Wednesday, April 04, 2007

சாதி அடிப்படையில் எதற்கு இடப்பங்கீடு?

இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்ற கருத்தை ஒரு தரப்பினரும், சில நீதிமன்ற சீமான்களும் உருவாக்க முயல்கிறார்கள். இது சரியானதா?

ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழு:
1953ல் பிற்படுத்தப்பட்டோர் நிலை பற்றி ஆராய ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழுவை இந்திய அரசு ஏற்படுத்தியது. இந்த ஆணைக்குழு கொடுத்த அறிக்கையில் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைத்தது.

மண்டல் விசாரணைக்குழு அறிக்கை:
20.01.1978ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய மக்களை அடையாளம் காண" பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது.

சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களை அடையாளம் காண 8 அணுகுமுறைகளை இந்த விசாரணைக்குழு கையாண்டது. அது பற்றிய விரிவான தகவல்களை எனது இடப்பங்கீடு சில நியாயங்கள் என்னும் பதிவில் காணலாம். அவற்றில் சில மட்டும் இங்கே:

  1. பேராசிரியர் M.V சீனிவாசன் அவர்கள் தலைமையில் 15 அறிஞர்கள் அடங்கிய குழு அமைத்து நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றி கணனி வழியான ஆய்வு.
  2. டாட்டா சமூகவியல் நிறுவனம் வழியாக வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாக பிரித்து ஒரு ஒப்பீட்டு ஆய்வு.
  3. 1891 முதல் 1931 வரையில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, சாதிக்கும், பரம்பரை தொழிலுக்குமான தொடர்பு மற்றும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் கவனத்தில் எடுக்கப்பட்டது.

முறையான அறிவியல் அடிப்படையில் அறிஞர்களால் சமூக ஆய்வு நடத்தப்பட்டது. அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் என பலரும் ஈடுபட்ட கூட்டு முயற்சி தான் இந்த ஆய்வு. சமூக அறிவியல் ஆய்வின் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்தது மண்டல் குழு.

மண்டல் குழு சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறை செய்ய மூன்று அடிப்படைக் காரணிகளை நிர்ணயம் செய்தது. அவை,

சமூக அடிப்படைக் காரணிகள்
கல்வி அடிப்படைக் காரணிகள்
பொருளாதார அடிப்படைக் காரணிகள்

(இது பற்றிய விரிவான தகவலுக்கு இடப்பங்கீடு சில நியாயங்கள் படிக்கவும்)

31.12.1980ல் மண்டல் குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடப்பங்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரை மண்டல் அறிக்கையில் அடங்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆதிக்க சாதியினர் எதிர்த்ததால் மண்டல் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்த தயங்கியது. தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் ஆட்சியில் வந்த போது மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்தியது. மண்டல் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் வி.பி.சிங் ஆட்சி வந்த போது மண்டல் அறிக்கை கொடுத்த சூழல் மாறவில்லையா?

1990ல் இந்திய அளவில் அரசுதுறைகளில் கல்வியிலும், வேலையிலும் இருந்தவர்கள் பற்றி சண்டே வார இதழில் 1990 டிசம்பர் 23ல் வெளியிட்ட தகவல்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தரும்.
  • துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
  • மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
  • ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
  • தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
  • பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
  • மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
  • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.

பெரும்பான்மை இடங்களை அனுபவித்து கொண்டே இதே 1990ல் தான் இடப்பங்கீடை ஆதிக்கசாதியினர் எதிர்த்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சாதிப் பிரிவினையால் ஏற்பட்ட பாகுபாட்டை அகற்றி சமூகநீதியை உருவாக்க தானே இந்தியாவில் இடப்பங்கீடு கொள்கை உருவாக்கப்பட்டது. சமூக நீதிக்கான இடப்பங்கீடு கொள்கை ஏன் சாதி அடிப்படையில் அமையவேண்டும்? பொருளாதார அடிப்படையில் அல்லது வேறு விசயங்களை கணக்கிலெடுத்து இடப்பங்கீடு உருவாக்கலாமே என விவாதம் நடக்கிறது. இதை புரிந்துகொள்ள சில அடிப்படை கேள்விகள் அவசியம்.

  1. இந்தியாவின் பாகுபாடு சாதி அடிப்படையில் தானே உருவானது? அதை மாற்ற சாதியை காரணியாக கொள்ளாமல் வேறு எதை காரணமாக கொள்வது?

உதாரணமாக: ஊனமுற்றவர்களுக்கு சமநீதி கிடைக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஊனத்தை அடிப்படையாக வைத்து தானே திட்டங்கள் இயற்ற இயலும்? பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து தான் திட்டங்களை இயற்ற வேண்டும்; ஊனம், ஊனமின்மை என மக்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தக்கூடாது என்றால் என்ன பொருள்? சாதிப் பிரிவினைகள் இந்தியாவின் சமூக ஊனம். இந்த ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் உரிய இடம் கிடைக்க சாதி என்னும் ஊனத்தை அடையாளமாக இல்லாமல் வேறு எதை அடிப்படையாக வைத்தாலும் அது அநீதியாக தான் அமையும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீட்டில் பொருளாதார காரணி பற்றிய அடுத்த பதிவுகளில்...

18 பின்னூட்டங்கள்:

தருமி said...

புரிந்தவர்களுக்கு நீங்கள் சொல்வது புதிதல்ல; புரிய மறுப்பவர்களுக்கு இப்பதிவு ஏதும் உதவப் போவதில்லை; புரிய விரும்பாதவர்கள் இப்பதிவைக் கண்டு கொள்ளப் போவதில்லை.
- இதெல்லாம் பரவாயில்லை.

புரிந்து கொள்ள வேண்டியவர்கள்கூட புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் கஷ்டமாயுள்ளது.

Anonymous said...

அன்பின் திரு...

துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.

இந்த விகிதாச்சாரம் 2007 ஆம் ஆண்டு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

மேலும் உங்கள் பதிவு மிகவும் மெச்சூர்டாக உள்ளது ( வழக்கம்போல..) அதனால் மேலும் இது குறித்தான அறிவை வளர்த்துக்கொள்ள உங்கள் பதிவையே நாட வேண்டும் என்றும் புரிகிறது...

Osai Chella said...

அடுத்தவனை ஏய்த்து காலங்கலமாய் தான் குடியிருந்த இடத்திலிருந்து ( அக்ரஹாரம் ) பள்ளிக்கூடங்கள் (குருகலங்கள்) முதல் வேலை (பூசாரிகள்) வரை சாதியை, பிறப்பை மட்டுமே வைத்து இட ஒதுக்கீட்டை உருவாக்கியளித்த சாறுண்ணிகள் இன்று அதே இட ஒதுக்கீடு ஒரு சாபம் என்று பேசித்திரிகிறார்கள். கேவலப்பிறவிகள்! குறுமதியுடையோர்! கிரிமினல் புத்திக்காரர்கள். அய்யா வெண்தாடிக்கிழவனே உன்வார்த்தைகள் எங்கள் கண்களை மட்டும் திறந்துவிடவில்லையென்றால் பார்ப்பனனை சாமியென்றே நம்பி அழைத்து சேவகம் செய்து புழுவெனப் போயிருப்போம்! வாழ்க உன் புகழ்!

முத்துகுமரன் said...

திரு வழக்கம் போல சிறப்பான கருத்துகள்.

இடப்பங்கீடு என்பது எதன் பெயரால் ஒருவனுக்கு கல்வி மறுக்கப்பட்டதோ அதன் பெயரிலேயே அவனுக்கு கல்வியை வழங்குவது. வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வறுமை ஒழிக்க வேறு திட்டங்களைத்தான் செயல்படுத்த வேண்டும். வகுப்பு வாரி கணக்கெடுப்பை ஆங்கில அரசாங்கம் செய்த போதுதானே மொத்த மக்கள் தொகையில் அன்றைய தினத்தில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட தாழ்த்தப்பட்டோரும் இந்துகளாக ஆயினர். சாதி குறித்தான நீதிமன்றங்களின் மனோபாவம் மேலாதிக்க மரபுவழி மனோபாவம்தான். எதார்த்தத்தில் புரையோடிப் போயிருக்கும் சமூக சீரழிவுகளுக்கு மருந்து கொடுக்காது வெற்றுத் தாள்களில் சொர்க்கம் புனைய நினைக்கும் ஏமாற்று மாயஜாலக்காரன் வேடத்தைதான் நீதி மான்கள் தரித்துள்ளனர்

சிவபாலன் said...

மிக நல்ல பதிவு!

வாழ்த்துக்கள் திரு!

Anonymous said...

ஏங்க இந்த பொருளாதார சர்டிபிகேட் வாங்குவது அவ்வளவு கடினமானது இல்லை. அதனால் உயர்சாதி ஆளுங்க இதை எளிதில் பெற்று புற வாசல் வழியாக உள்ளே வரும் முயற்சிதான் இந்த பொருளாதார அடிப்படை. இதனால்தான் மீடியாக்களும் இதையே ஜல்லி அடிக்கிறது.

இதற்கு தீர்வு என்ன வென்றால்,

சாதி அடிப்படையில் பொருளாதாரம். அப்பொழுது இந்த இடஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு
சேரும்.

வெறும் பொருளாதாரம் என்று வைத்தால் 2000 வருடம் என்ன செய்தார்களோ அதையே ஒரு சர்டிபிகேட் வாங்கி கொண்டு செய்ய துவங்கிவிடுவார்கள்.

- சேரன்

Balaji Chitra Ganesan said...

1990-இல் பலதுறைகளில் பிராமணர்கள் இத்தனைபேர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். இவர்கள் எல்லோரும் தகுதியில்லாமலா அந்தப் பதவிகளை அடைந்தார்கள்? தகுதியுள்ள மற்ற சாதியினர் இந்தப் பதவிகளை அடைவதற்கு ஏதாவது தடை இருந்ததா?

'பிற்படுத்தப்பட்ட சாதிக்' குழந்தைகள் பொருளாதாரக் காரணங்களால் பிராமணக் குழந்தைகளை போல் நல்ல பள்ளிகளில் படிக்கமுடிவதில்லை. அவர்களின் பெற்றோர், உறவினர், சுற்றத்தார் என எல்லோரும் உயர்ந்த நிலைகளில் இல்லாததால் அவர்களுக்குத் தேவையான ஊக்கமும் வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை. இந்த காரணங்களால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அவர்களை மேனிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

அப்படியில்லாமல் இதோ இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்களே. அவர்கள் முன்னோர்கள் செய்ததாக நம்பப்படும் கொடுமைகளுக்குகாக இவர்களை பழிவாங்குவோம். அவர்களை மட்டம் தட்டினால் நாம் தாமாகவே மேலே வந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளாலாம்! எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்கிற உங்களுடைய புள்ளிவிவர வாதம் நன்றாகவாயிருக்கிறது?

பொறாமை எவ்வளவு ஆபத்தானது மோசமானது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயொரு 'கீழ்சாதிக் கிழவன்' சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். சமயமிருந்தால் அதைப் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

Anonymous said...

உங்கள் புள்ளி விவரம் சரியானது என்றே கருதுகிறேன்..
உத்தர பிரதேசம், அரியானா போன்ற மானிலங்களில் பிராமனர்கள் 30 சதவீதம் இருப்பவர்கள்.. அதனால்தான் வேறு வழியில்லாமல் மாயாவதி அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். தமிழ்நாட்டு 3 சதவீதத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சரியானதல்ல
35 சதவீதம் இருக்கும் பிராமணர்களை கணக்கிலெடுத்தீர்கள். மற்ற சாதியினர் எத்தனை சதவீதம்?
எத்தனை சதவீதம் தலித்துகள்?
எத்தனை சதவீதம் முஸ்லீம்கள்?
எத்தனை சதவீதம் கிருஸ்துவர்கள்?
எத்தனை சதவீதம் க்ஷத்திரியர்கள்?
எத்தனை சதவீதம் வைஷ்யர்கள்?

Anonymous said...

The constitution says classes not castes.You cannot argue that caste means class and viceversa.In Kerala and Karnataka muslims get OBC reservation.In Tamilnadu also
95% of muslims get reservation and many christians also get reservation.Caste can be a starting point but that alone should not be the basis.

Anonymous said...

துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.

What is the source and how authentic it is.The govt does
not publish any data on civil servants on the basis of caste.
In 1990 there was no reservation
for OBCs.So govt had only two
classifications - SC/ST, and others
among Hindus.
This figure is a humbug because loksabha has 544 memebers and the
no. of judges in supreme court is
more than 20.

thiru said...

//Balaji பாலாஜி said...
1990-இல் பலதுறைகளில் பிராமணர்கள் இத்தனைபேர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். இவர்கள் எல்லோரும் தகுதியில்லாமலா அந்தப் பதவிகளை அடைந்தார்கள்? தகுதியுள்ள மற்ற சாதியினர் இந்தப் பதவிகளை அடைவதற்கு ஏதாவது தடை இருந்ததா?//

மற்ற சாதிகளில் தகுதி உள்ளவர்கள் என சொல்லுகிறீகளா? காலங்காலமாக கல்வியை மறுத்து, பெரும்பான்மை கல்வியிடங்களையும் அபகரித்து விட்டு மற்ற சாதிகள் தானாக திறமையாக வருவார்கள் என எதிர்பார்ப்பது ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன? வேலைக்கு கல்வி அடிப்படை. கல்வியை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்ததால் தான் ஆதிக்க சாதியினரின் நிர்வாக ஆதிக்கம் 1990ல் புள்ளிவிபர கணக்கு சொல்லும் அளவு இருந்தது.

//'பிற்படுத்தப்பட்ட சாதிக்' குழந்தைகள் பொருளாதாரக் காரணங்களால் பிராமணக் குழந்தைகளை போல் நல்ல பள்ளிகளில் படிக்கமுடிவதில்லை. அவர்களின் பெற்றோர், உறவினர், சுற்றத்தார் என எல்லோரும் உயர்ந்த நிலைகளில் இல்லாததால் அவர்களுக்குத் தேவையான ஊக்கமும் வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை. இந்த காரணங்களால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அவர்களை மேனிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

//அப்படியில்லாமல் இதோ இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்களே. அவர்கள் முன்னோர்கள் செய்ததாக நம்பப்படும் கொடுமைகளுக்குகாக இவர்களை பழிவாங்குவோம். அவர்களை மட்டம் தட்டினால் நாம் தாமாகவே மேலே வந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளாலாம்! எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்கிற உங்களுடைய புள்ளிவிவர வாதம் நன்றாகவாயிருக்கிறது?//

எந்த சாதியையும் மட்டம் தட்டவில்லை. பெரும்பான்மை மக்களை மட்டம் தட்டி சாதி அடக்குமுறையால் பயனடைந்து கல்வி, வேலையை ஆக்கிரமித்து அதன் மூலம் செல்வாக்கும், செல்வமும் குவித்தவர்களை சமூகம் கேள்வி கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஆக்கிரமிப்பாளனுக்கு கடிவாளம் அவசியம். அந்த கடிவாளம் தான் இடப்பங்கீடு. ஆதிக்கச்சாதி மனங்களுக்கு இது விளங்காது. விளங்க அவசியமும் இல்லை.

//பொறாமை எவ்வளவு ஆபத்தானது மோசமானது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயொரு 'கீழ்சாதிக் கிழவன்' சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். சமயமிருந்தால் அதைப் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.//

அப்போதும் கீழ்சாதி என சொல்லுவதில்ல் ஆதிக்கச்சாதி திமிர் வெளிப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியில், வேலையில் இடப்பங்கீடு வழி உரிய இடம் கிடைத்துவிடுமோ என பொறாமையும் ஆத்திரமும் பிடித்து அலைவது யாரென்பது நாடறியும் பாலாஜி!

thiru said...

//Anonymous said...
உங்கள் புள்ளி விவரம் சரியானது என்றே கருதுகிறேன்..
உத்தர பிரதேசம், அரியானா போன்ற மானிலங்களில் பிராமனர்கள் 30 சதவீதம் இருப்பவர்கள்.. அதனால்தான் வேறு வழியில்லாமல் மாயாவதி அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். தமிழ்நாட்டு 3 சதவீதத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சரியானதல்ல
35 சதவீதம் இருக்கும் பிராமணர்களை கணக்கிலெடுத்தீர்கள். மற்ற சாதியினர் எத்தனை சதவீதம்?
எத்தனை சதவீதம் தலித்துகள்?
எத்தனை சதவீதம் முஸ்லீம்கள்?
எத்தனை சதவீதம் கிருஸ்துவர்கள்?
எத்தனை சதவீதம் க்ஷத்திரியர்கள்?
எத்தனை சதவீதம் வைஷ்யர்கள்?//

இந்தியாவில் 35 சதவிகிதம் பிராமணர்கள் என எந்த புள்ளிவிபரம் சொல்லுகிறது? உங்களது மற்ற கேள்விகள் இந்த பதிவிற்கு அவசியமில்லாதது. இடப்பங்கீடு பற்றிய தற்போதைய பிரச்சனை பிற்படுத்தப்பட்டோர் பற்றியது.

இவ்வளவு கேள்வி கேட்கும் உங்களுக்கு சொந்த அடையாளத்துடன் வர என்ன தயக்கம்?

thiru said...

//Anonymous said...
The constitution says classes not castes.You cannot argue that caste means class and viceversa.In Kerala and Karnataka muslims get OBC reservation.In Tamilnadu also
95% of muslims get reservation and many christians also get reservation.Caste can be a starting point but that alone should not be the basis.//

நண்பரே,

அரசியல் சட்டம் சொல்லுவது இங்கே தருகிறேன் Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes."

இதில் பொருளாதாரத்தின் பிந்தங்கிய நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை. சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு என்பது தான் இதன் பொருள்.

thiru said...

//Anonymous said...
What is the source and how authentic it is.The govt does
not publish any data on civil servants on the basis of caste.In 1990 there was no reservation
for OBCs.So govt had only two
classifications - SC/ST, and others
among Hindus.//
பத்திரிக்கையில் வெளிவந்த தகவல் என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன். இதில் அரசு பற்றிய பேச்சு வரவில்லை. சாதிவாரியாக நிர்வாக பதவிகளில் இருப்பவர்கள் பற்றி ஒரு பிரபலமான பத்திரிக்கையால் கணக்கெடுக்க முடுயாது என சிறுபிள்ளைத்தனமான வாதங்களை வைக்காதீர்கள்.

//This figure is a humbug because loksabha has 544 memebers and the
no. of judges in supreme court is
more than 20.//

லோக்சபாவில் 530 உறுப்பினர்களிடம் எடுத்த புள்ளிவிபரத்தில் 190பேர் பிராமணர்கள். லோக்சபாவில் அதிகபட்சமாக 544 உறுப்பினர் எண்ணிக்கை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். லோக்சபாவில் 530 உறுப்பினர் தான் என எங்கும் குறிப்பிடவில்லை.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கைக்கும் இது பொருந்தும்.

Balaji Chitra Ganesan said...

>>காலங்காலமாக கல்வியை மறுத்து, பெரும்பான்மை கல்வியிடங்களையும் அபகரித்து விட்டு மற்ற சாதிகள் தானாக திறமையாக வருவார்கள் என எதிர்பார்ப்பது ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன?

சாதி அடிப்படையில் ஒருவருக்கு கல்வி மறுத்த காலமெல்லாம் போய் குறைந்தது இரண்டு தலைமுறை ஆகிவிட்டது. இப்போது அவ்வாறு கூறுவதில் பழிவாங்கல் மட்டுமே தெரிகிறது.

இடஒதுக்கீட்டில் உள்ள நியாயத்தை எவறாலும் மறுக்கமுடியாது. அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதைத்தான் விவாதித்து காலத்தை வீனடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாதிவெறியைக் கிழப்பிவிடுவதும், பழிவாங்கலை ஒரு காரணமாகக் கொடுப்பதும் குட்டையை குழப்பும் முயற்சியே என்று நினைக்கிறேன்.

மற்றபடி திருவள்ளுவரை நான் 'கீழ்சாதிக் கிழவன்' என்று சொன்னது அந்த வார்த்தை எவ்வளவு பொருளற்றது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

thiru said...

//srinidhi said...
"பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைத்தது.

Yes, it included WOMEN also under backward classes.Mr.Thiru hides this fact.Are you afraid that if women are given reservation benefits they will gain more than
what you OBC males will get.//

பாலின அடிப்படையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை பற்றியதல்ல இந்த பதிவு. மண்டல் குழுவும் அதன் அறிக்கையும் பாலின வேறுபாடுகளால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பற்றி ஆராயவில்லை.

சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டு சமூக மற்றும் கல்வியில் பின்தங்க வைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு சமூக திட்டங்கள் உருவாக்கவே மண்டல் குழு ஏற்படுத்தப்பட்டது. மண்டல் குழுவின் அறிக்கை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடப்பங்கீடு என பரிந்துரைக்கும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஆணும், பெண்ணும் அடங்கும் என்ற சிறு உண்மை கூட தெரியாமலா இருக்கிறீர்கள்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் மொத்த இடஒதுக்கீட்டிற்கு முதலில் உங்களைப் போன்ற ஆதிக்ககுரல்கள் ஒத்துக்கொள்ளட்டும். அந்த 27 சதவிகிதம் இடப்பங்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு தனி இடப்பங்கீடு அமைப்பதை எதிர்க்க யாரும் இல்லை.

பொதுவாக பெண்களுக்கு என தனி இடப்பங்கீடு என்பது உங்கள் கருத்தாக இருந்தால் அதுபற்றி தனியாக விவாதிப்பது அவசியம். பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து பகுதியிலும் சமஉரிமை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களுக்கு இடப்பங்கீடு பற்றி இந்த பதிவில் பேசவில்லை. காரணம் அது தனியாக பேசப்படவேண்டிய விசயம். பெண்களுக்கான இடப்பங்கீடிற்கு நான் எதிரியுமல்ல.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு பற்றிய இந்த பதிவில் அதை பற்றி விவாதிப்பது தான் நேர்மையானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மறுக்க இப்படி ஒரு தந்திரமான திசைமாற்றுதல் அவசியமில்லை.

வசதியாக உள்நோக்கம் கற்பித்து இடப்பங்கீடு பற்றிய வாதத்தை திசைதிருப்ப என் மீது கல்லெறியும் உங்கள் தந்திரத்தை பாரட்டுகிறேன். பேஸ் பேஸ் மனுதர்ம ஆதிக்கம்.

//Are you
afraid that smart and intelligent
women irrespective of caste and religion will become equals to men.In USA affirmative action(AA) includes women.It benefits me, a woman from India as I come under two categories-woman,persons from asia-pacific region.In posts where
these two categories are under/un-represented AA is applicable.

Is not shameful that while
USA includes women in 'reservation' but India does
not.Males like you will not write
about reservation for women as it
affects your vested interests.But you will write about this issue and that issue and pretend that
you are a feminist.Why is that men
like you, who wear a progressive mask are often hypocrites when it comes to reservation for women.//

ஆணாதிக்கம் உட்பட எந்த ஆதிக்கத்திலும் ஆர்வமோ, ஆசையோ இல்லை. இதுவரை துவங்காத உங்கள் வலைப்பக்கத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழுதுவீர்கள் என நம்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை பற்றி பேசும் என்னைப் போன்றவர்களை பார்த்து கேள்வி கேட்கும் நீங்கள் பெண்ணின விடுதலை பற்றி பலர் எழுதிய பதிவுகளில் கலந்துகொள்ளாமல் எங்கு ஒளிந்து கொண்டீர்கள்?

பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு ஆதரவு திரட்ட
போலி முகவரியிலிருந்து எதிர்ப்பு காட்ட உங்களால் மட்டும் எப்படி முடிகிறதோ? உங்கள் கருத்தை சொல்லுவதில் இவ்வளவு அவநம்பிக்கையும், அச்சமுமா?

BadNewsIndia said...

***உதாரணமாக: ஊனமுற்றவர்களுக்கு சமநீதி கிடைக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஊனத்தை அடிப்படையாக வைத்து தானே திட்டங்கள் இயற்ற இயலும்? ****

யோசித்துப் பார்த்தால், ஊனமுற்றவர்களில் கூட பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம் என்பேன்.
பணம் இருப்பவனுக்கு, அரசின் உதவி அவசியம் இல்லை.
ஏழையாக இருப்பவன், ஊனமாகவும் இருந்தால், உதவியை இரட்டிப்பு செய்யலாம்.

இவ்வளவு புள்ளி விவரங்களுடன், அழகா எழுதியதர்க்கு நன்றி திரு.

உங்கள் புள்ளிவிவரப்படி, ப்ராமணர்கள் உயர் பதவியில் பலர் இருக்கிறார்கள்.சரி.
சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்தால், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், உயர் பதவிக்கு வருவார்கள் என்று கணிக்கிறீர்கள்.
இப்போ, 50 வருடத்திர்க்கு பிறகு, XYZ என்ற தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் உயர் பதவிக்கு வந்து, அவர்கள், மற்றவர்களை ஒடுக்கினால் பரவால்லியா?
50 வருடத்திர்க்கப்பறம், இதே ப்ரச்சனை வராதா? :)
நிரந்தரத் தீர்வா இது?

ஏழை உயர வழி செய்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும், open system உருவாகி clarity கிடைத்தாலே போதும்.
யாரும் யாரையும் ஏய்க்க முடியாமல் எல்லாம் சரியாக வழிபிறக்கும்.

clarity கிடைக்க, அனைவரும், 'ஏன்' என்று கேள்வி கேட்டு, அதிகாரிகளை ஒழுக்கமாய் இருக்கச் செய்தாலே போதும்.

சாதி வழி ஒதுக்கீடு, நீங்கள் சொல்லும் காரணத்துக்காக என்றால், அது சரியான தீர்வல்ல.

தவறிருந்தால், சுட்டிக்க்காட்டவும். நன்றி.

thiru said...

// BadNewsIndia said...
***உதாரணமாக: ஊனமுற்றவர்களுக்கு சமநீதி கிடைக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஊனத்தை அடிப்படையாக வைத்து தானே திட்டங்கள் இயற்ற இயலும்? ****

யோசித்துப் பார்த்தால், ஊனமுற்றவர்களில் கூட பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம் என்பேன்.
பணம் இருப்பவனுக்கு, அரசின் உதவி அவசியம் இல்லை.
ஏழையாக இருப்பவன், ஊனமாகவும் இருந்தால், உதவியை இரட்டிப்பு செய்யலாம்.//

BNI,

சாதியால் தான் பெரும்பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். அந்த புறக்கணிப்பை சாதிய வைத்து தான் அடையாளம் காண இயலும். விதிவிலக்குகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டே இருப்போமேயானால் நமது சமூகம் மாறப்போவதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு என்ன திட்டங்களை ஏற்படுத்தலாம் எனவும் சிந்திப்பது அவசியமே. கல்வியில், வேலைவாய்ப்பில் பின் தங்கிய மக்களுக்கான இடப்பங்கீடு வழி சமூக முன்னேற்றம் ஒரு நோக்கம். இது சாதியை அடிப்படையான காரணியாக கொண்டே அமைய முடியும்.

வருமானத்தில் பின் தங்கிய மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் என்பது இன்னொரு நோக்கம். இரண்டு வேறுபட்ட இலட்சியங்களையும் அடையும் திட்டங்களும் அவசியம் தான், ஆனால் இரண்டையும் குழப்ப அவசியமில்லை.

இவை பற்றிய எனது கருத்துக்களை தொடர்ந்து எழுதும் பதிவுகளில் எழுதுவேன்.

//இவ்வளவு புள்ளி விவரங்களுடன், அழகா எழுதியதர்க்கு நன்றி திரு.

உங்கள் புள்ளிவிவரப்படி, ப்ராமணர்கள் உயர் பதவியில் பலர் இருக்கிறார்கள்.சரி.
சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்தால், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், உயர் பதவிக்கு வருவார்கள் என்று கணிக்கிறீர்கள்.
இப்போ, 50 வருடத்திர்க்கு பிறகு, XYZ என்ற தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் உயர் பதவிக்கு வந்து, அவர்கள், மற்றவர்களை ஒடுக்கினால் பரவால்லியா?
50 வருடத்திர்க்கப்பறம், இதே ப்ரச்சனை வராதா? :)
நிரந்தரத் தீர்வா இது?//

BNI,

இடப்பங்கீடு நிரந்தரமாக அமையவேண்டும் என வாதிடவில்லை.
SC,ST மக்களுக்கு (தலித்) இடப்பங்கீடு கொடுத்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று எங்காவது அவர்கள் பிறரை அடக்கி வருகிறார்களா?
குறிப்பிட்ட கால எல்லைகளுக்கிடையில் அந்ததந்த மாவட்ட அல்லது பூக்கோள அளவில் சாதிகளின் சமூகமாற்ற நிலைகளை கணக்கிலெடுத்து சமூகத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். ஆட்சியாளர்களது (அதிகார வர்க்கம் மற்றும் அரசு) கடமையே இது தானே.

//ஏழை உயர வழி செய்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும், open system உருவாகி clarity கிடைத்தாலே போதும்.
யாரும் யாரையும் ஏய்க்க முடியாமல் எல்லாம் சரியாக வழிபிறக்கும்.

clarity கிடைக்க, அனைவரும், 'ஏன்' என்று கேள்வி கேட்டு, அதிகாரிகளை ஒழுக்கமாய் இருக்கச் செய்தாலே போதும்.

சாதி வழி ஒதுக்கீடு, நீங்கள் சொல்லும் காரணத்துக்காக என்றால், அது சரியான தீர்வல்ல.
//

இல்லை. இது குறிப்பிட்ட சில சாதியினரின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். இதற்கு கடந்த காலங்கள் உதாரணமாக இருக்கின்றன. விரிவான பதிலை அடுத்த பகுதிகளில் எழுதுகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com