று கொண்டார்கள்.

இன்று இந்தியப் பெருங்குழுமங்கள் அங்கே போய்க்கொண்டிக்கின்றன. மேலும் மேலும் பணம் ஈட்டுவதற்காக அவை போகின்றன. இதே போன்ற நிலைமைதான் இந்தியாவின் மையப்பகுதிகளிலும் உருவாகி வருகிறது. இந்தப் பகுதிகளை அரசினர் 'மாவோயிஸ்டு வேட்டை" என்கின்றனர். நாம் 'எம்ஒயுயிஸ்டு வேட்டை" என்கிறோம். ஏனென்றால் அங்கெல்லாம் எம்ஒயு (ஆழுரு) எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உட்படாத மலையோ காடோ எதுவுமில்லை. இது நான் முன்பே சொன்னது போல் - மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரன்று. இது இந்த நாட்டில் வறியவர்களிலும் வறியவர்களாக உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான போரே ஆகும். தண்டகாரண்யத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சென்ற அந்த எல்லை வரை இந்திய அரசு செல்லுமளவுக்கு இந்தியாவில் நாம் விட்டு விட மாட்டோம் என்று நினைக்கிறேன்.

இலங்கையும் இந்தியாவும்
 இலங்கை அரசு செய்தது போல் இந்திய அரசு வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும் சுட்டுத் தள்ளவும் கூட்டம் கூட்டமாக மக்களை அழிக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் பார்ப்பனியக் குணம் படைத்த சூழ்ச்சிக்காரர்கள். பையப் பைய இனக் கொலை செய்வதுதான் நமது அரசின் திட்டம்.

நல்ல பழங்குடி யார்? செத்துப்போன பழங்குடிதான் என்பது மட்டுமல்ல இந்திய அரசின் கொள்கை. புலம் பெயர்ந்த பழங்குடிதான், ஊட்டச்சத்து இல்லாமல் மெலிந்துகிடக்கும் பழங்குடிதான், உரிமைகள் கேட்காத பழங்குடிதான், கண்ணியத்தைப் பறிகொடுத்த ஆணோ பெண்ணோ ஆகிய பழங்குடிதான், மனவுறுதி குலைந்த பழங்குடிதான், குப்பையில் வீசப்பட்ட பழங்குடிதான், சேரியில் கிடக்கிற பழங்குடிதான்... இவர்களே நல்ல பழங்குடிகள் என்பதும் கூட இந்திய அரசின் கொள்கைதான்.

நாம் மிகவும் நாசூக்கானவர்கள், அப்படியெல்லாம் சட்டென்று ஒருவரைக் கொன்று போட முடியாது. நாம் புலால் உண்ணாதவர்கள், பார்ப்பனியர்கள். அப்படிச் செய்ய மாட்டோம். தண்ட காரண்யத்தில் நடப்பவை செய்தியாவ தில்லை. ஏனென்றால் அவை வெறும் கொலைகள் மட்டுமல்ல. ஒரு பெரும் மக்கள் கூட்டமே நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக் கான மக்கள் - தங்கள் கிராமங்களுக்குச் செல்ல முடியாமலும், தங்கள் வயல்களில் சாகுபடி செய்ய முடியாமலும் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குக் கல்விக் கூடங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, எந்தவிதமான வசதிகளும் இல்லை. இந்த அவலநிலைக்கான பழி முழுவதும் மாவோயிஸ்டுகள் மீதே சுமத்தப்படுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகளே இல்லாத பழங்குடிப் பகுதிகளில் ஆய்வு செய்துள்ள மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

இந்தப் பகுதிகளின் மக்கள் ஊட்டச் சத்தின்மை தொடர்பான எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எய்ட்ஸ் எப்படி நோய் எதிர்ப்புத் திறனை அழித்து விடுகிறதோ, அதேபோல் ஊட்டச் சத்தின்மையும் இந்த மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அடியோடு அழித்து, அவர்களை எல்லா வகை நோய்களும் தொற்றுவது எளிதாகி விடுகிறது. இதனால் ஒருவர் சாகவில்லை என்றால், இந்த நலிவு அடுத்தடுத்த தலைமுறைக்குப் பரவி உடல்நிலையை மோசமாக்கி விடும். இதைத்தான் பையப் பைய நடக்கும் இனக்கொலை என்கிறேன். இதுதான் அவர்களின் திட்டம்.

அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. மக்கள் வெளியே வர முடியாது. அவர்களுக்கு உணவுப் பங்கீடு கிடைப்பதில்லை. பங்கீட்டுக் கடைகள் பாதுகாப்பு முகாம்களுக்குள் இருப்பதால் அவர்கள் அங்கே போக முடியாது. அவர்கள் கடைக்குப் போய் மருந்து வாங்க முடியாது. அது மூளை சார்ந்த மலேரியா அல்லது சாதாரண மலேரியா பரவியுள்ள பகுதி. விரைவில் அவர்களுக்கான உயிர்க்காற்று குறைந்து போய் அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் வளர்கிறது.

உள்நாட்டுப் பாது காப்புக்கு மிகப் பெரிய ஆபத்து யார் என்று அண்மையிலே ஒரு செய்தியாளர் என்னைக் கேட்டார். என்னைப் பொறுத்த வரை, பேராசை பிடித்த நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும்தான் மிகப்பெரிய ஆபத்து என்று நான் பதிலளித்தேன்.

யார் பிரிவினைவாதிகள்? 
இந்தியாவில் இவர்கள்தான் மிகப் பெரிய பிரிவினைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பவர்கள். இவர்கள் இந்த நாட்டை விட்டுப் பிரிந்து விண்வெளிக்குப் போய், அங்கிருந்து கீழே பார்த்துக் கேட்கிறார்கள்: “எங்கள், பாக்சைட்டுக்கு மண்ணில் என்ன வேலை? எங்கள் தண்ணீருக்கு ஆற்றில் என்ன வேலை? எங்கள் மரத்துக்குக் காட்டில் என்ன வேலை? அதையெல்லாம் எடுத்துக்கொடுங்கள்” என்கிறார்கள். மக்களைத் தேவைக்கதிகமானவர் களாகக் கருதுகிறார்கள். தேவைக்கதிகமாக உண்ணும் பெருந்தீனிக்காரர்களாக நினைக்கிறார் கள்.

நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உலகின் மிகப் பெரிய சுரங்கக் குழுமங்களில் ஒன்றாகிய வேதாந்தாவின் இயக்குநர் குழுவிலேயே இடம் பெற்றிருந்தவர். என்ரான் குழுமத்தின் வழக்குரைஞராக இருந்தவர். சுரங்கப் பெருங்குழு மங்களுக்காக எத்தனையோ முறை நீதிமன்றங்களில் வாதிட்டவர். இவர் நிதித் துறை அமைச்சராக இருந்த போது இந்தியாவுக்கான தனது இலட்சியக் கண்ணோ ட்டம் என்னவென்பதை அறிவித்தார். நாட்டின் 85 விழுக்காடு மக்கள் நகரங்க ளில் வாழ வேண்டும் என்பதே அது. 50 கோடி மக்களைக் கிராமப் புறங்களிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதே இதன் பொருள். காவல்துறையை ஈடுபடுத்தாமல், இராணுவத்தை ஈடுபடுத்தாமல் இதை உங்களால் செய்ய முடியுமா? முடியவே முடியாது. வெளியேற்றப்பட்ட பிறகு இந்த மக்கள் என்ன செய்வார்கள்? சேரிகளில் வசிப்பார்கள். அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்கப் போவதில்லை. நகரங்களில் இப்போது இருப்பவர்களுக்கே வேலை இல்லையே! மீண்டும் மீண்டும் அவர்களை வெளியேற்றிக் கொண்டே இருப்பீர்களா?

வெற்றி பெறுவோம் 
அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். கிர்பால் “சேரிவாசிகள் நம் சீர்மிகு நாட்டின் சேப்படிக்காரர்கள் (பிக்-பாக்கெட்டுகள்)” என்று கூறினார். மக்களைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதும் நகரங்களிலிருந்து வெளி யேற்றுவதுமாகக் சுற்றிச் சுழல விட வேண்டியதுதான். ஏனென்றால் அவர்கள் தேவைக்கதிகமான பிறவிகள்! ஒழிந்து போக வேண்டியவர்கள்! நூறாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆட்சியாளர்கள் வருத்தப்படுவதாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு வருத்தமில்லை. மேலும் பலர் இப்படிச் சாக வேண்டும், ஏழைகள் தொலைந்து போக வேண்டும் என்பதே அரசின் விருப்பம். 18,19ஆம் நூற்றாண்டுகளிலும் தென் அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் கனடா விலும் நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது: நாம் ஒரு சனநாயக நாடு என்று பாசாங்கு செய்து கொள்கி றோம். இது தன்னைத் தானே குடியேற்ற நாடாக்கிக் கொள்கிற சனநாயகம் தானே தன் உறுப்புகளைத் தின்ன முற்படுகிற சனநாய கம்; ஆனால் உறுப்புகள் தம்மைத் தின்னக் கொடுக்க மறுக்கின்றன. இந்தப் போர் புதியதன்று. இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதுதான் புதிய செய்தியாக இருக்கப் போகிறது. நம்மால் வெற்றி பெற முடியும்.

ஐந்தாண்டு காலமாக, உலகிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட பஞ்சைப் பராரிகள் உலகிலேயே மிகப் பெரிய பன்னாட்டுக் குழுமங்களைக் கிஞ்சிற்றும் ஈவிரக்கமற்ற பன்னாட்டுக் குழுமங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்; முன்னேற விடாமல் முடக்கியுள்ளார்கள். இது இடர்ப்பாடுகள் நிறைந்த போராட்டமே என்றாலும், மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் சனநாயகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் கெட்டுச் சீரழிந்து விட்டது. ஆனால் மக்களின் மனவுறுதி முறிந்து போகவில்லை. நாம் அவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நாம் ஒதுங்கி நின்று நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை என்று கூற முடியாது. இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது போல் இப்போதும் இருந்து விடக் கூடாது. இது ஈவிரக்கமே இல்லாத அரசு. மக்கள் கொல்லப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று நான் கூறியிருக்கக் கூடாது. அது தவறுதான். ஏனென்றால் காசுமீரில் மக்கள் கொல்லப்படுவதை நாம் தடுக்கவில்லையே! அங்கு எழுபத்தெட்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள் ளார்கள். வடகிழக்கில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, இந்திய அரசு சடலங்களை எண்ணுவதில் லை. ஆகவே, எத்தனைப் பேர் என்று நமக்குத் தெரியாது. மேற்கு வங்கத்திலும் ஆந்திரத்திலும் ஆயிரக்கணக் கான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். இது கருணையில்லாத அரசு. 

ஊடகங்கள் 
 இந்த நாட்டின் ஊடகங்கள் பெரிதும் ஒத்துப் போகிறவையாக இருக்கின்றன. கெட்ட செய்தியை வெளியிடாமல் மறைத்து விடுகின்றன. நான் இங்கு பேசும் போதே, என்னை நக்சலைட்டு ஆதரவாளர் என்று முத்திரையிட்டு 'இவளைச் சிறையில் போடு" என்று சொல்ல விரும்புகின்றன. சிறை செல்லும் ஆசை எனக்கும் இல்லை. நான் ஒன்றும் ஈகியல்லேன். நான் கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் நன்மைக்காகவே கூட நமக்கு நாம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என நம்புகிறேன். 'காந்தியவாதிகள் தொடங்கி மாவோயிஸ்டுகள் ஈறாக எதிர்ப்பியக்கத்தின் பல் வண்ண அணிவகுப்பு என்று கூறி வருகிறேன் அல்லவா" அந்த அணிவகுப்பில் காந்திய வாதிகளிடம் புரட்சிகர இலட்சியக் கண்ணோட்டம் இருக்கவே செய்கிறது என்று சொல்லலாம். வேண்டுமானால், பெருங்குழும இராணுவக் கொடுந்தாக்குதலுக்கு முகங்கொடுப்பதற்கான புரட்சிகர உத்தி அவர்களிடம் இல்லை எனலாம்.

ஆனால் மாவோயிஸ்டுகளின் இலட்சியக் கண்ணோட்டம் முழுக்க முழுக்கப் புரட்சிகரமானது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இன்று அவர்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டிருப்பதற்கு இந்திய அரசின் அழித்தொழிப்புக் கொள்கையே காரணம். அவர்களைப் பூண்டோடு அழிக்க விரும்புவதால் அவர்கள் காடுகளுக்குள் பின்வா ங்கிச் சென்றுள்ளார்கள். மாவோயிஸ்டுகள் தமது வரலாற்றில் எப்போதுமே பழங்குடிப் பகுதிகளில் தான் மிகவும் வலுவாக இருந்துள்ளார்கள். ஆனால், இன்று பழங்குடிப் பகுதிகள் மீது சுரங்கக் குழுமங்களும் அகக்கட்டமைப்புக் குழு மங்களும் கொடுந்தாக் குதல் தொடுத்துள்ளன. பழங்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாவோயிஸ்டு களுக்கென்று அரசின் சுரங்கக் கொள்கைக்கு மாறான ஒரு சுரங்கக் கொள்கை உண்டா? 

சுரங்கமும் சுற்றுச் சூழலும் 
 சுற்றுச் சூழலியல் சார்ந்து சுரங்கம் வெட்டுவதில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பது போல் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. சுற்றுச் சூழலியல் சார்ந்து பாக்சைட்டு; வெட்டியெடுக்க முடியுமா என்றால் முடியாது. ஓரிசா மலைகளில் புதைந்துள்ள பாக்சைட்டின் மதிப்பு 4 திரிலியன் (நாலாயிரம் கோடி கோடி) டாலர் ஆகும். இவ்வளவு பெருந்தொகை கிடைக்கும் என்பதால்தான் இராணுவத்தை அழைக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்தப் பாக்சைட்டு மலைகளைப் பொருளியல் வகையில் மதிப்பிடவே முடியாது. ஏனென்றால் அந்த மலைகள் நீர் தேக்கி வைத்திருப்பவை. ஓவ்வொரு நாளும் அந்தத் தண்ணீர் பள்ளத்தாக்குகளுக்குப் பாய்கிறது. அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலை இவ்வாறு இம்மலைகள் பேணிக் காக்கின்றன.

சுற்றுச் சூழலைக் கெடுக்காமல் பாக்சைட்டு எடுக்க முடியாது. பெரிய அணைகள் கட்டி மின்சாரம் இயற்றாமல் பாக்சைட்டை அலுமினாவாகவும் அலுமினாவை அலுமினியமாகவும் மாற்ற முடியாது. அலுமினியம் தயாரிக்கும் செயல்முறைதான் உலகிலேயே மிகவும் நச்சுத் தன்மையும் அழிவுத் தன்மையும் வாய்ந்த தொழிற் செயல்முறையாகும். சுற்றுச் சூழலியல் சார்ந்து அலு மினியம் தயாரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் தயாரிக்கும் அலு மினியம் நேராகப் படைசார் தொழில் துறைக் கட்டமைவுக் குள் போய்விடும். நேராகப் போர் இயந்திரத்துக்குள் போய்; ;விடும். நமக்கு நாமேயும் கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போன்றவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் இங்கே நிற்பது உங்களுக்கோ வேறு எவருக்கு மோ சங்கடமில்லாமற் செய் வதற்காக அல்ல. அது என் வேலையில்லை. சங்கடமான கேள்விகளைக் கேட்பதும,; என்ன நடக்கிறது இங்கே என்று வினவுவதும்தான் என் வேலை.

ஆனால் நான் கோட்டின் இந்தப் பக்கம் இருக்கிறேன். பெருங்குழும வன்பறிப்பை எதிர்க்கும் எதிர்ப்பியக்கத்தின் பக்கம் இருக்கிறேன். இந்தப் பக்கம்தான் இருக்கிறேன். கோடானுகோடி டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் - இரும்புத் தாது, பாக்சைட்டு, மாங்கனீஸ், தங்கம், வைரம், மாணிக்கம் போன்றவை - இருக்கும்போது இதிலிருந்து கிடைக்கக் கூடிய பணம் மலையளவு பெரிது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசுகளையே விலைக்கு வாங்கலாம். ஊடகங்களை வாங்கலாம்; நீதிபதிகளை வாங்கலாம்;: தேர்தல்களையும் வாங்கலாம். பத்தாயிரக்கணக்கான கோடிகளில் அரசியல் ஊழல் முறைகேடுகள் நடப்பதை அறிவீர்கள். இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வருகிறது? பாக்சைட்டு மலைகளிலிருந்து வருகிறது. இரும்புத் தாதுவிலிருந்து வருகிறது. ஊகப் பங்கு வணிகத்திலிருந்து வருகிறது.

அரசு இன்று இந்தத் தனியார் குழுமங்களுக்குச் சுரங்க ஒப்பந்தங்கள் வழங்குகிறது. இரும்புத் தாது டன் ஒன்றுக்கு உரிமைக் கட்டணமாக அரசுக்குக் கிடைப்பது 24 ரூபாய் மட்டுமே. ஆனால் இதைக்கொண்டு தனியார் குழுமம் ஈட்டுவது 5,000 ரூபாய். கோடிக் கணக்கான டன்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப் படுகின்றன. அதனால்தான் இங்கே பெல்லாரிக் குடியரசு ஆள முடிகிறது. மது கோடா வளர முடிகிறது. இந்தப் பெருங் குழுமங்களிடமிருந்து காசு வாங்கிச் செயல்படும் தொலைக் காட்சிகள் உள்ளன. இந்தத் தொலைக்காட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்கப் போவ தில்லை. அவர்களால் தேர்தலையே விலை கொடுத்து வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

அரசியல் கட்சிகள் 
 பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும் அண்ணா திமுகவும் திமுகவும்தான் கட்சிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, இவையல்ல கட்சிகள். டாட்டாவை எதிர்க்க அம்பானி, அம்பானியை எதிர்க்க மிட்டல், மிட்டலை எதிர்க்க மற்றொருவர்… உண்மையில் இவையே கட்சிகள். இந்தப் பெருங்குழுமங்களுக்கு ஆதரவாக ஆயுதப் படைகளே உள்ளன. சத்திஸ்கரில் சல்வா ஜுடும், மேற்கு வங்கத்தில் ஹர்மா படை, ஒரிசாவில் பாஸ்து குண்டர்கள் அல்லது டாட்டா குண்டர்கள் என்றவாறு உள்ளன.

ஆனால், இந்த உள்நாட்டுப் போர்ச் சூழலை நாம் சமாளித்தாக வேண்டும். மிகவும் கெட்டிக்காரத்தனமாக இதற்குள் நுழைந்து வெளிவர நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். காட்டுக்குள்ளே உங்களை ஒரு துப்பாக்கிக் குண்டு தாக்கலாம். ஆனால் காட்டுக்கு வெளியே உங்களுக்குச் சிறை உண்டு, ஊடகங்களில் உங்களைத் திசை திருப்பும் வழிகள் உண்டு. இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வன்முறையா, அகிம்சையா என்ற வினாவைத் திரும்பத் திரும்ப அவர்கள் நம்முன் எழுப்பி வருவது கருத்துக்குரியது. இது இயக்கங்களைப் பிரிக்கும் முயற்சியாகும். இந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று குற்றஞ் சொல்லிக் கொண்டிருக்கவில்லை, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை. மேதா பட்கர் மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கவில்லை. மாவோ யிஸ்டுகளும் மேதா பட்கரைக் கண்டிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் பத்திரிகைகளும் உரிமை வாதிகளும்தான் குறுஞ்செய்திக் கருத்துக்கணிப்பு நடத்துவதும் தொலைக்காட்சி வழி அறநெறி போதிப்பதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பியக்கத்தின் பன்மை 
இவர்கள் அனைவரும் தமக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், இந்த வேறுபாடுகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், ஒரே பெருங்குழுமக் காட்டாதிக்கத்தை எதிர்த்தே, ஒரே பெருங்குழுமப் படையெடுப்பை எதிர்த்தே போராடுகிறோம் என்பதை நன்கறிவார்கள். மக்கள் தங்கள் போராட்ட உத்திகளை வெறும் கருத்தியல் அடிப்படையில் வகுப்பதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். காட்டாக, நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆயுதப் போராட்டம் நடத்த முடியாது. அங்கு யாருடன் சமர் புரிவது? உங்கள் வீட்டை மூழ்கடிக்கும் ஆற்று நீருடனா? இதே போல், அடர்ந்த காட்டுக்குள், ஊர்விட்டு ஊர் செல்லவே பல நாள் ஆகும் போது, ஊரைச் சுற்றி மையச் சேமக் காவல் படையும், சத்தீஸ்கர் காவல்துறையும் நிற்கும் போது, உங்களால் என்ன செய்ய முடியும்? உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா? தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடியுமா? உங்கள் பேச்சைக் கேட்பது யார்?

காந்தியப் போராட்டம் நடத்துவதானால் பார்க்கவும் கேட்கவும் ஆள் வேண்டும். காட்டில் இதற்கு வழியில்லை. மேலும், பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பணம் இல்லாதவர்கள் வரிகொடா இயக்கமோ சரக்குப் புறக்கணிப்போ நடத்த முடியுமா? என்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் எதுவும் இல்லை, பணம் இல்லை. பார்க்கவும் கேட்கவும் அவர்களுக்கு யாருமில்லை. அவர்கள் என்னதான் செய்யமுடியும்? மாவோயிஸ்டு என்றும் காந்தியவாதி என்றும் வேறு பலவாறும் செய்யப்படும் இலக்கண வரையறைகள் எல்லாம் களத்தில் அவ்வளவு தெளிவானவை யாகவோ அவ்வளவு தூயவையாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்களே சாலையில் காந்தியவாதியாகவும் காட்டில் மாவோயிஸ்டாகவும் இருக்கலாம். அவர்கள் நமக்கு இந்த வரையறைகளைச் செய்தளிக்க விடக் கூடாது. நம் மண்டைக்குள்ளிருக்கும் சிந்தனைத் திறனை நாம் கைவிடத் தேவையில்லை. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருக்கிறாய் என்;பது போன்ற மிரட்டல்களுக்கு நாம் அஞ்சத் தேவையில்லை.
 நான் தண்டகாரண்யத்தில் காட்டுக்குள் செல்வதற்கு முன் தந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் 18 நக்சலைட்டுகளை என் வீரர்கள் கொன்று விட்டார்கள் என்று படத்தைக் காட்டினார். இளம் வயதினர், இளம் பழங்குடிகள் 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் எழுவர் இருபது வயதுக்குட்பட்ட பெண்கள,; தலையில் பூ வைத்திருந் தார்கள். நான் கேட்டேன்: அவர்கள் நக்சலைட்டுகளாகவே இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை வைத்து அவர்களை நக்சலைட்டுகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நெற்றியில் 'நான் நச்சலைட்டு' என்று எழுதி ஒட்டிவைத்துள்ளார்களா, என்ன? 'பாருங்கள், அம்மா, அவர்கள் எங்களிடம் இருக்கக் கூடிய மலேரியா மருந்தும் டெட்டால் போத்தலும் வைத்திருந்தார்கள்". ஆகவே, மாவோயிஸ்டு என்பதற்கு இது ஒரு வகையான விளக்கம். 

பேராசை வழி 
பிறகு அவர் சொன்னார்: “நம்மால் காவல் துறையையும் இராணுவத்தையும் பயன்படுத்தி இந்தப் போரில் வெற்றி பெற முடியாது. நாம் வெற்றிபெற ஒரே வழி இம்மக்களுக்குப் பேராசையின் பொருளைக் கற்றுத் தருவதுதான்.” ஏனென்றால் பேராசை என்றால் என்ன என்றே அவர்களுக்குப் புரியாது. வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுங்கள், போரில் வென்று விடலாம். இங்கே அரசியல் கட்சிகள் இதையே செய்து வருவதாக எனக்கு ஒருவர் நினைவுப்படுத்தினார். மக்களைக் கவரும் தொலைக் காட்சியைக் கொண்டு போரில் வென்று விடலாம். மாவோயிஸ்டு என்றால் யார் என்பதற்கு இப்படி விதம் விதமாக விளக்கம் தரப்படுகிறது. இறுதியில் அந்தக் கிராமங்களில் மக்களுக்கு என்ன நேரிட்டது, பாருங்கள்.

அந்தக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சொன்னார்:
“யாரெல்லாம் வெளியே வந்து காவல்துறை முகாம்களில், அல்லது சல்வா ஜுடும் முகாம்களில், வசிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மாவோயிஸ் டுகளே.” அதாவது யாரெல்லாம் கோழி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரெல்லாம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வயலில் நின்று கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று பொருள். தண்டகாரண்யத்தில் பயங்கரவாதத்துக்கு இதுவே இலக்கண வரையறை.

செப்;டெம்பர் 11 (இரட்டைக் கோபுரத் தகர்ப்பு) நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நெடுந்தொலைவு வந்து விட்டோம். இராணுவத்தை அழைப்பது பற்றியும், வான் படையைத் துணைக் கொள்வது பற்றியும் நேற்று கூட பேசியுள்ளனர். இதற்கு என்ன பொருளோ, யாமறியோம். ஏழைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகச் சுடுவதாம்! இதை நாம் அனுமதிப்பதுபோல் பெரிய வெட்கக் கேடு எதுவும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, உலகிலேயே மிகவும் வறுமைப்பட்டவர்களும் ஊட்டங்;குறைந் தவர்களும், ஏதுமற்றவர்களுமான மக்களுக்கு எதிராகப் படை நடத்துவதை அனுமதிக்கலாமா? இதுதான் நாட்டு நலன் என்றால், இப்படித்தான் நம் நாடு இருக்கும் என்றால், இது நம்மை பாசிஸ்டுகள் ஆக்கி விடக் கூடியது. இதை எண்ணி இரவில் நம்மால் தூங்க முடியவில்லை. தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தோமே என்று கூட வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். நாம் வாக்களிக்கக் கூடாது. வேறொன்றும் செய்ய முடியாவிட்டாலும் வீட்டிலேயே இருந்து விடுங்கள். அதுவே மனித குலத்துக்குச் செய்யும் உதவியாக இருக்கும். 

முதலாளிய முற்றாதிக்கம் 
முடிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது முதலாளியம் போல் முற்றாதிக்கத் தன்மையுள்ள கருத்தியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஏனென்றால் தன் கூடவே முதலாளியமல்லாத ஒரு சமூகமும் ஒருங்கே நிலவுவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. இன்று முதலாளியமல்லாத ஒரே சமூகம் பழங்குடிச் சமூகம் மட்டுமே. தெற்காசியாவில் என்ன நடக்கிறது? ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் வரை, பழங்குடி மக்கள் வாழும் இந்தியாவின் வடகிழக்கிலும், சிவப்புத் தாழ்வாரம் எனப்படும் பகுதி முழுக்கவும் ஒரு கொடுந்தாக்குதல் நடக்கக் காண்கிறோம். இதற்கான எதிர்ப்பியக்கம் வௌ;வேறுவிதமாக வடிவம் கொள்கிறது. அது ஆப்கானிஸ்தானில் தீவிர இஸ்லாமாகவும், இந்தியாவில் தீவிரக் கம்யூனிசமாகவும் இருக்கலாம். ஆனால் தாக்குதல் என்பது இயற்கைச் செல்வாதாரங்களைக் கைப்பற்றுவதற்கான பெருங்குழுமத் தாக்குதலே.

ஆகவே, இதை எப்படிப் பார்க்கப் போகிறோம்? என்னைப் பொறுத்த வரை நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன். கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் நம்மில் சிலரால் செய்ய முடியாமலிருந்ததைப் பச்சை வேட்டை நடவடிக்கை செய்து விட்டது. அது பெருங்குழும வட்டாரங்களின் முகத்திரையைக் கிழித்து விட்டது. பெரும்புள்ளிகளை அவர்களின் சொகுசான, மேலாண்மை அறைகளிலிருந்து வெளியே இழுத்து வந்து விட்டது! அவர்கள் வெளியே வந்து போர்க் கருவிகளேந்திக் கொலை செய்வதற்கு முனைந்து நிற்கிறார்கள். தெலங்கானாவில் குழந்தைகளைக் கூட ஒட்டுப் படைகள் கொலை செய்தன. இந்தப் படைகள் இந்திய அரசின் படைகள் அல்ல. இவை பெருங்குழுமப் பேரரசின் கூலிப்படைகள் ஆகும். ஆகவே, பச்சை வேட்டை நடவடிக்கையானது அநேகமாய் அனைவருக்குமே நிலைமைகளைத் தெளிவாக்கிய அளவில் நமக்கு உதவியுள்ளது. 

வெற்றி முக்கியம் 
ஆனால், இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தண்டகாரண்யக் காட்டிலும், லால்கரிலும். ஜார்க்கண்டிலும் நம்மால் வெற்றி பெற முடியும் என்றால், முதலாளிய இயந்திரத்தைப் பார்த்து நில் என்று சொல்ல முடியும், உனக்கு எதுவும் தர மாட்டோம் என்று சொல்ல முடியும். வேறுவிதமாகச் சிந்திக்கும் முறைக்கு இடமளித்தாக வேண்டும் என்று கேட்க முடியும். இந்த வெற்றியின் தொடர்ச்சியாகப் பிற வெற்றிகளை அடைய முடியும். ஏனென்றால் இன்று நாம் போராடுவது பாரதிய சனதா குறித்தோ காங்கிரஸ் குறித்தோ மார்க்சிஸ்டுகள் குறித்தோ மாவோயிஸ்டுகள் குறித்தோ அல்ல, மானுடத்தின் வருங்காலத்தை மாறுபட்ட வழியில் வடிவமைப்பது குறித்தும், மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் மாறுபட்டதோர் இலக்கணம் வகுப்பது குறித்தும,; இயற்கையோடு இயைந்து வாழ்வதின் வாய்ப்பு குறித்தும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெற வேண்டும். எப்படியோ தோற்றுப் போனால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். 

பழங்குடித் தாயகங்கள் 
இறுதியாக, நான் எழுதிய ஒன்றைப் படித்துக் காட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஆசியத் துணைக் கண்டத்தின் குறுக்கே ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் ஊடாகப் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணம் வரை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஊடாக, சிவப்புத் தாழ்வாரம் எனப்படுகிற நிலப்பரப்பு வரை பழங்குடிப் பகுதிகள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றன. இந்த எழுச்சியின் இயல்பு ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தீவிர இஸ்லாமாக வடிவெடுத் துள்ளது. இந்தியாவின் காடுகளடர்ந்த இதய பூமியில் அது தீவிரக் கம்யூனிசமாக வடிவெடுத்துள்ளது. ஆனால் இந்தப் பழங்குடித் தாயகங்கள் மீதான கொடுந்தாக்குதல் தடையிலா வணிகச் சந்தையால் தூண்டப்படுகிறது. ஆனால் முதலாளியியம் இயற்கைச் செல்வாதாரங்களாகக் கருதுகிறவற்றைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்த வேட்கை கொண்டு இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. நீடித்த போருக்கே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. இதற்கொரு மாற்று வழி முதலில் இந்த நெருக்கடியைப் புவிக்கோளுக்குக் கொண்டுவந்து சேர்த்த அந்தக் கற்பனைத் திறனிலிருந்து வரும் என்பது மிகையான எதிர்பார்ப்பாகவே இருக்கும். பச்சை வேட்டை நடவடிக்கை போன்ற போர்களின் நோக்கம் உண்மையிலேயே தன்னிறைவான வாழ்க்கை முறைகளின் இரகசியங்களை அறிந்திருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதே ஆகும்.

இந்தப் போரை நடத்துகிறவர்கள் வென்று விடுவார்களானால், அந்த வெற்றியானது ஆதிவாசி மக்களுக்கு மட்டுமல்ல, இறுதியில் மனிதகுலத்துக்கே ஒரு பிரளயப் பேரழிவின் விதைகளைத் தன்னுட் கொண்டிருக்கும். கொடிய முறையில் குளறுபடியாகிவிட்ட உலகத்தை வேறுவிதமாகக் கற்பனை செய்து பார்ப்பது நோக்கிய முதல் படி என்பது வேறுவிதமான கற்பனை கொண்டிருப்பவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதுதான். இந்தக் கற்பனை முதலாளியத்துள் அடங்காது, அதேபோல் பொதுவுடைமைக்குள்ளும் அடங்காது. மகிழ்ச்சி என்றால் என்ன, மனநிறைவு என்றால் என்ன என்பதை அறவே மாறுபட்ட முறையில் புரிந்து கொள்ளும் கற்பனையே அது. இந்த இறுதியான வெற்றியை அடைய வேண்டுமானால், யார் நம் கடந்த காலத்தின் காவலர்களைப்போல் தோன்றக் கூடுமோ, யார் உண்மையில் நம் வருங்காலத்தின் வழிகாட்டிகளாக இருக்கக் கூடுமோ, அவர்கள் உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு பௌதிக இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதைச் செய்ய வேண்டுமானால், நாம் கேட்க வேண்டிய கேள்விகள்:

நீரை ஆறுகளிலேயே விட்டுவிடுவோமா?
மரங்களைக் காடுகளிலேயே விட்டுவிடுவோமா?
பாக்சைட்டையும் தாதுப் பொருட்களையும் மலைகளிலேயே விட்டு விடுவோமா?

நம்மால் அப்படி விட்டு விட முடியாது என்றால் நாம் இந்தப் போரினால் பாதிக்கப்படுகிறவர்களிடம் ஒழுக்கம் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட வேண்டும்.
நன்றி!