Wednesday, September 15, 2004

உறவுக்கு உயிர்கொடுங்கள்

றவுகளுக்குள் தான் எத்தனை மாற்றங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்புகளும் ஊர், சொந்தம், உறவு, குடும்பம் என அனைத்தையும் அசைத்து பார்த்திருக்கிறது. கடந்த வருடம் விடுமுறைக்கு சென்றிருந்த வேளை நண்பர்களை பார்க்க அரிதாக இருந்தது, குழந்தைகளை வெளியே காணமுடியவில்லை. என்ன தான் நடக்கிறது என ஊரில் கவனித்தபோது... தொலைகாட்சி தொடர்கள் கட்டிவைத்திருக்கும் மாயம் புரிந்தது. இதுவா நாம் வாழும் உலகம்? என் நினைவுகள் 20 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றது.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி சிலருடைய வீடுகளில் தான் இருந்தது. அதுவும் பெரும்பாலும் கருப்பு வெள்ளை தொலைகாட்சி. அரசு ஒளிபரப்பிய இந்திமொழி தொடர்களையும், செய்திகளையும், திரைப்படங்களையும் தாங்கிவந்தன. மக்களின் உறவு எப்படி இருந்தது? பொழுதுபோக்கு என்ன? வீடுகளுக்கு மத்தியில் சுற்றுசுவர்களோ வேலியோ அதிகம் இல்லாமல் திறந்த இடங்களாக இருந்ததால் குழந்தைகள் ஓடி விளையாடுவதும், பெரியவர்கள் கூடி கலந்து உறவுகளையும், கருத்துக்களையும் பரிமாறிய காலம் அது. ஒருவர் வீட்டில் சுகமோ, துக்கமோ ஊரே வந்து உதவி செய்து வாழ்ந்த காலம். அந்த சாதாரண மனிதர்கள் வாழ்வு தான் இப்போது எப்படி மாறியிருக்கிறது?

வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுமாக பல வடிவங்களில் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். காலை எழுந்ததும் செய்திகளை படிக்கிறோமோ இல்லையோ திரைப்பாடல்களையும், கன்ணீர் சிந்தும் தொடர்களையும் பார்ப்பதில் குறை வைப்பதில்லை. பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் அதிகபடியான வன்முறை, வக்கிரம், மூடநம்பிக்கை, முறைகேடுகள் என சமூகத்துக்கு எதிர் கருத்துக்களை தான் பரப்புகிறது. பொருட்களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கும் உண்மையான தரத்திற்கும் பல வேறுபாடுகள்! தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் திரைப்படங்கள், திரைநட்சத்திரங்கள், திரைப்பாடல்கள் என வந்ததை சுற்றி சுற்றியே வருகிறது. உலகம் என்ன சினிமா என்ற ஊடகத்தில் சுருங்கிவிட்டதா? நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல்.. என எத்தனையோ விடயங்களை பதிவு செய்ய வாய்ப்பிருக்கையில். கவர்ச்சிகட்டிலில் போதையுடன் கிடக்கிறது தமிழ்த்தொலைகாட்சிகள்.

மத சடங்குகளில் அதிகம் நாட்டமுள்ளவர்கள் கூட, கோவிலுக்கு போகும் நேரத்தில் தொலைகாட்சி தொடரில் மூழ்கியிருக்கிறார்கள். வீட்டில் விருந்தினர் வந்தால் என்ன, விடுமுறைக்கு பிள்ளைகள் வந்தால் என்ன முதலில் "சித்தி", "மெட்டி ஒலி", "அண்ணாமலை" பார்த்தபிறகு தான் மற்றதெல்லாம். பகல் முழுதும் திரைப்படங்கள், இரவில் தொலைகாட்சி தொடர்கள், நள்ளிரவில் சிரிப்பு நிகழ்சிகள் என தொலைகாட்சி பெட்டிக்குள் நமது சிந்தனைகளும், குடும்பமும் அடக்கப்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் பல வீட்டு குழந்தைகள் ஒன்றுகூடி ஒரு பொது இடத்தில் விளையாடுவதும், பலவிதமான விளையாட்டுக்களில் குழுவாக இணைந்து இன்பமாக செயல்படுவது வாடிக்கை. அது குழந்தைகளுக்குள் தன்னம்பிக்கை, நட்புறவு, குழுவாக இணைந்து செயல்படும் பண்பு, தலைமைத்துவம் இவற்றை வளர்க்க உதவும். தொலைகாட்சியை வெறித்து பார்த்துகொண்டே இருப்பதாலும், வீடியோ திரை விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் என்ன நன்மையோ? தகவல்தொடர்பு ஊடகங்களை நமது உறவை, சமூகத்தை பாதிக்காதபடி பயன்படுத்துவது நன்மைதான்! அதுவே நமது உறவை சிதைக்குமானால்?

இதனால் உனக்கென்ன என்கிறீர்களா? நேருக்கு நேராக உரையாடும் போது உறவு வலுப்படும். மனிதர்களுக்குள் ஆழமான அன்பும், ஈடுபாடும், மனித பண்புகளும் வலுப்படும். கண்கள் பேசும் மொழியை, உதடும் முகமும் படர விடும் மௌனமொழியை இழந்து வார்த்தைகள் மட்டுமாய் உறவுகள் மாறினால்... உறவுகள் சிதைவதும், வாழ்வு கொடுமையாவதும் தானே நடக்கும். உறவுக்கு உயிர்கொடுங்கள் உயிர் உள்ளவரை... வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

2 பின்னூட்டங்கள்:

Muthu said...

ரொம்ப நாளா எதுவும் எழுதலை போல தெரியுது :-)

NambikkaiRAMA said...

பலே பலே ! ஏன் தங்கள் பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கக்கூடாது?நண்பர்கள் வட்டம் விரியுமே!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com