Wednesday, November 01, 2006

தமிழீழத்தில் சமாதானம் வருமா?

இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஜெனிவாவில் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கமான முடிவுகள் எதுவுமற்று முடிந்துள்ளது. தங்களது ஆலோசனை குழுவின் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு புலிகளின் பிரதிநிதிகள் கிளிநொச்சி விரைந்தனர். இலங்கை அரசு தரப்பும் நாடு திரும்பியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவது மக்களின் அன்றாட அவலங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்குமா என ஏங்கிய மக்கள் மீண்டும் தொடர்ந்து அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் நாடு திரும்பும் முன்னரே விமானத்தாக்குதலை தொடுத்து தனது இராணுவ வெறியை காட்டுகிறது இலங்கை அரசு. பேச்சுவார்த்தையில் தீர்வை உருவாக்கவேண்டும் என்பதில் இரு தரப்பும் நம்பிக்கை வைத்திருக்கிறதா? இனப்பிரச்சனைக்கு தீர்வு வருமா? என பல கேள்விகள் மீண்டும் எழுகிறது.

2001, ஜூலை 24 இல் கட்டுநாயகா விமானதளத்தில் தாக்குதலை தொடுத்து 12 விமானங்களை தகர்த்து இலங்கை அரசை கதிகலங்க வைத்தனர் விடுதலைப்புலிகள். இந்த இழப்பு இலங்கையின் விமானப் படைக்கு மட்டுமல்ல, இலங்கை பயணியர் விமான சேவை நிறுவனத்திற்கும் பலத்த பொருளாதார நட்டத்தை தந்தது. சுற்றுலா வருமானம் குறைந்து பொருளாதாரத்தில் ஓட்டை விழுந்த பிறகு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமே எதிர்பாராத விதத்தில் முதலில் வேலுபிள்ளை பிரபாகரன் வன்னியிலிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு தள்ளப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கே வவுனியாவிற்கு சென்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் வழி புலிகள் இராஜதந்திர அரங்கில் தங்களது தடங்களை ஆழமாக பதிய துவங்கினர். ஓஸ்லோ, கொழும்பு, புது தில்லி, வன்னி, லண்டன் என முக்கிய நகரங்களுக்கு பறந்து இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய நார்வே நாடும் அதில் முக்கிய பங்கெடுத்த நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெம் அவர்களும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாராட்டுதலை பெற்றனர். புலிகள் இயக்கம் பெரிய வெற்றியை இராணுவ ரீதியாக பெற்றும் எதற்காக சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்?

செப்டம்பெர் 11 அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் உலகில் விடுதலைப் போராட்டங்களையும் தீவிரவாத கண்ணாடியில் உலக ஆதிக்க அரசுகள் பார்க்க துவங்யிருந்த நேரமது. இராணுவ தாக்குதல் நடவடிக்கையில் தொடர்ந்து புலிகள் இயக்கம் ஈடுபட்டு வந்தால் "பயங்கரவாதிகள்" என்ற இலங்கை அரசின் பரப்புரைக்கு உலக அரங்கில் ஆதரவு பெருக வாய்ப்பிருந்தது. அதனால் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள், ஆதரவு அமைப்புகள், வாய்ப்புகள் இலங்கை அரசின் இராஜதந்திர வலையில் இறுக்கப்பட வாய்ப்பிருந்தது. பிரச்சனைகளை எதிர்கொண்டு தங்களது இலட்சியத்தில் செல்ல புலிகள் இயக்கத்திற்கு புதிய அணுகுமுறைகள் அவசியமானது. இனப்பிரச்சினையின் துவக்க காலம் முதல் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தாலும் புதிய அணுகுமுறையை இந்த முறை புலிகள் இயக்கம் கடைபிடிக்க துவங்கியது. இராணுவ ரீதியாக இலங்கை அரசை சமநிலையில் கொண்டுவந்து சமாதான மேசைக்கு இழுத்துச் சென்றது பிரபாகரன் இட்ட கையெழுத்து.

தாய்லாந்து, ஜப்பான், ஐரோப்பா என தொடர்ந்த பயணங்களை தங்களது இராஜதந்திர நடவடிக்கை களங்களாக புலிகள் மாற்றுவதை கண்ட இலங்கை அரசு கதிகலங்கியது. ஐரோப்பா பயணங்களின் போது பல நாட்டு அமைச்சர்கள், நிறுவனங்களை சந்தித்தது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க பயணங்களையும் புலிகளின் பிரதிநிதிகள் மேற்கொண்டனர். சர்வதேச அரங்கில் தமிழர்களின் பிரச்சனை பற்றி பேசக்கூடிய ஒன்றான நிலைக்கு தள்ளப்பட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் பலவித நிகழ்ச்சிகளால் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

இந்த பிரச்சனைகளால் பதறிய படியே இந்திய அரசின் உதவியை நாடிய இலங்கை அரசு அதில் வெற்றியும் கண்டது. ஐரோப்பாவின் முக்கிய நகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாற்றப்பட்டு இலங்கை அரசுக்கு உதவக்கூடிய அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்தன. இந்திய உளவு அமைப்பான 'ரா' இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதாக ஆய்வாளர்கள் கருதப்படுகிறது. இலங்கை தனது உளவு வேலைகளை நகர்த்தி பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மானை வளைத்துப் போட்டு புலிகள் இயக்கத்தில் பிரச்சனையை உருவாக்க துவங்கியது. தொடர்ந்து கருணா புலிகள் இயக்கத்தால் நீக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டர்.

கருணாவை தனது துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அரசியல் விளையாட்டை துவக்கிய இலங்கை அரசு புலிகளின் முக்கிய தளபதிகள், ஆதரவாளர்கள் என பலரை கொன்று குவித்தது. யுத்தகாலத்தில் இழக்காத புலிகள் ஆதரவாளர்களின் உயிர் சமாதான ஒப்பந்த காலத்தில் பறிக்கப்பட்டது. மறைந்திருந்த தாக்குதலுக்கு பலியான புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் அவர்களில் கௌசல்யன் குறிப்பிடத்தக்கவர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத் திருப்பலியில் பங்குகொண்ட போது தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இராணுவ ஆய்வாளரும் பத்திரிக்கையாளருமான தராக்கி என்கிற சிவராம். பல வழிமுறைகளில் இராணுவம் மற்றும் துணைக்குழுக்களின் தாக்குதலில் படுகொலை செய்யாப்பட்ட பல ஆயிரம் பொதுமக்கள். படுகொலைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளான இளம்பெண்கள். விமான தாக்குதலுக்கு பலியான செஞ்சோலைக் குழந்தைகள் என தமிழர் தரப்பில் பாதிப்பின் பட்டியல் நீளமானது.

பதிலுக்கு இலங்கை சிங்கள தரப்பில் கொல்லப்பட்ட இராணுவ தளபதிகள், இராணுவ பல நூறு சிப்பாய்கள், பொதுமக்கள், லட்சுமண் கதிர்காமர் என பாதிப்பின் பட்டியல் நீளுகிறது. யுத்தத்தினால் இலங்கை அரசின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசினால் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக வெல்லும் ஆற்றல் இலங்கை இராணுவத்திடம் இல்லை என்பதை போர்க்கள நிலமைகள் விளக்குகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக நாடுகளும் நிறுவனங்களும் வழங்கிய நிதியைக் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்காமல் ஊழலில் திளைக்கிறார்கள் தென்னிலங்கையின் அதிகார மற்றும் அரசியல் வர்க்கம். சுனாமி நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த உருவாக்க ஒத்துக்கொண்ட அமைப்புமுறையை உருவாக்கவிடாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து அரசியல் மாற்றம் உருவாக்கினார் சந்திரிகா குமாரதுங்கா. ரணிலின் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு இலங்கை இனப்பிரச்சினையில் தீவிர இனவாத அணுகுமுறையை கடைபிடிக்கிற மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சி உருவானது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை கேள்வியெளுப்பும் விதமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, இனப்பிரச்சினையில் சிக்கலை உருவாக்கியது. இடையில் மாவிலாறு அணை, சம்பூர் என பல முக்கிய பிரச்சினைகள் போராக வெடித்தது. இருந்தும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இருதரப்பும் முறித்ததாக அறிவிக்கவில்லை. வடகிழக்கு இலங்கையில் நடந்துவந்த தாக்குதல்கள் தென்னிலங்கைக்கும் விரிவாக தொடங்கியது.

இந்த சூழலில் தான் சமாதான மேசைக்கு இருதரப்பையும் அழைத்து வந்தது நார்வே தரப்பினர். மனிதாபிமான பிரச்சனைகளை தீர்க்காமல் இனப்பிரச்சனையின் முக்கிய விடயங்கள் பற்றி பேச தமிழர் தரப்பினர் மறுத்தனர். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் முக்கிய பாதையான A9 நெடுஞ்சாலையை மூடி தமிழர் பகுதிகளுக்கு உணவு, கட்டுமான பொருட்கள், விவசாயப் பொருட்கள் செல்லாதவாறு தடுத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இலங்கைத்தீவு முழுதும் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, ஒற்றை நாடு என்ற இலக்கில் தான் தீர்வு என சொன்னதையே சொல்லி வருகிறது இலங்கை அரசு. அதற்கு ஆதரவாக புதுதில்லியின் அதிகாரவர்க்கமும் சில பார்ப்பனீய பத்திரிக்கைகளும் உண்மை நிலையை மறைத்து தனது அதிகாரப்பசிக்கு பொய்மூட்டைகளை பரப்பிவருகிறது. இலங்கை முழுவதும் ஒரே நாடாக தான் இருக்கிறதா? அப்படியானால் தனது ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் மக்களை விமானத்தாக்குதல், பொருளாதாரத் தடைகள் என கொன்று குவிப்பது ஏன்? இலங்கைக்கும், வடக்கு பகுதிக்குமாக பல தடவைகள் சென்று வந்ததில் கண்ட உண்மை இலங்கை என்கிற தீவில் இரண்டு ஆட்சிகள், நிர்வாகம், சட்டம் செயல்படுகிறது. ஒன்று தென்னிலங்கையை ஆளுகிற மகிந்தராஜபக்சா அரசு. வடக்கிலும் கிழக்கிலுமாக கணிசமான பகுதியை உள்ளடக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரமும் ஆட்சியும் இன்னொன்று. சுமார் 15 அண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் வேறு ஒரு அறிவிக்கப்படாத நாடாக காவல்த்துறை, நீதிமன்றம், கல்வி நிலையங்கள், அமைப்புகள், இராணுவ பலம் என எழுந்து நிற்கிற மக்களை அங்கீகரிப்பது தான் இலங்கையின் சமாதானத்திற்கான தொடக்கமாக அமையமுடியும்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்புமுறையை காட்டி இலங்கை இனவாத அரசு தப்பிக்கப் பார்க்கிறது. பசியின் கொடுமையில் பதறுபவனுக்கு பஞ்சு மிட்டாய் கடையை காட்டும் இந்த வித்தை இந்தியாவின் பார்ப்பனீய அதிகாரவர்க்கத்திடமிருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. சுயாட்சி அதிகாரம் கூட பகிர்ந்து கொள்ள மனமில்லாத சிங்கள இனவாதம் இலங்கைத் தீவை பிரிந்து தமிழீழத்தை உருவாக்க முன் வருமா என்கிற கேள்வி சுனாமி அலையாய் எழுகிறது. அடக்குமுறையை கையாண்டவர்கள் எந்த நாட்டிலும் தாமாக முன் வந்து சுதந்திரநாட்டை உருவாக்கினார்களா? வரலாற்றில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் மிகவும் அரியது. போராட்டமும், மக்களின் எழுச்சியும் அடக்குமுறையாளர்களை பணிய வைத்திருக்கிற வரலாறுகள் தான் ஏராளம். தாமதமாக இருந்தாலும் காலச்சக்கரம் இப்போது தமிழர்கள் பக்கம் சுழல்கிறது. முந்தைய காலங்களை விட தற்போது உலகநாடுகள் கவனம், ஐக்கிய நாட்டு சபையின் அமைப்புகளின் பார்வை என இலங்கைத் தீவில் மையம் கொள்கிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக பல அறிக்கைகளும், கண்டனங்களும் எழுகிறது. ஐ.நா மனித உரிமை கண்காணிப்பு மையம் ஒன்றை இலங்கையில் நிரந்தரமான திறக்க கோரிக்கைகள் எழுகின்றன. இவை அனைத்தும் இலங்கை அரசு மீது உலகம் தனது பார்வையை வைத்திருப்பதன் அறிகுறி.

தமிழர்களின் ஊடகங்களும், மனித உரிமை மையங்களும் பல மொழிகளில் உலக நாடுகளின் மக்களுக்கு தங்களது அவலங்களை கொண்டு செல்வது இன்றைய காலத்தின் அவசியம். ஐ.நா அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை குழுவினருக்கு தமிழ் மக்களின் அவலங்களை தொடர்ந்து முறையிடல் இன்றைய உலக அரசியல் சூழலில் மிகவும் அவசியமாகிறது. நவம்பர் 27ல் மாவீரர் நாளில் பிரபாகரன் ஆற்றுகிற உரைக்காக தமிழீழ மக்கள் மட்டுமல்ல நாடுகளின் தலைமையும் காத்திருக்கிறது. உலகமெங்கும் தமிழர்கள் தங்களது மண்ணின் விடுதலைக்காக மடிந்த வீரர்களை வணங்க ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்களது ஏக்கமும் கனவும் சுதந்திர தமிழீழமும், சமதான வாழ்வும். ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இந்த மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுமா?

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

சில திருத்தங்கள்: ரணில் வவுனியாவிற்கு வந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ; கொல்லப்பட்டது கெளசல்யன் , தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழக பொறுப்பாளர் கரிகாலன் அல்ல. ;செம்பூர் அல்ல , சம்பூர்

thiru said...

வருகைக்கும், திருத்தங்களுக்கும் நன்றி!

வன்னியன் said...

நல்ல கட்டுரை.
எனினும் முழுமை பெற ஒரு திருத்தம்.
கட்டுநாயக்கா தாக்கப்பட்டது 2001 ஜூலை 24.

thiru said...

வருகைக்கும் திருத்ததிற்கும் நன்றி வன்னியன்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com