Wednesday, September 15, 2004

நீரின்றி யாதுமில்லை!

தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா! ஆனால் சென்னை முதல் கிராமங்கள் வரை தண்ணீர் இல்லாமல் காலி குடங்களுடன் மக்கள் அணி அணியாக! வழக்கம் போல அரசியல் பசப்பு பேச்சுகள் கட்சித்தலைவர்கள் முதல் முன்னணி நடிகன் வரை தண்ணீரை பற்றி தான்! என் நினைவுகள் அழகிய என் கிராமத்தை நோக்கி...

எனது 13 வது வயது வரை எங்களது கிராமத்தில் சுமார் 75 குடும்பங்களுக்கு ஒரே ஒரு கிணறு மட்டும் இருந்தது. அப்போதெல்லாம் அம்மா, அக்கா, நான் என அனைவரும் மண் குடத்தை சுமந்து தண்ணீர் கொண்டுவருவது ஒருவித யாத்திரை. அந்த யாத்திரைக்குள்ளும் இருந்த ஒருவித சுகம் இப்போதும் இனிக்கிறது. தரைமட்டம் வரை கற்கள் பரப்பி இருந்த அந்த கிணற்றில் பலர் சுற்றி நின்று கமுகு பாளையில் கயிறு கட்டி கையால் தண்ணி எடுக்கும்போதே சுகங்களும், சோகங்களும் பரிமாறிய அந்த இனிய உள்ளங்கள் ஒவ்வொன்றும் இனிய கனவு போல இருக்கிறது. சில காலங்களில் கிணறு வற்றி போன வேளைகளில் வயல்வெளி பக்கமாக ஊறணி வெட்டி தண்ணீர் எடுத்தாலும் தண்ணீர் பஞ்சம் என்பது அப்போதெல்லாம் இல்லை. ஏன் இந்த தண்ணீர் தட்டுப்பாடு தற்போது மட்டும்? இந்த நிலை தொடர்ந்தால் நாம் என்னாவோம்?

பிறப்பு முதல் இறப்புவரை நீருக்கு தான் எத்தனை முக்கிய பங்கு நமது வாழ்வில். தாயின் பனிக்குடத்தில் நீருக்குள் தான் கரு வளர்ந்து குழந்தையாக பிறக்கிறது. அப்போது தொடங்கும் இந்த தண்ணீர் நேசம் வாழ்வின் இறுதிவரை வருகிறது. தண்ணீர் வெறும் சமையலுக்கும், தேவைகளுக்கும் மட்டும் பயன்படும் ஒரு பொருள் அல்ல. நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் ஒரு அதிசய சக்தி. அதனால் தான் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு தண்ணீர் மிகவும் புனிதமானது. பகுத்தறிவாளர்களுக்கு இது உயிர் வாழ அடிப்படை ஆதாரம்.

"தாகமாய் இருந்தேன் குடிக்க தண்ணீர் தந்தீர்கள்" இது பைபிள். தண்ணீர் புனிதமானது, பாவ அழுக்குகளை தண்ணீர் கழைந்துவிடும் என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கை. இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன்னர் முகம், கை, கால் என தண்ணீரால் சுதம் செய்த பின்னர் தான் தொழுகைக்கு செல்வார்கள். கோடிகணக்கான மக்கள் இந்தியாவில் மகா கும்பமேளாவில் தண்ணீரில் குளித்து எழுவது புனிதமாக நம்புவதை இந்தியாவில் காண்கிறோம். தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளில் தண்ணீருக்கு என தனி விழாவே இருக்கிறது. தண்ணீரால் ஒருவரை ஒருவர் நனைப்பது ஒருவித இன்பமான கொண்டாட்டம். புத்த மதத்தின் சடங்குகளில் தண்ணீருக்கு என தனி இடம் உண்டு. கிறிஸ்தவ மததில் இணையும் ஞானஸ்தானம் என்ற முதல் சடங்கில் தண்ணீர் சிறப்பான இடத்தை பிடிக்கிறது. தமிழர்கள் புது வீட்டில் குடியேறும் போது நிறைகுடம் தண்ணீருக்கு முதல் இடம். வீடு கட்டும் போது முதலில் பார்ப்பது தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதை தான். தண்ணீர் வாழ்வின் ஆதாரம். மனித உடல் 55% முதல் 70% வரை தண்ணீரால் நிரப்பப்பட்டது. ஆக நீரின்றி யாதுமில்லை இவ்வுலகில்! அதனால் தான் செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்க்கை உள்லதா என்பதை ஆராய, அங்கு நீர் இருக்கிறதா என்பதை முதலில் ஆராய்கிறார்கள் அறிவியலாளர்கள்.

நீர் மிகவும் சக்திமிக்கது, கத்தியால் நீரை வெட்டினாலும் இணைந்துவிடும். கற்பாறைகளையும் கரைத்துவிடும் தன்மை கொண்ட நீர் தான் வரும் காலத்தில் உலகில் யுத்தங்களை உருவாக்க போகிறது! ஏன்? தண்ணீர் தட்டுப்பாடு அந்த அளவு மனிதனை வாட்டி வதைக்க போகிறது.

கணக்கில்லாத அளவில் வளரும் நாடுகளில் தண்ணிரை உறிஞ்சி வியாபாரம் செய்கிற பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளும், தண்ணீர் வியாபார நிறுவனங்களும். கொக்கோ கோலா, பெப்சி-யின் வியாபாரம் அனைத்தும் தண்ணிர் சம்பந்தமானது! இந்த கம்பெனிகள் தண்ணிரை பயன்படுத்த எந்த கட்டுபாடுகளும் இல்லை. மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத வேளை, தண்ணீரை டாலராக மாற்றி கொள்ளையடிக்கிற இந்த பன்னாட்டு கம்பெனிகளை பற்றி எத்தனை பேர் கவலைப்படுகிறோம். நாம் குடிக்கிற ஒவ்வொரு குவளை பெப்சி, கோக் குளிர்பானங்களிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட தொழிலாழியின் இரத்தமும், ஏழைகளின் வியர்வையும் கலந்திருக்கிறது. எந்த அரசும் இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாத அளவு அதன் அதிகார கரங்கள் பரந்துகிடக்கிறது. எல்லோரும் புறக்கணித்தால் இந்த கரங்கள் தானாக வலுவிளக்கும் என்ற நம்பிக்கையில் கோக், பெப்சி முதலிய பானங்களை தவிர்த்துவருகிறேன். இது கணக்கற்ற உள்ளங்களில் பரவவேண்டும்! படர்கிறது!

பணம் சம்பாதிக்கும் நோக்கில் நீர் ஆதாரங்களை சேதப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் நடக்கிறது. நீர் மட்டத்தை பாதித்தாலும் கவலைப்படாமல் மணல் கொள்ளை நடக்க, அரசும் அதிகாரிகளும் துணை போகிறார்கள். தண்ணீரை சேமிக்கும் திட்டங்களை கிராம, நகர அமைப்புகள் நடைமுறை படுத்துகிறதா? மழையை பெருக்கும் காடுகளின் நிலை தான் என்ன? அனைத்து நாடுகளிலும் காடுகள் அழிப்பு நடக்கிறது. பல நகரங்களில் தண்ணீரை விற்று பணம் சம்பாதிக்கும் கும்பல் அரசியல் துணையுடன் வளமாக நடமாடுகிறது.

நகர்புறங்களில் தண்ணிரை பல அரசுகள் வினியோகம் செய்துவந்தது, இதில் குறைபாடுகள் இருந்தாலும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. இனி தண்ணீர் பெறும் உரிமையும் தனியாருக்கு நம்மையறியாமலே போகிறது. நமது நாடுகளின் இயற்கை வளமான தண்ணீரை வடிகட்டி நமக்கு விற்க ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் போட்டி போடுகிறது. தண்ணீரை தேக்க கட்டப்படுகிற அணைகள் இதுவரை அரசுக்கு சொந்தமானது (அரசு என்றால் அது மக்களுக்கு சொந்தம்!). இனி நீர்தேக்கங்களும், அதில் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களும் தனியார் நிறுவனங்களுக்கு உரிமையாக போகிறது! யார் இதனால் இலாபமடைவது?

  • உலக அளவில் 1.1 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. (ஐ.நா மனித மேம்பாட்டு அறிக்கை 2002)
  • 2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தேவையான அளவு சுத்தமான குடிநீர் இருக்காது. (உலக வங்கி 2002)
  • 2050 இல் உலக மக்களில் 45% பேர் (4.2 பில்லியன்) நபருக்கு தினமும் 50 லிட்டர் நீர் கிடைக்காத நாடுகளில் வாழ்வார்கள் (ஐ.நா உலக மக்கள்தொகை அறிக்கை 2001)
  • தண்ணீர் சம்பந்தமான தடுக்கப்படக்கூடிய நோய்களினால் வளரும் நாடுகளில் தினமும் 10,000 முதல் 20,000 வரை குழந்தைகள் உயிரிளக்கிறார்கள் (உலக சுற்றுபுறசூழல் செய்தி, ராய்ட்டர் செய்தி நிறுவனம் 2002)
  • 95 % கழிவுகளும், 70% ஆலைக்கழிவுகளும் சுத்தைகரிக்காமலே வளரும் நாடுகளின் நீர்நிலைகளில் கலக்கிறது. (ஐ.நா உலக மக்கள்தொகை அறிக்கை 2001)

என புள்ளி விபரங்கள் நீண்டுகொண்டே போகிறது. இவற்றிற்கு என்ன காரணம்? இவை மாற என்ன செய்யலாம்?

தமிழ்மக்கள் வீடுகளுக்கு சென்றால் முதலில் கிடைப்பது குடிநீர். எதிரியாக இருந்தாலும் தண்ணீர் கேட்டால் தடுக்காமல் கொடுக்கும் பண்பாடு கிராமத்து மனிதர்களுடையது. இன்று "உலகமாக்கல்" கொள்கையால் அந்த பண்பாடு சிதைந்து குடிக்க தண்ணீர் கேட்டால் காசு கேட்கிறார்கள்.

"அன்று தாகமாய் இருந்தேன்

குடிக்க தண்ணீர் தந்தீர்கள்...

இன்று தாகமாய் இருக்கிறேன்

குவளை தண்ணீர் கொடுத்து

கூடவே கையும் நீள்கிறது

காசு வாங்க"

தனியார் நிறுவனங்களை இலாபமடைய வைப்பதற்கு தண்ணீர் ஒரு விற்பனை பொருளல்ல. தண்ணீரை பற்றிய நமது மதம்சார்ந்த நம்பிக்கைக்கும் நமது வாழ்விற்கும் என்ன தான் சம்பந்தம்?

மழை நீரை சேமிக்க குரல் கொடுப்பவர்களும், நதிகளை இணைக்க குரல் உயர்த்துபவர்களும் தண்ணீரை வியாபாரமாக்குவதை பற்றி எதுவும் பேசாதது ஏனோ? நதிகள் அனைத்தையும் இணைத்தாலும் தண்ணீருக்கான உரிமையை மக்களுக்கு வழங்காவிட்டால் என்ன பயன்? உடனடியாக நாம் செயல்படாவிட்டால் பூமித்தாயின் கோபம் நம் சந்ததியையே அழிக்கும் சக்தி மிக்கது! அந்த சக்தி இப்போது தண்ணீர் வடிவில்! வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...

திரு

1 கருத்துக்கள்:

Anonymous said...

wonderful blog. especially reading in tamil. well done. how you do it in tamil? is it unicode or wat:).

it would be nice if you put up an article, how to write the blog in tamil. would be helpful for tamil speaking community.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com