Thursday, August 06, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - 'இந்தியா டுடே' விமர்சனம்


திரை கடலோடியும் துயரம் தேடு நூலைப் பற்றி 'இந்தியா டுடே' ஏட்டில் முனைவர்.பெர்னாட் டி சாமி எழுதிய விமர்சனம் பின்வருமாறு:

நவயுக அடிமைகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்கள் பற்றிய பதிவு

இன்றைய முக்கிய பிரச்சனையான தொழிலாளர்கள் புலம்பெயர்வை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். வேலைக்காக பலரும் அயல்நாடுகளுக்கு 'புலம்பெயர்வது ஏன்?' என்ற கேள்விக்கு, அவர்களது தாய்நாடுகளில் நிலவும் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஆசிரியர் மையப்படுத்திருக்கிறார். ஆனால் அவர் வெளிநாடுகளின் கவர்ந்து இழுக்கும் காரணங்களைப் (Pull Factors) பற்றி சொல்லவில்லை. புலம்பெயர்வில் நடக்கும் அனைத்து வகை கடத்தல்களையும் விவரித்துள்ளார். கட்டாய வேலைக்காக அதிகம் கடத்தப்படும் தொழிலாளர்களின் நிலை பற்றியும் அறிவுசார்ந்த வேலை மற்றும் உடல் உழைப்பு இவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றியும் விரிவாக பேசியிருக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத, குறைந்த ஊதியம் கொண்ட திறனற்ற வேலை செய்பவர்களாக வீட்டு வேலைத் தொழிலாளர்களை வெளிநாடுகள் (செல்லக்) கருதும் பொழுது, இன்றைக்கு அவர்களிடையே கண்டங்களைக் கடந்த தொடர்பு உருவாகி, பல நாடுகளில் வீட்டு வேலைப் பெண்கள் போராடி உரிமைகளைப் பெற்றுள்ளனர் (ஹாங்காங்). திறன் அற்ற, குறைந்த திறன் பெற்ற, கீழ்த்தரமான வேலைகளுக்காக ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் கடத்தப்படுவது நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கிய உண்மை.

இப்பிரச்சனைக்கான சட்டங்கள், தீர்வுகள் பற்றி குறிப்பிடும் போது, ஐ.நா.சபை ILO Convention பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இயற்றப்படும் சட்டங்களே புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் போதுமானவை. வெளிநாட்டு தூதரகங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான அதிகாரிகள் இருந்தால் தான் அவர்களின் பாதுகாப்பும், உரிமைகளும் வென்றெடுக்கப்படும். இந்த பிரச்சனையின் உள் பரிணாமத்தைப் புரிந்து கொள்ள ஐ.நா சார்பு அமைப்புகளின் வாதங்களை தாண்டிய புரிதல் தேவை. அதேநேரம் ஆசிரியருடைய அனுபவம் இந்நூலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
முனைவர். பெர்னாட் டி சாமி
ஆகஸ்டு 12, 2009 இந்தியா டுடே நாளிதழில் வெளிவந்தது. விமர்சகர் சென்னை லயோலா கல்லூரியில் பணிபுரிகிறார்.