Saturday, April 28, 2007

இயற்கை சில படங்கள்

பிடித்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு.

Flower

Pair

Swan catching prey

Swan

Swan

Tulip

Tulip

Tulip

Evening sun

Tomato stem

Tomato flower

Tomato flowers

Friday, April 27, 2007

இந்திய ஆயுதமும், ஈழப் போராட்டமும்!

கடனாகவும், நன்கொடையாகவும் கொடுக்கப்படும் ஆயுதங்களை விட மக்கள் மனதில் இருக்கும் விடுதலை என்ற கூரிய உணர்வு மிகச்செறிவான ஆயுதம். கடந்த காலங்களில் எரித்ரிய, பாலஸ்தீன விடுதலை போராட்டங்களின் வரலாறுகள் இந்த செய்தியை சொல்லியிருக்கிறது. இருந்தும், வல்லாதிக்க அரசுகள் மக்களின் இன விடுதலையை புரிந்து கொள்ள தவறியது அல்லது புரிய மறுத்தே வந்திருக்கின்றன. இந்தியா இலங்கை படைகளுக்கு பெருமளவில் ஆயுதம் கொடுத்ததாக வந்த செய்திகள் இப்படியான ஒரு வல்லாதிக்க நிலைபாட்டையே உணர்த்துகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் விடுதலை என்பது பற்றிய இந்தியர்களின் தவறான மனநிலையும், புரிதலும், அணுகுமுறையுமே. இந்தியா ஏன் ஈழத்தமிழர் இனப்பிரச்சனையை சரியாக அணுகவில்லை? இந்த கேள்விக்கு இந்திய துணைக்கண்டத்தின் அரசியலில் இதற்கான காரணம் இருக்கிறது.

ஆங்கிலேய காலனியாதிக்கம் முடிந்த பின்னர் அதிகாரங்கள் பார்ப்பன, பனியா கூட்டணியிடம் மாறியது. அந்த அதிகார மாற்றமே இந்திய அரசியல் ஆனது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கு இன்றும் போராடும் நிலையில் இருக்கிறார்கள். சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி அனைவருக்கும் கிடைக்கும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான விவாதங்கள், நிர்வாக அமைப்புமுறை, மக்கள்மயப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கம் போன்றவை உருவாகவில்லை. எல்லோருக்குமான சமஉரிமைகள் மற்றும் சமூகநீதி அடிப்படையில் இந்தியா கட்டியெழுப்பப்படவில்லை. அவ்வப்போது எழுந்த, எழுகிற முயற்சிகளும் நசுக்கப்பட்டன. தேசிய இன அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரே தேசிய இனம் போன்ற தோற்றத்தை கடந்த 60 ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கிறது.

1980கள் வரையில் மத்திய அரசாங்கத்தில் பெரும்பாலும் வடமாநிலங்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தென்னிந்தியர்களில் குறிப்பாக "மதராசிகள்" பிரிவினைவாதிகளாகவே புறக்கணிக்கப்பட்ட காலம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தையும், திணிப்பையும் எதிர்த்தது. திராவிட இன உணர்வை ஊக்கப்படுத்தியது என பார்ப்பனீய, பனியா கூட்டணிக்கு எதிரான அரசியல் துருவத்தில் தமிழகம் தலைமை வகித்தது. இதன் காரணமாகவே இந்திய துணைக்கண்ட அரசியலில் புதுடில்லி தமிழகம் மீது தனது கழுகு பார்வையை வைத்திருந்தது. நிர்வாக ரீதியாக பொறுப்புகளில் இடம்பெற்றவர்கள் இந்த புறக்கணிப்பை அதிகமாக்கினர். தமிழன் என்ற இன உணர்வு கூட குற்றமாக்கப்பட்டு கொடுஞ்சட்டங்களால் தண்டிக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து நிர்வாக, அதிகார பொறுப்புகளில் இடம் பெற்ற அதிகார கூட்டமும் திராவிட இயக்கத்தை எதிர்க்க நிர்வாக ரீதியான ஒடுக்குமுறைகளை பயன்படுத்தியது. இந்த நிர்வாக அடக்குமுறை வடிவம் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பதிலும், உரிமைகளை மறுப்பதிலும் இட்டு செல்கிறது.

தொடர்ந்து வந்த உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் அரசியல் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டு, பொருளாதார கட்டமைப்புகள் முன்னிறுத்தப்படுகின்றன. இதில் எல்லோருக்குமான பொருளாதார உரிமையோ, நீதியோ இல்லை. சமுகநீதி கூட அவ்வப்போது வந்து இடபங்கீடு கொள்கையாக முழக்கத்தில் எட்டிப்பார்த்து செல்கிறது. சமூகநீதி என்ற பரந்த சமநிலையை அடைய அணுகுமுறைகளும், திட்டங்களும் இல்லை. காஷ்மீரிகளின் உரிமையும், அசாமியர்களின் உரிமையும் இந்திய பாராளுமன்ற சுவர்களுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. தேசிய இனங்களை அவற்றின் அடையாளங்கள் மற்றும் சுய உரிமைகளுடன் புரிந்து கொள்ள "இந்தியர்களால்" இயலாத விசயம்.

இந்த அடிப்படையில் தான் இந்திய அரசின் கொள்கையாக இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என வெளிப்படையான அறிவிப்பும், நிழல் நடவடிக்கைகள் வழி இலங்கை படைகளுக்கு பயிற்சி, ஆயுதங்கள் என வழங்குவதும் நடக்கிறது. இந்திய துணைக்கண்டத்தின் பார்ப்பனீய, பனியா ஆதிக்க அரசியலும் இலங்கையின் சிங்கள பேரினவாதமும் சகோதர புரிதல் கொண்டவை. இந்தியாவில் ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் அதிகார மையங்கள் ஆதிக்க கொள்கை கொண்ட அதிகாரிகளிடமே இருக்கிறது. அவ்வப்போது தமிழகத்தின் 'அறிக்கை எதிர்ப்புகளுக்காக' காலம் தாழ்த்தினாலும், சிங்கள பேரின ஆதரவு இந்திய அதிகார மையத்தில் ஊறிப்போன ஒன்று.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை இந்தியாவிடமிருந்து வர வாய்ப்பில்லை, விடுதலை உணர்வு என்னும் உயரிய இலட்சியத்தில் இருக்கிறது. அணையாமல் காக்கப்படும் விடுதலை உணர்வு பொங்கு தமிழாக எழும் பெருந்தீயில் சுதந்திரம் மலரும். சிங்களதேசம் தானமாக ஆயுதம் பெறும் போது, ஈழத்தமிழர்கள் உரிமைக்காக தங்களை காத்துக்கொள்ள போராடுகிறார்கள். கொடையாக கிடைப்பது தானம் மட்டுமே. போராடி பெறுவது தான் சுதந்திரம்! உணர்வோடு போராடுங்கள் உங்கள் உரிமைகள் இன்று இல்லையென்றால் நாளையாவது பிறக்கும்!

Saturday, April 21, 2007

பார்வை: மண்டைக்காடு கலவரம்

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவது குமரிமாவட்டத்தின் பண்பாட்டு சிறப்பு இயல்புகளில் குறிப்பிடத்தக்க விசயம். தங்களுக்குள் எந்தவித மத வேறுபாடுகளும் பாராமல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்களது மனிதத்தன்மையில் பார்ப்பனீயம் தொடுத்த தாக்குதல் தான் மண்டைக்காடு. மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரிவினையை உருவாக்கியது. மண்டைக்காடு கலவரமும், அதன் தொடர்ச்சியான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் ஏற்படுத்திய சமூக தீங்கின் பின்னரும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பத்தில் கிறிஸ்தவ மதத்தில் தாயார் இருக்கிறார். தகப்பனார் நாட்டார் வழக்கியல் வழிபாட்டுமுறையில் மாடனை கும்பிடுகிறார். மகன் பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். சித்தப்பா அய்யப்பசாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார். பெரியம்மா குடும்பம் அதற்கு எதிர்திசையில் அய்யாவழியை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் மதச்சண்டை தோன்றியதில்லை. எந்த தெய்வம் உயர்ந்தது, எந்த வழிமுறை சிறந்தது என சண்டையோ, விவாதங்களோ எழுந்ததில்லை. இப்படித்தான் இன்றும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக வாழுகின்றன. திருமணங்கள் முதல் அனைத்து விசயங்களிலும் எந்த பிரச்சனையுமில்லாது கலந்துகொள்கிறார்கள். அய்யப்பசாமிக்கு மாலையிட்டு விரதம் இருக்கும் ஒரு மனிதரை சிறுவயது முதல் எனக்கு தெரியும். வாழைப்பயிர் செய்து, கூலி வேலை செய்யும் அந்த தொழிலாளியின் பெயர் சாமுவேல். கிறிஸ்தவ பெயராக இருந்தாலும் அவர் கிறிஸ்தவனாக இருந்ததே இல்லை என்பதை அவரே கூறியிருக்கிறார். உழைக்கும் மக்களுக்குள் இந்த மதவேறுபாடுகளை விட உறவுமுறையும், மனிதபண்பாடும் தான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிலையை மென்றபடியே ஆற்றங்கரையோரம், பெட்டிக்கடை என நண்பர்களாக சேர்ந்து சொந்த சோகங்களை பேசி, கிண்டலடித்தபடியே வாழும் அவர்களுக்குள் யார் எந்த மதம் என்ற கேள்வி எழுந்ததே இல்லை.

எனது நண்பர் ஒருவர் கல்யாணம் குரவை, கெட்டிமேளம் சகிதம் நடந்தது. அவர் தீவிரமான நாட்டார் வழக்கியல் ஈடுபாடுடையவர். அவரது பெரியப்பா மகன் திருமணம் அய்யாவழியில் நடந்தது. அவரது பெரும்பாலான உறவினர்கள் நட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள். இன்னும் பலர் எந்த மதத்தையோ, வழிபாட்டையோ, கொள்கையையோ பின்பற்றாத இயல்பான மனிதர்கள். சிலர் சி.எஸ்.ஐ, பெந்தேகோஸ்தே, கத்தோலிக்க மதத்தவர். உறவினரில் ஒரு பெண் இஸ்லாமியர் ஒருவரை நிக்காஹ் செய்திருக்கிறாள். நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். சிலர் பொதுவுடமைவாதிகள் மற்றும் பகுத்தறிவாளர்கள். இவர்களில் எவரும் இன்னொருவரிடம் மத சண்டைகளில் ஈடுபட்டதில்லை.

உள்ளூர்களில் வாழ்ந்த மக்களும், கடற்கரையில் வாழ்ந்த மக்களும் தங்களுக்குள் அன்னியோன்னியமாக நல்ல உறவுடனே வாழ்ந்தனர். உடல் உழைப்பில் சிறந்த மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் பரந்த கடலைப் போல கள்ளங்கபடமற்றவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் இந்த மக்களுக்கு கடல் தான் தாய். மற்ற மதத்தவர்களின் கடவுள்களைப் பற்றியோ, வழிபாட்டுமுறைகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை. கடற்தொழிலில் ஈடுபடுவதால் பெரும்பாலான நேரம் உழைப்பிலும், மீதி நேரம் குடும்பம், உறக்கம், கள்ளுண்டு நண்பர்களுடன் சீட்டாடுதல் என்று இயல்பான உழைக்கும் மக்களது வாழ்க்கை. மண்டைக்காடு கலவரத்திற்கு முன்னர் குமரிமாவட்ட உழைக்கும் மக்களிடம் இப்படியான உறவுமுறை மிக பலமாக பரவலாக இருந்தது.

மா.சிவகுமார் எழுதிய ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 3 பதிவில் ஜோ எழுதிய பின்னூட்டத்தில் உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார். //மண்டைக்காடு அருகிலுள்ள அந்த மீனவ கிராமம் புதூர் .அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் மண்டைக்காடு கலவரம் 1982-ல் வருவதற்கு முன்பு வரை அந்த மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினர்கள் போல உபசரித்தே வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப் போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாக சாதாரண மக்கள் மனதில் பதிந்திருந்தார்கள்.//

மண்டைக்காடு கலவரம் வழி கடற்கரை மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மத்தியின் மத அடிப்படையில் பிளவை விதைத்தன இந்துத்துவ அமைப்புகள். மண்டைக்காடு கலவரம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு வன்முறை. ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி அமைப்புகளால் இந்த திட்டமிடுதல் செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது. இதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகத்தில் மத பிரிவினைகள் உருவானது. மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து பல ஊர்களில் கலவரங்கள் பல காலகட்டங்களில் உருவாக்கப்பட்டன. மக்களின் வாழ்வில் இந்த திட்டமிடப்பட்ட கலவரங்கள் ஏற்படுத்திய பண்பாட்டு தாக்கமும், இழப்பும் சாதாரணமானதல்ல. மதவெறியை விதைத்த இந்துத்துவ இயக்கங்களுக்கு உழைக்கும் மக்களின் வலி அரசியல் இலாப கணக்காக பயன்படுகிறது. மண்டைக்காடு கலவரம் தன்னிச்சையாக திடீரென வெடித்ததா? மண்டைக்காடு கலவரம் பொறுத்துக்கொள்ளமுடியாத 'இந்துக்களின் அறசீற்றமா'?

பார்ப்பனீய நலனை காக்க உருவாக்கப்பட்ட மத தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கிளைகள் வடஇந்தியாவிலிருந்து பார்ப்பன, பானியாக்களால் தமிழகத்தில் பரப்பப்பட்டது. வடஇந்தியாவிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் சாதியினர் சிலரது ஆதரவுடன் இந்த கிளைகள் ஏற்கனவே பார்ப்பனீய ஆதிக்க மையங்களில் உருவாகியிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிரியாகவே பார்த்தனர். தந்தைப் பெரியார் அவர்கள் ஏற்படுத்திய பகுத்தறிவு விழிப்புணர்வே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்று. மேலும் காந்தியின் கொலை, ஆதிக்கச்சாதி அடையாளம் என பல காரணங்களால் பெரும்பாலான மக்களால் ஆர்.எஸ்.எஸ் புறக்கணிக்கப்பட்டே வந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பார்ப்பனீய அரசியல் கொள்கையை பரப்ப மக்களிடம் செல்வாக்கு அவசியமானது. ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்க இந்துமுன்னணி போன்ற துணை அமைப்புகளை உருவாக்கினர். இந்துமுன்னணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்கும் வேலையில் இராமகோபாலன் போன்றவர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென்காசிக்கு அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்னும் ஊரில் 1981ல் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக மாறினார்கள். பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறியதும் வடநாட்டு இந்துத்துவ தலைவர்கள் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தனது நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியுணர்வூட்டுவதும், மத அடிப்படையில் ஒருங்கிணைப்பதும் அதில் ஒரு யுக்தியானது. உழைக்கும் மக்களிடையே மத பிளவுகளை ஏற்படுத்த கலவரம் உருவக்க மீனாட்சிபுரம் இருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அருகிலுள்ள கன்னியாகுமரி தேர்வு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு 8 மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர்.எஸ்.எஸ் கிளையை உருவாக்கினர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிலம்பம், கராத்தே, அடவு மட்டுமல்லாது மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதை தொடர்ந்த கூட்டுமுயற்சியும், விளைவும் தான் மண்டைக்காடு கலவரம்.

மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஆட்சியின் மறைமுக ஆதரவு இந்துத்துவ இயக்கங்களுக்கு இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த பலரால் இந்த கலவரம் வளர்க்கப்பட்டது. இவற்றில் சில பத்திரிக்கையாளர்களும் அடங்குவர். கலவரத்திற்காக மண்டைக்காடு தேர்ந்தெடுக்கப்பட காரணம் என்ன? தொடர்ந்து நடந்தவை பற்றி அடுத்த பதிவில்.

Wednesday, April 18, 2007

Youth for Equality = சமத்துவ காவலர்களா?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 சதவிகிதம் இடப்பங்கீடு கொள்கையை சட்டமாக்கியது இந்திய அரசு. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து Youth for Equality என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை வழங்கியிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு பற்றிய விபரங்களுக்கு செல்லும் முன்னர் சில சமூக பின்னணியை அறிவது அவசியம். யார் இந்த Youth for Equality? இடப்பங்கீடு கொள்கை மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற கருத்தியலை தான் அந்த சமூகத்தின் அரசு, நீதிமன்றம், நிர்வாகம் என அனைத்து அமைப்புகளும் பிரதிபலித்து வருகின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. ஒரு சமூகப் பிரச்சனையை பற்றிய பாதிக்கப்பட்டவர்களின் (one who is suppressed) பார்வைக்கும் ஆதிக்கம் செலுத்துபவர்களின் (oppressers) பார்வைக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. ஒடுக்கப்பட்டவர்களது எண்ணம், ஏக்கம், கனவு, எதிர்பார்ப்பு, தேவை முதலியவற்றை ஆதிக்கவாதிகளால் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. சாதி ஆதிக்கம் போலியான கௌரவத்தையும், அடையாளத்தையும் வழங்கிவிடுவதாலும் அதை சுற்றியே அனைத்து செல்வங்களும், உழைப்பும் சுரண்டப்படுவதாலும் பார்ப்பனீய ஆதிக்கவாதிகள் தனக்கு கீழே ஒடுக்கப்படும் மக்களின் வேதனைகளை எளிதாக புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் Youth for Equality என மினுக்கும் பெயரில் வந்தாலும் சாதி அடுக்குகளின் 'உச்சியில்' நின்றபடியே கீழே கிடப்பவனின் நிலையை உணர அவர்களால் முடிவதில்லை. காலங்காலமாக ஏகபோகமாக அனுபவித்து வரும் உயர்கல்வி சுகங்களை பங்கிட்டு கொள்ள மனமில்லாது திறமை, பொருளாதாரம் என நாளுக்கொரு புது கோசங்களை முழங்குகின்றனர். இடப்பங்கீடு கொள்கை நாட்டை சாதிவாரியாக பிளவுபடுத்திவிடும் என புது விளக்கம் வேறு. ஏற்கனவே சாதி ரீதியாக கூறுபட்டு அடிமை சமுதாயம் இருக்கையில், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கும் இடப்பங்கீடு கொள்கையா சாதி பிரிவினையை உருவாக்கப் போகிறது? அல்லது இந்தியாவில் தற்போது சாதிப்பிரிவினையே இல்லையா?

நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்ட போது கூட சாதி கட்டமைப்பை தகர்க்கும் விதமான நடவடிக்கைகள் பரந்துபட்ட அளவில் உருவாகவில்லை. அதனால் தான் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னரும் சகல அதிகாரங்களையும், சுகங்களையும், உரிமைகளையும், அரசியலையும் தீர்மானிப்பதில் சாதி பெரும்பங்கு வகிக்கிறது. வசிப்பிடங்கள் கூட சாதி அடையாளங்களை வைத்தே இயங்குகின்றன. சிற்றூர்கள், கிராமங்கள், நவீன முதலாளித்துவ உலகின் நகரங்களின் குடியிருப்புகள், அடுக்குமாடிகள் என எல்லா இடங்களிலும் இது தான் நிலை. அங்கங்கே இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் இன்னும் அவை அக்கிரகாரங்கள், சாதி தெருக்கள், வழிபாட்டுத்தலங்கள், சுடுகாடுகள், கல்வி நிலையங்கள் என பல விதமாக தொடரவே செய்கிறது. இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினர் சேரிகளிலும், ஒதுக்குப்புறங்களிலுமே வாழ வேண்டிய அமைப்புமுறை இயங்குகிறது. வேலையை பொறுத்தவரை சாக்கடை சுத்தம் செய்து, முடிவெட்டி, துணி துவைத்து களை பிடுங்கி, கல்லுடைத்து, கடையில் எடுபிடிகளாக, கட்டிட வேலையில் இருக்கும் சூழலும், கல்வியும் தான் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

பெருநகரங்களில் கூட ஆதிக்கச்சாதியினர் மட்டுமே வாழக்கூடிய பகுதிகள் அல்லது தெருக்கள், கூட்டுக்குடியிருப்புகள் என இன்னும் தீண்டாமையின் வடிவம் மட்டும் மாறியிருக்கிறது. காலனியாதிக்க விடுதலைக்கு பின்னர் தீண்டாமையை வடிவம் மாற்றி இன்னும் அதிகமாக அமைப்புபடுத்தியிருக்கிறது. விடுதலைக்கு பின்னர் எப்படியான சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டும் என்ற கேள்வி பெரும்பாலான மக்களிடம் கேட்கப்படாமலே சில ஆதிக்கசாதியினரின் நலன்கள் மட்டுமே தேசிய நலனாக பேணப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'போனால் போகட்டும்' என சில சலுகை திட்டங்களை மட்டுமே வீசி எறிந்தது இந்திய ஒன்றியம். கல்வி, வேலை, நிலம் என அனைத்து விதமான சமூக உரிமைகளிலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்காத சூழலில் சமூகநீதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு அணுகுமுறையாக இடப்பங்கீடு கொள்கை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. சமூகநீதி என்ற பரந்துபட்ட வெளியை அடையும் முயற்சிக்கு இடப்பங்கீடு ஒரு முக்கியமான அணுகுமுறை திட்டம் மட்டுமே.

சமூகநீதி இல்லாமல் சமத்துவம் இல்லை. ஆதிக்கத்தின் உச்சிபீடத்தில் அமர்ந்து Youth for Equality என்ற ஆதிக்க நலன் காக்கும் அமைப்பை உருவாக்கி வைத்திருப்பவர்கள் தான் சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரிகள். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களின் உச்சியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கீழே கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை பார்த்து 'எங்களுக்கு சமத்துவம் வேண்டும்', 'எங்களை பிரிக்காதீர்' 'எங்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தாதீர்' என கோருவது வெற்று கோசங்கள் மட்டுமே. அவர்களது நலனுக்கு மட்டுமே அவர்களால் போராட இயலும் மனப்பான்மையில் ஊறிய ஆதிக்க மனதிலிருந்து விடுபட்டாலொழிய சமநீதி பற்றி சிந்திக்க அவர்களால் இயலாது. சாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் அவர்களது மதம், வழிபாட்டுமுறை, தத்துவங்கள், நடைமுறைகள், அறிவிப்புகளை பற்றி Youth for Equality களம் அமைத்ததோ விவாதித்ததோ உண்டா? சமத்துவம் என்ற பெயரில் இடப்பங்கீடை எதிர்க்கும் இதே இளைஞர்கள் தான் சாதி ஆதிக்கம் போதிக்கும் மனு தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் குழந்தைகள். அரசியல் சட்டம் வழங்கிய சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து ஆதிக்கச்சாதி நலன்களை காக்க 1950களில் சென்னையின் பிராமணர் சங்கம் என முதல் சாதிச்சங்கம் உருவாக்கப்பட்டது. 2000 களில் பிற்படுத்தபட்ட மக்களின் இடப்பங்கீடு உரிமையை எதிர்க்க Youth for Equality என ஆதிக்கச்சாதி நலன் காக்கும் அமைப்பு உருவாகியிருக்கிறது. பெயர்களும், நபர்களும், சாதியினரும் வேறுப்பட்டிருந்தாலும் இந்த இரு முயற்சியின் பின்னால் இருக்கும் ஆதிக்க கருத்தியல் ஒன்று தான்.

இடப்பங்கீடு கொள்கை அமல்படுத்தப்படும் வரை ஆக்கிரமிப்பு செய்த கல்வி, பதவிகளால் சுழலாக ஆதிக்கச்சாதியினர் குடும்பங்களுக்கே நிர்வாக பதவிகள், பணிகள் அமைந்தன. அவர்களுக்கு தான் திறமை இருப்பது போன்ற மாயையை உருவாக்கியதும் இந்த ஆக்கிரமிப்பு தான். அதனால் தான் உயர்கல்வியில் இடப்பங்கீடு சட்டத்தை எதிர்க்க ஆதிக்கச்சாதி மாணவர்களால் Youth for Equality என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. என்ன ஒரு முரண்பாடு சமத்துவத்திற்கு எதிரான வர்ணாஸ்ரம தர்மத்தையும் அதை கட்டிக்காக்கிற வழிப்பாட்டுமுறை, அமைப்புகளை எதிர்க்காமல் அதையே கடைபிடிக்கிற ஒரு அமைப்பிற்கு பெயர் 'சமத்துவத்திற்கான இளைஞர்கள்'!

இடப்பங்கீடு கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களால் சில ஆண்டுகளாக தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிர்வாக பதவிகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 'நான் இடப்பங்கீட்டில் பயன் பெற்றவன். ஆனால் இனி இடப்பங்கீடு அவசியமில்லை' என பரந்துபட்ட விழிப்புணர்வில்லாத ஓரிரு ஒடுக்கப்பட்ட இளைஞர்களது சுயநலத்தை இந்த எதிர்ப்பாளர்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு கிடைத்த முன்னேற்றத்தால் சமூகத்தின் நிலையை உணராத தன்னலம் மட்டும் கொண்ட விதிவிலக்குகளான இந்த ஒரு சிலரை விட இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாத பல கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனே முக்கியமானது.

தீண்டாமை பெருங்குற்றம், பாவச்செயல் என பாடபுத்தகங்களில் படிப்பதோடு நமது சமூக மாற்றம் நின்று விட்டது. படித்த பாடத்தை வைத்து அறிவுப்பூர்வமான விவாதங்களை மாணவ, இளைய தலைமுறையினரிடம் உருவாக்க நமது கல்வி முறை தவறியது. அதனால் தான் பகலில் தீண்டாமை பாவம், பெருங்குற்றம் என படித்து விட்டு மாலையில் 'அக்கிரகாரங்களிலும்','குடியிருப்புகளிலும்', 'சேரிகளிலும்' ஒதுங்க முடிகிறது. தப்பி தவறி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்களில் இடம் பிடித்துவிடுகிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்களையும் தங்களது ஆதிக்கமன வக்கிரங்களால் துரத்தியடிக்கிற இந்த காலிப்படை தான் இன்றைய 'உயர்கல்வி' நாயகர்கள். தீண்டாமையின் புதிய வடிவம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் என உயர்கல்விநிலையங்களில் தொடர்கிற வக்கிர எண்ணமுடைய இளைய தலைமுறையை இந்தியா உருவாக்கியிருக்கிறது. சாதி ஆதிக்கத்தின் கொடுமைகளை அனுபவித்து ஐ.ஐ.டியில் கல்வியை தொடர இயலாத மாணவர்கள் அனுபவங்களால் மற்றவர்கள் சென்னை ஐ.ஐ.டியை விட சென்னை பல்கலைகழக்கத்தில் படிப்பதை தேர்ந்தெடுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பேராசிரியர்களே போராடி தான் தங்களது உரிமையை அடையக்கூடிய நிலைக்கு ஆதிக்கச்சாதியின் ஆக்கிரமிப்பு ஐ.ஐ.டியை இறுக்கி வைத்திருக்கிறது. தந்திரமான அணுகுமுறைகளால் ஆதிக்கச்சாதியினரின் அக்கிரகாரங்களாக செயல்படும் ஐ.ஐ.டிகளின் கதவுகள் எல்லோருக்கும் திறக்கப்பட வேண்டும். அதற்கான திறவுகோல் தான் இடப்பங்கீடு. ஆதிக்கச்சாதியினர் இடப்பங்கீடை எதிர்ப்பது அவர்களது சொந்த நலனுக்காக மட்டுமே. Youth for (in)Equality இடப்பங்கீடை எதிர்ப்பதில் எந்த சமூகநலனும் இல்லை.

'பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக ஐ.டி.ஐ களும், பாலிடெக்னிக்களும், நர்சிங் படிப்புகளும் இருக்கிறது. ஆதிக்கச்சாதியினரின் 'தகுதிக்கு' ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன.' அவரவரை அந்தந்த சாதி அடுக்குகளில் வைத்து அவரவருக்கு சொல்லப்பட்ட வேலைகளை கொடுப்பது தானே வர்ணாஸ்ரம தர்மம். மனுதர்மத்தின் இந்த விதிகளை மீறும் போது மனுதர்மத்தின் படி அதை எதிர்ப்பது ஆதிக்கச்சாதிகளின் கடமை தானே. பிற்படுத்தப்பட்டவனும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக்கல்லூரியில் நுழைய சட்டம் இயற்றினால் அதை எதிர்ப்பது தானே ஆதிக்கச்சாதியினருக்கு மனுதர்மம் வழங்கியிருக்கும் கடமை. ஆதிக்கச்சாதியினர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பை திரட்ட அவர்களது 'திறமைகளை', 'தகுதிகளை' பயன்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உங்களது அமைப்புகளின் பதில் என்ன?

(தொடரும்)
இடப்பங்கீடு பற்றிய முந்தைய கட்டுரை சாதி அடிப்படையில் இடப்பங்கீடு ஏன்?

Sunday, April 15, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.
லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.

(வரலாறு வளரும்)
திரு

பூங்கா

பூங்காவில் கண்டவற்றில் சில உங்களுக்காக. அழகும், இனிமையும், பொலிவும் காணும் கண்களில்.

Flowers

Flowers

Flower

Parrot

Thorns

Tulip

Park

Flying bird

Flower

Flower

Flower

Tulip

Common Moorhen

Flying

Bird

Sunday, April 08, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன் - 2

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.

அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantánamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.


(வரலாறு வளரும்)

திரு

Wednesday, April 04, 2007

சாதி அடிப்படையில் எதற்கு இடப்பங்கீடு?

இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்ற கருத்தை ஒரு தரப்பினரும், சில நீதிமன்ற சீமான்களும் உருவாக்க முயல்கிறார்கள். இது சரியானதா?

ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழு:
1953ல் பிற்படுத்தப்பட்டோர் நிலை பற்றி ஆராய ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழுவை இந்திய அரசு ஏற்படுத்தியது. இந்த ஆணைக்குழு கொடுத்த அறிக்கையில் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைத்தது.

மண்டல் விசாரணைக்குழு அறிக்கை:
20.01.1978ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய மக்களை அடையாளம் காண" பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது.

சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களை அடையாளம் காண 8 அணுகுமுறைகளை இந்த விசாரணைக்குழு கையாண்டது. அது பற்றிய விரிவான தகவல்களை எனது இடப்பங்கீடு சில நியாயங்கள் என்னும் பதிவில் காணலாம். அவற்றில் சில மட்டும் இங்கே:

  1. பேராசிரியர் M.V சீனிவாசன் அவர்கள் தலைமையில் 15 அறிஞர்கள் அடங்கிய குழு அமைத்து நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றி கணனி வழியான ஆய்வு.
  2. டாட்டா சமூகவியல் நிறுவனம் வழியாக வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாக பிரித்து ஒரு ஒப்பீட்டு ஆய்வு.
  3. 1891 முதல் 1931 வரையில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, சாதிக்கும், பரம்பரை தொழிலுக்குமான தொடர்பு மற்றும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் கவனத்தில் எடுக்கப்பட்டது.

முறையான அறிவியல் அடிப்படையில் அறிஞர்களால் சமூக ஆய்வு நடத்தப்பட்டது. அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் என பலரும் ஈடுபட்ட கூட்டு முயற்சி தான் இந்த ஆய்வு. சமூக அறிவியல் ஆய்வின் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்தது மண்டல் குழு.

மண்டல் குழு சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறை செய்ய மூன்று அடிப்படைக் காரணிகளை நிர்ணயம் செய்தது. அவை,

சமூக அடிப்படைக் காரணிகள்
கல்வி அடிப்படைக் காரணிகள்
பொருளாதார அடிப்படைக் காரணிகள்

(இது பற்றிய விரிவான தகவலுக்கு இடப்பங்கீடு சில நியாயங்கள் படிக்கவும்)

31.12.1980ல் மண்டல் குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடப்பங்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரை மண்டல் அறிக்கையில் அடங்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆதிக்க சாதியினர் எதிர்த்ததால் மண்டல் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்த தயங்கியது. தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் ஆட்சியில் வந்த போது மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்தியது. மண்டல் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் வி.பி.சிங் ஆட்சி வந்த போது மண்டல் அறிக்கை கொடுத்த சூழல் மாறவில்லையா?

1990ல் இந்திய அளவில் அரசுதுறைகளில் கல்வியிலும், வேலையிலும் இருந்தவர்கள் பற்றி சண்டே வார இதழில் 1990 டிசம்பர் 23ல் வெளியிட்ட தகவல்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தரும்.
  • துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
  • மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
  • ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
  • தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
  • பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
  • மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
  • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.

பெரும்பான்மை இடங்களை அனுபவித்து கொண்டே இதே 1990ல் தான் இடப்பங்கீடை ஆதிக்கசாதியினர் எதிர்த்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சாதிப் பிரிவினையால் ஏற்பட்ட பாகுபாட்டை அகற்றி சமூகநீதியை உருவாக்க தானே இந்தியாவில் இடப்பங்கீடு கொள்கை உருவாக்கப்பட்டது. சமூக நீதிக்கான இடப்பங்கீடு கொள்கை ஏன் சாதி அடிப்படையில் அமையவேண்டும்? பொருளாதார அடிப்படையில் அல்லது வேறு விசயங்களை கணக்கிலெடுத்து இடப்பங்கீடு உருவாக்கலாமே என விவாதம் நடக்கிறது. இதை புரிந்துகொள்ள சில அடிப்படை கேள்விகள் அவசியம்.

  1. இந்தியாவின் பாகுபாடு சாதி அடிப்படையில் தானே உருவானது? அதை மாற்ற சாதியை காரணியாக கொள்ளாமல் வேறு எதை காரணமாக கொள்வது?

உதாரணமாக: ஊனமுற்றவர்களுக்கு சமநீதி கிடைக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஊனத்தை அடிப்படையாக வைத்து தானே திட்டங்கள் இயற்ற இயலும்? பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து தான் திட்டங்களை இயற்ற வேண்டும்; ஊனம், ஊனமின்மை என மக்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தக்கூடாது என்றால் என்ன பொருள்? சாதிப் பிரிவினைகள் இந்தியாவின் சமூக ஊனம். இந்த ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் உரிய இடம் கிடைக்க சாதி என்னும் ஊனத்தை அடையாளமாக இல்லாமல் வேறு எதை அடிப்படையாக வைத்தாலும் அது அநீதியாக தான் அமையும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீட்டில் பொருளாதார காரணி பற்றிய அடுத்த பதிவுகளில்...

Tuesday, April 03, 2007

சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1

17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர். கடந்த வருடம் பனித்துளி என்ற வலைப்பதிவில் சேகுவேரா பற்றி எழுத துவங்கினேன். வேறு பதிவுகளில் கவனம் செலுத்தியதால் வரலாற்றின் நாயகனை பற்றி எழுதுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சே வரலாறை ஆலமரத்தில் எழுதுவேன்.

இந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்போது அறிமுகம் செய்கிறேன். அது சேகுவேரா என்ற வரலாற்று நாயகனின் தாக்கத்தை அறிந்துகொள்ள உதவும். உங்களது அரிய ஆலோசனைகள், தகவல்கள், திருத்தங்களை ஆவலுடன் எற்க தயாராக காத்திருப்பேன்.

விடுதலை வேள்வியில் ஒளி சேர்க்கிற அனைவருக்கும் இந்த தொடர் அர்ப்பணம்.

சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1

ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?

*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

திரு

படங்கள் உதவி: latinamericanstudies, கியூபாவின் வரலாறு