Wednesday, December 16, 2009

சியோனிஸ்டு யூதர்களும், இஸ்ரேலும் : சில குறிப்புகள்

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. இப்பிரதி யூதர்கள் பற்றி தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல. வெறுமனே ஒப்பீடுகளின் பெருமிதங்களில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது.

1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.மனித உரிமை சபை நியமித்த ‘கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை’ இவ்வருடத்தில் சுட்டிக்காட்டியது. உடனடியாக இஸ்ரேலை காப்பாற்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா. அரபு நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய நாடான இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திர பொறிமுறை அதன் ஆயுதங்களைக் காட்டிலும் அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களால் இவ்வளவு பலத்தையும், ஆதரவையும் எப்படி திரட்ட முடிந்தது? இந்த கேள்விக்கான விடை 18 நூற்றாண்டுகள் கழித்து யூதர்கள் இஸ்ரேலை நிறுவ முன்னெடுத்த திட்டங்களில், நகர்வுகளில் அடங்கியுள்ளது.கி.பி 70ஆம் ஆண்டில் எருசலேம் நகரம் ரோமை பேரரசின் முற்றுகைக்குள் சென்றது. எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யூதர்கள் உலகமெங்கும் சிதறினார்கள். ஆனால் அவர்கள் தங்களது கலாச்சாரம், பண்பாட்டை கைவிடவில்லை. யூத சமூகத்தில் நாடு திரும்பும் வேட்கையும், கனவும் தலைமுறைகளை கடந்து தொடர்ந்தது.

சியோனிஸ்டு இயக்கத்தின் துவக்கம்
இஸ்ரேலுக்கான ஆதரவை திரட்டும் வேலை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது. யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் கனவை வளர்த்தெடுத்து பல நாடுகளின் ஆதரவை திரட்டும் வேலையில் ஈடுபட யூதர்கள் 1897ல் சியோனிஸ்ட் இயக்கத்தை (Zionist movement) உருவாக்கினார்கள். யூதர்களின் நாட்டை உருவாக்க சியோனிஸ்ட் அமைப்பும், சியோனிஸ்டு யூதர்களும் ஈடுபட்டனர். ‘சியோனிஸ்ட்’ (Zionist) என்னும் சொற்பதம் எருசலேம் (Jerusalem) நகரின் அருகிலுள்ள சியோன் மலையை (Zion) நினைவுபடுத்துகிறது. சியோன் மலை இஸ்ரேலிய மக்களையும், எருசலேமையும் குறிப்பிடும் குறியீடாக யூதர்களின் மத நூல்களிலும், கிறித்தவர்களின் மத நூல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து இஸ்ரேலை நிறுவ இக்கலாச்சார குறியீடு பெயரில் ‘சியோனிஸ்ட் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் சிதறியிருந்த யூதர்களின் மனங்களில் தங்களுக்கான நாட்டை உருவாக்க, அதற்காக உழைக்க இக்கலாச்சார குறியீடு தூண்டியது. அதற்காக உழைக்க சியோனிஸ்டு இயக்கம் உலக அளவில் யூதர்களை திரட்டியது.

(நிழற்படம்: சியோனிஸ்டுகளின் முதல் உலக மாநாடு, நன்றி:http://www.zionpress.org)

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக போலந்து, ரசியா, ரொமானியாவில் வாழ்ந்த யூதர்கள் இணைந்து ‘சியோனுக்கு போகும்’ நோக்கத்துடன் ‘சியோன் விரும்பிகள்’ (Lovers of Zion) சங்கங்களை உருவாக்க துவங்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் பணக்காரர்களாக இருந்தனர். டெல் அவிவ் அருகிலுள்ள யாஃபா நகரில் விவசாய பாடசாலையை 1870ல் யூதர்கள் உருவாக்கினர். யாஃபா நகரில் 10 ஹெக்டேர் நிலத்தை சர் மோசஸ் மாண்ட்பியோர் என்கிற யூதர் வாங்கினார். ரசியாவில் இரண்டாம் சார் மன்னன் அலெக்சாந்தரின் கொலையை தொடர்ந்து 1881-1882 வரையில் யூதர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. அதற்கு பிறகு சியோனுக்கு திரும்பும் நோக்கம் யூதர்களிடம் மேலும் வலுவடைந்தது. 1882ல் டாக்டர்.யூதா லெய்ப் பென்ஸ்கர் எழுதிய கட்டுரையில் யூதர்களுக்கான நாடு, சுய விடுதலை ஆகிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் செல்வது ஆரம்பமானது. ‘சிரியா மற்றும் பாலஸ்தீன யூத விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவு அமைப்பு’ ரசியாவில் அரசின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது.

ரசியாவில் சட்டரீதியாக செயல்படும் அனுமதி கிடைத்தவுடன் ரசியாவில் வாழ்ந்த யூதர்களிடமிருந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான திட்டங்களை உருவாக்க பண வசூலை துவக்கினார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை உருவாக்கவும், விவசாயத்திற்கும் இவ்வமைப்புகள் திட்டங்களை செயல்படுத்தின. 1882ல் பாலஸ்தீனத்தில் 2200 ஹெக்டேர் நிலத்தை சில யூதர்கள் வாங்கினார்கள். ரசிய கலவரத்துக்கு பிறகு ரசியாவிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடிபுகுவது பெருகியது. அவர்களுக்கு சியோனிஸ்ட் அமைப்பு மற்றும் சியோன் விரும்பிகள் சங்கங்கள் பாலஸ்தீனத்தில் குடிபுக உதவிகளை செய்தன. துவக்கத்தில் சியோனிஸ்டுகளிற்கு யூதர்கள் அனைவரிடமும் ஆதரவு இருக்கவில்லை. உலகமெங்கும் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருந்த 1921ம் ஆண்டில் சியோனிஸ்டு இயக்கத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் யூதர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பெரும்பான்மையான யூத மக்கள் யூதர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற சியோனிஸ்டுகளின் கொள்கையை ஆதரிக்கவில்லை. யூதர்களுக்கான நாடு கொள்கையை கைவிடாமல், சியோனிஸ்டுகள் பலமான திட்டங்களை முன்னெடுத்தனர். யூத மக்களிடம் அக்கொள்கையை பரப்பி அவர்களை இணைப்பதிலும், உலக நாடுகளின் ஆதரவை திரட்டவும் பல்வேறு வழிகளையும், திட்டங்களையும் முன்னெடுத்தனர்.

யூத தேசிய நிதியும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும்
சியோனிஸ்ட் இயக்கத்தின் 5வது உலக மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் பாசல் நகரில் 1901ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் யூதர்களுக்கான நாட்டிற்கு நிலங்களை வாங்குவதற்காக பொதுநிதியை உருவாக்க நீண்ட விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் ‘யூத தேசிய நிதி’ உருவாக்கப்பட்டது. அந்த நிதி யூத மக்கள் அனைவருக்குமான பொது நிதியாக முடிவானது. 2 லட்சம் பவுண்ட்களுடன் நிதி துவங்கியது. 10, 20 என்று ஒவ்வொருவரும் வழங்கிய நிதி யூதர்களின் கனவை நோக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. யூதர்கள் தங்களது தேசிய நிதி பங்களிப்பிற்கு கொடுத்த பெயர் செக்கெல். பின்னர் இஸ்ரேலின் நாணயத்திற்கு செக்கெல் என்று பெயர் சூட்டினார்கள். யூத தேசிய நிதியை நிர்வகிக்கும் தலைமையகம் எருசலேமாக உருவானது. 1902 முதல் சியோனிஸ்ட் ஆவணங்களுக்கான சிறப்பு முத்திரைகள் வெளிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதிலிருந்து கிடைத்த பணமும் யூத தேசிய நிதியில் சேர்ந்தது. யூத தேசிய நிதிக்கு கிடைத்த நன்கொடையை வைத்து 50 ஏக்கர் நிலத்தை ஹதேராவில் முதல் முறையாக வாங்கினார்கள். தொடர்ந்து யூத தேசிய நிதி (Jewish National Fund) மூலம் பல பகுதிகளில் பெருமளவு நிலங்களை வாங்கினார்கள். நிலங்களோடு கட்டமைப்புகளையும் உருவாக்க ஆரம்பித்தனர். வாங்கிய நிலத்தில் ஆலீவ் மரத்தோட்டங்கள், காடுகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதி உருவாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியிருந்தனர். 1921ல் யூத தேசிய நிதியத்திடம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாகியிருந்தது. அப்போது 76 நாடுகளில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி.

ஒவ்வொருவருக்கும் யூதர்களின் நாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க திட்டத்தை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதியத்திற்காக யூதர்களுக்கு சொந்தமான வீடுகள், மத நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நீல நிற உண்டியல் வைக்கப்பட்டது. பாலினம், வயது ஆகிய எந்த வேறுபாடுமில்லாமல் யூதர்களின் நிலத்தை உருவாக்க அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். இளவயதினர்களுக்கு சியோனிஸ்டு இயக்கம் தனியாக திட்டங்களை நடத்தியது. ஜனவரி 1926ல் யூத தேசிய நிதி அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. வனம், நீர், சுற்றுலா, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள்.

1927ற்குள் 50 ஆயிரம் எக்கர் நிலத்தில் 50 யூத குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. 1935ற்குள் 1750 ஏக்கர் நிலத்தில் சுமார் 17 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்கள். நீர் ஆதாரங்களை உருவாக்கினார்கள். 1935ல் யூதர்களிடம் 89,500 ஏக்கர் நிலமிருந்தது. யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டன் அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. 1904ல் பாலஸ்தீனத்தில் சுமார் 35 ஆயிரம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்திலிருந்து பல நாடுகளுக்கும் திரும்ப போயிருந்தனர். ஆனால் யூத தேசிய நிதியை ஏற்படுத்தி தொடர்ந்து நிலங்களை வாங்கி குடியேற்றங்களை உருவாக்கியதால் 1939ற்குள் 4 லட்சத்து 50 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். அவர்களில் சுமார் 10 விழுக்காடு யூதர்கள் யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் இருந்தனர். பிரிட்டன் யூதர்கள் புதிய குடியிருப்புகளை உருவாக்க தடை விதித்தது. ஆனாலும் பிரிட்டனின் தடையை மீறி யூதர்கள் பெருமளவில் நிலங்களை வாங்கினார்கள். அவற்றில் குடியிருப்புகள், கட்டுமானங்களை கட்ட திட்டமிட்டார்கள். இரவில் ஒரேயடியாக 10 நகரங்களை யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் கட்டி எழுப்பியிருந்தனர். டெல் அவிவ் நகரும் யூத தேசிய நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது தான். யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் இந்த வேகமும், வேட்கையும் தான் இஸ்ரேலை உருவாக்கியது. 1939ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அப்போதும் யூத தேசிய நிதிக்கான நன்கொடைகள் அதிகமாக குவிந்தது.

(படம்: பாலஸ்தீனத்தை நோக்கிய யூதர்களின் கடல் பயணம், zionpress.org)
இட்லரின் இன அழிப்பு கொடுமைகளுக்கு பிறகு யூதர்களின் பெரும்பகுதியினர் அமெரிக்கா மற்றும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். பாலஸ்தீனத்தில் நுழைய சட்டப்புறம்பான வழிகளையும் பயன்படுத்தினார்கள். 1939ல் ஐரோப்பாவிலிருந்து யூதர்களை காப்பாற்றி கடல் வழியாக கொண்டு சென்று பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். கடல் பயணங்கள் சாத்தியமில்லாத போது அரபு நாடுகளில் தங்கியிருந்த யூதர்களை நிலம் வழியாக குடியேற்றினார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்ட குடிபெயர்வுகள். 1945 துவங்கி மூன்று ஆண்டுகளில் 70 ஆயிரம் யூதர்களை வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து 65 முறை கடல் பயணங்கள் மூலம் பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். இதற்காக கப்பலை வாங்கவும், மாலுமிகளை நியமிக்கவும், சைப்பிரசில் இடைத்தங்கல் முகாம்களோடு தொடர்பு கொள்ளவும் தனியாக குழுக்களும், அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்திலும் சியோனிஸ்ட் இயக்கத்தின் பங்கிருந்தது.

(படம்: பாலஸ்தீனத்தில் நுழைந்த யூதர்கள்...)
கூட்டுறவு விவசாய பண்ணைகள்
கலிலேயா கடற்கரை பகுதியில் 1909ல் முதல் விவசாய கூட்டுறவு பண்ணை உருவாக்கப்பட்டது. அங்கே வேலை செய்த யூதர்களில் பலர் கடுமையான உழைப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் யோர்தான் நாட்டின் நகரங்களுக்கும், புலம்பெயர் தேசங்களுக்கும் சென்றனர். 1914ல் அந்த கூட்டுப்பண்ணையில் 50 யூதர்கள் மட்டுமே வேலை செய்தனர். ஒரேயடியாக நாட்டை உருவாக்ககுவதற்கு பதிலாக சிறிய சிறிய திட்டங்களாக உருவாக்கி, அவற்றில் யூதர்கள் அனைவரையும் ஈடுபட வைத்து, யூத ஒற்றுமையை உருவாக்கினார்கள். அதன் பிறகு அனைத்து யூதர்களையும் ஒருங்கிணைப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. தனித்தனியாக நிலங்களை வாங்கும் போது தனிநபர்களால் விவசாயத்திற்கு தேவையான முதலீடு, உழைப்பு மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும். ஆனால் கூட்டுறவு விவசாய முறையில் உழைப்பு, உற்பத்தி வலுவடைவது ஒருபுறம். கூட்டுறவு விவசாய முறையில் யூதர்களை ஒற்றுமையாக இணைத்து கூட்டாக செயல்படும் வாய்ப்பு இருந்தது. இந்த கூட்டுறவு முறையினால் அயல்நாடுகளிலிருந்து வந்து நிலங்களில் குடியேறுகிற யூதர்களின் வருமானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நோக்கமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். துவக்கத்தில் கூட்டுறவு பண்ணைகளில் சோசலிச சிந்தனைத் தாக்கம் இருந்தது. இஸ்ரேல் நாடாக உருவாகிய பிறகு கூட்டுறவு விவசாயம் குறைந்து தனியார்மயம் வளர்க்கப்பட்டது.

யூதர்களுக்கு ஆதரவான பிரிட்டனின் பால்பஃர் பிரகடனம்
1917ல் அறிவியலாளரும், சியோனிஸ்டு இயக்கத்தின் தலைவர் செய்ம் வெய்ஸ்மன் பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை நிறுவ ஆதரவை பிரகடனம் செய்ய பிரிட்டன் அரசை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். லண்டனில் வசித்த லார்டு ரோத்ஸ்சைல்டு வீட்டிற்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்பஃர் நவம்பர் 2, 1917ல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதம் தான் பால்பஃர் பிரகடனம். யூதர்களின் நாடு அதுவரையில் சியோனிஸ்ட் இயக்கம் மற்றும் யூதர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் பால்பஃர் பிரகடனம் மூலம் பிரிட்டன் யூதர்களுக்கான நாட்டிற்கான முதல் அங்கீகாரம். உலகின் வல்லரசு நாடான பிரிட்டனின் ஆதரவை பெற யூதர்கள் தந்திரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். லார்டு ரோத்ஸ்சைல்டு சியோனிஸ்ட், பெரும் பணக்காரர், வங்கி உரிமையாளர், உயிரியலாளர், அரசியல்வாதி ஆகிய பலமுகங்களை கொண்டவர். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக 11 வருடங்கள் பணியாற்றியிருந்தார். லார்டு ரோத்ஸ்சைல்டு யூதர்களுக்கான நாட்டை உருவாக்க தனது அரசியல், சமூக செல்வாக்கை பயன்படுத்தினார். முதல் உலக யுத்தம் நடந்த அவ்வேளை மத்திய கிழக்கில் பிரிட்டன் போரில் தொய்வு நிலையில் இருந்தது. பிரிட்டனுக்கு தேவையான ஆதரவை திரட்டும் நிலையில் சியோனிஸ்ட் இயக்கம் அமெரிக்காவில் பலமாகவும், அரசியல் அழுத்தம் கொடுக்கும் செல்வாக்குடனும் இருந்தது. யூதர்களின் நாட்டை பிரிட்டன் ஆதரிப்பதன் மூலம் யூதர்கள் அமெரிக்காவை பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் இறங்க வைக்கமுடியுமென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையளித்தனர்.

பிரிட்டனுக்கு ஆதரவாக துருக்கியை எதிர்த்து போரிடவும் பாலஸ்தீனத்திலிருந்த யூதர்கள் தயாரானார்கள். அதைப் போல ரசியாவிலிருந்த யூதர்கள் போல்ஸ்விக் புரட்சியில் பங்கெடுத்தனர். அதனால் ரசியா முதல் உலகப் போரில் தொடர்ந்து போரிட ரசியாவில் குடியிருந்த யூதர்கள் செல்வாக்கு செலுத்துவார்களென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். பிரிட்டன் யூதர்களுக்கு ஆதரவளிக்காமல் போனால் ஜெர்மனி பாலஸ்தீனத்தை கைப்பற்றுமென்றும் சியோனிஸ்டுகள் பிரிட்டனுக்கு தெரிவித்தனர். அப்போதைய பிரிட்டன் பிரதமர் லாய்டு ஜார்ஜ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பால்பஃர் கிறிஸ்தவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். அவர்களிடம் மத நம்பிக்கையை பயன்படுத்தி ‘யூதர்களை அவர்களது தாய்நிலத்தில் மீண்டும் குடியேற்றுவதன் மத ரீதியான’ விளக்கங்களை சொல்லி ஆதரவை திரட்டினார்கள். இவை எல்லாவற்றிற்கும் நேரடி சந்திப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினார்கள். யூதர்கள் செய்த இந்த அரசியலின் விளைவாக யூதர்களுக்கான நாடு பற்றிய விருப்பத்தை பால்பஃர் பிரகடனம் வழியாக பிரிட்டன் வெளியிட்டது. முதலாம் உலகப்போருக்கு பின்னர் உருவான நாடுகளின் கூட்டமைப்பு (பின்னர் அது ஐ.நா சபையாக உருவெடுத்தது) 1922ல் பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்து பாலஸ்தீனத்தை ஆளும் பொறுப்பை பிரிட்டனுக்கு வழங்கியது.

பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்ததும் யூதர்களின் நம்பிக்கை அதிகமானது. சியோனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. 1930களில் இதனால் பல நாடுகளிலிருந்தும் பாலஸ்தீனத்திற்கு குடிபுகுந்த யூதர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதைத் தொடர்ந்து விழிப்படைந்த பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் 1936ல் மோதல் துவங்கியது. மோதலை நிறுத்துவதற்காக பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடிபெயர்வதற்கு 1939ல் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதித்தது.

யூதர்களின் அமெரிக்க ஆதரவு
உடனடியாக அமெரிக்காவில் ஏற்கனவே அரசியல், ஊடகம், தொழில்த்துறை ஆகிய அனைத்திலும் ஊடுருவி செல்வாக்கு செலுத்திய சியோனிஸ்ட் யூதர்கள் அமெரிக்க அரசின் ஆதரவை திரட்டும் வேலையில் இறங்கினார்கள். தங்களுக்கு அமெரிக்க செனட்டர்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அதற்காக தொடர்ந்து சந்திப்புகள், கூட்டங்கள், கடிதம் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் ட்ருமன் செனட்டராக இருக்கும் போதே அவருடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கினார்கள். ட்ருமன் அமெரிக்க அதிபரானதும் யூதர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதாக குறிப்பிட்டு பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்தார். இட்லரின் கொடுமைகளுக்கு ஆளானதால் யூதர்களுக்கு என்று தனிநாடு அவசியம் என்னும் கருத்து ட்ரூமன் நம்பினார்.

ட்ரூமனை தங்களுக்கு ஆதரவாக்குவதற்கு சியோனிஸ்டுகள் பலவிதமான அரசியல் அழுத்தங்களையும், தந்திரங்களையும் கையாண்டார்கள். அரபு நாடுகளுக்கும், சோவியத் ரசியாவிற்கும் மத்தியில் கூட்டு வலுவடைந்து வருவதாக ட்ரூமனின் ஆட்சியின் போது வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத் துறையும் நம்ப வைக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவுக்கு எண்ணை விநியோகம் தடைபடுமென்று கருத்து உருவாக்கப்பட்டது. அவற்றை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் அமெரிக்கா யூதர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. அமெரிக்காவின் தலையீடு துவங்கியது. பிரிட்டனும், அமெரிக்காவும் இணைந்து ‘ஆங்கிலோ-அமெரிக்கன் விசாரணைக் குழு’ அமைத்தன. அக்குழு 1946ல் பாலஸ்தீனம் பற்றிய சில பரிந்துரைகளை வைத்தது. யூதர்கள் அல்லது அரபு மொழி பேசும் பாலஸ்தீனர்களுக்கான தனிநாடுகள் பாலஸ்தீனத்தில் உருவானால் பொது அமைதி கெட்டு குழப்பங்களும், மோதல்களும் நடைபெறும் ஆகையால் யூதர்கள் மற்றும் அரபு மொழி பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கை உடன்படிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாகுக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. யூதர்களை பாலஸ்தீனத்தில் குடிபுக அனுமதிக்க வேண்டும், தன்னாட்சியுரிமையுடன் இரு மாநிலங்கள் உருவாக்க வேண்டும். எருசலேம், பெத்லெகேம், நெகெவ், தெற்கு பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளை நிர்வகிக்க வலுவான மைய அரசு ஒன்றையும் உருவாக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்தது.

அக்குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பிறகு வன்முறை தாக்குதல்கள் அதிகமானது. அதனால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்து, ஏப்பிரல் 2, 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சிறப்புக்குழுவை உருவாக்க தீர்மானம் கொண்டுவந்தது. அக்குழு முன்வைத்த யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபையில் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் தனிநாடும், எருசலேம் சர்வதேச பகுதியாகவும் அறிவிக்கலாமென்று ஐ.நா தீர்மானம் எண் 181 பரிந்துரைத்தது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இதற்கிடையே சியோனிஸ்டுகள் ட்ரூமனிடம் தங்களது செல்வாக்கு மற்றும் அழுத்தங்களை செலுத்த தவறவில்லை. இந்த நிலையில் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் காலக்கெடுவும் வந்தது. மே 14, 1948ல் டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் கூடிய சியோனிஸ்டு யூத மக்கள் பேரவை இஸ்ராயேல் நாட்டை நிறுவியுள்ளதாக பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீனம் மீதான பிரிட்டனின் அதிகாரம் முடிவிற்கு வந்த தினத்தில் இப்பிரகடனம் வெளியானது. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா அதிபர் ட்ரூமன் இஸ்ரேலை அதே இரவில் அங்கீகரித்தார். ட்ரூமனின் அங்கீகார அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியாகும் வரையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் கூட ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கடந்து மற்றொரு வல்லரசான சோவியத் ரசியா அங்கீகரித்தது. இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்ட போது சுமார் 350 யூத குடியிருப்புகளும், 6 லட்சத்து 50 ஆயிரம் யூதர்களும் குடிபுகுந்திருந்தனர். அவற்றுள் 233 யூத குடியிருப்பு நகரங்கள் யூத தேசிய நிதியால் உருவாக்கப்பட்டவை.

முற்றுகைக்குள் பாலஸ்தீனர்கள்
அரபு-இஸ்ரேல் மோதல் துவங்கியது. 1948ல் சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 1967ல் சிரியா, யோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடன் இஸ்ரேல் போரிட்டது. அப்போரின் முடிவில் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சுமார் 30 லட்சம் பாலஸ்தீனர்களின் சுதந்திரம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பறிக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்க நவம்பர் 1967ல் ஐ.நா பாதுகாப்புச் சபை கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் இஸ்ரேலும் அழைக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும். அப்பகுதி நாடுகளின் எல்லை, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் எண் 242. ஆனால் இன்றும் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பகுதிகள் இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளும், ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது. இதனால் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை இயல்பாக இல்லை. பாலஸ்தீன மக்களின் வளங்களை இஸ்ரேல் சுரண்டுகிறது. இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்கள், பாலஸ்தீன ஆயுதப் போராட்ட இயக்கங்களின் எதிர்தாக்குதல்கள் என்று சமாதானத்தையும், மனித உரிமைகளையும் இழந்துள்ளனர் அம்மக்கள்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன இயக்கங்களால் நடத்தப்படுகிற தற்கொலை தாக்குதல்களும், ராக்கெட்களும் இஸ்ரேலிய மக்களையும் பாதிக்கிறது. ஆனாலும் பாதிப்புகளின் கொடூரமும், உக்கிரமான மனித உரிமை மீறல்களும் பாலஸ்தீனர்களையே வதைக்கிறது.
பாலஸ்தீன பகுதிகளுக்கு உணவு, மருந்து, அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் உட்பட அனைத்தையும் இஸ்ரேலிய ராணுவத்தின் சோதனை கெடுபிடிகளை கடந்தே கொண்டு செல்ல முடியும். ஆனால் பாலஸ்தீன மக்களின் நடமாடும் உரிமையை மறுத்து நூற்றுக்கணக்கான தடுப்பு அரண்களையும், சுற்றுச்சுவர்களையும், ராணுவக் கெடுபிடிகளையும் உருவாக்கி தடுக்கிறது இஸ்ரேல். அம்மக்களுக்கு உணவு, மருந்து உட்பட எதுவும் சரியாக கிடைப்பதில்லை. உயிரைக் காப்பாற்ற அவசர மருத்துவ ஊர்திகள் இத்தடைகளை கடந்து செல்வது எளிதல்ல. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படும் அம்மக்கள் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் பயணம் செல்ல வேண்டிய கொடூரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நீண்ட தொலைவு பயணத்திற்கான பணச்செலவு அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் வேலை செய்ய முடியாதபடி இந்த தடுப்பு அரண்களும், சுவர்களும், ராணுவக் கெடுபிடியும் உள்ளது. பாலஸ்தீனர்களில் 65 விழுக்காடு மக்கள் வேலையில்லாமை மற்றும், 75 விழுக்காடு மக்கள் வறுமையிலும் வாடுகிறார்கள்.

கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை
டிசம்பர் 2008ல் காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் மனித உரிமை குற்றங்களை கண்டறிய தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்டு ஸ்டோன் தலைமையில் குழுவை ஐ.நா மனித உரிமை சபை நியமித்தது. அக்குழு விசாரணையின் முடிவில் 575 பக்கங்களில் அறிக்கையை ஐ.நா மனித உரிமை சபையிடம் கையளித்தது. ஆனால் அந்த அறிக்கையை இஸ்ரேலும், அமெரிக்காவும் நிராகரித்தன. அவ்வறிக்கையில் இஸ்ரேல் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக நடந்துகொண்டதை விரிவாக பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துகிற பொருளாதார தடைகள், மின்சார தடை, எரிபொருள் தடை, மீன்பிடி தடை உட்பட அனைத்து மனிதாபிமான தடைகளையும் விவரித்து அவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதை தெரிவித்தது. ஆனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பலம் ஐ.நாவிடம் இல்லை. இஸ்ரேலின் மனித உரிமை குற்றங்களை விசாரிப்பதற்காக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் புறக்கணிக்கிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் இஸ்லாமிய மற்றும் பல நாடுகளும் இருக்கிற போதிலும் சர்வதேச விசாரணையை நடைபெற வைப்பது எளிதல்ல. அதற்கு காரணம் அமெரிக்காவிலுள்ள யூதர்களும், யூத அமைப்புகளும் தொடர்ந்து அமெரிக்காவை தங்கள் பக்கமாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்

காசா பகுதில் விமான தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், கனரக ஆயுதங்களின் தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் செய்திருந்தது. அவற்றில் 1444 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன அரசின் கட்டுமானங்கள், பாலஸ்தீன காவல்த்துறை, நிர்வாக அலுவலகங்கள் ஆகியவையும் தாக்குதலுக்குள்ளானது. பாலஸ்தீனர்களின் ராணுவ முக்கியத்துவமில்லாத கட்டுமானங்கள் மற்றும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அழித்திருந்தன. இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 240 பேர் பாலஸ்தீன காவல்த்துறையை சார்ந்தவர்கள். பாலஸ்தீன போராளிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து மக்களை கேடையமாக வைத்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியிருந்தது. அதன் நிமித்தமாகவே இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடுப்பதாகவும் பரப்புரைகள் நடந்தன. ஆனால் கோல்டு ஸ்டோன் அறிக்கையில் பாலஸ்தீன போராளிகள் நகர்ப்புறங்களில் மக்களுக்கு மத்தியிலிருந்து ஏவுகணைகளை வீசியதை தெரிவித்தது. அதே வேளை மக்களை தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல பாலஸ்தீன போராளிகள் வற்புறுத்தியதாக ஆதாரமில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்தியா உட்பட உலக நாடுகள் ஆதரவுடன் வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேலைப் போல ‘மனிதக் கேடையங்கள்’ பரப்புரையை இந்திய ஊடகங்களும், இந்திய அரசும் நடத்தியது கவனிக்கத்தக்கது. ஆனால் அப்போது ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் மக்கள் அடர்த்தியான குடியிருப்புகள், பாதுகாப்பு வலையம், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய சிறீலங்காவிற்கு ஆதரவாக நின்றன. மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு சிறீலங்கா மீது கடுமையான அழுத்தங்களை பயன்படுத்தவில்லை. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசுக்கு ஆயுதங்கள், ஆலோசனைகளை கொடுத்த நாடுகளின் வரிசையில் இஸ்ரேலும் இடம்பெற்றது. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசியல் லாபங்களுக்கு ஏற்ப நடத்தப்படுகிற அரசியல் விளையாட்டுகள். அவை வெற்றிபெறுவதில் ஊடகங்களின் பங்குண்டு.

இஸ்ரேலின் ஊடக பரப்புரைகள் அமெரிக்க மக்களுக்கும், உலகிற்கும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை வெளியிடாமல் இருப்பதற்காக ஊடகவியலாளர்களோடு இஸ்ரேலின் பரப்புரைக் குழு உறவுகளை நெருக்கமாக உருவாக்கியுள்ளது. மோதல்கள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகளில் ஊடகங்கள் வகிக்கிற பங்கையும், அரசியலையும் மக்கள் கவனிக்க தவறுகிறார்கள். போரில் அல்லது ஆக்கிரமிப்புகளில் மக்கள் எத்தகைய செய்திகளை அறிய வேண்டும், எப்படி அவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஊடக நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் போரின் போது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் மறைந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், தாக்குதல்களை சிஎன்என் தொலைக்காட்சி பலமுறை ‘தற்காப்பு நடவடிக்கை’ என்று விவரித்திருந்தது. வன்முறைகளில்லாத பாலஸ்தீன கிளர்ச்சிகளும், எதிர்ப்புகளும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தப்பட்டன.

பாலஸ்தீனர்களது குடியிருப்புகள், நிலங்களை சியோனிஸ்டுகளும் இஸ்ரேலிய ராணுவத்தினரும் அழிக்கிறார்கள். பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய விமானங்களும், பீரங்கிகளும், எந்திர துப்பாக்கிகளும் குண்டுகளை வீசுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்களின் தரப்பு நியாயம் ஊடகங்களில் வெளிவராதபடி இஸ்ரேல் பரப்புரைகளை நடத்துகிறது. 1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிப்பு செய்த போது இஸ்ரேலின் ஊடக பரப்புரை அமெரிக்காவில் துவக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுக்கிற ‘அமெரிக்க இஸ்ரேலி பொது விவகாரக் குழு’ இஸ்ரேலுக்கு ஆதரவை திரட்டுவதோடு நிறுத்தவில்லை. இஸ்ரேலின் மீது குற்றம் சுமத்துகிற செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது, நெருக்கடி கொடுப்பது ஆகியவற்றிலும் ஈடுபடுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான பலமான அமைப்பாக இது உருவெடுத்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் திரண்டு தங்களுக்கான கனவு தேசத்தை உருவாக்க இணைந்த ஒற்றுமையும், அரசியல் பலமும் உலகமெங்கும் விடுதலைக்காக போராடுகிற மக்களுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் யூதர்களது வரலாற்றிலிருந்து முரண்பாடுகளையும் அடையாளம் காண வேண்டும். அத்தகைய முரண்பாடுகள் மனிதகுல வளர்ச்சிக்கும், மனித விடுதலைக்கும் பெரிய தடைகளாக இருப்பவை. அத்தகைய முரண்பாடுகளோடு அனைத்து மக்களுக்குமான நிரந்தர விடுதலையை அடைய முடியாது. யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது இட்லரின் வதை முகாம்களில் சித்திரவதைக்குள்ளான மக்கள் உருவாக்கிய இஸ்ரேல் இன்று பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மறுத்து, மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுவது அத்தகையது. பாலஸ்தீனர்களின் விடுதலை, உரிமைகளை மறுப்பதால் மோதல் நீங்காமல் இன்றும் தொடர்கிறது. நீண்ட காலமாக தங்களது நிலத்திலிருந்து அகற்றப்பட்ட மக்கள் ஆதிக்க சக்தியாகி அடக்குமுறை ஆயுதத்தை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய முரண்பாடு. அதிகாரங்கள் நகர்த்தப்படுவதால் மட்டுமே மனித இனம் விடுதலையை அடைய முடியாது. அடிமையாக இருந்த மக்கள் அதிகாரங்களை கைப்பற்றும் போது மனித விடுதலையை மையப்படுத்தும் அரசியல் வடிவம் உருவாகாமல் போனால் அவர்களே ஆதிக்க சக்திகளாகி அடக்குமுறையாளர்கள் ஆகிறார்கள். யூதர்களின் வரலாறு உலகிற்கு இதை உணர்த்துகிறது.

தகவல் உதவி:
http://english.aljazeera.net/
http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/specialsession/9/FactFindingMission.htm
http://www.un.org
http://www.trumanlibrary.org/
http://www.palestinefacts.org/
http://www.jnf.org
http://www.mfa.gov.il

டிசம்பர் 2009, உன்னதம் இதழுக்காக எழுதப்பட்டது.
கீற்று இணையத் தளத்திலும் வாசிக்கலாம்.

Monday, November 16, 2009

நோபல் விருதில் வெளிப்படும் அரசியல்

2009ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் விருது "சர்வதேச உறவு மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை பலமடைய செய்யும் அசாதாரணமான முயற்சிகளுக்காக" அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் விருதை அறிவித்த தேர்வு குழு ‘மோதல்கள், அணு ஆயுதங்கள், தட்பவெட்பநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்விற்காக முயற்சிகளை உறுதிப்படுத்தும் விதமாக’ விருதை வழங்குவதாக தெரிவித்தது. சர்வதேச உறவை வலுப்படுத்துதல், பேச்சுவார்த்தைகளுகான புதிய சூழ்நிலையை உருவாக்குதல், ஐ.நா அமைப்புகளில் அமெரிக்காவின் கடப்பாடுகளை புதுப்பித்தல் ஆகிய காரணங்களுக்காக விருது வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. ஒபாமா பதவியேற்று 11 நாட்களுக்கு பிறகு நோபல் விருதுக்கான விண்ணப்ப நாள் முடிந்தது. விருதுக்கான முதல் தேர்வு பட்டியலை உருவாக்கும் பணியும் மார்ச் மாதத்தோடு முடிவடைந்தது. ஒபாமாவுக்கு பதவியேற்ற மிகக்குறுகிய காலத்தில் நோபல் விருதை வழங்குவது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அவசரமாக ஒபாமாவுக்கு விருது வழங்க காரணமென்ன?

ஜார்ஜ் புஸ் அதிபராக இருந்த போது ஈராக், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டு பேரழிவை உருவாக்கியது. உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக சதாம் உசேன் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அறிவித்தது அமெரிக்கா. அதற்காக ஐ.நாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவுல் ஆற்றிய உரை ஐ.நா மற்றும் உலக நாடுகளையே ஏமாற்றியது ஆகியவை தனிக்கதை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை தடுக்க ஐ.நா மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு வலுவில்லாமல் போனது. உலக ஒழுங்குமுறைகளை மதிக்காத ஜார்ஜ் புஸ் ஆட்சியில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல்கள் உலகமெங்கும் உருவாக துவங்கியது. அதே வேளையில் அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒற்றைமய உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவுகள் பங்குச்சந்தை சரிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. பல லட்சம் பேர் வேலையிழந்தனர். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஒருபக்கம் திணறிக்கொண்டிருந்த போது, அமெரிக்காவின் முதலாளித்துவ நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

உலக அரங்கில் அமெரிக்க பேரரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தும் முகமொன்று தேவைப்பட்ட நேரத்தில் பராக் ஒபாமா அதிபரானார். ஜார்ஜ் புஸ் ஆட்சி ஒழிந்து போகும் நாட்களை எதிர்பார்த்த மக்களுக்கு ஒபாமாவின் பேச்சுக்கள் அமெரிக்கா மாறுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் மகுடமாக பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பதால் அடிமைத்தனங்களும், அடக்குமுறைகளும் ஒழிந்து போகுமென்ற நம்பிக்கை உலகமெங்கும் வேகமாக பரவியது. ஒபாமாவின் பேச்சுக்களை கடந்து இராணுவ, வெளியுறவு கொள்கையில் பெரிதாக எந்த மாற்றங்களும் இதுவரையில் நிகழவில்லை. உலகமெங்கும் அமெரிக்கா புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை தொடர்கிறது. இக்கட்டுரை எழுதப்படும் நேரம் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 40,000 அமெரிக்க படையினரை அனுப்ப ஒபாமா திட்டமிடும் செய்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியமர்த்தலை நிறுத்துவதற்கு பதிலாக ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுக்கு சார்பாக நிற்கிறது. இஸ்ரேல் மீதான நடவடிக்கைகளிலிருந்து ஐ.நாவில் பாதுகாப்பு கவசம் வழங்குவதையும் தொடர்கிறது. வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது மே 10 வரையில் ஒபாமா மௌனமாகவே இருந்தார். இந்த நிலையில் ஒபாமா நிர்வாகம் எந்த அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கிறது?

"அணு ஆயுதங்களில்லாத உலகை அமெரிக்கா விரும்புகிறது” என்ற செய்தியை ஏப்பிரல் 3, 2009ல் ஒபாமா தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒபாமாவும் ரசிய அதிபர் மெட்வெதெவ் ஜூலை 6. 2009ல் அணு ஆயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி 2012ம் ஆண்டிற்குள் இரு நாடுகளும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க ஒப்புக்கொண்டன. இதுவொன்றும் அசாதாரணமான முடிவாக பார்க்க முடியாது. 1991ல் ஜார்ஜ் புஸ் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான முடிவை எடுத்தது. ஆனால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கலந்த ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அதனால் லூகேமியா என்கிற புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிற ஈராக்கிய குழந்தைகளின் எண்ணிக்கை இன்று வரையில் அதிகரித்து வருகிறது. உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் ஒழிந்தால் உலகில் சமாதானமும், சகவாழ்வும் உருவாகுமென்பது நாகரீகமான ஒரு கற்பனை மட்டுமே. பூமி வெப்பமாதல், மூன்றாம் உலக நாடுகளில் மோதல்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பவை பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளித்துவ சுரண்டல்கள். அரசுகளின் துணையுடன் மக்களின் நிலங்களை அபகரித்து இயற்கை வளங்கள், தாது பொருட்கள் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதால் மோதல்களும், வறுமையும், வேலையிழப்புகளும் அதிகமாகின்றன. அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கைகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான சந்தைப் பொருளாதார (free market economy) சுரண்டலுக்கு பாதுகாவலாக இருக்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய இலட்சியத்தை அடைவதில் ஜார்ஜ் புஸ், ஒபாமா இருவருக்குள்ளும் மாறுபட்ட கருத்துக்களில்லை. அதை அடைவதற்கான வழிகளில் ஜார்ஜ் புஸ் ஆக்கிரமிப்பு போர்களை நேரடியாக பயன்படுத்தி அமெரிக்காவின் ‘உலக இரட்சகன்’ பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ஒபாமா சமாதான முகமூடியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அணு ஆயுதங்களை ஒழிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதுமட்டுமே உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கிவிடாது.

இவ்வருடம் நோபல் விருதுக்கான பட்டியலில் முன்னணியில் இருந்தவர்கள் இருவர். ஆப்கானிஸ்தானை சார்ந்த மருத்துவரும், மனித உரிமை ஆணையத்தின் தலைவியுமான மருத்துவர் சிமா சமர். அவர்களில் சமாதானத்திற்கான நோபல் விருதிற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் கொலம்பியா நாட்டின் செனட்டரும், வழக்கறிஞரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான பைடட் கொர்டொபா ருயிஸ் என்னும் 54 வயதான பெண். கொலம்பியா நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியியலுக்காக போராடுகிற அவர் பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகளால் பெரிதும் ஆதரிக்கப்படுபவர். கொலம்பியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சமாதானத்திற்கான குழுவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிற குறிப்பிட்ட சிலரால் கொலம்பியா ஆளப்படுகிறது. விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆட்சியாளர்களின் திட்டங்களாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து கொலம்பியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க போராடுவதாக அறிவித்து 1966 முதல் பார்க் என்கிற கொலம்பியா புரட்சிகர இராணுவப் படை (Revolutionary Armed Forces of Colombia - FARC) ஆயுதப் போராட்ட்த்தை நடத்தி வருகிறது. சுமார் 18 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்களை கொண்டு அதிநவீன ஆயுதங்களோடு இயங்குகிறார்கள். சுமார் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் பார்க் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. 1997 முதல் பார்க் கொரில்லாக்களை அயல்நாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆட்களை கடத்தி சிறை வைப்பது, குண்டுவெடிப்புகள் பார்க் கொரில்லாக்களின் வழிமுறைகள். கடத்தப்பட்டவர்களில் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் பல அயல்நாட்டினரும் உண்டு. கடத்தப்பட்டவர்கள் பல ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் அடர்ந்த காடுகளில் சிறை வைக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

பார்க் அமைப்பை அழிப்பதற்காக கொலம்பிய அரசு 1968 முதல் இராணுவத்துக்கு உதவுவதற்காக ஆயுதக்குழுக்களை உருவாக்கியது. இராணுவ புலனாய்விற்காக ஆயுதக்குழுக்களை பயன்படுத்த 1990ல் அமெரிக்காவின் சிஐஏ, இராணுவம் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கியது. இராணுவத்துக்கு புலனாய்வு தகவல்களை பெறுவதற்காக தனிநபர்களுக்கும், மாபியா கும்பல்களுக்கும் ஆயுதங்களை வழங்கிய பிறகு கொலம்பியாவில் ஆயுத வன்முறை பரவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அரசின் படைகளோடு இணைந்து செயல்பட்ட ஆயுதக்குழுக்கள் ஆட்களை கடத்துவது மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டனர்.

கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதக்குழுவினர் விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாரபட்சமில்லாது படுகொலை செய்தார்கள். உதாரணமாக மே 2003ல் குயாஹிபோ பழங்குடி மக்கள் வாழும் பெற்றொயெஸ் என்னும் கிராமத்தில் புகுந்த ஆயுதக்குழு ஒன்று தாக்குதலை நடத்தியது. 11,12 மற்றும்15 வயதான மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். 16 வயது நிரம்பிய கற்பிணி சிறுமி ஒமைரா பெர்னான்டெசை பாலியல் பலாத்காரம் செய்து அவரது வயிற்றை கிழித்து சிசுவை கத்தியால் வெட்டி படுகொலை நிகழ்த்தி ஆற்றில் வீசினார்கள். ஆண்கள் பலர் கொல்லப்பட்டனர். கொலம்பிய ராணுவத்தின் 18வது படை பிரிவினரும் ஆயுதக்குழுவோடு சேர்ந்து படுகொலையை நிகழ்த்தினார்கள். இதே போன்று பலமுறை கிராமங்களில் கொடூரமான முறையில் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கொலம்பிய ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன. வாழைப்பழங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்கிற அமெரிக்க நிறுவனமான சிக்குயிற்றா 1997 முதல் 2004 வரையில் 17 லட்சம் அமெரிக்க டாலர்களை ஆயுதக்குழுக்களுக்கு வழங்கியது. தொழிற்சங்கவாதிகளுக்கு மிகவும் ஆபத்தான நாடு கொலம்பியா. 15 வருடங்களுக்குள் சுமார் 4000 தொழிற்சங்க தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கொலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுதக்குழுக்கள் தொடர்புள்ளது. குளிர்பானம் மற்றும் தண்ணீர் விற்பனையில் வளங்களையும், உழைப்பையும் கொள்ளையடிக்கிற கொக்கோ கோலா கொலம்பியாவில் தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்வதற்காக ஆயுதக்குழுக்களை கூலிப்படையாக பயன்படுத்தியது.

நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பைடட் கொர்டொபா ருயிஸ் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் மோசமான கொள்கைகளை எதிர்த்து வருபவர். அதனால் 1999 ஆண்டில் இருமுறை அரசிற்கு ஆதரவான ஆயுதக்குழு அவரை கடத்தியது. அவரை கொலை செய்ய இருமுறை தாக்குதல் நடந்தது. அவற்றிலிருந்து தப்பி கனடா நாட்டில் சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். கொலம்பியாவிற்கு திரும்பிய அவர் 2002 தேர்தலில் மீண்டும் செனட்டராக தேர்வானார். பெண்கள், ஓரின சேர்க்கையினர், திருநங்கைகள், ஆப்ரோ கொலம்பியன் சமூக மக்கள் ஆகியவர்களது உரிமைகளை வலியுறுத்தியும், குடும்ப வன்முறை, ஊழல் ஆகியவற்றை எதிர்த்தும் அவரது பணி அமைந்தது. கொலம்பியன் லத்தீன் அமெரிக்க பெண்கள் அமைப்பில் முக்கிய பங்காற்றுபவர். அவரது பங்கேற்பு வழியாக பாலியல் மற்றும் மகப்பேறு சுகாதாரத்திற்கான அரச கொள்கைகள் உருவாக்கப்பட்டன. 1995ம் ஆண்டு பெண்கள் உரிமையை ஆராய்வதற்காக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்ல் நடந்த உலக மாநாட்டில் கலந்துகொண்டு அதனடிப்படையில் செயல்படுத்த உழைத்திருக்கிறார். அவரது முயற்சியால் தாய்மார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான வரைவு சட்டம் உருவானது. குடும்ப பாதுகாப்பு சட்டம், பெண்களுக்கு சமவுரிமை வழங்கும் சட்டம், குடும்ப வன்முறை தண்டனை சட்டம், பாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் திருத்தச்சட்டம், ஆப்பிரிக்க இன மக்களுக்கு ஆட்சிமன்றத்தில் சிறப்பு இடம் வழங்கல் ஆகிய முக்கிய விசயங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கொர்டொபா அமைதி வழியில் கொலம்பியாவின் மோதல்களையும், வன்முறையையும் முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சமாதானத்திற்கான கொலம்பியர்கள் என்னும் அமைப்பின் தலைமையை ஏற்றிருக்கும் அவர் 2007ம் ஆண்டு முதல் 16 பணயக் கைதிகளை பார்க் கொரில்லாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டார். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள். வெனிசுவேலாவின் அதிபர் ஹூகோ சாவேசும் அவரோடு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காக சந்தித்த போது எடுத்த நிழற்படங்களை வைத்து கொர்டொபா மீது பார்க் கொரில்லாக்களுக்கு சாதகமானவர் என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. கொர்டொபாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஆலன் யாரா, ‘நான் கடத்தப்பட்ட நேரம் கடுமையாக மன அழுத்தம் வந்தது. காரணம் விடுதலை பற்றி சிந்திக்க எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை,’ ‘ஆனால் 2008ல் செனட்டர் கொர்டொபா நான் உட்பட மற்றவர்களின் விடுதலைக்கு முயற்சிப்பது வானொலியில் கேட்ட நேரம் கொர்டொபா எனக்கு விடுதலை தருகிற தேவதையானார்,’ என்கிறார்.

சுமார் 700 பணயக் கைதிகளை பார்க் அமைப்பு பிடித்து வைத்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்பதற்காக கைது செய்யப்பட்ட கொரில்லாக்களை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் கொர்டொபா ஈடுபடுகிறார். ஆனால் கொலம்பியாவின் அதிபர் ஆல்வரோ உரைப் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார். பார்க் அமைப்பிடம் சிக்கியுள்ளவர்கள், விவசாயிகள், பழங்குடியினர் கடுமையான ஆபத்தில் சிக்க நேரிடும் என்பதால் சமாதான பேச்சுக்கள் மூலம் மோதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதற்காக மீண்டும் பார்க் அமைப்போடு பேச்சு நடத்த செல்ல தயாரென்கிறார் கொர்டொபா. பராக் ஒபாமா அரசு கொலம்பியாவில் ராணுவத்திற்கு நிதியுதவிகளை செய்கிறது. இவ்வருடம் கொலம்பியாவிற்கு வழங்கப்படும் நிதியில் 57% ராணுவத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் ராணுவ தாக்குதல்களும், வன்முறையும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள், உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட காலமாக கொள்ளையிடுகின்றன. அவற்றிற்கு சாதகமாக பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்குவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பல நாடுகளின் பணம் செயலிழந்து அமெரிக்க டாலர் புழக்கத்திலிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்பு சுரண்டலுக்கு சாதகமாக வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கை முந்தைய ஜார்ஜ் புஸ் அரசினால் உருவாக்கப்பட்டது. அதன்படி சுதந்திர பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து எந்த உரிமைகளையும் மதிக்காத ஏற்றுமதி சார்ந்த வர்த்தக உற்பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவும் அத்தகைய வர்த்தகத்தில் பங்கேற்கிறது.

‘அமெரிக்காவின் ‘கொலம்பிய திட்டம்’ லத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக கொலம்பியாவிற்குள் அமெரிக்காவிற்கு சாதகமானது,’ “தான் ஊக்கப்படுத்துவதாக சொல்லுகிற சனநாயக பாதுகாப்பை தடுக்கிற சுவராக கொலம்பியாவில் அமெரிக்கா செயல்பட விரும்புகிறது” என்கிறார் கொர்டொபா. ‘கடந்த இரு கொலம்பிய அரசுகளும் முந்தைய அரசுகளை விடவும் அமெரிக்க அரசு மற்றும் உலக முதலீட்டாளர்களின் பொம்மையாக செயல்படுகிறது’ என்று சாடுகிற அவர் ‘பெருகிவருகிற வேலையில்லா திண்டாட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மையப் பிரச்சனையாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் ஒவ்வொரு நாளும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அங்கே சமூக நீதியில்லை. அது தான் பிரச்சனை,’ என்கிறார் தீர்க்கமாக.

மேற்குலக நாடுகள் கூட்டாக கட்டியெழுப்புகிற முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளையும், ராணுவ ஆதிக்க கொள்கைகளையும் எதிர்க்கிறவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆதிக்கவர்க்கத்தினரின் விருதுகள் தங்களது கொள்கைகளுக்கு சாதகமானவர்களுக்கே வழங்கப்படும். நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்த கொர்டொபா, ‘சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டும், சமாதானம் மற்றும் நீதிக்காக போராடுவதாலும் பாலியல் பலாத்காரம், கொலை, படுகொலை, காணாமல் போகவைத்தல், சித்திரவதை, இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு ஆளான கொலம்பிய மக்களின் துயரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சண்டையில்லாததால் மட்டும் சமாதானம் ஏற்படுமென்று என்னால் நினைக்க முடியவில்லை. சமாதானம் பல கோடி மக்களின் வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் அடிமைத்தன சூழல்களில் மாற்றம் ஏற்படுத்தாது. இந்த சமாதானம் செல்வம், வளங்கள், வாய்ப்புகள், அங்கீகாரம், இணைத்துக்கொள்ளல் ஆகியவற்றை கணக்கிலெடுக்கவில்லை; வன்முறை, அதிகாரம் மற்றும் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல், லஞ்சம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் இயற்கையை அலட்சியம் செய்வதையும் நிறுத்தப்போவதில்லை. தண்டனையிலிருந்து விலக்கு, ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஏழைகளிடமிருந்து செல்வத்தை அபகரிக்கும் ஆதிக்கம் நிறைந்தவர்களையும் இந்த சமாதானம் ஒழிக்கப்போவதில்லை,’ என்கிறார். வேற்றுமைகள் மற்றவர்களை புறக்கணிக்கவோ, ஒழிக்கவோ பயன்படாத போது மட்டுமே சமாதானம் சாத்தியப்படுமென்கிறார் அவர். ‘எந்த மாறுபாடுமில்லாது அனைவரின் மனித உரிமைகளையும் மதிக்கும் போதும், அவற்றை குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, தரமான குடும்ப கலாச்சாரம், வன்முறையற்ற குழந்தைப் பருவம் மற்றும் இளவயதினருக்கு தரமான வேலைக்கான வாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் போது மட்டுமே சமாதானம் சாத்தியம்,’ என்கிறார் கொர்டொபா. அனைத்து மனிதர்களும் நிறம், பாலினம், மதம், நாடு, பாலியல் வாழ்க்கைமுறை அல்லது பொருளாதார நிலை போன்ற பாகுபாடில்லாமல் மதிப்பும் அங்கீகாரமும் பெறும் போது சமாதானம் மலரும் என்கிறார் அழுத்தமாக. கொர்டொபாவின் சமாதானம் மீதான சிந்தனை மிக ஆழமானவை. அவை அனைத்து வகை ஒடுக்குதல்கள், புறக்கணிப்புகள், ஆதிக்கங்களுக்கு மாற்றாக முழு மனித விடுதலையை இலட்சியமாக கொண்டிருக்கின்றன.

மனித விடுதலைக்காக உழைக்க உறுதிபூண்டுள்ள அவர் ஒபாமாவிற்கு அழுத்தமான செய்திகளையும் விடுக்கிறார். ‘ஒபாமாவின் பதவியேற்பு விழா பேச்சில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்ற உலகமெங்கும் அமெரிக்காவின் சமாதான கொள்கையை உருவாக்க ஒபாமாவிற்கு விருது கிடைத்திருப்பது அரசியல் அடிப்படையில் மிக முக்கியமானது. அந்த விருதானது நம்பிக்கையின் ஒபாமாவை குறிப்பது, ராணுவ தளங்களின் ஒபாமாவை அல்ல,’ என்கிறார். கொலம்பியாவில் அமெரிக்காவின் புதிய ராணுவ தளங்களை உருவாக்கும் திட்டத்தை ஒபாமா மீளாய்வு செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, ‘அப்படி தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல, உலகமெங்கும் சமாதானத்தை உருவாக்க ஒபாமா தயாரிக்கிற திட்டத்தில் கொலம்பியாவின் ஆயுதமோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதனால் கொலம்பியாவில் மட்டுமல்ல லத்தீன் அமெரிக்கா முழுவதும் சமாதானத்தை உருவாக்கவும் ஹொண்டூராசில் சனநாயகத்தை மீட்கவும், உதாரணமாக, இந்த கண்டத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அவருக்கு இந்த பரிசு அவசியமானது,’ என்கிறார் கொர்டொபா.

உதவிய இணையத்தளங்கள்

http://www.piedadcordoba.net/
http://www.globalpost.com/
http://colombiajournal.org/
http://nobelprize.org/

நவம்பர் மாத உன்னதம் இதழில் வெளிவந்தது. இனியொரு இணையத்தளத்தில் மறுபதிவு செய்யப்பட்டது.

Thursday, August 06, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - 'இந்தியா டுடே' விமர்சனம்


திரை கடலோடியும் துயரம் தேடு நூலைப் பற்றி 'இந்தியா டுடே' ஏட்டில் முனைவர்.பெர்னாட் டி சாமி எழுதிய விமர்சனம் பின்வருமாறு:

நவயுக அடிமைகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்கள் பற்றிய பதிவு

இன்றைய முக்கிய பிரச்சனையான தொழிலாளர்கள் புலம்பெயர்வை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். வேலைக்காக பலரும் அயல்நாடுகளுக்கு 'புலம்பெயர்வது ஏன்?' என்ற கேள்விக்கு, அவர்களது தாய்நாடுகளில் நிலவும் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஆசிரியர் மையப்படுத்திருக்கிறார். ஆனால் அவர் வெளிநாடுகளின் கவர்ந்து இழுக்கும் காரணங்களைப் (Pull Factors) பற்றி சொல்லவில்லை. புலம்பெயர்வில் நடக்கும் அனைத்து வகை கடத்தல்களையும் விவரித்துள்ளார். கட்டாய வேலைக்காக அதிகம் கடத்தப்படும் தொழிலாளர்களின் நிலை பற்றியும் அறிவுசார்ந்த வேலை மற்றும் உடல் உழைப்பு இவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றியும் விரிவாக பேசியிருக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத, குறைந்த ஊதியம் கொண்ட திறனற்ற வேலை செய்பவர்களாக வீட்டு வேலைத் தொழிலாளர்களை வெளிநாடுகள் (செல்லக்) கருதும் பொழுது, இன்றைக்கு அவர்களிடையே கண்டங்களைக் கடந்த தொடர்பு உருவாகி, பல நாடுகளில் வீட்டு வேலைப் பெண்கள் போராடி உரிமைகளைப் பெற்றுள்ளனர் (ஹாங்காங்). திறன் அற்ற, குறைந்த திறன் பெற்ற, கீழ்த்தரமான வேலைகளுக்காக ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் கடத்தப்படுவது நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கிய உண்மை.

இப்பிரச்சனைக்கான சட்டங்கள், தீர்வுகள் பற்றி குறிப்பிடும் போது, ஐ.நா.சபை ILO Convention பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இயற்றப்படும் சட்டங்களே புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் போதுமானவை. வெளிநாட்டு தூதரகங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான அதிகாரிகள் இருந்தால் தான் அவர்களின் பாதுகாப்பும், உரிமைகளும் வென்றெடுக்கப்படும். இந்த பிரச்சனையின் உள் பரிணாமத்தைப் புரிந்து கொள்ள ஐ.நா சார்பு அமைப்புகளின் வாதங்களை தாண்டிய புரிதல் தேவை. அதேநேரம் ஆசிரியருடைய அனுபவம் இந்நூலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
முனைவர். பெர்னாட் டி சாமி
ஆகஸ்டு 12, 2009 இந்தியா டுடே நாளிதழில் வெளிவந்தது. விமர்சகர் சென்னை லயோலா கல்லூரியில் பணிபுரிகிறார்.

Wednesday, July 29, 2009

நூல் அறிமுகம் - "ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்" ஆழி பதிப்பக வெளியீடு

வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.

ஈழம்
இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
வெளியீடு: ஆழி பதிப்பகம்
பக்கங்கள் : 176

இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.


நூல் கிடைக்கும் இடங்கள்:
ஆழி பதிப்பகம்
12, பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை- 600024
தமிழ்நாடு
தொலைபேசி: 91-44-4358 7585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com

தமிழக நகரங்களின் முன்னணி புத்தகக் கடைகளில் இந்நூலை சில நாட்கள் முதல் வாங்கலாம். இந்நூல் ஜூலை 31 முதல் ஆகஸ்டு 11 வரையில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆழி பதிப்பக கடையிலும் கிடைக்கும்.

Monday, June 01, 2009

ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!


வன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.

அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே பாராட்டும் தீர்மானத்தை கொண்டுவந்தது. இதில் ராணுவ வெற்றி, ராஜபக்சேயின் திறமை, வாக்குறுதிகள் ஆகிய சுயபுகழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. சிறீ லங்கா அரசு நடத்துகிற ‘வதை முகாம்களில்’ ராணுவத்தின் காவலில் அச்சுறுத்தலில் இருக்கிற சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் சுதந்திரமாக வாழும் உரிமைகளையும், பேச்சுரிமையையும், பாதுகாப்பையும் இந்த தீர்மானம் குறிப்பிடவில்லை. போரினால் உள்நாட்டில் இடம்பெயரும் மக்களுக்கான முகாம்கள் பற்றி ஐ.நா ஏதிலிகள் ஆணையாளர் அலுவலகம் வரையறுத்துள்ள நடைமுறைகளையும் சிறீ லங்கா கடைபிடிக்கவுமில்லை.

முட்கம்பி வேலியால் அடைத்துள்ள முகாம்களில், ராணுவத்தின் எந்திர துப்பாக்கிகளின் காவலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்தவெளி சிறையில் தற்காலிக கூடாரங்களில் அடைத்து வைத்திருக்கிறது. செஞ்சிலுவை சங்கம், ஐ.நா அமைப்புகளை அனுமதிக்கவுமில்லை. 9,100 போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாக சிறீ லங்கா படைகளின் பேச்சாளர் உதய நாணயக்கரா தெரிவித்த தகவல்கள் வந்துள்ளன. கோத்தபாய ராஜபக்சே 5 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரணடைந்துள்ளனர் என்று தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அப்படியானால் அரசிடம் சரணடைந்ததாக சொல்லுகிற மீதம் 4,100 பேர் என்ன ஆனார்கள்? சந்தேகத்தின் பேரில் இளவயதினர்களை கடத்தி, சித்திரவதை, ரகசிய விசாரணை நடத்தி காணாமல் போக செய்கிறது சிறீ லங்கா. போராளிகளாக சந்தேகப்படுபவர்களை ராணுவம் கொண்டு சென்ற பிறகு அவர்களது நிலைமை பற்றி எவருக்கும் தகவல்கள் இல்லை. ஐ.நா அமைப்புகளுக்கும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.

வன்னியில் இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்கா படையினரின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு உயிரிழந்திருக்கின்றனர் என்று கணிப்பிடுகிறது டைம்ஸ் நாளிதழ். “மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் சில இந்த சிறப்பு விவாதத்தை பலவந்தமாக திணித்துள்ளன. ஆனால், இது தேவையற்றது. சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம்,” என சிறீ லங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவு திரட்டின. சிறீ லங்காவின் தீர்மானம் 30 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. அப்பாவி மக்கள் மீது ராணுவ தாக்குதல்களை நடத்துவது உள்நாட்டு பிரச்சனையல்ல என்பதை இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். ஐ.நா மனித உரிமை சபை கூட்டத்தில் சிறீ லங்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. செஞ்சிலுவை சங்கத்தை முகாம்களில் அனுமதித்தல், இவ்வருட இறுதிக்குள் பெரும்பான்மை மக்களை மீளக் குடியமர்த்தல், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச தரத்துடன் சிறீ லங்கா விசாரணை செய்தல் ஆகிய அம்சங்கள் அத்தீர்மானத்தில் இருந்தன. சுவிட்சர்லாந்தின் தீர்மானமும் போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க வலுவான கோரிக்கையை வைக்கவில்லை. மாறாக மனித உரிமை மீறல் குற்றங்களை சிறீலங்கா சர்வதேச தரத்தில் விசாரணை செய்ய வலியுறுத்தியது.

20 ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்து, தடையங்களை அழித்த சிறீ லங்காவின் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் விசாரிக்க மனித உரிமை சபை தீர்மானம் எடுக்காததற்கு அங்கு நடக்கிற அரசியல் தான் பிரதான காரணம். அந்த அரசியலை சிறீலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும் சாதகமாக பயன்படுத்தியது.

முன்னர் இருந்த ‘மனித உரிமை ஆணைக்குழு’ மனித உரிமை சம்பந்தமாக முறையாக செயல்படவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களில் அதிகமாக அரசியல்மயமானதால் முக்கிய மனித உரிமை பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அதனால், முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் 2005ல் மனித உரிமை ஆணைக்குழுவை மாற்றி அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அடிப்படையில் 2006ல் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்தில் ‘மனித உரிமை சபை’ உருவாக்கப்பட்டது. ஐ.நா பொதுச்சபையில் தேர்ந்தெடுத்த 47 நாடுகள் 3 ஆண்டு காலம் உறுப்பினராக மனித உரிமை சபையில் இடம்பெறுகின்றன. ஆசிய நாடுகளுக்கு 13, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு 13, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 8, மேற்கு ஐரோப்பா மற்றும் இதர குழுவிற்கு 7 எண்ணிக்கையில் உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் காரணமாக 2008 தேர்தலில் சிறீ லங்காவை மனித உரிமை சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை.

மனித உரிமை சபையின் முதல் சிறப்புக் கூட்டம் அரபு நாடுகளின் அழைப்பினால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல்கள் சம்பந்தமாக ஜூலை 5, 2006ல் கூடியது. அக்கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளும், கியூபாவும் இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் வாக்களித்தன. இஸ்லாமிய நாடுகளும், கியூபா, இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் சிறீ லங்கா உட்பட அணிசேரா நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றின. இரண்டாவது சிறப்புக் கூட்டம் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை விவாதித்து ஆகஸ்டு 11, 2006ல் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போதும் தீர்மானத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் வாக்களித்தன. மியான்மர், சூடான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளின் பிரச்சனை மற்றும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஆகிய பிரச்சனைகளை விவாதித்த சிறப்புக் கூட்டங்களில் மட்டுமே மனித உரிமை சபை ஒழுங்காக செயலாற்றின. மற்ற எல்லா சிறப்புக் கூட்டங்களிலும் இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகள் மற்றும் அணிசேரா நாடுகளின் பலமான அணி உருவானது. உறுப்பினராக இல்லாமல் பார்வையாளராக மட்டுமே இருந்த அமெரிக்கா, மனித உரிமை சபையில் நடக்கிற அரசியலை காரணமாக வைத்து 2008ல் ச்ச்மனித உரிமை சபையியிலிருந்து வெளியேறியது. ஜார்ஜ் புஸ்ஸின் இந்த நடவடிக்கை ஒரு வகையில் கியூபா, சீனா, இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பலமாக ஆகிவிட்டது. சிறீ லங்காவும் அந்த அணியில் உள்ளது. சிறீ லங்காவின் தீர்மானத்தை ஆதரித்த 30 நாடுகளும் இந்த அணியில் உள்ளவர்கள்.

மனித உரிமை அமைப்புகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் சிறீ லங்காவின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை குற்றங்களை விசாரிக்க சர்வதேச குழுவை ஏற்படுத்த வலியுறுத்தின. சிறீ லங்காவின் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன்பு ஜெர்மனி தீர்மானத்தில் பல திருத்தங்களை முன்வைத்தது. ‘இறுதி கட்டத்தில் செய்யும் ஜெர்மனியின் திருத்தங்கள் சிறீ லங்காவின் தீர்மானத்தை முற்றாக மாற்றிவிடும் என்பதால் ஏற்கக்கூடாது’ என உடனடியாக கியூபா மறுப்பு தெரிவித்தது. வாக்கெடுப்பில் அந்த மறுப்பு ஏற்கப்பட்டது. அதற்கு பிறகு சிறீ லங்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மேற்குலக நாடுகளும், அவற்றின் ஆதரவு நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வக்களித்தன சில நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இறுதி நேரத்தில் ஜெர்மனி முன்வைத்த திருத்தங்களாவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் முகாம்களிலிருக்கும் வன்னி மக்களுக்கான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவற்றை கியூபா வழியாக தடுத்ததில் இந்தியாவின் மறைமுக பங்கு அதிகமாக உள்ளது.

ஏற்கனவே, மனித உரிமை சபையில் நடக்கிற அரசியலை உணர்ந்து பரக் ஒபாமாவின் நிர்வாகம் அமெரிக்கா உறுப்பினராக இணையும் முடிவு எடுத்துள்ளது அதனடிப்படையில் பெல்ஜியம், நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுடன் மனித உரிமை சபையில் ஜூன் முதல் உறுப்பினர்களாக இடம்பெறும். மனித உரிமை சபையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் மனம் சளைக்காது வதை முகாம்களிலுள்ள வன்னி மக்களின் உரிமைக்காகவும், உடனடி தேவைகளுக்காகவும் தமிழ்மக்கள் போராடியாக வேண்டும். வன்னி மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மையமாக இருந்து பாதுகாத்தவர்கள். அனைத்தையும் அதற்காக இழந்தவர்கள். அவர்களை உடனடி தேவைகளுக்கான உதவிகளை தேடும் நிலைக்கு சிறீ லங்கா அரசு ஆளாக்கியிருக்கிறது. அந்த தேவைகளை நிறைவேற்றும் வேசத்தை எடுக்கவும், அதன்மூலம் தமிழர்களின் உரிமைக்கான குரலை அடக்கவும் சிறீலங்கா அரசு தயாராக இருக்கிறது. வன்னி மக்கள் மீது பல்முனை குண்டு தாக்குதல்களை சிறீ லங்கா அரசு நடத்தி, வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தடுத்து பேரவலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மீது குண்டுகள் வீசுவதை சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஜெனிவா பிரகடனங்களும் குற்றமாக கருதுகின்றன. சிறீ லங்கா அரசுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த குற்றங்களை செய்திருக்கிறது. ஆயுதங்களில்லாமல், வெள்ளைக் கொடிகளுடன் ராணுவத்திடம் சரணடைந்த பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட போராளி தலைவர்களை சர்வதேச போர் விதிமுறைகளை மீறி கொலைசெய்திருக்கிறது. மகிந்த ராஜபக்சே அரசின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் சர்வதேச அளவில் விசாரணைக்கு உட்படுத்தும் கடமையும், பொறுப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.

நீதிக்காகவும், விடுதலைக்காகவும் போராடும் எந்த போராட்டங்களும் எளிதானதாக இருந்ததில்லை. உதாரணமாக, 1994 ஏப்பிரல் முதல் ஜீலை வரையில் ருவாண்டாவில் ஹூட்டு இன மக்களுக்கும், டுட்சி இன மக்களுக்கும் நடந்த கலவரங்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டுட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகள் நடந்தபோது ருவாண்டாவிலிருந்த ஐ.நாவின் படையை விலக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானம் எடுத்தது. அப்படுகொலைகளை விசாரிக்க ஐ.நா பாதுகாப்புசபை 1994ல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதுவரையில் 21 விசாரணைகள் முடிந்து 29 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இன்னும் பல வழக்குகள் தொடர்கின்றன.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்து மூன்று மாதங்களில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கையின் தாக்குதல்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புச் சபையில் அலுவலக ரீதியான விவாதங்கள் உருவாகாமல் நிரந்தர உறுப்பு நாடுகளான சீன, ரஸ்யா எதிர்த்தன. ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்க மேற்குலக நாடுகளும் காத்திரமாக முயற்சிக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அரசியல் சக்திகளை, அமைப்புகளை, நாடுகளை அடையாளம் காணவும், உறவுகளை வளர்க்கவும் தேவையுள்ளது. தற்போது தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றங்களை உலகம் பேசத் துவங்கியிருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சர்வதேச சட்டங்களுக்குட்பட்ட, சர்வதேச தரத்துடன் கூடிய சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தினார். கூட்டம் முடிந்த பிறகும் வலியுறுத்தி வருகிறார். வன்னியில் தமிழர்கள் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் ‘அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். தற்போது சிறீலங்காவின் தீர்மானம் நிறைவேறியதால் மனித உரிமை சபையில் முயற்சி எடுப்பதை நிறுத்தலாகாது.

தற்போது மேற்குலக நாடுகளின் அறிக்கைகளில் தமிழர்கள் பிரச்சனை பற்றிய அணுகுமுறை மாற்றத்தை காணமுடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் கடந்த ஆறு மாதங்களாக நடத்தும் போராட்டங்கள், அரசியல் முயற்சிகளின் பலனிது. அவை அரசியல் பலமாக செயலாக்கப்படவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் அரசியல் முயற்சிகளையும், நீதிக்கான போராட்டங்களையும் நம்பிக்கையற்றதாக மாற்றி தனது மனித உரிமை குற்றங்களிலிருந்து தப்பிக்க பார்க்கிறது மகிந்த ராஜபக்சே அரசு. வன்னியில் நடந்த பேரவலமும், இழப்புகளும், அழிவுகளும் ஏற்படுத்துகிற கவலையும், வேதனையும் புலம்பெயர் தமிழர்களின் நேர்மையான நீதிக்கான செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சிதைக்கக்கூடாது. வன்னியில் நடத்திய மனிதப் படுகொலைகளையும், போர் குற்றங்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவர போராடும் கடமையும், பலமும், திறமையும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்குண்டு. உலகின் வல்லரசுகள், பிராந்திய வல்லரசு, ஐ.நாவில் உறுப்பு நாடு என்ற அனைத்து பலத்தையும் வைத்து சிறீலங்கா சர்வதேச அரங்கில் எடுக்கிற அனைத்து நடவடிக்கைகளும் தமிழர்களின் சட்டப்பூர்வமான, அறப்போராட்டங்களால் எதிர்கொள்ள முடிந்தது பிரமிப்பிற்குரிய பலம். கவலைகளையும், வேதனைகளையும், கண்ணீரையும், வேறுபாடுகளையும், விமர்சனங்களையும் கழைந்து பலமிக்க மக்களாக நீதிக்காக ஒன்றுபட வேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் வன்னி மக்களுக்கான மனிதாபிமான கோரிக்கைகளை வைத்து சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவுக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள் கட்டுப்பாடற்ற வகையில் நேரடியாக உதவி செய்வதற்கு அனுமதி.
  • இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தமது சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதி.
  • மனித உரிமை மீறல் குற்றச் செயல்கள், போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தல்.
  • மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் தடையில்லாமல் தகவல்களை சேகரிக்க அனுமதி.
  • தமிழர் பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு மையங்களையும், சிங்கள குடியேற்றங்களையும் ஏற்படுத்தாது தடுத்தல்.
  • சுயாதீனமான சூழ்நிலையில் தமிழர்களின் விருப்பத்தை அறியாத அரசியல் தீர்வுகளையும் திணிக்காது இருத்தல்.
சடங்குகளையும், அழுகுரல்களையும் விடவும் நீதிக்கான செயல்களே வன்னியில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் செலுத்தும் அர்த்தமுள்ள வணக்கமாக இருக்க முடியும்.
_______________
4தமிழ்மீடியா இணையத் தளத்திற்காக எழுதப்பட்டது.
படம்: nicholsoncartoons

Sunday, May 31, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - உயிரோசை விமர்சனம்

அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம்தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. புலம் பெயரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் நவீன நாகரிகங்கள் செழித்துக் கொண்டிருக்கின்றன. அக்கரைப்பச்சை தேடிச் சென்றோரில் பலர், வாழ்வைத் தொலைத்துவிட்டார்கள்.

புலம்பெயரும்போது பயண ஒழுங்குமுறைகளில் சந்திக்கிற நெருக்கடிகள், குடிபெயர்வு நடைமுறைகளைக் கடந்து செல்ல பயணமுகவர்களின் சேவையைப் பயன்படுத்தும்போது ஆபத்தான மனிதக் கடத்தல் சூழலில் சிக்குவது, ஏமாற்றத்திற்குள்ளாகி ஆவணங்களில்லாமல் சிறைகளில் வாடுவது ஆகிய வேதனை மிக்க பகுதிகளை பலரது அனுபவங்களிலிருந்து விளக்கமாக இந்நூல் அலசுகிறது.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த அரசுகளும், தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், புலம்பெயரும் தொழிலாளர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மற்றும் சில ஆலோசனைகளை இந்நூலில் காணலாம்.

கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ.திருவள்ளுவர் இந்தக் கொடுமைகளும் துன்பங்களும் உழலும் உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். பல நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்த அவர், அந்த அனுபவங்களை நூல்வடிவில் தொகுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கான மூல காரணங்களையும், பிரச்சினையின் பல முகங்களையும் சித்தரிக்கும் திருவள்ளுவர், அதற்கான தீர்வுகளையும் முன்மொழிகிறார்.

உயிரோசை, இதழ்-37. May, 2009

Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - இறுதிப் பாகம்


அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் இருந்து வந்தது. 1990களின் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையில் துவங்கி ஜார்ஜ் புஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் ராணுவ ஒப்பந்தம் மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் வழியாக அமெரிக்காவின் நிலையான நண்பனாக இந்தியா மாறியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்குலக நாடுகளுக்கு ஆசியாவில் நிரந்தரமாக பலமுள்ள நட்பு சக்தியாக சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியம். பொருளாதார ரீதியாக இந்தியாவின் சந்தை, உற்பத்தி, குறைந்த ஊதியத்திற்கு உழைக்க காத்திருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனித வளம், இயற்கை வளங்கள் அனைத்தும் மேற்குலகிற்கு அனுகூலமானவை. சமாதான முயற்சியில் மூன்றாம் தரப்பாக செயல்பட்ட நோர்வே நாட்டின் முதலீடுகள் இந்தியாவில் (நிறுவனங்களின் பட்டியல் விபரங்கள்: http://www.norwayemb.org.in/business/busind/database.htm) உள்ளன. சிறீலங்காவுக்கு ஆயுதங்களை கொடுத்து தமிழ்மக்களது தாயகநிலம், அரசியல் உரிமைகள், போராளி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரான இந்தியாவின் திட்டத்திற்கும் அடிப்படை காரணம் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகள். உலகமயமாக்கல் பொருளாதாரச் சுரண்டல் பரஸ்பரம் புரிதலுடன் ஏகாதிபத்தியங்களும், பிராந்திய வல்லரசுகளும் தேசிய இனங்களையும், அரசியல் உரிமைப் போராட்டங்களையும் அழிக்க ‘பயங்கரவாத’ அரசியலையும், ‘மனிதாபிமான’ வேடத்தையும், ‘சமாதானப் பேச்சுக்களையும்’ பயன்படுத்துகிறது. ஈழம் இன்று நமக்கு தரும் பாடமிது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்கள் போராட்டங்கள் எழுச்சி பெற்ற பிறகு வேறுவழியில்லாமல் மேற்குலக நாடுகள் சிறீலங்கா மீதான கண்டனங்களை தெரிவிக்க துவங்கின. அவை செயலாக வடிவம் பெறவதும் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டப் பாதையிலிருக்கிறது. தமிழ்மக்களின் போராட்டம் சிறீலங்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வேளையில் இந்தியாவின் நயவஞ்சக நாடகங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் குரல்கள் நம்பியார் சகோதர்கள். விஜய் நம்பியாரின் இலங்கைக்கான முதல் பயணம் முடிந்த சில நாட்களில் சதீஸ் நம்பியாரின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளிவந்தது கவனிக்க வேண்டியது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முகம் நம்பியார் சகோதர்கள். வன்னியில் தமிழ்மக்கள் மீது பாரபட்சமில்லாது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் மகிந்தா ராஜபக்சே அரசு செய்திருக்கிறது. மகிந்தாவின் அரசுக்கு சகலவிதங்களிலும் உதவிய இந்தியாவின் அதிகாரிகள் எவரையும் இலங்கை விவகாரங்களில் ஈடுபடுத்துவது மனித உரிமைக்கு எதிரான குற்றங்களுக்கும், அநீதிக்கும் துணை போகும். இந்தியாவின் கைகளில் பல ஆயிரம் தமிழர்களை கொன்றொழித்து, ஈழத்தை கந்தகபூமியாக மாற்றிய இரத்தக்கறை படிந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கையும், அதிகாரவர்க்கத்தின் மனப்பாங்கும் மாறும் வரையில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுத் தர இந்தியா நேர்மையான பங்கு வகிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு நல்ல மூன்றாம் தரப்பு நாடாக கூட செயல்பட முடியாது. இந்தியாவின் பூகோள அரசியல் மட்டுமல்ல; சமூக, அரசியலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசியல்வாதிகளையும் ஈழத்தமிழர்கள் இனியும் நம்ப முடியுமா?

-முற்றும்-

குறிப்பு: இந்தியா, ஐ.நா, மேற்குலகம் தொடர்பான அதிகாரவர்க்கத்தின் பார்வையை கூர்மைப்படுத்துவதற்காக இந்த பதிவுகள். இந்திய முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனீயத்தின் பங்கை இக்கட்டுரை தொடவில்லை.

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்!-பாகம்4

சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் சமாதான முயற்சிகள் சம்பந்தமான விசயத்தில் நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. மனிதாபிமான பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து ராணுவத்தின் ‘உயர்பாதுகாப்பு வலையங்களை’ அப்புறப்படுத்துவது பற்றிய பரிந்துரைக்கு, உடன்பட வேண்டுமானால் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைதல் வேண்டுமென்று வரைவு அறிக்கையில் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு வந்ததும் இறுதி அறிக்கையில் ‘நீண்ட தூர ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பிற்குள் கட்டுப்படுத்த’ வேண்டுமென்று குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தின், அதிகாரிகளின் ஈடுபாடு தமிழர்கள் தரப்பில் சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்குமென்று தெரிந்தும் சமாதான முயற்சிகளின் போது சிறீலங்கா லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியாரை அழைக்க என்ன காரணம்?

சதீஸ் நம்பியார் ‘உயர் பாதுகாப்பு வலையம்’ பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் தாக்கி அழிக்கப்பட்டன. இதற்கு இந்தியா நேரடியான உதவிகளை செய்ததாக ரணிலும், ஐ.தே.கட்சியும் பின்னர் ஒப்புக்கொண்டன. இந்தியாவின் செய்மதிகள் சிறீலங்கா கடற் பரப்பை 2002 முதல் கண்காணிக்க துவங்கியிருந்தன என்பதற்கு புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்ட நிகழ்வுகள் உதாரணம். சதீஷ் நம்பியார் 'பாதுகாப்பு வலையங்களிலிருந்து சிறீலங்கா படைகள் வெளியேற, புலிகளின் ஆயுதங்களை கழைய வேண்டும்' என்று பரிந்துரைத்த அறிக்கை ஜனவரி 2003 இறுதியில் கசிந்தது. விடுதலைப்புலிகள் தங்களது எதிர்ப்பை ஆன்ரன் பாலசிங்கம் வழியாக பதிவு செய்தார்கள். தொடர்ந்து 2003 ஏப்பிரல் இறுதியில் சதீஷ் நம்பியார் 'புலிகளின் நீண்ட தூர ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பிற்குள் வைத்திருக்க வேண்டும்' என்ற பரிந்துரையுடன் இறுதி அறிக்கையை ரணில் விக்கிரமசிங்கே அரசிடம் சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்றத்தில் அந்த அறிக்கை பற்றிய கேள்விகளுக்கு 'நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ரகசியம்' என்று தெரிவித்தார் ரணில். விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகிய போது 'உயர் பாதுகாப்பு வலையங்கள்' பிரச்சனையும் முக்கியமானது.

சதீஸ் நம்பியார் ஈழப் போராட்டத்தில் சிறீலங்கா அரசுக்கு நேரடியாக ஆலோசனை வழங்க ஆரம்பித்த போது யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா ராணுவத் தளபதி. சிறீலங்கா ராணுவம் வன்னியில் தமிழ்மக்களை படுகொலை செய்த போது சரத் பொன்சேகாவை பாராட்டி சதீஸ் நம்பியார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது ரணில் விக்கிரமசிங்கே விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது பற்றியும் எழுதியிருக்கிறார்.

‘As someone who was briefly involved with the peace process in Sri Lanka in 2002-2003, I have already acknowledged the outstanding performance of the SLAF and the efforts of General Fonseka, a person I met on a number of occasions during my visits to Sri Lanka during 2002-2003 and developed great respect for, both as an individual and as a soldier. However, as a strategic analyst I would like to make the point that this military victory would not have been possible but for the bold initiatives of Prime Minister Ranil Wickremasinghe in 2002 in entering into a dialogue with the LTTE leadership under an umbrella provided by the Norwegians. The present dispensation in Colombo is unlikely to share with him the credit for what has been achieved today. But I have no doubt that when historians come to record the events of the day, Ranil will be lauded for having brought the LTTE leadership out of the jungle for talks in the exotic surroundings of Bangkok and Geneva. And, in the process, weakened the seemingly steely resolve of the cadres, leading in due course to a split in the movement. Karuna’s estrangement and the divorce of the LTTE cadres of the North-East and Eastern provinces from their fellow fighters in Jaffna and the Vanni have without doubt been a major factor in the success achieved by the SLAF.’
சமாதானப் பேச்சுக்கள், பேச்சுக்களின் போதான குழப்பங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது, புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது போன்ற எல்லாவற்றிலும் பின்னணியில் இந்தியா பங்கெடுத்தது. விடுதலைப்புலிகள் ‘சுயநிர்ணய உரிமையுடன் தமிழர் பகுதிகளுக்கான பிரதேச ஆட்சி’ ஒன்றுக்கு உடன்படும் நிலையில் இருந்தனர். அதற்கான சகிம்சைகள் செப்டெம்பர் 2002ல் வெளியான சூழலில் இலங்கை விவகாரத்தில் நுழைந்தவர் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார். லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் இந்தியா தமிழர்களுக்கு வழங்க இருக்கும் திட்டத்தை தனது பரிந்துரையாக முன்வைக்கிறார்.
The government of India would do well, together with international players like the US, UK and Japan among others, to ensure that the government of Sri Lanka is given full support, and provided all the assistance necessary to initiate appropriate political processes with the various Tamil groups in Sri Lanka to evolve a framework for devolution of power to the Tamil minority that takes into account the assurances given to the Tamils during the Norwegian sponsored peace process. In doing so it would no doubt be useful to replicate the arrangements that seem to have been arrived at with the Karuna faction in the Eastern and North Eastern provinces. Whatever the intricacies of that arrangement, it appears to have worked with a fair degree of success given the fact that elections have been conducted in those provinces and a representative local government is in place.[i]
கருணா குழுவை பயன்படுத்தி கிழக்குப் பகுதியில் வழங்கியது போன்ற தீர்வு ஒன்றை முன்வைக்கும் சதீஸ் நம்பியாரின் தம்பி விஜய் நம்பியார் எப்படி பாரபட்சமில்லாமல் செயல்படுவார்?

வன்னிப்படுகொலைகளை தடுத்து நிறுத்த மேற்குலக நாடுகள் தலையிடாமல் தடுக்கும் விதமாகவே இந்திய அதிகாரவர்க்கம் செயல்பட்டது. சிவசங்கர மேனன் அமெரிக்காவிற்கு பறந்ததும் அவ்வகை திட்டத்தின் ஒருபகுதி. துவக்கம் முதல் புலிகளின் ஆயுதங்கள், நிர்வாக கட்டமைப்பு, தலைமை ஆகியவற்றை குறிவைத்து இந்த படுகொலைகளுக்கு முழு அளவில் ஆதரவாக செயல்பட்டது இந்தியா. இந்தியாவை கடந்து தெற்காசியாவில் மேற்குலக நாடுகள் தலையிடுமா?

[i] Without the Tigers, Satish Nambiar Posted: Monday , Apr 27, 2009 at 0043 hrs IST http://www.indianexpress.com/news/without-the-tigers/451517/0

இக்கட்டுரையின் இறுதிப் பாகம் தொடர்கிறது...

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்3


‘ஆயுதங்களை ஒப்படைத்தல்’, ‘போர் இடைநிறுத்தம்’, வன்னியிலிருந்து மக்களை ‘பாதுகாப்பாக வெளியேற்றுவது’ ஆகிய வார்த்தைகள் புதுடில்லியிலிருந்து முதலில் பரப்பப்பட்டன. பெப்ருவரி 2009 பாராளுமன்ற துவக்க உரையில் இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை பற்றி குறிப்பிட்டார்.

அவரது உரையில் “We are concerned at the plight of civilians internally displaced in Sri Lanka on account of escalation of the military conflict. We continue to support a negotiated political settlement in Sri Lanka within the framework of an undivided Sri Lanka acceptable to all the communities, including the Tamil community. I would appeal to the Government of Sri Lanka and to the LTTE to return to the negotiating table. This can be achieved if, simultaneously, the Government of Sri Lanka suspends its military operations and the LTTE declares its willingness to lay down arms and to begin talks with the government.”(இந்திய குடியரசுத் தலைவர் உரை Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.1, Thursday, February 12, 2009/Magha 23, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/12/2009)

போரை நிறுத்த சிறீலங்கா அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்காத சம்பிரதாய நடைமுறைக்கானது இப்பேச்சு. ஆனால் போரை நிறுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை கைவிட முன்வரவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது இந்தியா. 18 பெப்ருவரி, 2009ல் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனவரி 27ல் தனது பயணத்தில் மகிந்தா ராஜபக்சேயிடம் ‘உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த ‘போர் இடைநிறுத்தம்’ கொடுக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும்.’ ‘தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். உடனடியாக புது டில்லியின் ஆங்கில ஊடகங்கள் ‘ஆயுதங்களை கைவிடுதல்’, ‘மக்களை வெறியேற்றுதல்’, ‘போர் இடைநிறுத்தம்’ போன்ற கருத்துக்களை பரப்பின. பின்னர் இந்த நிபந்தனைகளை ஐ.நாவும், பான் கீ மூனும், மேற்குலக நாடுகள் மற்றும் மேற்குலக ஊடகங்கள் திரும்ப திரும்ப கூறத் துவங்கின.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது புதுடில்லியின் நீண்டகால திட்டமாக இருந்தது. 1987ல் ராஜீவின் நோக்கமும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவதாக இருந்தது. தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் இந்திய பிராந்திய வல்லரசு கனவிற்கு பலம் சேர்க்க ராஜீவின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் காவு வாங்கப்பட்டிருந்தன. இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் சுமார் 6ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். வன்னியில் நடந்த போர் இந்தியாவின் அரசியல் திட்டத்திற்கு ஏற்ப மகிந்தா ராஜபக்சேவால் நடத்தப்பட்டது.

பெப்ருவரி 18, 2009ல் இந்திய மக்களவையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்த கருத்துக்கள் ‘இந்தியா போரை நடத்துகிறது’ என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு தமிழ்நாட்டில் போரட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் விதமான எந்த சகிம்சையும் அவரது பேச்சில் இல்லை. அதற்கு மாறாக, ‘இலங்கையின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் வழியாக 23 வருட மோதலுக்கு தீர்வை காணும் அரசியல் வாய்ப்பு இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். ‘இலங்கையில் ஏற்பட இருக்கிற புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா ஈடுபட காத்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் 500 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைத்தல், ரயில், பேருந்து திட்டம் மற்றும் மென்பொருள் சார்ந்த மையங்களை உருவாக்கும் ‘வளச்சித்திட்டங்களில்’ நாங்கள் ஈடுபட துவங்கியுள்ளோம்.’ என்று அவர் தெரிவித்திருந்தார். Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.5, Wednesday,February 18, 2009/ Magha 29, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/18/2009 ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை, படுகாயமடையும் போர் நடைபெறும் போது போரை நிறுத்த ஒரு வார்த்தையும் பேசாமல் காயம்பட்டிருக்கும் ஆட்டின் தலையிலிருந்து வழியும் இரத்தத்தை நக்கி நக்கி ஓநாய் ‘கருணைப் பிதாவாக’ மாறிய கதை போன்றது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசிய இப்பேச்சு.

இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ நலனுக்காக சிறீலங்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராளி இயக்கங்களை ஆதரித்து வளர்த்தார் இந்திரா. தமிழர்களுக்கு இலங்கையில் தனிநாடு உருவாக்கும் நோக்கம் எதுவும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தங்களது கட்டுப்பாட்டில் சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் சில போராளி குழுக்கள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் அந்த நோக்கத்துக்கு ஒத்துவரமாட்டார்கள், தனிநாட்டை நோக்கி செல்பவர்கள் என்பதால் இந்திய அதிகார வர்க்கத்தின் பார்வை விடுதலைப்புலிகளின் பலத்தை நொறுக்கி, அதே வேளையில் முற்றாக அழித்துவிடாமல் வைத்திருப்பது ராஜீவ் காலத்தின் இலங்கைக் கொள்கையின் அடிப்படையாக இருந்தது. ராஜீவிற்கு பிறகு நேரடியான ஈடுபாடு இல்லாமல் அவ்வப்போது சிறீலங்கா அரசுக்கான உதவிகளோடு நிறுத்தியிருந்தது இந்தியா. இந்தியாவின் இலங்கைக்கான கொள்கையில் மாற்றத்தை துவங்க காரணமாக இருந்தது ஆனையிறவு பெரும்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி, யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்த மூன்றாம் ஈழப்போர். அப்போது புலிகளின் முற்றுகைக்குள் இருந்த சிறீலங்கா படைகளுக்கு இந்தியா (வாஜ்பாய் பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி) ஆயுதங்களை வழங்க தயாராக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் பின்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். ஆட்சிகள் இந்தியாவில் மாறலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றமில்லை. வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை உருவாக்க தமிழக அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு முயற்சிகளில் ஈடுபடவில்லை. பிரச்சனைகள் அடிப்படையில் தனித்தீவுகளாக பிரிந்து நின்று புதுடில்லி நோக்கி கோரிக்கைகள் எழுப்புவதால் இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

கடந்த வருடம் இறுதியில் வன்னியில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வதைமுகாம்களில் முடக்கப்பட்ட போதும் மனித உரிமகள் பற்றி உலகமெங்கும் பாடம் நடத்துகிற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏன் அமைதியாக இருந்தன? இந்துப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசு நாடுகளின் போட்டிக்கு களப்பலியானவர்கள் வன்னியில் ஈழத்தமிழர்கள். இலங்கைத் தீவில் சீனாவின் முதலீடுகளும், கட்டுமானங்களும், ராணுவ முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. இந்துப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ‘முத்துமாலைத் திட்டம்’ இலங்கையை இணைத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டம் துறைமுகத்தை சீனா கட்டுகிறது. அக்கட்டுமானங்களில் ராணுவ முக்கியத்துவம் மிக்க கட்டமைப்புகளும் உள்ளடக்கம். ஆனால் சீனாவின் ஆதிக்கமும், ஐ.நா சபையில் சீனாவின் ‘வீட்டோ’ அதிகாரமும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுவது உண்மை. சீனாவுக்கு போட்டியாக இந்தியா தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் வைத்திருக்க சிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை வெளியுறவுக் கொள்கையின் அங்கமாக வைத்திருக்கிறது இந்தியா. இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க இந்திரா போராளி இயக்கங்களை ஜெயவர்த்தனேவிடம் துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார். ராஜீவ் ஆட்சியில் தமிழர்களின் அரசியல் உரிமையை காவுகொடுத்து, போராளி இயக்கங்களை பலத்தை குறைக்கும் நோக்கமிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது மற்றும் தலைமையை ஒழிப்பது ஆகிய நோக்கமிருந்தது. ஆனால் தங்களுக்கு இசைவான செல்லப்பிள்ளைகளை வளர்க்கும் நோக்கம் கொண்டிருந்தது. வரதராஜ பெருமாளை உருவாக்கியதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியானது. தற்போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் தலைமையை அழிக்கும் திட்டத்துடன் இந்தியா வன்னியில் படுகொலையில் பிரதான பங்காற்றியது. இதற்கான திட்டங்களின் துவக்கம் விடுதலைப்புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கும் சமாதானப் பேச்சுக்கள் துவங்கிய 2002 ஆண்டிலிருந்து (பாரதீய ஜனதா கட்சியின் வாஜ்பாய் ஆட்சி) துவங்கி விட்டன.

முதலில் போர்நிறுத்த ஒப்பந்தம், சமாதான பேச்சுக்களில் நேரடியாக தலையிடாமல் இந்தியா விலகியேயிருந்தது. ஆனாலும் எரிக் சோல்கெய்ம் ஒவ்வொரு முறையும் புதுடில்லியின் அதிகாரவர்க்கத்திற்கு தகவல்களை பரிமாறி, ஆலோசனைகளையும் பெற்றிருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நவம்பர் 2002 மாவீரர் நாள் உரை முக்கியமானது. அவரது உரையில், ‘எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்.’ என்று குறிப்பிட்டார். ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் ராணுவ முற்றுகைக்குள் இருப்பதையும், அதனால் தமிழர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்லவும், தொழில்களில் ஈடுபடவும் முடியாத நிலை பற்றியும் அந்த அமைந்தது. ‘தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது…..’

‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.’

‘உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’[i] பிரபாகரனது மாவீரர் நாள் உரையை தொடர்ந்து அரசியல் தீர்வுகள் பற்றி ஆராய சமாதானப் பேச்சுக் கூட்டங்களில் பேசினார்கள்.

இந்த சூழலில் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியாரை (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஆலோசிக்க துவங்கியது சிறீலங்கா. ரணில் விக்கிரமசிங்கே அரசு சதீஸ் நம்பியாரை தேர்வு செய்ததில் இந்திய அரசின் சம்மதமும், ஆலோசனையும் இருந்தது. இந்திய அமைதிப்படை காலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலான சதீஸ் நம்பியாரை ஈழப்பிரச்சனையில் ஈடுபடுத்தியதற்கு பின்னால் இந்தியாவின் பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி தனக்கு சாதகமான குழுக்களை உருவாக்க இந்திய உளவு நிறுவனங்களும், ஆதிக்கவர்க்கத்தினரும் மீண்டும் ஈழப்போராட்டத்தில் நுழைந்தது. சதீஸ் நம்பியார் யாழ்ப்பாணத்திற்கு (யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலையத்தின் வரைபடம் http://www.tamilguardian.com/tg193/jaffna_hsz.jpg) சென்று ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ பற்றி ஆய்வு செய்தார்.

பாகம் 4 தொடர்கிறது...

அடிக்குறிப்பு: [i] தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரை, நவம்பர், 2002

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்2


மே 14, 2009 நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கைக்கு உதவுவதற்காக அன்று மாலையில் தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்செயலாளருக்குரிய பொறுப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இலங்கைக்கு சென்ற விஜய் நம்பியார் வழக்கம் போல திரைமறைவில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டார். விஜய் நம்பியார் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இரகசியம் காக்கப்படுகின்றன.

வன்னியில் தொடர்ந்து ‘பாதுகாப்பு வலையத்திற்குள்’ சிறீலங்கா நடத்திய தாக்குதலில் மக்களின் நிலைமை மோசமாகியது. ஆனாலும் ஐ.நா சபைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தமிழர்கள் பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போதும் சண்டை இடைநிறுத்தம் பற்றி மட்டுமே ஐ.நா கருத்து வெளியிட்டு வந்தது. இன்று வரையில் நிரந்தர போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பான் கீ மூன் பயன்படுத்தவில்லை. ‘மக்கள் பாதுகாப்பாக வெளியேற தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்பதோடு பான் கீ மூனின் கடமை முடிந்து போனது. போரை நிரந்தரமாக நிறுத்த அழுத்தம் கொடுப்பது வழக்கமான நடைமுறை. காசா, லெபனான், காங்கோ போன்ற இடங்களின் மோதல்களில் ஐ.நா போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. அப்போதெல்லாம் ஐ.நா ‘போர் இடைநிறுத்தம்’ அல்லது ‘தற்காலிக போர் நிறுத்தம்’ கேட்டதில்லை. இலங்கையில் மட்டும் ஏன் ‘போர் இடை நிறுத்தம்’? வன்னியில் நடைபெற்ற போர் அரசியல் அடக்குமுறையின் கோர வடிவம். மனிதாபிமானப் பிரச்சனை ராஜபக்சே அரசின் போர் வெறியினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. போரை நிரந்தரமாக நிறுத்தியிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களும், துயரங்களும் தானாகவே நின்றிருக்கும். அதற்கு பதிலாக மக்களை தங்களது சொந்த இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்திற்கு உதவுவதாக இருந்தது பான் கீ மூனின் ‘போர் இடைநிறுத்தம்’ அறிவுறுத்தல். அப்படி ‘இடைநிறுத்தம்’ கேட்பதற்கு போர் ஒன்றும் திரைப்படக் காட்சியுமில்லை.

ஐ.நா அமைப்பின் மனித உரிமை பிரகடனங்கள் ‘just war’ என்று எதையும் அங்கீகரிக்கவில்லை. ‘just war’ அல்லது ‘war on terror’ (பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்பதெல்லாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கான உற்பத்தி. வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ராஜபக்சே மற்றும் புது டில்லியின் கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்தியதும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பதம். கோத்தபாய ராஜபக்சேயின் மிரட்டல்களும், திட்டங்களும் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தது. அப்போது மேற்குலக நாடுகளும் மௌனமாக இருந்தன.

அப்படியிருக்கும் போது மோதல் நடைபெறும் பகுதியில் போரை தற்காலிக இடைவெளி கொடுக்க ஐ.நா சபை பொதுச்செயலாளர் தெரிவித்தது ஏன்? பான் கீ மூன் தேவைப்பட்டால் இலங்கைக்கு செல்ல தயாரென்று அறிவித்திருந்தார். அப்படி அவர் அறிவித்த காலத்தில் தனது மகனின் திருமண விழா ஏற்பாடுகளை செய்து ரகசியமாக வைத்திருந்தார். ஐ.நாவின் அதிகாரி ‘இரத்தக்குளியல்’ என்று குறிப்பிடுமளவு சிறீலங்காவின் படுகொலைகள் கோரத்தாண்டவம் ஆடிய போதும் எந்த கண்டனத்தையும் பான் கீ மூன் தெரிவிக்கவில்லை. அதனால் சிறீலங்கா அரசு போரின் இறுதி நாட்களில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று, தடையங்களையும் அழித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பயணம் செல்வதாக அறிவித்துள்ளது பான் கீ மூன் மீதும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. கடுமையான மோதல் நடைபெறும் நாட்டிற்கு தனது ராஜதந்திர அழுத்தத்தை செலுத்துவதற்கு பதிலாக பொறுப்பில்லாமல் பான் கீ மூன் இருக்க காரணம் யார்?

ஈழத்தில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த இன்று வரையில் ஐ.நா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 'சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் செயல்படுகின்றன. மற்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான விவாதத்தை துவங்க முடியாத அளவு அவற்றின் எதிர்ப்பு உள்ளது. அதையும் மீறி எந்த தீர்மானத்தையும் கொண்டுவந்தால் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தும். போதாத குறைக்கு பாதுகாப்புச் சபையில் சுழல்முறையில் இடம் பெற்றிருக்கும் ஜப்பானின் ஆதரவு சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளது. அதனால் சிறீலங்கா மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.' இது ஐ.நாவின் மௌனத்திற்கு பலரும் சொல்லும் மேலோட்டமான காரணம்.

சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்பதால் ஈழப் பிரச்சனை பற்றிய விவாதத்தை ஐ.நாவில் அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கவில்லை என்பது உண்மையில்லை. சூடான் நாட்டின் டாஃபூர் பிரச்சனையில் சீனா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. சிறீலங்காவில் சீனாவுக்கு ராணுவ, பொருளாதார அனுகூலம் இருப்பதைப் போல சூடானில் இயற்கை வளங்களை சுரண்டுதல் மற்றும் ஆயுதங்கள் விற்பனையுண்டு. சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க கொண்டு வரப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் மீது சீனா, அமெரிக்கா, அல்ஜீரியா, பிரேசில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்கவில்லை. ஆனாலும் 11 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. சிம்பாப்வே விசயத்திலும் சீனாவின் எதிர்ப்பையும் மீறி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தலையிட்டு ஐ.நா வழியாக நெருக்கடிகளை ராபர்ட் முகாபே அரசுக்கு கொடுத்தன. சிறீலங்கா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் அப்படி ஒரு நிலையை ஏன் எடுக்கவில்லை? இந்தியாவே அதற்கு காரணம்.


பாகம் 3 தொடரும்

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1


உலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம் பேசியது வெட்கம் கெட்ட கொலைகாரக் கூட்டம். வன்னியில் இரத்தப் படுகொலையை நடத்திய இந்தியா தடையங்களை அழிப்பதிலும், சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுக்காக்கவும் திட்டமிட்டு செயல்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறையும், ஐ.நாவில் பணியாற்றுகிற இந்திய அதிகாரிகளும் இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் திட்டத்திற்கு துணிந்து உதவுகிறார்கள்.

வன்னியில் இனப்படுகொலை நடந்த போது முதலில் இலங்கைக்கு ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்சை இலங்கைக்கு அனுப்பினார் பான் கீ மூன். இலங்கையிலிருந்து திரும்பிய அவர் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கையை ஐ.நாவுக்கு கொடுக்கும் முன்னரே கொலம்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விசயத்தில் ஐ.நாவின் போக்கு சந்தேகங்களை உருவாக்கியது. அதன் பின்னர் விஜய் நம்பியார் மேற்கொண்ட பயணங்களிலும் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் மீது பலத்த சந்தேகங்கள் எழும்புகின்றன.

லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தினால் பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுன் இலங்கைக்கான சிறப்புத் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். அவரை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதன் பிறகு பிரிட்டன் ஐ.நாவுக்கு சில நெருக்கடிகளை கொடுக்கத் துவங்கியது. இந்த நிலையில், எப்பிரல் 16, 2009 அன்று ஐ.நா மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன் விஜய் நம்பியாரை தனது சிறப்புத் தூதுவராக வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக அனுப்பினார். இன்னர்சிற்றி பிரஸ், மேத்யூ ரஸ்ஸல் லீ அதை வெளிப்படுத்திய பிறகு உலகம் இந்த பயணம் பற்றி அறிந்தது. அப்போது ஐ.நா மீதான சந்தேகம் வலுவடைய ஆரம்பித்தது. இந்த பயணத்தில் விஜய் நம்பியார் வன்னியிலுள்ள ‘முகாம்களை’ பார்வையிட்டு, ராஜபக்சே அரசிடம் பேச்சுக்களை நடத்தி, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை கொடுப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயணத்தில் இருந்த போது ஐ.நா பணியாளர்கள் சிலர் சிறீலங்கா அரசினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ‘வதை முகாம்களில்’ தமிழ்மக்கள் ராணுவ கட்டுப்பாடு, அச்சுறுத்தல், சித்திரவதையை அனுபவிப்பதாக செய்திகள் வந்தன. ‘பாதுகாப்பு வலையம்’ மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது சிறீலங்கா. ‘முகாம்கள்’ எவற்றையும் பார்வையிடாமல், சிறீலங்காவின் இன அழிப்பு போரை கண்டிக்காமல் பயணத்தை முடித்தார் விஜய் நம்பியார். மனித உரிமை ஆர்வலர்களை இச்செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஏப்பிரல் 20, திங்கள் கிழமை அறிக்கை கொடுக்க வேண்டிய விஜய் நம்பியார் ஏப்பிரல் 23, புதன்கிழமை இரவு வரையில் ஐ.நாவுக்கு திரும்பவில்லை. வன்னியில் மக்களின் நிலவரத்தை அறிந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து ஆலோசனைகளை வழங்கும் கடமையுள்ள விஜய் நம்பியார் கொழும்பு பயணம் முடித்ததும் சென்ற இடம் இந்தியா. இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்றதாக சொல்லப்பட்டது. வன்னியில் மக்களின் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அவசரமான சூழலில், பயணத் திட்டத்தில் இல்லாத விடுமுறைக்கு தனது சொந்த நாடான இந்தியாவிற்கு விஜய் நம்பியார் செல்ல வேண்டிய அவசரத் தேவையென்ன?

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் ஏப்பிரல் முதல் வாரத்திற்குள் கைப்பற்றும் திட்டம் எதிர்பார்த்ததை விடவும் நாட்கள் அதிகமாகியது. ஏப்பிரல் 25ற்குள் விடுதலைப்புலிகளின் கதையை முடித்து, நிலங்களை மீட்டு விடுவோமென்று சிறீலங்கா பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கு கால அவகாசம் கொடுக்க விஜய் நம்பியார் இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதற்கும் மேலாக விஜய் நம்பியார் புது டில்லியின் அதிகார வர்க்கத்திடம் ஆலோசிக்க இந்தியா சென்றிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏப்பிரல் 23, வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கு திரும்பிய அவர் சிறீலங்கா பற்றிய அறிக்கையை கொடுக்க மறுத்தார். வழக்கமாக ஊடகங்களை சந்திக்கும் விஜய் நம்பியார் ஊடக சந்திப்பை தவிர்த்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெறும் நாடுகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விஜய் நம்பியாரின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் சிறீலங்கா மீதான அலுவலக ரீதியான கண்டனங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவை வழி ஏற்படுத்தி, போரை நிறுத்த நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்பிருந்தது. விஜய் நம்பியாரின் அணுகுமுறை சிறீலங்காவை காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டிருந்ததை இதில் உணரமுடியும்.

விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் ராணுவ ஜெனரல் போரில் சிறீலங்கா ராணுவத்தையும், சரத் பொன்சேகாவையும் பாராட்டி எழுதியுள்ளார் (சதீஸ் நம்பியார் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்). சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்கள், பொருளதவி, ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் வல்லுநர்களை அனுப்பி மறைமுகமாக யுத்தத்தை இந்தியா நடத்திய நிலையில், இந்திய குடியுரிமையுள்ள விஜய் நம்பியாரை ஐ.நா அனுப்பியது பற்றி ராஜதந்திர மட்டங்களிலும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இந்தியாவில் மன்மோகன் சிங் ஆட்சியில் 2005ல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 2005ல் பணியாற்றியவர் தான் விஜய் நம்பியார். விஜய் நம்பியார் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். பான் கீ மூன் ஐ.நா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் ஜனவரி 2007ல் ஐ.நா தலைமை அதிகாரியாக விஜய் நம்பியாரை நியமித்தார். விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியார் (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஈழப்போராட்ட சிக்கலில் முக்கிய பங்கு வகித்தவர். வெளியுறவுத்துறையின் Foreign Affairs Instituteல் விஜய் நம்பியாரும், சதீஸ் நம்பியாரும் அழைப்பின் பேரில் பங்கெடுத்து வருகிறார்கள். ராணுவ சம்பந்தமான United Service Institution of India ஜூலை 1996 முதல் டிசம்பர் 31, 2008 வரையில் இயக்குநராக சதீஸ் நம்பியார் இருந்திருக்கிறார். சிறீலங்கா அரசுக்கு ராணுவ ஆலோசனைகளை வழங்கி வந்தவர் சதீஸ் நம்பியார்.

ஐ.நா அதிகாரியின் கடமையும், பொறுப்பும் சொந்த நாட்டின் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு அவற்றில் தொடர்புடைய நாடுகளின் குடியுரிமை கொண்டிருக்கும் அதிகாரிகளை வழக்கமாக பிரதிநிதிகளாக அனுப்புவதில்லை. அதற்கு மாறாக சிக்கலான அளவு தொடர்புடைய விஜய் நம்பியாரை இலங்கைக்கு சிறப்புத் தூதுவராக பான் கீ மூன் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

பாகம் 2 அடுத்த பதிவில் தொடர்கிறது...

Thursday, April 30, 2009

ஈழம்: வீரகேசரிக்கு வழங்கிய பழைய நேர்காணல்!

வீரகேசரி நாளிதழுக்கு 11 பெப்ருவரி 2007ல் வழங்கிய எனது நேர்காணலை இங்கு பதிவு செய்கிறேன்

வீரகேசரி: பொதுவான கேள்வி தங்களைப்பற்றி சொல்லுங்கள்?

திரு: தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் எனது பிறப்பிடம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் உரிமை, மனித உரிமை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

வீரகேசரி: ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பரிச்சயம் எப்படி ஏற்பட்டது?

திரு: எட்டாம் வகுப்பில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1983) ஈழப்பிரச்சினை கறுப்பு ஜூலை கலவரங்களின் விளைவாக பெரியதாக வெடிக்க ஆரம்பித்திருந்தது. தமிழர்கள் மீது இலங்கை அரசும், சிங்களவர்களும் நடத்திய கொடூரமான 1983 ஜூலை தாக்குதல்களை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் கண்டன ஊர்வலங்கள், பள்ளிகளில் வேலைநிறுத்தங்கள் நடந்தன. எங்களது பகுதியில் நடந்த பல போராட்டங்கள் சிறுவனாக இருந்த என்னை பாதித்தது.

தமிழக பத்திரிக்கைகள் ஈழத்தின் செய்திகளை அப்போது தாங்கி வந்தன. அப்பா தினமும் பத்திரிக்கை செய்திகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உள்ளதால் எனக்கும் ஈழத்தின் அவலச் செய்திகள் வந்து சேர்ந்தன. எங்களது பகுதியின் பகுத்தறிவு இயக்கத்தினர் சேர்ந்து ஒரு பெரிய கருப்பு, வெள்ளை நிற கார்ட்டூன் தட்டியை வைத்திருந்தனர். அந்த பணியை முன்னின்று செய்தவர்களுடன் எனது அப்பாவும் முக்கியமானவர். அந்த தட்டியை பார்க்க சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதில் "தமிழர்களின் கறி இங்கு கிடைக்கும்" என எழுதப்பட்டு சிங்களவர்கள் தமிழர்களை கொலை செய்த காட்சிகளை சித்திரங்களாக வரையப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகள் இயக்கமும் பிற போராளி இயக்கங்களும் இந்தியாவில் அரச ஆதரவுடன் இயங்கிய காலம் அது ஆதலால் எங்கள் பள்ளியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒளிப்படங்கள் வழியாக ஈழத்தமிழர்களது வேதனைகளையும், சிங்கள அடக்குமுறையை, கண்டு கவலையடைந்தோம். போராளிகளது அளப்பரிய போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையை தந்தது. இராமேஸ்வரம் நோக்கி கடல்வழியாக படகுகளில் ‘அகதிகளாக’ தமிழகம் நோக்கி வந்த குடும்பங்களது கண்ணீர் செய்திகளை அப்பா எங்களுக்கு சொல்ல சிறுவனாக அதை கேட்கையில் மனம் வேதனைப்பட்டிருக்கிறேன். அப்போது ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் ‘அகதிகள்’ வந்த நாட்களும் உண்டு.

வீரகேசரி: இந்தப்பிரச்சினை உங்களின் அதீத காரணம் பெற ஏதாவது பிரத்தியேக காரணங்கள் இருக்கிறதா?

திரு: மனிதனாக பிறந்த எல்லோரும் முழு விடுதலை பெற்றவர்களாக மானமும், சுயமரியாதையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டு. இது மனித உரிமை அனைத்திற்கும் அடிப்படையான விடுதலை கருத்து. இந்தியாவில் தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அம்பேத்கார் அவர்களும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்களின் விடுதலைக்காக கொண்டிருந்த அடிப்படையான கருத்து இந்த முழுமனித விடுதலை சார்ந்தது.

எல்லைக்கோடுகளை வைத்து நாடுகளின் இறையாண்மையை வரையறுப்பது அறியாமையின் வெளிப்பாடு. ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டில் வாழுகிற மக்கள் முழு உரிமையுடன், விடுதலையடைந்தவர்களாக வாழுகிறார்களா என்பதை அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த விதத்தில் ஒற்றை நாடு என்ற கோட்பாட்டில் பெரும்பான்மையினர் சிறுபான்மை இன மக்களை அடிமைப்படுத்துவதும் அவர்களை உரிமையுள்ளவர்களாக வாழ அனுமதிக்காததும் இறையாண்மையற்ற செயல். இப்படி இறையாண்மை மீறப்படுகிற வேளைகளில் சிறுபான்மை இனங்கள் சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் தங்களது விடுதலையை தாங்களே தீர்மானிப்பது உலக நடைமுறை. இலங்கையில் பெரும்பான்மை அரசியல் பலத்தை வைத்திருக்கும் சிங்கள இனம் தமிழர்களை அடக்குவதும் அழித்தொழிப்பதும் இறையாண்மைக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. மனித விடுதலை என்ற உன்னதமான மதிப்பீட்டிற்கு அது முரணானது. அந்த விதத்தில் மனிதனாக தமிழீழ மக்களின் பிரச்சனையில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

வீரகேசரி: இந்தப்பிரச்சினையில் உங்களுக்கு இருக்கிற கள அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

திரு: மிகப்பெரிய கள அனுபவங்கள் எதுவும் எனக்கில்லை. 1984ல் நான் எனது முதல் கட்டுரையை ‘இதுவும் ஒரு நாடா?’ என்ற தலைப்பில் எனது பள்ளி மாணவர் மலருக்காக எழுதினேன். அது ஈழத்தமிழர்கள் நிலை, ‘அகதிகள்’ பிரச்சனை பற்றிய கட்டுரை. பள்ளியில் ஆங்கில கவிதைப் போட்டியில் 'I wandered lonely as a cloud among the fires and smokes of Eelam..' என்ற தலைப்பில் 1987ல் எழுதினேன். இப்படி மாணவ பருவத்தில் ஈழம் பற்றிய ஆர்வம் உருவானது. தொடர்ந்து ஈழம் பற்றி கையெழுத்து பத்திரிக்கைகள், மாணவர்மலர் போன்றவற்றில் எழுதியும், மேடைகளில் பேசியும் வந்தேன்.

1997 ல் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் தலைமையில் பல மக்கள் அமைப்புகள் சேர்ந்து உண்ணாவிரதத்தை திருச்சி மலைக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு நடத்தினர். தடா சட்டம் அமலில் இருந்ததால் அப்போது ஈழத்தமிழர் பற்றி வெளிப்படையாக பேச அச்சமான சூழல் இருந்தது. என்னை அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அமைப்பாளர்கள் அழைத்தனர். அந்த அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடைகளை இந்தியா நீக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என பேசினேன்.

அதற்கடுத்ததாக வட அமெரிக்கா மற்றும் கனடா தமிழ்சங்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்ட அரங்க கூட்டத்தை உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமது கடமை என்பதை பற்றி பேசினேன். தொடர்ந்து நண்பர்கள் இணைந்து விவாத அரங்கங்கள், கலந்துரையாடல்களில் ஈழம் பற்றி பேசியும், கருத்துக்களை பரப்பியும் வந்தோம்.

ஈழம் செல்லும் ஆர்வம் தணியாது இருந்தது. 2002 டிசம்பர் ஈழம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம் என பல இடங்களுக்கு சென்று யுத்தத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்டுணர்ந்தேன். யுத்தம் கொடியது, அது நம் தலைமுறைகளுக்கும் பாதிப்பை தருவது. இதை மனித சமூகம் உணரவேண்டும்.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்களது வேதனைகள் பல தெரிந்து கொண்டதும், பல செய்தி ஊடகங்கள் வழி தினமும் ஈழச்செய்திகள் அறிவதும் ஈழம் பற்றி எனக்கு ஒரு அரசியல் பார்வையை தந்திருக்கிறது. அதை தொடர்ந்து எனது வலைப்பதிவில் ஈழம் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

வலைப்பதிவு செய்யும் பல நண்பர்களுடன் கலந்துரையாடிய போது தமிழக அகதிகள் முகாம் செல்ல ஆர்வம் வந்தது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து அகதிகள் முகாமை வலைப்பதிவு செய்யும் நண்பர்கள் இருவருடன் டிசம்பர் 2006ல் பார்வையிட்டோம்.


வீரகேசரி: நீங்கள் செயற்படத் தொடங்கியபோது இருந்த தமிழகச்சூழல் இப்போது இருக்கிற தமிழக சூழல் இரண்டையும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

திரு: 1983ல் ஈழத்தமிழர்களுக்கான அமைப்பு ரீதியான மற்றும் அரச ஆதரவு வெளிப்படையாக இருந்தது. அன்றைய புதுடில்லி அரசியல் பார்வையும் இதற்கு எதிராக இல்லை. இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை நிகழ்த்தியிருந்தது. தொடர்ந்து இராஜீவ் காந்தியின் படுகொலையால் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு தடைகள் உருவாகின. அப்போதெல்லாம் ஈழம் பற்றி பேசுவதே அடக்கப்பட்டிருந்தாலும் தமிழக மக்கள் தங்கள் ஈழ ஆதரவை மாற்றிக்கொள்ளாமல் தங்களுக்குள் பாதுகாத்தனர்.

இப்போது ஈழப்பிரச்சனையில் இந்திய அரசியல் அணுகுமுறையில் சில மாற்றம் நிகழ்கிறது. இந்திய பாராளுமன்றத்தில் புதுடில்லி மீதான அரசியல் பலத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. மத்திய அரசில் மாநில கட்சிகளின் பங்கு அதிகமாக இருக்க கூடிய காலம் இது. தமிழக அரசியல் அமைப்புகளின் ஒன்றுபட்ட குரல்கள் புதுடில்லியின் இலங்கை கொள்கையில் மாற்றத்தை நிச்சயமாக கொண்டுவரும்.

ஈழத்தமிழர்களின் துயரங்களை அறியும் வேளை தமிழகத்து மக்கள் வேதனையடைகிறார்கள் அதன் விளைவான செயல்பாடுகளும் எழுகின்றன. அரசியல் ரீதியாக தனது பலத்தை இன்னும் தமிழக அரசியல் சக்திகள் எந்த பிரச்சனையிலும் ஒன்று திரட்டவில்லை. அது ஈழப்பிரச்சனையிலும் ஒலிக்கிறது. தனித்தனி அமைப்புகளாக குரல் கொடுப்பதும் தங்களுக்குள் போட்டியிட்டு கொள்வதுமாக இருக்கிற அரசியல் நிலைமை மாறி பிரச்சனைகளில் ஒன்றுதிரண்ட குரலாக ஒலித்தால் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை செயல் வடிவமாக பெற இயலும்.

வீரகேசரி: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறிர்கள்?

திரு: இலங்கை அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு செய்யும் அனைத்து இராணுவ தளவாடங்கள், போர் பயிற்சிகள், வெடிமருந்து பொருட்கள் போன்ற உதவிகளும் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தனது நாட்டிலுள்ள மக்கள் மீது வான்வெளி தாக்குதலை தொடுக்கிற ஒரு அராஜக அரசிற்கு செய்யும் எந்த உதவிகளும் மறைமுகமாக அதன் அடக்குமுறைகளை ஆதரிப்பது ஆகிவிடும்.

இந்தியாவில் ஈழத்தமிழர் அகதிகள் முகாமிற்கு பன்னாட்டு அமைப்புகள் உதவியுடன் வீடு, உணவு, குடிநீர், கழிப்பறை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முகாமில் வாழுகிற மக்களுக்கான தொழிற்பயிற்சிகள், கூட்டுறவு முறையிலான வேலைகளை உருவாக்குவது அவசியம்.

இந்தியாவின் ஈழப்பிரச்சனை பற்றிய அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்தியா தனது சொந்த திட்டங்களை திணிப்பதோ, இந்திய மாதிரிகளை தீர்வாக வைப்பதோ இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையாது. வடகிழக்கு இலங்கையில் வாழுகிற மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையிலான தீர்வுகள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டியது இந்தியாவின் கடமை. தமிழ் மக்களது உரிமைகளை 'இலங்கையின் இறையாண்மை' என்ற பெயரில் எல்லைக் கோட்டிற்குள் குறுக்கும் பார்வை நீங்க வேண்டும். இறையாண்மை என்பது எல்லைக்கோடுகள் மட்டுமல்ல; அதில் வாழும் மக்களின் உரிமை வாழ்வும் சேர்ந்தது.

தமிழகத்தில் பல துருவங்களாக ஒலிக்கிற ஈழ ஆதரவு குரல்கள் சேர்ந்து ஒலிக்க வேண்டும். அரசியல் ரீதியாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் ஈழத்தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க தார்மீக கடமையுண்டு. தமிழக அரசியல் நிலைப்பாடு ஒருமுகப்படுத்தப்பட்டால், இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாக எதையும் செய்துவிட முடியாது.

வீரகேசரி: புலம் பெயர்ந்து வாழுமிடங்களின் தமிழர்களின் பிரச்சினையை எந்தளவுக்கு உலகம் புரிந்து கொண்டதாய் உணர்கிறீர்கள்?

திரு: புலம்பெயர் தமிழர்களின் பிரச்சனை பற்றிய அறிவும், பார்வையும் மிக குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருக்கிற ஆதரவும் தனிநபர்களுக்கான அல்லது குடும்பங்களுக்கான உதவியுடன் முடிந்து விடுகிறது. அதற்கு காரணம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஏற்படுகிற அடக்குமுறைகளை, அவலங்களை உலகமக்களுக்கு சரியாக கொண்டு செல்ல பிறமொழி ஊடகங்களில் தமிழர்களது ஈடுபாடு அதிகமில்லை. தமிழர்கள் தங்களது பிரச்சனையை தங்களுக்குள்ளேயே பேசி, செயல்படுகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் ஊடகங்கள் கூட பெரும்பாலும் தமிழ் மொழியில் மட்டுமே செய்திகளை பரப்பி வருகிறது. தமிழ் மொழியில் மட்டுமே இருந்தால் எத்தனை அயல்நாட்டினருக்கு இந்த செய்திகளை கொண்டு செல்ல முடியும்? புலம்பெயர் தமிழர்கள் அந்த நாடுகளின் மொழிகளிலுள்ள ஊடகங்களில் தங்களது பிரச்சனைகளை எழுதுவது அவசியம்.

தமிழ் ஊடகங்களில், விழாக்களின் நிகழ்ச்சிகளில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் தாக்கமும், திரைப்படத்தின் தாக்கமும் மிகுதியாக இருக்கிறது. வாகரையில், யாழ்ப்பாணத்தில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி தமிழன் செத்துக் கொண்டிருக்கையில் அது பற்றிய செய்தியை சர்வதேச அளவில் பரப்ப தமிழர்களின் ஊடகங்கள் தவறியது. பலமுறை தொடர்ந்து முறையிட்ட போதும் புலம்பெயர் தமிழர்களது வலிமையான ஊடகங்கள் கூட ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கையெழுத்து இயக்கம் பற்றிய தகவலை வெளியிட முன்வரவில்லை. திரைப்படத்துறை செய்திகளை, பாடல்களை தாங்கி வருகிற அதே வேளை தமிழர்களுக்கான ஆதரவு குரலை கவனிக்காமல் விடும் முரண்பாட்டில் இன்று புலம்பெயர் தமிழர்களது ஊடகங்கள் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களும், புலம்பெயர் தமிழர்களும் எடுக்கிற பரப்புரைகளும், முறையீடுகளும் இன்னும் வலுப்பெறவேண்டும் அப்போது மட்டுமே உலக மக்களின் பார்வை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறும். பெரும்பான்மை உலக மக்களுக்கு ஈழமக்களின் பிரச்சனை பற்றிய தகவல்கள் சென்று சேர்வதில்லை. அவர்களது ஆதரவை தனது பக்கமாக திருப்ப தமிழர்கள் இன்னும் ஆர்வமாக உழைக்க வேண்டும்.

வீரகேசரி: இந்த கையெழுத்து வேட்டை பற்றி?

திரு: வாகரை பகுதியில் உணவு, மருந்து பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்காமல் இலங்கை அரசு விதித்த பொருளாதார தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் ஒன்றை இணையத்தளங்கள் மூலமாக நண்பர்கள் உதவியுடன் நடத்த துவங்கினேன்.

  1. ஏ9 சாலையை திறந்து பொருளாதார தடைகளை நீக்குதல்.
  2. மக்கள் மீது தொடுக்கப்படுகிற அனைத்து ஆயுத தாக்குதல்களையும் நிறுத்துவது.
  3. மக்கள் சுதந்திரமாக நடமாடவும், கல்வி, வேலைகளில் ஈடுபடவுமான சூழ்நிலையை உருவாக்குதல்.

ஆகிய மூன்று கோரிக்கைகளை வைத்து கையெழுத்து இயக்கம் ஆரம்பமானது. இதற்கு ஏராளமான நண்பர்களின் ஆதரவு இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கிடைத்தது. இதுவரை சுமார் 5200 கையெழுத்துக்கள் சேர்ந்துள்ளன. இவை அனைத்தும் ஐ.நா சபை, இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பாதிப்பிற்குள் வாழுகிற மக்களின் உரிமைகளுக்காக எங்களால் முடிந்தவரை குரல் கொடுப்போம்.

ஈழத்தமிழர்களின் உரிமைகள் வெல்லட்டும்!

படம்: ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய தமிழர்களின் உரிமைப் பேரணி, பிரஸ்ஸல்ஸ்
நேர்காணல்: வீரகேசரி நாளிதழ், 11பெப்ருவரி 2007