Thursday, May 24, 2007

திருத்தப்பட வேண்டிய தீர்ப்புகள்!

ஏப்பிரல் 30 காலை சுமார் 6 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் சென்று சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கியதும் குடியுரிமை அதிகாரிகள் இருக்கும் பகுதிக்கு வரிசையில் சென்றேன். சுமார் 20 இளம் வயது அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் அனைவரும் கறுப்பினத்தை சார்ந்தவர்கள். பெரும்பான்மையினர் பெண்கள். 1994ல் கறுப்பின விடுதலைக்கு முன்னர் இதே விமானநிலையத்தின் குடியுரிமை அதிகாரம் வெள்ளையினத்தினரின் கைகளில் தான் இருந்தது. சுமார் 10 சதவிகிதம் மட்டுமே உள்ள வெள்ளையினத்தவர் கறுப்பின மக்களை அடக்குமுறையால் ஆட்சி செய்த சித்திரவதை காலம் apartheid என அழைக்கப்படுகிறது.
கறுப்பின மக்கள் நகரங்களில், பேருந்துகளில் நடமாட முடியாத வண்ணம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. சொவேற்றோ (Soweto) பகுதியில் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை நடத்தியது அரசு. நிர்வாகம், நீதிமன்றம், அரசு என அனைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிராகவே இயங்கின. கொலை, ஆட்கடத்தல், மின்சாரம் துண்டித்தல், காலல்த்துறையினர் அடக்குமுறைகள் என தொடர்ந்தது. இந்த கொடுஞ்செயல்களை எதிர்த்து வெளிநாடுகளுக்கு சென்று கெரில்லா பயிற்சி பெற்று ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின் விடுதலை போரரட்டம் வழி உருவானவர் தான் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா. 30 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா அதிபரான பின்னர் விடுதலையை சுவாசிக்க துவங்கினர் கறுப்பின மக்கள்.
கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்த பின்னரும் முழு விடுதலை என்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. கல்வி, வேலை, அதிகாரம், பொருளாதாரம், விளையாட்டு, பண்ணைகள் என பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் இன்றும் வெள்ளையினத்தவர் கைகளில் இருக்கிறது. சுரண்டலுக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அடிமைகளாக தான் பெரும்பான்மையான கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள்.
'ஒரு பகுதி மக்களை புறக்கணித்து விட்டு எந்த ஒரு பொருளாதாரமும் வளர இயலாது' - தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பொருளாதார முன்னேற்ற திட்ட அறிக்கை பகுதியிலிருந்து.

வெள்ளையின ஆதிக்கத்தில் அடக்கப்பட்ட மக்களுக்கு (கறுப்பின, இந்திய, நிறம் கொண்ட) பொருளாதார விடுதலையை வழங்க Black Economic Empowerment (BEE) என்னும் திட்டத்தை தென்னாப்பிரிக்க அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இந்த திட்டத்தை பற்றி "Our country requires an economy that can meet the needs of all our economic citizens - our people and their enterprises - in a sustainable manner," என்கிறது அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு.

BEE திட்டத்தை சட்டமும், விதிமுறைகளும் இயக்குகின்றன. 2004ல் இயற்றப்பட்ட BEE சட்டம் தொழில் நிறுவனங்களின் செயலாக்கத்தை 4 முக்கிய பகுதிகளாக அளவிடுகிறது:

  • Direct empowerment through ownership and control of enterprises and assets.

  • Management at senior level.

  • Human resource development

  • employment equity.

இவை அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். பொருளாதார முடிவுகளை எடுக்கும் வேளைகளில் அரசாங்கம் இந்த அளவுகோல்களை பயன்படுத்தவேண்டும்.

  • கொள்முதல்,

  • உரிமம் வழங்கல் மற்றும் சலுகைகள்,

  • பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயலாக்கம்,

  • அரசுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிறுவனங்கள் விற்பனை

போன்ற பொருளாதார முடிவுகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தால் தென்னாப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்ட இனங்களின் மக்களுக்கு நீதி கிடைக்க வழி பிறந்துள்ளது. அதற்கு அடிப்படை அவர்களுக்கு கிடைத்த அரசியல் விடுதலை என நண்பர் கூறும் போது இந்திய துணைக்கண்ட இடப்பங்கீடு அரசியல் நினைவுக்கு வந்தது.

***

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு உரை பல கேள்விகளை எழுப்புகிறது.

"... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status. Nowhere else in the world is there competition to assert backwardness and then to claim we are more backward than you. This truth was recognised as (sic) unhappy and disturbing situation... " - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வியில் 27% இடப்பங்கீடு வழங்குவதற்கு எதிரான தடையில் இந்திய உச்சநீதிமன்றம்.

பின்தங்கிய நிலையை காரணமாக வைத்து தான் தென்னாப்பிரிக்காவில் BEE செயல்படுகிறது என்பது 'மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய' உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனது பரிதாபம். "... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status...." என தீர்ப்பு எழுதிய நீதிமன்றம் எத்தனை உலக நாடுகளின் சமூகநீதி திட்டங்களை ஆய்வு செய்தது என்பதும் கேள்வியே. உலகில் வேறு எங்குமே சாதி அடிப்படையில் இவ்வளவு கேவலமான, மனிதத்தனமற்ற ஒடுக்குமுறை இல்லை. இந்த உண்மையை உணராத வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது கனவு மட்டுமே. பெரும்பகுதி மக்களை கல்வியில், வேலையில், பதவிகளில் ஈடுபட தகுதியில்லாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்க தீட்டை இந்திய அதிகார மையங்கள் புரிந்துகொள்ளாது.

நீதிமன்ற முறையீடுகளால் மட்டுமே மாற்றங்கள் பிறப்பதில்லை. இலட்சிய உறுதிகொண்ட சமூகப்போராட்டங்களின் விளைவாக எழும் மாறுதல்களில் விடுதலையும், நீதியும் பிறக்கும். சாதி அடிமைத்தன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று சமத்துவ சமுதாயம் உருவாக இடப்பங்கீடு உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்கள் அரசியல் அரங்கில் வலிமை பெறுவது காலத்தின் அவசியம். ஆதிக்க எண்ணங்களை எதிரொலிக்கும் தீர்ப்புகளை உடைக்கும் கருத்தியல் பலத்தை பெற அரசியல் விடுதலையால் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பாதை சமூகநீதி என்னும் உயரிய இலட்சியத்தை அடைய ஒன்றுபடுமா?

--------

இடப்பங்கீடு பற்றிய முந்தைய பதிவு youth for equality=சமத்துவ காவலர்களா?

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com