Tuesday, November 06, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவுகளிலிருந்து இந்தியா விலகவேண்டும்

னுராதபுரம் வான்படைத்தள தாக்குதல், மணலாற்றில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான சமர்களில் புலிகளின் இராணுவ திறன் வெளிப்பட்டிருந்த சூழலில் நவம்பர் 2 வெள்ளிக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் விமானகுண்டு வீசி அரசியல் பிரிவு தலைவர் திரு.சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை இலங்கை அரசு கொலை செய்திருக்கிறது. விமானதாக்குதல் நடந்து சுமார் 6 மணிநேரத்திற்கு பின்னர் (பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை காரணங்களுக்காக தாமதமான அறிவிப்பாக இருக்கலாம்) புலிகள் இயக்கத்தின் செயலாளர் சீரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற தகவலை தெரிவித்தனர்.

தமிழ்ச்செல்வனது கொலையை உளவியல் ரீதியாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்தது தென்னிலங்கை. இலங்கை அதிபரின் சகோதரரும் இராணுவ அமைச்சருமான கோத்தபாய ராஜபக்சே "This is just a message, that we know where their leaders are. I know the locations of all the leaders, that if we want we can take them one by one, so they must change their hideouts." "When the time comes only, we take them one by one." என ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார். இந்த செய்தி வழி தமிழ்மக்களது போராட்டத்தை தலைமைகளை அழிப்பது மூலம் நசுக்குவோம் என விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கமுடிகிறது. தலைவர்களை அழித்தொழிப்பதனால் உண்மையான மக்கள் போராட்டங்களை அழித்துவிட முடியாது என்பது உலக விடுதலைப் போராட்டங்கள் தரும் பாடம். உண்மையிலேயே இலங்கை அரசிற்கு புலிகளின் தலைவர்களது நடமாட்டங்கள் தெரியுமா என்பது கேள்வியே. சாதாரண தமிழ்மக்களையே அவர்களது குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் என குண்டுவீசி மக்களை கொலைசெய்யும் இராணுவமும், சிங்கள அரசும் புலிகளின் தலைவர்களது இருப்பிடங்களை தெரிந்து வைத்திருந்தால் இதுவரையில் விட்டுவைத்திருப்பார்களா? கோத்தபாய ராஜபக்சேவின் நோக்கம் தமிழ்மக்களது மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்குவதாக அமைகிறது. கிளிநொச்சியில் தமிழீழத்தின் அரசியல் கட்டுமானங்களும், தமிழீழ நிர்வாக பணிமனைகளும் நிறைந்திருப்பதும் தமிழ்ச்செல்வன் அத்தகைய பணிகளை தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார் என்பதும் உலகறிந்த உண்மை. இப்பணிமனைகளை சிங்கள அரசிற்கும் தெரிந்திருப்பதில் வியப்பேதுமில்லை. தமிழ்ச்செல்வன் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்ற அடிப்படையில் இக்கொலை சமாதானத்திற்கான வாய்ப்புகளை உடைத்தெறிந்திருக்கிறது.

இராணுவ தாக்குதல்களால் எக்காலத்திலும் தமிழர் இனப்பிரச்சனையை முடித்து வைக்க என்பது 23 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகள் சொல்லுகின்றன. 1983 கருப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது சிறுகுழுக்களாக இயங்கிய பல போராளி இயக்கங்கள் இன்று தனது அடையாளங்களையும், சுயத்தையும் இழந்து தமிழர்கள் உரிமைகளை பெற முயல்வதை விட்டு, சிங்கள பேரினவாதத்தின் மடிப்பிள்ளையாக பதவியும், பணமும் பெறுவதிலேயா கவனமாக இருக்கிறது. இவர்களது செயல்களின் காரணமாக ஈழத்தமிழர்களிடமோ, தமிழக தமிழர்களிடமோ அல்லது உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களிடமோ ஆதரவில்லை. இவற்றில் சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளை விட படுகொலைகள், வன்புணர்ச்சிகள், ஆட்கடத்தல் என தமிழ்மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் என்பது வேதனையான உண்மை. இராணுவத்தின் கைத்தடிகளாக செயல்பட்ட இவ்வகை குழுக்கள், பயணம் செய்யும் தமிழ்ப்பெண்களிடம் சோதனை என்ற பெயரில் வக்கிரமாக நடந்துகொள்வதும், பொருட்கள் இருக்கும் பைகளை கட்டாரியால் கிழித்து அட்டகாசம் செய்வதும் சாதரணமான நிகழ்வுகள் என பலர் சொல்வதுண்டு. நில ஆக்கிரமிப்பு, கப்பம் வசூலிப்பது, ஆட்கடத்தல், படுகொலைகள், வன்புணர்ச்சியில் ஈடுபடும் இவர்களுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருப்பதை மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன. தமிழ் மக்கள் மீது இவர்கள் செய்யும் கொடுமைகளை உணர்ந்தும் இந்திய அரசின் ஆதரவு இவர்களுக்கு வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக செய்திபரப்பும் ஏடுகளை படித்து "புலிகள் பயங்கரவாதிகள்" என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், சிங்கள அரசு பயன்படுத்தும் அடக்குமுறைகளும், தாக்குதல்களும் தமிழர்களது வாழ்வை, வசிப்பிடங்களை, கல்வியை, கனவை, எதிர்காலத்தை என எல்லாவற்றையும் சிதைத்திருப்பதை அறிவார்களா? தமிழகத்திலிருந்து பெரும்பாலும் இக்கருத்துக்களையுடையவர்கள் மக்கள் போராட்டங்கள் பற்றிய எந்த அறிவும், சுயஉணர்வுமற்ற, அறிவுசீவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நடுத்தரவர்க்கத்து சீமான்களாகவும், 'இந்தி' தேசியவாதிகளாகவுமே இருக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளங்கை தான் உலகம். ஈழம் மட்டுமல்ல அனனத்து பிரச்சனைகளிலும் இந்த சுயஉலகத்தை கடந்து சமூகம் பற்றிய பரந்த பார்வையற்ற சுயநலமிகள் இவர்கள். ஈழப்பிரச்சனைக்கு எதிராக ராஜீவ் காந்தியை தினமும் பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் கொலைசெய்யும் இவர்கள் வடிக்கும் கண்ணீர் ராஜீவ் காந்தி மீதான பற்றோ பாசமோ காரணமல்ல; மாறாக ஜெயலலிதா அம்மையாரின் வார்த்தையில் சொன்னால் 'பரம்பரை பகை'. ராஜீவின் கொலையை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று வாழவிடாமல் தடுக்கிறார்கள்.

இந்திராகாந்தி அம்மையாரிடம் இருந்த அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் காரணமாக ஈழத்தமிழர் இனப்பிரச்சனை பற்றி இந்திய கொள்கையில் தெளிவு இருந்தது. ஆர்.வெங்கட்ராமன் போன்ற தமிழின எதிர்ப்பாளர்கள் அமைச்சர்களாக இருந்தும் இந்திரா அரசில் மேலாதிக்க பார்ப்பனீயம் ஈழம் விடயத்தில் அடங்கியிருந்தது. இந்திரா அம்மையார் இறந்த பின்னர் அரசியல் அனுபவம் இல்லாத ராஜீவ் பிரதமரானார். ராஜீவ் உயிரோடு இருந்த போது கொள்கை வகுப்பாளர்களாக, தூதுவர்களாக இராஜீவை சுற்றி தங்களது அதிகார மையங்களை நிறுவினர். ராஜீவ் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான இந்திய கொள்கையை உருவாக்கி சிங்களர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை நிறுத்தியவர்கள் இந்த தந்திரம் மிக்கவர்கள். ராசீவ் மறைந்த பின்னர் மரணத்தை பயன்படுத்தி 16 ஆண்டுகள் தமிழர்களை எதிரிகளாக நடத்திய இவர்களது போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தடா, பொடா கொடுஞ்சட்டங்கள் எத்தனை பேரின் வாழ்வை விழுங்கியது?

ஈழத்தமிழர் இனப்பிரச்சனையில் 1991ற்கு பின்னர் வெளியே தெரியாமல் இந்தியா கொடுத்த ஆயுதங்கள், நிதி, பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி, உளவுத்தகவல்கள் என தமிழ் மக்களை கொன்றொழிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இருந்தும் ஈழத்தமிழர்கள் முன்னைவிட பிரபாகரன் மீதும், புலிகள் இயக்கம் மீதும் அதிக நம்பிக்கையே கொண்டனர். இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் நாம் இதன் காரணத்தை புரிவது அவசியம். ஆரம்பத்தில் ஈழம், தமிழ் மக்களது அபிலாசைகளுக்காகவும் பேசியும், போராடியும் வந்த பிற போராளி குழுக்களை விட புலிகள் இயக்கம் இராணுவ, நிர்வாக, கட்டமைப்பு ரீதியான வளர்ச்சியில் முன்னேறியது. பிற போராளி இயக்கங்களிலிருந்து புலிகளை வேறுபடுத்தியது புலிகளின் இந்த வளர்ச்சி. புலிகள் இயக்கம் மீது விமர்சனங்கள் இருப்பினும் தமிழ்மக்கள் புலிகள் அமைப்பு மீது பாதுகாப்ப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொண்டனர். இந்த நம்பிக்கை தான் பெரும் சமர்களின் போதும், சிங்களம் நடத்திய போர் நடவடிக்கைகளின் போதும் தமிழ்மக்கள் புலிகளுக்கு உதவியாகவும், புலிகளை சார்ந்தும் இருக்க வைத்தது. வன்முறை, பயங்கரவாதம் என ஒற்றை பரிணாம பார்வையில் புலிகளையும், ஈழத்தமிழர் போராட்டத்தையும், அவர்களது கனவையும் எதிர்ப்பது தமிழ்நாட்டில் பிறந்து, வளரும் நமக்கு எளிது. ஆனால் சாவின் பிடியில், பேரினவாத அரசியல், இராணுவ ஒடுக்குமுறையை சந்திக்கும் மக்கள் வான்குண்டுகளையும், வன்புணர்ச்சிகளையும் காந்திய புன்னகையில் எதிர்கொள்ள இயலாது.

காந்தி பிறந்த தேசம் என அகிம்சையை ஈழத்தமிழர்களுக்கு அறிக்கைகளில் உபதேசிக்கும் இந்தியா, புலிகளை அழித்தல் என்ற பெயரில் சிங்கள பேரினவாதத்திற்கு இராணுவ, ஆயுத உதவிகள் கொடுத்து வன்முறை பாதையில் ஈழத்தமிழ மக்களை கொலை செய்ய உதவுகிறது. கொலை செய்பவன் மட்டுமல்ல, கொலைக்கருவியும், நுட்பமும் வழங்குபவனும் கொலைச் சதிகாரன் தான். காந்தியம் பற்றி ஈழத்தமிழர்களுக்கு போதிக்கும் முன்னர் இந்திய அரசின் அணுகுமுறை அகிம்சையாக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்புதல் அவசியமாகிறது. இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்ன?

புலிகளை தண்டிப்பதாக நினைத்து ஒரு இனத்தையே அழிக்கும் நடவடிக்கைக்கு எங்களது வரிப்பணம் எங்களுக்கு தெரியாமலே கள்ளத்தனமாக பயன்படுத்துவது ஒரு அரச மோசடி. இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சனையில் தனது கொள்கையையும், திட்டத்தையும் வெளிப்படையாக முன்வைப்பது கடமை. அதை கேட்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை.


ஈழத்தமிழர்கள் உரிமையுள்ள மக்களாக மனித விழுமியங்களோடு வாழ இந்திய அணுகுமுறையில் மாற்றம் அவசியம்

இறையாண்மை, ஒற்றையாட்சி என்ற ஆதிகால கோட்பாடுகளை விட்டு ஈழத்தமிழர்களுக்கு அவர்களது விருப்பத்தின், தேவையின் அடிப்படையிலான தீர்வை ஏற்படுத்த உதவுவது அவசியம். சிங்கள அரசிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியா செய்யும் அனைத்து உதவிகளும், ஆதரவும் ஈழத்தமிழர்களை அழிக்க எடுக்கும் மறைமுக நடவடிக்கையாகவே பார்க்க இயலும். இந்தியாவோ அல்லது மற்றவர்களோ வெளியிலிருந்து திணிக்கும் எந்த தீர்வும் பயன்தராது. இந்திய அரச தரப்பு ஆதரவு கொடுக்கும் சில தமிழ்த் தலைவர்களது இயக்கங்கள் மட்டகளப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தமிழ்மக்களுக்கு எதிராக இன்றும் சித்திரவதை, பாலியல் கொடுமைகள், பணம்பறிப்பு, நிலம் அபகரித்தல், ஆட்கடத்தல், படுகொலைகளில் ஈடுபடுவது அனைவரும் அறிந்த உண்மை. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், அகிம்சைவாதிகளாகவும் காட்டப்படும் இவர்களது அமைப்பினர் கொடும் ஆயுதங்களோடு இன்றும் நடமாடுவது ஏன்?

இலங்கை அரசை பொறுத்தவரை கடந்த மே மாதத்திற்குள் தீர்வு திட்டத்தை வைப்பதாக அறிவித்தது. இன்னும் இனபிரச்சனைக்கு எந்த தீர்வுமில்லாமல் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகிறது. புலிகளை இராணுவ ரீதியாக அடக்கலாம் அல்லது வெற்றி கொள்ளலாம் என்பது இயலாத விடயம் என இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதை கணக்கிலெடுப்பது அவசியம். புலிகளை அழித்தல் என்னும் பெயரில் வன்முறைக்கும், சாவிற்கும், இழப்புகளுக்கும், சொல்லமுடியாத சோகமான சித்திரவதைகளுக்கும் ஆளாவது சாதாரண மக்களே. இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் முன்னிலை வகிக்கிறது. ஹெயிட்டி (Haiti) நாட்டில் ஐ.நா பாதுகாப்பு படையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் பாலியல் குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டு 111 சிப்பாய்களும், 3 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர் (செய்தி ஆதாரம்: AFP). ஐ.நா அமைதிப்படையிலேயே பாலியல் குற்றம் நிகழ்த்திய ஒழுங்கற்ற படை இலங்கையில் தங்களது அதிகார வல்லமையில் தமிழ் மக்களிடம் எப்படி நடந்துகொள்வர் என்பதை சிந்திக்கவேண்டும். போராளி இயக்கங்களை காரணம் காட்டி ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வமான இராணுவம் மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபடவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முடியாது. மற்ற எவரையும் விட இராணுவத்திற்கும், அரசிற்கும் சர்வதேச சட்டங்களையும், மனித உரிமையையும் மதித்து நடக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உண்டு. இலங்கை இராணுவத்தின் கடந்தகால பல செயல்கள் வழி அதன் நேர்மையற்ற, கொலைவெறியும் மனிதநாகரீகத்திற்கு எதிரான செயல்களும் வெளிப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட இராணுவத்தையும், அரசையும் இந்தியா இன்னும் ஆதரிக்கப் போகின்றதா? மக்களாட்சி அமைப்பில் வாளும் இந்திய மக்கள் நாம் அனைவரும் இதைப் பற்றி பொறுப்புடன் சிந்திப்பது அவசியம்.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான எந்த தீர்வையும் புலிகளோ அல்லது மக்களோ ஏற்கமாட்டார்கள். சமாதானம் ஏற்படவேண்டுமானால் அரசியல் தீர்வுடன் கூடிய சமாதான பேச்சுக்களில் தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் எந்த முயற்சிகளுக்கும் தமிழக தமிழர்கள் இனியும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதை தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கான வெளிப்படையாக வளர்ந்து வருகிற ஆதரவு காட்டுகிறது. இந்திய அரசு அடக்குமுறை சட்டங்களால் ஈழத்தமிழர் மீதான தமிழகத்தின் உணர்வுகளை இனியும் அழித்துவிட இயலாது என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். இனப்பிரச்சனையில் இந்திய அரசு தனது நிலையை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு நியாயமான, நீதியான தீர்வை கிடைக்க முன்வரவேண்டும் என தமிழகத்தின் குரல்கள் சொல்கிறது. தற்போது ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலையில் இலங்கை அரசுக்கு செய்து வருகிற அனைத்து உதவிகளிலிருந்து இந்தியா விலகவேண்டும். ஈழத்தமிழர் நலன் கருதியும், இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தமிழக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐ.நா மனிதஉரிமை கூட்டங்களில் இலங்கை அரசின் படுகொலைகளுக்கு முட்டுக்கொடுத்த இந்திய நிலைபாடு, இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள், தூதரக நடவடிக்கைகளை உள்ளிட்ட அனைத்து இலங்கை அரச ஆதரவு நடவடிக்கைகளையும் கைவிடுவது காலத்தின் அவசியம். மனித உரிமைகளை மதிக்கும் கொள்கை மாற்றங்களால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா மரியாதையான இடத்தை பெற இயலும்.
திரு

Sunday, August 12, 2007

படங்களில் சில...

பூங்காவில் குடியிருக்கும் அழகிய பறவைகளும், ஒரு முழுமதி இரவில் என் அறையின் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவும். படங்களை பெரிதாக காண படங்களின் மீது அழுத்தவும்.

Goose

Moon


Pigeon


Goose

Wednesday, August 08, 2007

பத்திரிக்கையாளர் மாலனுக்கு...

ஈழத்தமிழர், ஈழப்போராட்டம் பற்றியும் தாங்கள் வலைப்பதிவுகளில் எழுதியதை படித்து இந்திய தேசியம், இந்திய இறையாண்மை பற்றிய சில கேள்விகள் வருகின்றன. ஈழம் பற்றிய பதிவு எழுதுவதாக அறிவித்திருந்தீர்கள். இந்த சூழலில் ஈழத்தமிழர்களது பாஸ்போர்ட் பற்றி வேறு அக்கறைப்படுகிறீர்கள். தமிழீழ மக்களின் போராட்டங்களும், வேதனைகளும் வேடிக்கைக்காக எழுதவோ, பேசவோ வேண்டிய சாதாரண பிரச்சனையல்ல. இந்த நிலையில் பத்திரிக்கையாளர், பிரபலம் என்ற முத்திரை கொண்ட உங்களது வார்த்தைகள் எந்த அடிப்படையில் எழுகின்றன?

2002 ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை காலங்களின் போதே தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்துமஸ் அன்று இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏன்? ஆயுதம் தாங்கிய போராளியா அவர்? அப்போது என்ன யுத்தகாலமா? பேச்சுவார்த்தையில் கையை நீட்டிக்கொண்டே பேசும் தரப்பை உடைத்து துண்டாடும் 'சாணக்கிய' பார்ப்பனீய தந்திரத்தை சிங்கள அரசு கையாண்டு அதன் விளைவாக கருணா தலைமையில் துணைப்படையை உருவாக்கியது யாரை அச்சுறுத்த? யாருக்கு இதனால் இழப்பு? இன்றைய மோதல்களும், கட்டுகளற்ற வன்முறையும் உருவாக காரணமாக அமைந்ததே பேச்சுவார்த்தை நடக்கும் போது இலங்கை அரசு திரைமறைவில் நிகழ்த்திய இந்த கேவலமான அரசியல் விளையாட்டு தானே? துணைப்படைகளின் வெறியாட்டத்திற்கு பலியாவது அப்பாவி ஈழத்தமிழர்கள் தானே! நமெக்கன்ன? வீட்டு வாசலில்/வீதியில் 'வெள்ளை வேன்' எப்போது வருமோ என்ற மரண பயத்தில் கடத்தல் காரகளிடமிருந்து தப்பித்து பிழைக்கும் போராட்ட வாழ்க்கை கடலுக்கு அப்பால் வாழும் யாரோ சில மனிதர்களுக்கு தானே? நமக்கென்ன? இந்திய தேசிய/ இறையாண்மை அரசு தானே இந்த கடத்தல்கார படுகொலைகாரர்களின் நாயகர்களான சிங்கள அரசிற்கு மனித உரிமை பேரவையில் ஆதரவு கொடுத்தது?

பிரபல ஊடகவியலாளர் தராக்கி என்கிற சிவராம் அவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஏன்? யாரால்? ஊடக சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், மனித உரிமை, மாற்று அரசியல் பற்றி போதிக்க சிங்கள அரசுக்கு என்ன தகுதி? சிவராம் கொலை முதல் கடத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் அடக்கப்படும் பலரது குரல்கள் கேட்கின்றன. சிவராமின் கல்லறையிலிருந்து எழும் பலமான கேள்விக்கு 'இந்து ராம்' மட்டுமல்ல; இலங்கை அரசின் பதிலும் மௌனமான கள்ளத்தனமே பதிலாக இருக்கும்.
செஞ்சோலையில் கடந்த ஆண்டு 51 குழந்தைகளை விமான குண்டுகள் பொழிந்து படுகொலை செய்யப்பட்டனர். யார் இந்த படுகொலைகளை நிகழ்த்தியது? சாகும் தருவாயிலும் அந்த மழலைகளின் குரல்கள் 'பெரியம்மா' எனவே கதறியிருக்கும். அந்த பெரியம்மா யார் தெரியுமா? நமக்கு இதெல்லாம் தெரிய அவசியமும் இல்லை.

உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களை தடுத்து பொருளாதார தடையில் பசியால் வாடும் நிலைக்கு தள்ளி, அவர்கள் மீதே குண்டுகளை பொழிந்த பயங்கரவாத அரசை எதிர்ப்பது இந்திய இறையாண்மைக்கும், தேசியத்திற்கும் எதிரானது? அப்படிப்பட்ட மக்களுக்காக அய்யா.நெடுமாறன் அவர்களும் பலரும் திரட்டிய ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் வழி கூட அனுப்ப அனுமதி வழங்காமல் இருப்பதா இந்திய தேசியம்? இந்திய இறையாண்மை? அதே வேளை கொள்கையை மீறி இரகசியமாகவும், நேரடியாகவும் ஆயுதப்பயிற்சி, ஆயுதங்கள் என சிங்கள இராணுவத்திற்கு வழங்கும் கள்ளத்தனத்தின் பெயரா இறையாண்மையும், தேசியமும்? யாரை கொல்வதற்கு இவை? யார் மீது குண்டு பொழிய?

ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வலைப்பதிவில் எழுதியிருந்தால் பொது விவாதத்தை எழுப்பியிருக்கும். ஈழத்தமிழர் பதில் சொல்ல இல்லாத பதிவர் பட்டறையில் ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட் பற்றிய உங்களது பேச்சின் அவசியம் என்ன? வலைப்பதிவுகளின் நன்னடத்தைக்கு உதாரணமாக நடந்த பல பெரிய பிரச்சனைகள் இருக்க 'இந்து ராம்'க்கு கொடி பிடிக்க வசதியாக களத்தை பயன்படுத்தியது உங்களது ஊடக அனுபவ பலம். 'தானாடா விட்டாலும் தன் தசையாடும்' என்பார்கள்.

//விடுதலைப் புலிகளை விமர்சிப்பது கூட இலங்கை அரசை ஆதரிக்கும் செயலாகிவிடக் கூடும் என்று நீங்கள் வாதிடலாம். அதே அடிப்படையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போரை ஆதரிப்பது, இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் இவற்றை பலவீனப்படுத்தும் என்பதனால் அதை எதிர்ப்பது சரிதான் என்றாகிவிடும்.//
இது உங்களது பதிவில் இட்ட பின்னூட்டத்தில் கண்டவை. உங்களது இந்த பின்னூட்டம் தடா/பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் குரலையொத்து அமைகிறது. இது தான் பத்திரிக்கையாளனின் கடமை?

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை ஆதரிப்பது இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்னும் கருத்தாக்கத்தை பலவீனப்படுத்தும் என்பது எதனடிப்படையிலான வாதம்? இந்திய இறையாண்மையின் வரையறை என்ன? தமிழக அரசியல் தலைமைகளில் பலரும், பெரும்பான்மை தமிழக மக்களும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தை 1970களிலிருந்து வெளிப்படையாகவும், (சட்டரீதியான அடக்குமுறை காலங்களில்) மறைமுகமாகவும் ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவாளர்கள் அனைவரும் இந்திய தேசிய மாயையை எப்படி பலவீனப்படுத்தினார்கள்? தமிழக மக்கள் இந்திய தேசிய சோதியில் ஐக்கியமானார்களே தவிர தங்களுக்கென தனியான அரசியலை, கட்டமைப்புகளை நிலைநிறுத்தவில்லை. மாநில சுயாட்சி உரிமையை பேசியவர்கள் கூட காலப்போக்கில் டெல்லி வாலாக்களாக மாறியது தான் நடந்தது. இந்திய இறையாண்மைக்கு இதில் எங்கே ஆபத்து?

இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? மாலனுக்கு தெரிந்த 'இரகசியத்தை' சொல்வாரா? அடுத்த இலங்கை ரத்னா விருது உங்களுக்கு கொடுத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


திரு
டிஸ்கி: என்ன பாஸ்போர்ட் என கேட்காதீர்கள்.

Tuesday, August 07, 2007

சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்

"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் விசாரித்துவரும் இந்த வழக்கு வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கொலை செய்ததில் சங்கராச்சாரியின் பங்கு சம்மந்தப்பட்டதல்ல. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. பாலசுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மாத்தூர் தலைமையில் விசாரணணயில் இருப்பது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு தடை கோரி காஞ்சி சங்கராச்சாரி தரப்பில் தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனிமனிதனாக ஒருவர் நான் பக்தன் என அறிவிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தனது தலைமையின் கீழ் நடந்து வரும் வழக்கு சம்பந்தமாக நீதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிகரமானது. 'இந்திய நீதித்துறை சட்டத்திற்கு கட்டுப்பட்டதா? சாமிகளுக்கு கட்டுப்பட்டதா?' என சாமானியனையும் கேட்க தூண்டுகிறது நீதிபதியின் இந்த அறிவிப்பு.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சங்கராச்சாரி வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதி சங்கராச்சாரியின் பக்தனாக மாறியிருக்கிறார். மேலும் சங்கராச்சாரியார் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என அறிவித்து சங்கராச்சாரி மனு மீதான விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றம் செல்லாமல் காலம் கடத்துவதும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுமாக இழுக்கப்படுகிறது. பிரதான குற்றவாளியாக கருதப்படும் சங்கராச்சாரி சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிவதும், சங்கரராமனின் ஆவி துரத்துவதுமான இந்த தொடர் விளையாட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ. பாதிக்கப்பட்ட சங்கரராமனின் குடும்பத்தினருக்கு நீதி எப்போது?

நீதிமன்றம் புனிதமானது, நீதிமன்றங்களை அதனால் விமர்சிக்க கூடாது என்பதான பார்வை நம்மிடையே பரவலாக இருக்கிறது. உண்மையில் நீதிமன்றங்கள் புனிதமானவை தானா? மனிதகுல பரிணாம வளர்ச்சியில் வல்லவனின் வார்த்தைகளே தீர்ப்பாக ஆதிகாலம் தொட்டு மக்களாட்சி வரை தொடரவே செய்கிறது. தற்கால நீதிமன்ற நடைமுறையானது 'சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் குற்றம் செய்தவரா? இல்லையா?' என்று நடைபெற்ற சம்பவங்கள், சாட்சிகள் வழி விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் சட்டரீதியான அணுகுமுறையாகவே தீர்ப்புகள் அமைதல் வேண்டும். இதில் நீதிபதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற பார்வை நீதிபதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கே 'அனைவரும்' என்பது குற்றம் செய்தவன் அரசனோ, ஆண்டியோ, சங்கராச்சாரியோ எவராக இருப்பினும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதாக பொருள். ஆனால் நீதிமன்ற நடைமுறையில் என்ன நடக்கிறது?

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடியரசு தலைவரை கைது செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் நீதிபதி ஒருவர். அந்த உத்தரவு பிறப்பிக்க லஞ்சம் பெறப்பட்டிருந்ததும், குற்றச்சாட்டு உண்மையா? குற்றம் சாட்டப்பட்டவர் யார் என எந்த விசாரணணயும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. நீதிபதிகளை நியமனம் செய்வதில் எந்தவிதமான வெளிப்படையற்ற தன்மையும் இல்லாதது இதற்கு மிக முக்கியமான காரணம். லஞ்சம், சட்டத்துக்கு எதிரான செயல்கள் என சில நீதிபதிகள் செய்யும் செயல்களால் நீதிமன்றம் மீதான கேள்விகள் பலமாக எழுகின்றன.தான் சார்ந்திருக்கும் மதம், சாதி, அரசியல் சார்ந்த உணர்வுகளும், வெறித்தனமும் நீதிபதிகளையும் ஆட்டிவைக்கிறது. இப்படிப்பட்ட நீதிபதிகள் வழங்கிய/வழங்கும் தீர்ப்புகள் தங்களது தனிமனித விருப்பு/வெறுப்புகள் அடிப்படையில் அமைகிறதே தவிர சட்டத்தின் பார்வையில் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமையும்.

வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியவர் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை விட்டு கீழிறங்கியிருக்கிறார். நீதிபதிக்கான முதன்மையான பண்பை இழந்த ஒருவர் இனி வழக்குகளில் எந்த அடிப்படையில் நீதிபதியாக இருக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் நீதித்துறையிலிருந்து நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் புது வரவு.

சட்டத்தின் முன்னர் விசாரிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் கடத்த சங்கராச்சாரி தரப்பு எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த உச்சநீதிமன்ற வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகவே நீதிபதியின் இந்த நடவடிக்கை அமைகிறது. 'சட்டம் ஒரு இருட்டறை' என்பதால் சங்கராச்சாரிகள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கண்ணாமூச்சியாட்டம் ஆட வாய்ப்புகள் அதிகம். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் குடும்பத்திற்கு நீதி எப்போது?

Monday, August 06, 2007

ஈழப்பயணம் - என் மனங்கவர் எட்டு-3

எட்டாம் வகுப்பு படிக்கும் முதலே தமிழர்களின் இனப்பிரச்சனையும், 1983 கருப்பு ஜூலை இனக்கலவரம், தமிழர் பிரச்சனையில் இந்திரா அம்மையார் ஆற்றிய பங்கு, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களது 'சித்து வேலைகள்', புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், இலங்கை அரச தலைவர் ஜெயவர்த்தனே, பிரேமதாசா போன்றவர்கள் என ஈழம் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டேன். 9ம் வகுப்பில் தமிழாசிரியர் மாணவர் மலருக்காக எழுத சொன்ன வேளை முதல் முதலாக எழுதிய கட்டுரை ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியது. அந்த காலகட்டத்தில் இராமேசுவரம் பகுதியில் மட்டும் அகதிகளாக தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கரைசேர்ந்தனர். ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா இன்னும் அதிகமான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கவேண்டும் என்ற போது அதை தடுத்த அதிகாரமைய்யம் ஆர்.வெங்கட்ராமனை சுற்றி இயங்கியது. 12ம் வகுப்பு படிக்கும் போது ஈழத்தில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. எனது பள்ளியில் ஆங்கில கவிதைப் போட்டியை முதல் முதலாக துவங்கினார்கள். போட்டி நேரத்தில் தான் கவிதைத் தலைப்பை தருவதாக கூறினார் ஆசிரியர். போட்டி நாளன்று ஆங்கிலக் கவிஞன் William Wordsworth எழுதிய "The Daffodils" என்னும் கவிதையிலிருந்து "I Wandered Lonely as a Cloud..." என்ற முதல் வரியை எடுத்து I Wandered Lonely as a Cloud among the fires and smokes of Eelam என முதல் வரியாக கவிதை எழுத சொன்னார். தொடர்ந்து 7 வரிகள் எழுதவேண்டும் என குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு தேர்வு போலவே நாடந்தது. ஒரு மேகம் போல கற்பனையாக பறந்தேன் என் நெஞ்சம் நிறைந்த ஈழத்திற்கு. எழுதிய கவிதையின் உணர்ச்சிமிகு வரிகள் முதல் பரிசை வாங்கியது (காலப்போக்கில் அந்த கவிதை தொலைந்து போனதும் சான்றிதழ் மட்டும் மிஞ்சியதும் வருத்தமானது). அந்த கற்பனை பயணத்திலிருந்து என்றாவது ஈழம் செல்லவேண்டும் என்ற கனவு உருவானது. தொடர்ந்து ஈழப்பிரச்சனை பற்றி தமிழகத்தில் நடந்த வெளிப்படையான சில போராட்டங்களில் பங்கெடுத்து வந்தேன்.

2002 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு. கட்டுநாயகே சர்வதேச பயணியர் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்த இராணுவ விமானதளத்தில் பல விமானங்கள் போராளிகளால் தாக்கி அழித்து இலங்கை பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது. இதில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'க்கு சொந்தமான பல விமானங்களும் (பயணிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல்) அழிக்கப்பட்டிருந்தது. தமிழர் தரப்பின் இராணுவ பலம் எழுந்து நின்ற பலமான சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் நார்வே தரப்பின் நடுநிலையுடன் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதுவரை சுமார் 3 முறை பணி நிமித்தமாக இலங்கை சென்றிருந்தாலும் சிங்கள நண்பர்களுடன் கொழும்பு, நீர்க்கொழும்பு பகுதிகளில் மட்டும் தங்கியிருந்தேன்.

சமாதானத்திற்கான காலம் பிறந்த இந்த சூழலில் எனக்கு நெருக்கமான குடும்பத்தினர் அவர்களது விடுமுறையில் தங்களது சொந்த மண்ணிற்கு செல்ல திட்டமிட்டனர். நானும் வர ஆர்வமாக இருப்பதை அறிந்து என்னையும் சேர்த்துக்கொண்டனர். 2002 டிசம்பர் 10 கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய போது வழக்கமான அளவு இராணுவ நிலைகளோ, இராணுவ துருப்புகளின் நடமாட்டமோ இல்லை. சிலநாட்கள் நீர்க்கொழும்பில் தங்கிய பின்னர் ஒரு அதிகாலை வேளை அந்த இனிய பயணம் துவங்கியது. காற்றை கிழித்து மரங்கள் அடர்ந்த சாலையில் காலை இருளில் அந்த வாகனம் செல்லும் போது காலத்தால் மறக்க முடியாத அளவு உணர்ச்சிகளின் சங்கமம் எனக்குள். வாகனத்தில் இருந்த உறவுகளின், கதைகளும், அனுபவங்களும், நினைவுகளும் தமிழ் ததும்ப என்னை குளிப்பாட்டியது.

A9 சாலை வழியாக சாவகச்சேரி, யாழ்ப்பாணம் செல்வது எங்களது பயணத்திட்டம். அகலம் குறைந்த அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள். இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து செல்லவேண்டிய எல்கை வந்தது. சோதனைச்சாவடியில் இராணுவ அதிகாரிகள் கடவுச்சீட்டு, கைப்பை, புகைப்படக்கருவி, பயணப்பெட்டி என அனைத்தையும் சோதனையிட்டனர். பதிவேட்டில் என்னைப் பற்றிய தகவல்களை எழுதிய பின்னர் போக அனுமதித்தனர். அதற்குள் எங்களது வாகனம் சோதனை முடித்திருந்தது.

அடுத்ததாக செஞ்சிலுவை சங்க முகாமை கடந்து புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நுளைந்தோம். 'தமிழீழம் உங்களை வரவேற்கிறது' என வரவேற்பு பலகை காணப்பட்டது. சோதனைச்சாவடியில் போராளிகள் சோதனையிட்டு கொண்டிருந்தார்கள். சின்ன கொட்டகைகளில் அவர்களது சோதனை அலுவல்கள் நடந்துகொண்டிருந்தன. வெளிநாட்டவர்களுக்கு என தனி குடிபெயர்வு பகுதி இருந்தது. அங்கே எனது கவடுச்சீட்டை கொடுக்க சென்றதும், இனிமையான வரவேற்பு, கடவுச்சீட்டை நீட்டினேன். 'இதெல்லாம் உங்கட கடவுச்சீட்டா என கேட்டார்' அந்த போராளி. காரணம் அப்போது ஏற்கனவே பக்கங்கள் முடிந்து போன கடவுச்சீட்டுகளும் சேர்த்து 3 கடவுச்சீட்டுகள் வைத்திருந்தேன். ஆம் என பதில் சொல்லவும். 'என்ன வேலை செய்கிறீர்கள்?', 'இந்தியாவில் எங்கே?'..... என வழக்கமான குடிபெயர்வு விசாரணைகள். தொடர்ந்து ஒரு இளம் போராளி விசாரித்தார். புலிகள் இயக்கம் நடைமுறையில் வைத்திருந்த குடிபெயர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்தேன். தமிழீழம் ஒரு நாடாக அங்கீகாரம் பெறாததால் கடவுச்சீட்டில் முத்திரை பதிப்பது தவிர அனைத்துவிதமான குடிபெயர்வு முறைகளும் நடைமுறையில் இருந்தது. பயணப்பொருட்கள் சோதனைக்கு பின்னர் தொடர்ந்து பயணம் செல்ல அனுமதி கிடைத்தது. இந்த நடவடிக்கைகள் புலிகளின் நடைமுறை அரசின் திறனையும், கட்டமைப்பையும் அந்த முதல் அனுபவமே சொல்லியது.

யுத்தம் நடத்திய பாதிப்புகள் தமிழீழ சாலையோரங்களின் இருப்பக்கமும் காணமுடிந்தது. தென்னந்தோப்புகளில் விழுந்த குண்டுகள் மரங்களை சிதைத்திருந்தன. கல்லூரிகள், கோவில்கள், வீடுகள் என தமிழர்களின் வாழ்விடங்கள், கலாச்சார அடையாளங்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டிருந்தது. ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த பகுதியில் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட டாங்கி, சிதைந்த ஆயுதம் என போரின் அடையாளங்கள் மனதை வாட்டியது. வரும் வழியில் உறவுகளை கண்டு, உணவருந்திய பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் வந்து சேர்ந்தோம்.

குறைந்த அளவு பொருட்களில் இயற்கையான வாழ்க்கையும், பழக இனியவர்களாகவே மக்கள் இருந்தனர். தமிழீழத்தின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சோகம் நிறைந்த கதை பல உண்டு. எல்லா உறவுகளையும் இராணுவத்தின் குண்டு வீச்சிற்கு இளந்து இன்னும் சோகத்தை மட்டும் சுமக்கும் ஒருவரை பார்த்தேன். அந்த சோகமயம் இன்னும் நெஞ்சை பிளிகிறது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் கல்லறைகள் இருந்தது. முந்தைய கால யுத்தத்தில் மாவீரர்களின் கல்லறையை இலங்கை அரச படைகள் உடைத்தெறிந்ததாகவும், பின்னர் அவை புதுப்பிக்கப்பட்ட்டதாகவும் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு உயிர்களையும் நினைக்கையில் கனமான மௌனம் மட்டுமே மனதில் மிஞ்சியது.

யாழ் கோட்டை, யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என அனைத்து இடங்களிலும் தமிழர் வாழ்வின் வேதனைகளும், போராட்ட வரலாறும் இருப்பதை நேரடியாக உணர்ந்தேன். யுத்தம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழீழ மக்கள் வாழ்க்கை இனிப்பாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் மனதை குடைகிறது. இந்த பயணத்தின் போது சிறார் இல்லங்களுக்குச் சென்றோம். பெற்றோர், உறவினர்களை யுத்தத்தில் இழந்து அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை பார்த்த போது மனது கனமானது. அவர்களது வேதனையான சூழலிலும் தன்னம்பிக்கையுடன் வளர்வதை கண்டேன் (குருகுலம் என்னும் சிறார் இல்லம் பற்றிய முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் குருகுலம் சிறார் இல்லம்).

'இறைமை', 'தேசநலன்','தேசியம்' என்ற பெயரில் மக்களை கொன்று குவிக்கும் எந்த அரசும் பயங்கரவாத அரசு தான். மக்களின் வாழ்வும், உரிமையும் மறுக்கப்படும் போது தேசமும் இல்லை; அங்கு இறைமையும் இல்லை. இறைமை என்பது எல்லைக் கோடுகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதல்ல.

கோடை வெயிலையே நம்மால் தாங்க இயலாது. சுமார் 23 வருடம் தொடர்ந்து நடக்கிற யுத்தத்தின் வலியையும், வேதனையையும் தமிழகத்தில்/அயலகத்தில் வாழும் நமக்கு புரியுமா? தமிழீழ பயணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்க்கை, கனவுகள், ஏக்கம், நம்பிக்கைகள் என அனைத்தும் என்னை தொட்டது!

----
மனதை கவர்ந்த எட்டு எழுத தோழி.பத்மா கேட்டிருப்பினும் இதுவரை 4 மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். இத்துடன் முடிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் பத்மா!

இதுவரை மனதை கவர்ந்த எட்டு எழுத அழைக்கப்படாத நண்பர்கள் அனைவரையும் எழுத அழைக்கிறேன்.

Wednesday, August 01, 2007

படங்கள் சில

Camel

chic

Gloriosa Lily

Tiger

Hippos

Ring-Tailed Lemur

Bird

Alli poo

Marching

Tiger

Elephants

திருவின் மனங்கவர்ந்த எட்டு -2

1995ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது வீட்டில் சமைப்பதற்கு அம்மாவிற்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்பாவும், தம்பியும் என்னை தவிர்த்துவிட்டு ஊருக்கு பொதுவான ஒற்றையடி பாதையை சீரமைக்க ஊர்க்காரர்களோடு சென்றிருந்தனர். நானும் சென்றிருந்தால் எதாவது வம்பு வந்துவிடும் என்பதாலோ என்னமோ எனக்கு வீட்டில் 'தடா' போட்டிருந்தனர். திடீரென ஒரு உறவினர் வந்த சத்தமாக என்னை அழைத்தார். வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கவும் 'லேய்! ஒனக்கு வீட்டுக்கு கரண்ட் எடுக்க என்னோட சொத்து தான் கிடைச்சிதா? நான் சாவுற வரை நீ இனி கரண்ட் எடுக்க மாட்டலே பாரு!' என வந்து விழுந்தது குரல். குரல் கொடுத்தவர் உறவு முறையில் சித்தப்பா. நான் சம்பந்தப்படாவிட்டாலும் எதிர்ப்பாளர்களின் தலைவர் நம்மை தான் தேடி வருகிறார் என்ன செய்வது என சில நிமிடம் புரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டு பாதை சீரமைக்கும் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சுமார் 100 வருடங்களாக பொதுப்பாதையாக இருந்து வரும் பகுதி அது. அந்த பாதையின் ஒரு குறுகிய நிலப்பகுதி மட்டும் பொதுவானதல்ல, யாரும் அந்த தடுப்பதும் இல்லை. ஏறக்குறைய 10 குடும்பத்தினர் 40 வருடங்களாக மின்சாரம் எட்டுக்கவும், பொதுவான ஒரு நடைபாதை மட்டும் அமைக்கவும் எடுத்த முயற்சிகளை கரம் உயர்ந்தவர்கள் தடுத்து வந்திருந்தனர். இதற்கு அந்த மக்களின் மனநிலை தான் முக்கிய காரணம். குறிப்பாக 'எனது சொத்தில் யாரும் நடக்க கூடாது, எனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் வந்தால் போதும் அடுத்த வீட்டிற்கு மின்சாரமோ, பாதையோ செல்லக்கூடாது.' 'எங்கள் முற்றம் வழி யாராவது நடக்கிறதை நாம பார்த்திருக்க முடியுமா?'.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதை பிரச்சனைகள் ஏராளம். அதன் பின்னால் நிலவுடமை, சாதி, ஒற்றுமையின்மை, குடும்ப பகை என பல காரணங்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையை தகர்க்க தானாகவே ஊர்மக்கள் எடுத்த சிறிய அளவிலான முயற்சியே இந்த பாதை திருத்தும் முயற்சி. அன்றைய வேலை சுமுகமாக வன்முறைகளில்லாமல் முடிந்தது. மாலையில் வழக்கமாக சந்திக்கும் நண்பர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சார்ந்த சிறுவன் மூச்சிரைக்க ஒடி வந்தான். 'அண்ணா! சீக்கிரம் வீட்டுக்கு வரணுமாம். எல்லாரும் உங்களை தேடி இருக்காங்க. போலீஸ் வந்து போச்சு. உங்க பேரு தான் முதல் பேரு.' என கொட்டித் தீர்த்தான். நான் திகைத்து நின்றேன் சில நிமிடம்.

குடும்பத்திலிருந்து அதுவரை ஊதியமில்லா ஆசிரியர் போராட்டத்தில் அக்கா சுமார் 22 நாட்கள் சிறையில் இருந்திருந்தார். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் அப்பா 2 நாட்கள் சிறையில் இருந்தார். சில போராட்டங்களுக்கு அனுமதி வாங்க காவல் நிலையம் சென்றதும், சில காவலர்கள் நண்பர்களாக அமைந்ததும் தவிர எனக்கும் காவல் நிலையத்திற்கும் தொடர்பு இருக்கவில்லை. இதையெல்லாம் மனதில் நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தால் ஊரே எனக்காக காத்திருந்தது. தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் வீடுகளில் இரவு வேளைகளில் கூட்டப்பட்டது. பகல் வேளைகளில் காவல்த்துறை அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், பேரூராட்சி, கிராம அலுவலகங்கள் என புகார் மனுக்கள், ஆதாரங்கள் மற்றும் வரைபடம் திரட்டுதல் என பகல் வேளைகள் கழிந்தன. அந்த பகுதியின் முழு வரைபடமும் திரட்டி ஆதாரங்களை ஒன்று குவித்து மனுக்கள் அனுப்ப பலர் உதவினர். எதிர்ப்பாளர்கள் வீடுகளில் அடியாட்களுடன் வந்தி மிரட்டுவதும், வீட்டைச்சுற்றி முள்வெலி அமைப்பதும் என தொடர்ந்தது. இரு தரப்பிலிருந்தும் காவல்த்துறையில் மனுக்கள் குவிந்தன. எதிர்தரப்பிற்கு ஆதரவாக அப்போதைய வனத்துறை அமைச்சரே நேரடியாக தலையிட்டார். தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த காவல் அதிகாரி எங்களது நியாயத்தை உணர்ந்ததால் அழுத்தத்திற்கு பணியவில்லை. இந்த நடவடிக்கைகளில் சூமார் 10 மணிநேரம் காவல்நிலையத்தில் எந்த வழக்கும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். காவலர்களில் பலர் எதிர்தரப்பிலிருந்து பணம் வாங்கிய விசுவவதத்திற்காக பேசிய அநாகரீக வசைமொழிகள், மிரட்டலில் அந்த 10 மணிநேரம் கழிந்து வெளியே வந்த போது மனித உரிமையின் மகத்துவம் புரிந்தது. தொடர்ந்த நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு பின்னர் இன்று அனனத்து வீடுகளிலும் மின்சாரம், சுமார் 15 அடி அகலமுள்ள பேரூராட்சி சாலை, தொலைபேசி வசதி என கிடைத்திருக்கிறது. அந்த போராட்ட அனுபவங்களின் விளைவாக அந்த பகுதியிலிருந்து 2 பெண்கள் பேரூராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் இரவு நேரங்களில் அந்த சாலையில் நடந்து செல்வது நினைவுகளை மீட்டுவது மட்டுமல்ல நான் கடந்து வந்த பாதையை மனதில் வைத்திருக்க உதவுகிறது...

*******
மனதை கவர்ந்த பல இருந்தாலும் நேரமின்மையால் இன்னும் ஒரு நினைவை பகிர்ந்துகொள்வேன். அது எனது தமிழீழப் பயணம் பற்றியது.

Tuesday, July 31, 2007

படங்காட்டுதல் (போட்டிக்காக அல்ல)

Honeybee

butterfly

Zeebra

Vulture

Eagle

Grassing

Seal

Leopard

Good catch

Gull

Gull

திருவின் மனதிற்கினிய எட்டு - 1

நீண்ட நாட்களாக வேலை நிமித்தமான பயணம், கூட்டங்கள் என அலைந்து வலைப்பதிவிலிருந்து காணாமல் போன வேளை, மனநிறைவை தந்த எட்டு எழுத தோழி. பத்மா அர்விந்த் அழைத்திருந்தார் (ஏற்கனவே நண்பர். ரவிசங்கர் நாடு நல்ல நாடு எழுத அழைத்தது காத்திருக்கிறது. மன்னிக்கவும் ரவி!). அது ஏன் எட்டாக இருக்க வேண்டும்? காரணம் இன்னும் பிடிபடாவிட்டாலும் அன்பின் அழைப்பை ஏற்று நினைவுகளில் மூழ்கி எழுந்த எட்டுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

திருச்சியில் தங்கியிருந்து தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட கிராமங்களில் இளம் வயதினரோடு பழகி பணி புரிந்த காலம் மிகவும் மனநிறைவான காலம். 1996 ஜனவரி மாதம் திருச்சியில் தங்கியிருந்து இளம் தொழிலாளர்களை திரட்டி அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை தரும் பணி கிடைத்தது. கையில் ஒரு பையுடன் களம் வந்து சேர்ந்த போது ஒரு நல்ல மனிதரின் நட்புடன் துவங்கிய களப்பணியில் மனநிறைவு கிடைத்தது. கிராமங்கள் தோறும் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்சனைகளை உணர்ந்த போது எனக்குள் மனிதநேயம், கோபம், ஆழ்ந்த சமூக பார்வை என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் சாதி கட்டமைப்பிற்கும் பிற மாவட்டத்தின் சாதி ஆதிக்கத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. செருப்பு தைக்கும், சவம் அடக்கம் செய்யும் நண்பரிடமும் சாதிப்பிரச்சனைகளின் தாக்கம் எதார்த்த வாழ்வை, சமூக உறவுகளை மனிதாபிமானமற்று சிதைத்திருப்பதை உணர்ந்தேன். சாதி பற்றிய அனுபவங்களையும், பார்வையையும் எனக்குள் சுரக்க வைத்தவர்கள் தலித் மக்கள். தொடர்ந்து எதிர்ப்புகளுக்கிடையே அந்த மக்களுடன் சில ஆண்டுகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் போராட்ட களங்கள் வழி பலர் நான் பணியாற்றிய அமைப்பில் தலைமை ஏற்ற போது மனநிறைவை தந்தது.

********

மனதை நிறைத்த இனிய நிகழ்வு இன்னொன்று கமலுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும். ஒரு மாலைப்பொழுது நண்பர் ஒருவர் "திரு! ஆங்கிலம் அல்லது மலையாளத்தில் பேச உங்களுக்கு தெரியும் தானே? எனது அறையில் ஒருவரை வந்து சந்தித்து பேசுங்களேன்" என்றார். 'சரி! வருகிறேன்' என்று அவருடன் நடந்தேன்.

நண்பரது அறையில் ஒருவர் இருந்தார். பார்த்த நிமிடத்தில் இவர் ஒரு வாகன பராமரிப்பாளராக இருப்பாரோ என எண்ணினேன். அவரது உடல் மற்றும் உடையெங்கும் கருப்பாக அழுக்கு படிந்திருந்தது.

நண்பர் அறிமுகம் செய்தார். 'ஐயாம் கமல்' என்றார் அவர்.

'கமல் மலையாளம் அறியுமோ?' தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகம்.

'உங்கள் ஊர் எங்கே? என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?'

'சொந்த ஊர் கேரளத்தில், கண்ணூர். வீட்டை வீட்டு வெளியேறிவிட்டேன்......' என்றார் அவர்.

'சாப்பிட போகலாமா' என அழைத்தேன்.

'சரி வருகிறேன் அதற்கு முன்னர் குளிக்கவேண்டும்' என்றார்.

எனது அறையில் அவருக்கு குளிக்க ஏற்பாடு செய்து, மாற்று உடைகள் கொடுத்த போது, 'சவரம் செய்ய பிளேட் கிடைக்குமா?' என்றார்.

குளித்து முடித்து அவர் வரும் வரை நண்பரது அறையில் காத்திருந்தேன். அதற்குள் முகமலர்ச்சியுடன் முந்தைய அடையாளம் தெரியாத அளவு கமல் மாறியிருந்தார். தொடர்ந்து கமல் சொன்ன சோகங்களை மௌனமாக கேட்டேன். அம்மாவின் பாசம் உணராததால் வீட்டை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி இந்தியா முழுவதும் பல மடங்களில் சென்று பின்னர் வெளியேறியதாக அந்த 24 வயது இளைஞன் சொன்ன போது கவலையாக இருந்தது.

தொடர்ந்து கமல் தங்கும் அறையாக எனது அறை, கமலுக்கு உடைகள், உணவு, படிக்க ஆங்கில நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் என அவர் விருப்பப்படியே தொடர்ந்தது. திடீரென கமலின் குணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. பேச்சில் தொடர்ச்சியின்மை இல்லை. ரயில் பெட்டிகளை இணைப்பது போல ஆங்கில சொற்களை இணைத்து அவர் பேசிய நீளமான வாக்கியங்களில் அர்த்தம் இருப்பதை விட கோபமும், விரக்தியும் அதிகமாக இருந்தது. ஆங்கிலத்தில் penis என கமல் போட்ட கையெழுத்தும் அதற்கான காரணமும் முதல் முறையாக கமலை கவனிக்க வைத்தது.

குடும்பநல உளவியல் துறையில் பணிசெய்த தோழி ஒருவர் கமல் கதையை அறிந்து மருத்துவரிடம் அழைத்து செல்ல அறிவுரை சொன்னார். கமலின் சம்மதத்துடன் ஒரு மனநல மருத்துவரை அணுகி பரிசோதனையில் கமலுக்கு Schizophrenia என்னும் மனவியாதி இருப்பதாக அறிந்ததும் உடைந்து போனேன். இதற்குள் கமல் வந்து சேர்ந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்திருந்தன. இதற்குள் கமல் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தான். என்னிடம் உரிமையாக எதையும் கேட்பதும், கோபம், பாசம் என தொடர்ச்சியில்லாமல் உணர்ச்சிகளை மாறுபடுத்துவது என கமல் தொடர்ந்தான். எப்படியாவது இவனை குணப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் கமல் தந்த குடும்ப முகவரிக்கு தந்தி கொடுத்து காத்திருந்தேன், தகவல் இல்லை. அனுப்பிய அவசர பதிவு தபால் திரும்ப வந்தது. அவரது மருத்துவத்திற்கான ஆயத்தங்களை செய்ய துவங்கிய போது கமல் கோபம் அதிகமாகிக்கொண்டே போனது. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு மருத்துவமனைக்கு செல்வதே இயலாத விசயமானது. பணி நிமித்தமாக சில நாட்களுக்கு சென்னைக்கு பயணமானேன். கமல் அங்கிருந்து வெளியேறி விடுவதாக என்னிடம் தெரிவித்த போது நான் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டென்.

சென்னையிலிருந்து திரும்பி வந்த போது கமலிடமிருந்து நன்றி கடிதம் மட்டும் இருந்தது. எங்கோ தொலைதூரமாக கமல் காணாமல் போயிருந்தான். மனது கனமாக தான் இருந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து கமல் திடீரென என்னை பார்க்க மட்டுமே வந்து சில மணித்துளிகளில் திரும்பினான். கமல் எதிர்காலம் மீது நம்பிக்கையை தந்த ஆச்சரியமான நிகழ்வு இது. சில மாதங்களில் திருச்சியிலிருந்து நெல்லைக்கு இடம் மாறியிருந்தேன். திருச்சியி இருந்த எனது பொருட்களை எடுத்து அறையை ஒப்படைப்பதற்காக சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் திரும்பியிருந்தேன். நேர்த்தியாக, மிடுக்குடன் உடையணிந்து கழுத்தில் டை, பிரெஞ்ச் தாடியுடன் ஒரு இளைஞன் வந்து பேசவும். 'கமல்?' என்றேன். ஆம்! ஹைதராபாத் அருகே ஒரு பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பணியில் இருப்பதாகவும், என்னை காண்பதற்காக வந்ததாகவும் சொன்னான். என்னை காண்பதற்காக மட்டுமே தேடி வந்த கமலின் அன்பு என் மனதை தொட்டது. ஒரு நாள் மட்டும் என்னோடு தங்கியிருந்து விடைபெற்றான் கமல். கமலுடன் எனக்கு அது கடைசி சந்திப்பு. சில மாதங்களுக்கு பின்னர் நான் பணி நிமித்தமாக ஹாங்காங்-கிற்கு இடம் பெயர வேண்டிய நிலை வந்தது.

கமலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த சந்திப்பிற்காக...

(அடுத்த பதிவில்...)

===========

நண்பர் ஒருவருக்கான குறிப்பு:

நண்பர் ஒருவர் அவரது rediffmailக்கு மின்னஞ்சல் அனுப்ப எழுதியிருந்தார். Rediffmail ஒழுங்காக செயல்படவில்லை, அதனால் அனுப்பிய மடல் வந்து சேரவில்லை என நினைக்கிறேன். முடிந்தால் gmail கொடுங்கள் மடல் அனுப்ப வசதியாக இருக்கும்.

திரு

Saturday, July 07, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-5

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.

-o0o00o000o00o0o-


அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

(வரலாறு வளரும்)


திரு

Thursday, May 24, 2007

எங்களுக்கு உரிமை இருக்கா?

சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வெளிநாட்டு ஊடகவியலாளர் காப்பாற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் முன் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீட்டிற்கு பின்னரும் அந்த சிறுவனை காப்பாற்றுவதை விட அவரை பணியில் ஈடுபடுத்தியவரை காப்பாற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டங்களுக்காக ILO மட்டுமே வழங்கும் பெருந்தொகை இந்தியாவிற்கு தான் வருகிறது. இந்த பணம் எதற்காக செலவிடப்படுகிறது? எத்தனை குழந்தைகள் இந்த திட்டங்களால் எப்படியான பயனை பெற்றார்கள் என விளக்கமாக மக்களுக்கு தெரிவிக்க அரசிற்கு கடமையுண்டு. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை ஒழிப்பு திட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் வர்க்கத்தினருக்கு கடுமையான தண்டனை அவசியம்.

உலகின் மூலை முடுக்குகளில், உணவு விடுதிகளில், வைரம் தீட்டுதலில், சாயப்பட்டறைகளில், கல் குவாரிகளில், சுரங்கங்களில், தொழிற்சாலைகளில், விவசாயத்தில், செங்கல் சூளைகளில்...உழைக்கும் உலகை உருவாக்கும் பிஞ்சு மலர்களின் உரிமைக்காக...


திருத்தப்பட வேண்டிய தீர்ப்புகள்!

ஏப்பிரல் 30 காலை சுமார் 6 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் சென்று சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கியதும் குடியுரிமை அதிகாரிகள் இருக்கும் பகுதிக்கு வரிசையில் சென்றேன். சுமார் 20 இளம் வயது அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் அனைவரும் கறுப்பினத்தை சார்ந்தவர்கள். பெரும்பான்மையினர் பெண்கள். 1994ல் கறுப்பின விடுதலைக்கு முன்னர் இதே விமானநிலையத்தின் குடியுரிமை அதிகாரம் வெள்ளையினத்தினரின் கைகளில் தான் இருந்தது. சுமார் 10 சதவிகிதம் மட்டுமே உள்ள வெள்ளையினத்தவர் கறுப்பின மக்களை அடக்குமுறையால் ஆட்சி செய்த சித்திரவதை காலம் apartheid என அழைக்கப்படுகிறது.
கறுப்பின மக்கள் நகரங்களில், பேருந்துகளில் நடமாட முடியாத வண்ணம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. சொவேற்றோ (Soweto) பகுதியில் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை நடத்தியது அரசு. நிர்வாகம், நீதிமன்றம், அரசு என அனைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிராகவே இயங்கின. கொலை, ஆட்கடத்தல், மின்சாரம் துண்டித்தல், காலல்த்துறையினர் அடக்குமுறைகள் என தொடர்ந்தது. இந்த கொடுஞ்செயல்களை எதிர்த்து வெளிநாடுகளுக்கு சென்று கெரில்லா பயிற்சி பெற்று ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின் விடுதலை போரரட்டம் வழி உருவானவர் தான் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா. 30 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா அதிபரான பின்னர் விடுதலையை சுவாசிக்க துவங்கினர் கறுப்பின மக்கள்.
கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்த பின்னரும் முழு விடுதலை என்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. கல்வி, வேலை, அதிகாரம், பொருளாதாரம், விளையாட்டு, பண்ணைகள் என பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் இன்றும் வெள்ளையினத்தவர் கைகளில் இருக்கிறது. சுரண்டலுக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அடிமைகளாக தான் பெரும்பான்மையான கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள்.
'ஒரு பகுதி மக்களை புறக்கணித்து விட்டு எந்த ஒரு பொருளாதாரமும் வளர இயலாது' - தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பொருளாதார முன்னேற்ற திட்ட அறிக்கை பகுதியிலிருந்து.

வெள்ளையின ஆதிக்கத்தில் அடக்கப்பட்ட மக்களுக்கு (கறுப்பின, இந்திய, நிறம் கொண்ட) பொருளாதார விடுதலையை வழங்க Black Economic Empowerment (BEE) என்னும் திட்டத்தை தென்னாப்பிரிக்க அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இந்த திட்டத்தை பற்றி "Our country requires an economy that can meet the needs of all our economic citizens - our people and their enterprises - in a sustainable manner," என்கிறது அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு.

BEE திட்டத்தை சட்டமும், விதிமுறைகளும் இயக்குகின்றன. 2004ல் இயற்றப்பட்ட BEE சட்டம் தொழில் நிறுவனங்களின் செயலாக்கத்தை 4 முக்கிய பகுதிகளாக அளவிடுகிறது:

  • Direct empowerment through ownership and control of enterprises and assets.

  • Management at senior level.

  • Human resource development

  • employment equity.

இவை அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். பொருளாதார முடிவுகளை எடுக்கும் வேளைகளில் அரசாங்கம் இந்த அளவுகோல்களை பயன்படுத்தவேண்டும்.

  • கொள்முதல்,

  • உரிமம் வழங்கல் மற்றும் சலுகைகள்,

  • பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயலாக்கம்,

  • அரசுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிறுவனங்கள் விற்பனை

போன்ற பொருளாதார முடிவுகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தால் தென்னாப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்ட இனங்களின் மக்களுக்கு நீதி கிடைக்க வழி பிறந்துள்ளது. அதற்கு அடிப்படை அவர்களுக்கு கிடைத்த அரசியல் விடுதலை என நண்பர் கூறும் போது இந்திய துணைக்கண்ட இடப்பங்கீடு அரசியல் நினைவுக்கு வந்தது.

***

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு உரை பல கேள்விகளை எழுப்புகிறது.

"... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status. Nowhere else in the world is there competition to assert backwardness and then to claim we are more backward than you. This truth was recognised as (sic) unhappy and disturbing situation... " - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வியில் 27% இடப்பங்கீடு வழங்குவதற்கு எதிரான தடையில் இந்திய உச்சநீதிமன்றம்.

பின்தங்கிய நிலையை காரணமாக வைத்து தான் தென்னாப்பிரிக்காவில் BEE செயல்படுகிறது என்பது 'மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய' உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனது பரிதாபம். "... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status...." என தீர்ப்பு எழுதிய நீதிமன்றம் எத்தனை உலக நாடுகளின் சமூகநீதி திட்டங்களை ஆய்வு செய்தது என்பதும் கேள்வியே. உலகில் வேறு எங்குமே சாதி அடிப்படையில் இவ்வளவு கேவலமான, மனிதத்தனமற்ற ஒடுக்குமுறை இல்லை. இந்த உண்மையை உணராத வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது கனவு மட்டுமே. பெரும்பகுதி மக்களை கல்வியில், வேலையில், பதவிகளில் ஈடுபட தகுதியில்லாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்க தீட்டை இந்திய அதிகார மையங்கள் புரிந்துகொள்ளாது.

நீதிமன்ற முறையீடுகளால் மட்டுமே மாற்றங்கள் பிறப்பதில்லை. இலட்சிய உறுதிகொண்ட சமூகப்போராட்டங்களின் விளைவாக எழும் மாறுதல்களில் விடுதலையும், நீதியும் பிறக்கும். சாதி அடிமைத்தன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று சமத்துவ சமுதாயம் உருவாக இடப்பங்கீடு உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்கள் அரசியல் அரங்கில் வலிமை பெறுவது காலத்தின் அவசியம். ஆதிக்க எண்ணங்களை எதிரொலிக்கும் தீர்ப்புகளை உடைக்கும் கருத்தியல் பலத்தை பெற அரசியல் விடுதலையால் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பாதை சமூகநீதி என்னும் உயரிய இலட்சியத்தை அடைய ஒன்றுபடுமா?

--------

இடப்பங்கீடு பற்றிய முந்தைய பதிவு youth for equality=சமத்துவ காவலர்களா?

Wednesday, May 02, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-4

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.
(வரலாறு வளரும்)

Saturday, April 28, 2007

இயற்கை சில படங்கள்

பிடித்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு.

Flower

Pair

Swan catching prey

Swan

Swan

Tulip

Tulip

Tulip

Evening sun

Tomato stem

Tomato flower

Tomato flowers

Friday, April 27, 2007

இந்திய ஆயுதமும், ஈழப் போராட்டமும்!

கடனாகவும், நன்கொடையாகவும் கொடுக்கப்படும் ஆயுதங்களை விட மக்கள் மனதில் இருக்கும் விடுதலை என்ற கூரிய உணர்வு மிகச்செறிவான ஆயுதம். கடந்த காலங்களில் எரித்ரிய, பாலஸ்தீன விடுதலை போராட்டங்களின் வரலாறுகள் இந்த செய்தியை சொல்லியிருக்கிறது. இருந்தும், வல்லாதிக்க அரசுகள் மக்களின் இன விடுதலையை புரிந்து கொள்ள தவறியது அல்லது புரிய மறுத்தே வந்திருக்கின்றன. இந்தியா இலங்கை படைகளுக்கு பெருமளவில் ஆயுதம் கொடுத்ததாக வந்த செய்திகள் இப்படியான ஒரு வல்லாதிக்க நிலைபாட்டையே உணர்த்துகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் விடுதலை என்பது பற்றிய இந்தியர்களின் தவறான மனநிலையும், புரிதலும், அணுகுமுறையுமே. இந்தியா ஏன் ஈழத்தமிழர் இனப்பிரச்சனையை சரியாக அணுகவில்லை? இந்த கேள்விக்கு இந்திய துணைக்கண்டத்தின் அரசியலில் இதற்கான காரணம் இருக்கிறது.

ஆங்கிலேய காலனியாதிக்கம் முடிந்த பின்னர் அதிகாரங்கள் பார்ப்பன, பனியா கூட்டணியிடம் மாறியது. அந்த அதிகார மாற்றமே இந்திய அரசியல் ஆனது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கு இன்றும் போராடும் நிலையில் இருக்கிறார்கள். சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி அனைவருக்கும் கிடைக்கும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான விவாதங்கள், நிர்வாக அமைப்புமுறை, மக்கள்மயப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கம் போன்றவை உருவாகவில்லை. எல்லோருக்குமான சமஉரிமைகள் மற்றும் சமூகநீதி அடிப்படையில் இந்தியா கட்டியெழுப்பப்படவில்லை. அவ்வப்போது எழுந்த, எழுகிற முயற்சிகளும் நசுக்கப்பட்டன. தேசிய இன அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரே தேசிய இனம் போன்ற தோற்றத்தை கடந்த 60 ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கிறது.

1980கள் வரையில் மத்திய அரசாங்கத்தில் பெரும்பாலும் வடமாநிலங்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தென்னிந்தியர்களில் குறிப்பாக "மதராசிகள்" பிரிவினைவாதிகளாகவே புறக்கணிக்கப்பட்ட காலம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தையும், திணிப்பையும் எதிர்த்தது. திராவிட இன உணர்வை ஊக்கப்படுத்தியது என பார்ப்பனீய, பனியா கூட்டணிக்கு எதிரான அரசியல் துருவத்தில் தமிழகம் தலைமை வகித்தது. இதன் காரணமாகவே இந்திய துணைக்கண்ட அரசியலில் புதுடில்லி தமிழகம் மீது தனது கழுகு பார்வையை வைத்திருந்தது. நிர்வாக ரீதியாக பொறுப்புகளில் இடம்பெற்றவர்கள் இந்த புறக்கணிப்பை அதிகமாக்கினர். தமிழன் என்ற இன உணர்வு கூட குற்றமாக்கப்பட்டு கொடுஞ்சட்டங்களால் தண்டிக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து நிர்வாக, அதிகார பொறுப்புகளில் இடம் பெற்ற அதிகார கூட்டமும் திராவிட இயக்கத்தை எதிர்க்க நிர்வாக ரீதியான ஒடுக்குமுறைகளை பயன்படுத்தியது. இந்த நிர்வாக அடக்குமுறை வடிவம் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பதிலும், உரிமைகளை மறுப்பதிலும் இட்டு செல்கிறது.

தொடர்ந்து வந்த உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் அரசியல் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டு, பொருளாதார கட்டமைப்புகள் முன்னிறுத்தப்படுகின்றன. இதில் எல்லோருக்குமான பொருளாதார உரிமையோ, நீதியோ இல்லை. சமுகநீதி கூட அவ்வப்போது வந்து இடபங்கீடு கொள்கையாக முழக்கத்தில் எட்டிப்பார்த்து செல்கிறது. சமூகநீதி என்ற பரந்த சமநிலையை அடைய அணுகுமுறைகளும், திட்டங்களும் இல்லை. காஷ்மீரிகளின் உரிமையும், அசாமியர்களின் உரிமையும் இந்திய பாராளுமன்ற சுவர்களுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. தேசிய இனங்களை அவற்றின் அடையாளங்கள் மற்றும் சுய உரிமைகளுடன் புரிந்து கொள்ள "இந்தியர்களால்" இயலாத விசயம்.

இந்த அடிப்படையில் தான் இந்திய அரசின் கொள்கையாக இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என வெளிப்படையான அறிவிப்பும், நிழல் நடவடிக்கைகள் வழி இலங்கை படைகளுக்கு பயிற்சி, ஆயுதங்கள் என வழங்குவதும் நடக்கிறது. இந்திய துணைக்கண்டத்தின் பார்ப்பனீய, பனியா ஆதிக்க அரசியலும் இலங்கையின் சிங்கள பேரினவாதமும் சகோதர புரிதல் கொண்டவை. இந்தியாவில் ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் அதிகார மையங்கள் ஆதிக்க கொள்கை கொண்ட அதிகாரிகளிடமே இருக்கிறது. அவ்வப்போது தமிழகத்தின் 'அறிக்கை எதிர்ப்புகளுக்காக' காலம் தாழ்த்தினாலும், சிங்கள பேரின ஆதரவு இந்திய அதிகார மையத்தில் ஊறிப்போன ஒன்று.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை இந்தியாவிடமிருந்து வர வாய்ப்பில்லை, விடுதலை உணர்வு என்னும் உயரிய இலட்சியத்தில் இருக்கிறது. அணையாமல் காக்கப்படும் விடுதலை உணர்வு பொங்கு தமிழாக எழும் பெருந்தீயில் சுதந்திரம் மலரும். சிங்களதேசம் தானமாக ஆயுதம் பெறும் போது, ஈழத்தமிழர்கள் உரிமைக்காக தங்களை காத்துக்கொள்ள போராடுகிறார்கள். கொடையாக கிடைப்பது தானம் மட்டுமே. போராடி பெறுவது தான் சுதந்திரம்! உணர்வோடு போராடுங்கள் உங்கள் உரிமைகள் இன்று இல்லையென்றால் நாளையாவது பிறக்கும்!

Saturday, April 21, 2007

பார்வை: மண்டைக்காடு கலவரம்

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவது குமரிமாவட்டத்தின் பண்பாட்டு சிறப்பு இயல்புகளில் குறிப்பிடத்தக்க விசயம். தங்களுக்குள் எந்தவித மத வேறுபாடுகளும் பாராமல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்களது மனிதத்தன்மையில் பார்ப்பனீயம் தொடுத்த தாக்குதல் தான் மண்டைக்காடு. மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரிவினையை உருவாக்கியது. மண்டைக்காடு கலவரமும், அதன் தொடர்ச்சியான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் ஏற்படுத்திய சமூக தீங்கின் பின்னரும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பத்தில் கிறிஸ்தவ மதத்தில் தாயார் இருக்கிறார். தகப்பனார் நாட்டார் வழக்கியல் வழிபாட்டுமுறையில் மாடனை கும்பிடுகிறார். மகன் பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். சித்தப்பா அய்யப்பசாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார். பெரியம்மா குடும்பம் அதற்கு எதிர்திசையில் அய்யாவழியை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் மதச்சண்டை தோன்றியதில்லை. எந்த தெய்வம் உயர்ந்தது, எந்த வழிமுறை சிறந்தது என சண்டையோ, விவாதங்களோ எழுந்ததில்லை. இப்படித்தான் இன்றும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக வாழுகின்றன. திருமணங்கள் முதல் அனைத்து விசயங்களிலும் எந்த பிரச்சனையுமில்லாது கலந்துகொள்கிறார்கள். அய்யப்பசாமிக்கு மாலையிட்டு விரதம் இருக்கும் ஒரு மனிதரை சிறுவயது முதல் எனக்கு தெரியும். வாழைப்பயிர் செய்து, கூலி வேலை செய்யும் அந்த தொழிலாளியின் பெயர் சாமுவேல். கிறிஸ்தவ பெயராக இருந்தாலும் அவர் கிறிஸ்தவனாக இருந்ததே இல்லை என்பதை அவரே கூறியிருக்கிறார். உழைக்கும் மக்களுக்குள் இந்த மதவேறுபாடுகளை விட உறவுமுறையும், மனிதபண்பாடும் தான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிலையை மென்றபடியே ஆற்றங்கரையோரம், பெட்டிக்கடை என நண்பர்களாக சேர்ந்து சொந்த சோகங்களை பேசி, கிண்டலடித்தபடியே வாழும் அவர்களுக்குள் யார் எந்த மதம் என்ற கேள்வி எழுந்ததே இல்லை.

எனது நண்பர் ஒருவர் கல்யாணம் குரவை, கெட்டிமேளம் சகிதம் நடந்தது. அவர் தீவிரமான நாட்டார் வழக்கியல் ஈடுபாடுடையவர். அவரது பெரியப்பா மகன் திருமணம் அய்யாவழியில் நடந்தது. அவரது பெரும்பாலான உறவினர்கள் நட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள். இன்னும் பலர் எந்த மதத்தையோ, வழிபாட்டையோ, கொள்கையையோ பின்பற்றாத இயல்பான மனிதர்கள். சிலர் சி.எஸ்.ஐ, பெந்தேகோஸ்தே, கத்தோலிக்க மதத்தவர். உறவினரில் ஒரு பெண் இஸ்லாமியர் ஒருவரை நிக்காஹ் செய்திருக்கிறாள். நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். சிலர் பொதுவுடமைவாதிகள் மற்றும் பகுத்தறிவாளர்கள். இவர்களில் எவரும் இன்னொருவரிடம் மத சண்டைகளில் ஈடுபட்டதில்லை.

உள்ளூர்களில் வாழ்ந்த மக்களும், கடற்கரையில் வாழ்ந்த மக்களும் தங்களுக்குள் அன்னியோன்னியமாக நல்ல உறவுடனே வாழ்ந்தனர். உடல் உழைப்பில் சிறந்த மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் பரந்த கடலைப் போல கள்ளங்கபடமற்றவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் இந்த மக்களுக்கு கடல் தான் தாய். மற்ற மதத்தவர்களின் கடவுள்களைப் பற்றியோ, வழிபாட்டுமுறைகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை. கடற்தொழிலில் ஈடுபடுவதால் பெரும்பாலான நேரம் உழைப்பிலும், மீதி நேரம் குடும்பம், உறக்கம், கள்ளுண்டு நண்பர்களுடன் சீட்டாடுதல் என்று இயல்பான உழைக்கும் மக்களது வாழ்க்கை. மண்டைக்காடு கலவரத்திற்கு முன்னர் குமரிமாவட்ட உழைக்கும் மக்களிடம் இப்படியான உறவுமுறை மிக பலமாக பரவலாக இருந்தது.

மா.சிவகுமார் எழுதிய ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 3 பதிவில் ஜோ எழுதிய பின்னூட்டத்தில் உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார். //மண்டைக்காடு அருகிலுள்ள அந்த மீனவ கிராமம் புதூர் .அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் மண்டைக்காடு கலவரம் 1982-ல் வருவதற்கு முன்பு வரை அந்த மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினர்கள் போல உபசரித்தே வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப் போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாக சாதாரண மக்கள் மனதில் பதிந்திருந்தார்கள்.//

மண்டைக்காடு கலவரம் வழி கடற்கரை மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மத்தியின் மத அடிப்படையில் பிளவை விதைத்தன இந்துத்துவ அமைப்புகள். மண்டைக்காடு கலவரம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு வன்முறை. ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி அமைப்புகளால் இந்த திட்டமிடுதல் செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது. இதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகத்தில் மத பிரிவினைகள் உருவானது. மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து பல ஊர்களில் கலவரங்கள் பல காலகட்டங்களில் உருவாக்கப்பட்டன. மக்களின் வாழ்வில் இந்த திட்டமிடப்பட்ட கலவரங்கள் ஏற்படுத்திய பண்பாட்டு தாக்கமும், இழப்பும் சாதாரணமானதல்ல. மதவெறியை விதைத்த இந்துத்துவ இயக்கங்களுக்கு உழைக்கும் மக்களின் வலி அரசியல் இலாப கணக்காக பயன்படுகிறது. மண்டைக்காடு கலவரம் தன்னிச்சையாக திடீரென வெடித்ததா? மண்டைக்காடு கலவரம் பொறுத்துக்கொள்ளமுடியாத 'இந்துக்களின் அறசீற்றமா'?

பார்ப்பனீய நலனை காக்க உருவாக்கப்பட்ட மத தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கிளைகள் வடஇந்தியாவிலிருந்து பார்ப்பன, பானியாக்களால் தமிழகத்தில் பரப்பப்பட்டது. வடஇந்தியாவிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் சாதியினர் சிலரது ஆதரவுடன் இந்த கிளைகள் ஏற்கனவே பார்ப்பனீய ஆதிக்க மையங்களில் உருவாகியிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிரியாகவே பார்த்தனர். தந்தைப் பெரியார் அவர்கள் ஏற்படுத்திய பகுத்தறிவு விழிப்புணர்வே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்று. மேலும் காந்தியின் கொலை, ஆதிக்கச்சாதி அடையாளம் என பல காரணங்களால் பெரும்பாலான மக்களால் ஆர்.எஸ்.எஸ் புறக்கணிக்கப்பட்டே வந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பார்ப்பனீய அரசியல் கொள்கையை பரப்ப மக்களிடம் செல்வாக்கு அவசியமானது. ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்க இந்துமுன்னணி போன்ற துணை அமைப்புகளை உருவாக்கினர். இந்துமுன்னணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்கும் வேலையில் இராமகோபாலன் போன்றவர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென்காசிக்கு அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்னும் ஊரில் 1981ல் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக மாறினார்கள். பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறியதும் வடநாட்டு இந்துத்துவ தலைவர்கள் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தனது நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியுணர்வூட்டுவதும், மத அடிப்படையில் ஒருங்கிணைப்பதும் அதில் ஒரு யுக்தியானது. உழைக்கும் மக்களிடையே மத பிளவுகளை ஏற்படுத்த கலவரம் உருவக்க மீனாட்சிபுரம் இருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அருகிலுள்ள கன்னியாகுமரி தேர்வு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு 8 மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர்.எஸ்.எஸ் கிளையை உருவாக்கினர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிலம்பம், கராத்தே, அடவு மட்டுமல்லாது மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதை தொடர்ந்த கூட்டுமுயற்சியும், விளைவும் தான் மண்டைக்காடு கலவரம்.

மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஆட்சியின் மறைமுக ஆதரவு இந்துத்துவ இயக்கங்களுக்கு இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த பலரால் இந்த கலவரம் வளர்க்கப்பட்டது. இவற்றில் சில பத்திரிக்கையாளர்களும் அடங்குவர். கலவரத்திற்காக மண்டைக்காடு தேர்ந்தெடுக்கப்பட காரணம் என்ன? தொடர்ந்து நடந்தவை பற்றி அடுத்த பதிவில்.

Wednesday, April 18, 2007

Youth for Equality = சமத்துவ காவலர்களா?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 சதவிகிதம் இடப்பங்கீடு கொள்கையை சட்டமாக்கியது இந்திய அரசு. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து Youth for Equality என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை வழங்கியிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு பற்றிய விபரங்களுக்கு செல்லும் முன்னர் சில சமூக பின்னணியை அறிவது அவசியம். யார் இந்த Youth for Equality? இடப்பங்கீடு கொள்கை மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற கருத்தியலை தான் அந்த சமூகத்தின் அரசு, நீதிமன்றம், நிர்வாகம் என அனைத்து அமைப்புகளும் பிரதிபலித்து வருகின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. ஒரு சமூகப் பிரச்சனையை பற்றிய பாதிக்கப்பட்டவர்களின் (one who is suppressed) பார்வைக்கும் ஆதிக்கம் செலுத்துபவர்களின் (oppressers) பார்வைக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. ஒடுக்கப்பட்டவர்களது எண்ணம், ஏக்கம், கனவு, எதிர்பார்ப்பு, தேவை முதலியவற்றை ஆதிக்கவாதிகளால் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. சாதி ஆதிக்கம் போலியான கௌரவத்தையும், அடையாளத்தையும் வழங்கிவிடுவதாலும் அதை சுற்றியே அனைத்து செல்வங்களும், உழைப்பும் சுரண்டப்படுவதாலும் பார்ப்பனீய ஆதிக்கவாதிகள் தனக்கு கீழே ஒடுக்கப்படும் மக்களின் வேதனைகளை எளிதாக புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் Youth for Equality என மினுக்கும் பெயரில் வந்தாலும் சாதி அடுக்குகளின் 'உச்சியில்' நின்றபடியே கீழே கிடப்பவனின் நிலையை உணர அவர்களால் முடிவதில்லை. காலங்காலமாக ஏகபோகமாக அனுபவித்து வரும் உயர்கல்வி சுகங்களை பங்கிட்டு கொள்ள மனமில்லாது திறமை, பொருளாதாரம் என நாளுக்கொரு புது கோசங்களை முழங்குகின்றனர். இடப்பங்கீடு கொள்கை நாட்டை சாதிவாரியாக பிளவுபடுத்திவிடும் என புது விளக்கம் வேறு. ஏற்கனவே சாதி ரீதியாக கூறுபட்டு அடிமை சமுதாயம் இருக்கையில், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கும் இடப்பங்கீடு கொள்கையா சாதி பிரிவினையை உருவாக்கப் போகிறது? அல்லது இந்தியாவில் தற்போது சாதிப்பிரிவினையே இல்லையா?

நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்ட போது கூட சாதி கட்டமைப்பை தகர்க்கும் விதமான நடவடிக்கைகள் பரந்துபட்ட அளவில் உருவாகவில்லை. அதனால் தான் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னரும் சகல அதிகாரங்களையும், சுகங்களையும், உரிமைகளையும், அரசியலையும் தீர்மானிப்பதில் சாதி பெரும்பங்கு வகிக்கிறது. வசிப்பிடங்கள் கூட சாதி அடையாளங்களை வைத்தே இயங்குகின்றன. சிற்றூர்கள், கிராமங்கள், நவீன முதலாளித்துவ உலகின் நகரங்களின் குடியிருப்புகள், அடுக்குமாடிகள் என எல்லா இடங்களிலும் இது தான் நிலை. அங்கங்கே இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் இன்னும் அவை அக்கிரகாரங்கள், சாதி தெருக்கள், வழிபாட்டுத்தலங்கள், சுடுகாடுகள், கல்வி நிலையங்கள் என பல விதமாக தொடரவே செய்கிறது. இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினர் சேரிகளிலும், ஒதுக்குப்புறங்களிலுமே வாழ வேண்டிய அமைப்புமுறை இயங்குகிறது. வேலையை பொறுத்தவரை சாக்கடை சுத்தம் செய்து, முடிவெட்டி, துணி துவைத்து களை பிடுங்கி, கல்லுடைத்து, கடையில் எடுபிடிகளாக, கட்டிட வேலையில் இருக்கும் சூழலும், கல்வியும் தான் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

பெருநகரங்களில் கூட ஆதிக்கச்சாதியினர் மட்டுமே வாழக்கூடிய பகுதிகள் அல்லது தெருக்கள், கூட்டுக்குடியிருப்புகள் என இன்னும் தீண்டாமையின் வடிவம் மட்டும் மாறியிருக்கிறது. காலனியாதிக்க விடுதலைக்கு பின்னர் தீண்டாமையை வடிவம் மாற்றி இன்னும் அதிகமாக அமைப்புபடுத்தியிருக்கிறது. விடுதலைக்கு பின்னர் எப்படியான சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டும் என்ற கேள்வி பெரும்பாலான மக்களிடம் கேட்கப்படாமலே சில ஆதிக்கசாதியினரின் நலன்கள் மட்டுமே தேசிய நலனாக பேணப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'போனால் போகட்டும்' என சில சலுகை திட்டங்களை மட்டுமே வீசி எறிந்தது இந்திய ஒன்றியம். கல்வி, வேலை, நிலம் என அனைத்து விதமான சமூக உரிமைகளிலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்காத சூழலில் சமூகநீதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு அணுகுமுறையாக இடப்பங்கீடு கொள்கை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. சமூகநீதி என்ற பரந்துபட்ட வெளியை அடையும் முயற்சிக்கு இடப்பங்கீடு ஒரு முக்கியமான அணுகுமுறை திட்டம் மட்டுமே.

சமூகநீதி இல்லாமல் சமத்துவம் இல்லை. ஆதிக்கத்தின் உச்சிபீடத்தில் அமர்ந்து Youth for Equality என்ற ஆதிக்க நலன் காக்கும் அமைப்பை உருவாக்கி வைத்திருப்பவர்கள் தான் சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரிகள். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களின் உச்சியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கீழே கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை பார்த்து 'எங்களுக்கு சமத்துவம் வேண்டும்', 'எங்களை பிரிக்காதீர்' 'எங்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தாதீர்' என கோருவது வெற்று கோசங்கள் மட்டுமே. அவர்களது நலனுக்கு மட்டுமே அவர்களால் போராட இயலும் மனப்பான்மையில் ஊறிய ஆதிக்க மனதிலிருந்து விடுபட்டாலொழிய சமநீதி பற்றி சிந்திக்க அவர்களால் இயலாது. சாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் அவர்களது மதம், வழிபாட்டுமுறை, தத்துவங்கள், நடைமுறைகள், அறிவிப்புகளை பற்றி Youth for Equality களம் அமைத்ததோ விவாதித்ததோ உண்டா? சமத்துவம் என்ற பெயரில் இடப்பங்கீடை எதிர்க்கும் இதே இளைஞர்கள் தான் சாதி ஆதிக்கம் போதிக்கும் மனு தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் குழந்தைகள். அரசியல் சட்டம் வழங்கிய சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து ஆதிக்கச்சாதி நலன்களை காக்க 1950களில் சென்னையின் பிராமணர் சங்கம் என முதல் சாதிச்சங்கம் உருவாக்கப்பட்டது. 2000 களில் பிற்படுத்தபட்ட மக்களின் இடப்பங்கீடு உரிமையை எதிர்க்க Youth for Equality என ஆதிக்கச்சாதி நலன் காக்கும் அமைப்பு உருவாகியிருக்கிறது. பெயர்களும், நபர்களும், சாதியினரும் வேறுப்பட்டிருந்தாலும் இந்த இரு முயற்சியின் பின்னால் இருக்கும் ஆதிக்க கருத்தியல் ஒன்று தான்.

இடப்பங்கீடு கொள்கை அமல்படுத்தப்படும் வரை ஆக்கிரமிப்பு செய்த கல்வி, பதவிகளால் சுழலாக ஆதிக்கச்சாதியினர் குடும்பங்களுக்கே நிர்வாக பதவிகள், பணிகள் அமைந்தன. அவர்களுக்கு தான் திறமை இருப்பது போன்ற மாயையை உருவாக்கியதும் இந்த ஆக்கிரமிப்பு தான். அதனால் தான் உயர்கல்வியில் இடப்பங்கீடு சட்டத்தை எதிர்க்க ஆதிக்கச்சாதி மாணவர்களால் Youth for Equality என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. என்ன ஒரு முரண்பாடு சமத்துவத்திற்கு எதிரான வர்ணாஸ்ரம தர்மத்தையும் அதை கட்டிக்காக்கிற வழிப்பாட்டுமுறை, அமைப்புகளை எதிர்க்காமல் அதையே கடைபிடிக்கிற ஒரு அமைப்பிற்கு பெயர் 'சமத்துவத்திற்கான இளைஞர்கள்'!

இடப்பங்கீடு கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களால் சில ஆண்டுகளாக தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிர்வாக பதவிகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 'நான் இடப்பங்கீட்டில் பயன் பெற்றவன். ஆனால் இனி இடப்பங்கீடு அவசியமில்லை' என பரந்துபட்ட விழிப்புணர்வில்லாத ஓரிரு ஒடுக்கப்பட்ட இளைஞர்களது சுயநலத்தை இந்த எதிர்ப்பாளர்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு கிடைத்த முன்னேற்றத்தால் சமூகத்தின் நிலையை உணராத தன்னலம் மட்டும் கொண்ட விதிவிலக்குகளான இந்த ஒரு சிலரை விட இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாத பல கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனே முக்கியமானது.

தீண்டாமை பெருங்குற்றம், பாவச்செயல் என பாடபுத்தகங்களில் படிப்பதோடு நமது சமூக மாற்றம் நின்று விட்டது. படித்த பாடத்தை வைத்து அறிவுப்பூர்வமான விவாதங்களை மாணவ, இளைய தலைமுறையினரிடம் உருவாக்க நமது கல்வி முறை தவறியது. அதனால் தான் பகலில் தீண்டாமை பாவம், பெருங்குற்றம் என படித்து விட்டு மாலையில் 'அக்கிரகாரங்களிலும்','குடியிருப்புகளிலும்', 'சேரிகளிலும்' ஒதுங்க முடிகிறது. தப்பி தவறி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்களில் இடம் பிடித்துவிடுகிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்களையும் தங்களது ஆதிக்கமன வக்கிரங்களால் துரத்தியடிக்கிற இந்த காலிப்படை தான் இன்றைய 'உயர்கல்வி' நாயகர்கள். தீண்டாமையின் புதிய வடிவம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் என உயர்கல்விநிலையங்களில் தொடர்கிற வக்கிர எண்ணமுடைய இளைய தலைமுறையை இந்தியா உருவாக்கியிருக்கிறது. சாதி ஆதிக்கத்தின் கொடுமைகளை அனுபவித்து ஐ.ஐ.டியில் கல்வியை தொடர இயலாத மாணவர்கள் அனுபவங்களால் மற்றவர்கள் சென்னை ஐ.ஐ.டியை விட சென்னை பல்கலைகழக்கத்தில் படிப்பதை தேர்ந்தெடுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பேராசிரியர்களே போராடி தான் தங்களது உரிமையை அடையக்கூடிய நிலைக்கு ஆதிக்கச்சாதியின் ஆக்கிரமிப்பு ஐ.ஐ.டியை இறுக்கி வைத்திருக்கிறது. தந்திரமான அணுகுமுறைகளால் ஆதிக்கச்சாதியினரின் அக்கிரகாரங்களாக செயல்படும் ஐ.ஐ.டிகளின் கதவுகள் எல்லோருக்கும் திறக்கப்பட வேண்டும். அதற்கான திறவுகோல் தான் இடப்பங்கீடு. ஆதிக்கச்சாதியினர் இடப்பங்கீடை எதிர்ப்பது அவர்களது சொந்த நலனுக்காக மட்டுமே. Youth for (in)Equality இடப்பங்கீடை எதிர்ப்பதில் எந்த சமூகநலனும் இல்லை.

'பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக ஐ.டி.ஐ களும், பாலிடெக்னிக்களும், நர்சிங் படிப்புகளும் இருக்கிறது. ஆதிக்கச்சாதியினரின் 'தகுதிக்கு' ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன.' அவரவரை அந்தந்த சாதி அடுக்குகளில் வைத்து அவரவருக்கு சொல்லப்பட்ட வேலைகளை கொடுப்பது தானே வர்ணாஸ்ரம தர்மம். மனுதர்மத்தின் இந்த விதிகளை மீறும் போது மனுதர்மத்தின் படி அதை எதிர்ப்பது ஆதிக்கச்சாதிகளின் கடமை தானே. பிற்படுத்தப்பட்டவனும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரியில் நுழைய சட்டம் இயற்றினால் அதை எதிர்ப்பது தானே ஆதிக்கச்சாதியினருக்கு மனுதர்மம் வழங்கியிருக்கும் கடமை. ஆதிக்கச்சாதியினர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பை திரட்ட அவர்களது 'திறமைகளை', 'தகுதிகளை' பயன்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உங்களது அமைப்புகளின் பதில் என்ன?

(தொடரும்)
இடப்பங்கீடு பற்றிய முந்தைய கட்டுரை சாதி அடிப்படையில் இடப்பங்கீடு ஏன்?

Sunday, April 15, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.
லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.

(வரலாறு வளரும்)
திரு

பூங்கா

பூங்காவில் கண்டவற்றில் சில உங்களுக்காக. அழகும், இனிமையும், பொலிவும் காணும் கண்களில்.

Flowers

Flowers

Flower

Parrot

Thorns

Tulip

Park

Flying bird

Flower

Flower

Flower

Tulip

Common Moorhen

Flying

Bird