Thursday, September 09, 2004

நினைவாலே சிலை செய்து...

நினைவுகளே இல்லாமல் இருக்க இயலுமா? நினைக்கவே சூன்யமாக இருக்கிறது! நினைவுதானே வாழவைக்கிறது. இதய சுவர்களில் பதிந்த நினைவு கோடுகளின் பதிவுகளும் அதன் அழகிய வண்ணங்களும் தான் இப்போதெல்லாம் என்னை வாழவைக்கிறது!

நினைவே எனது உலகம்! சின்ன வயதில் எண்ணை வடியும் தலையும் குறு குறுத்த பார்வையுமாக அந்த அழகிய கிராமத்தில் தான் என் உலகம்... இன்று அந்த உலகம் எங்கே? நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் கனவு உலகமா இது?

நினைவுகள் சுகமானவை!
கலையாத கனவு பொக்கிசங்கள்!
ஒவ்வொரு படியிலும் என்னை வைத்து
எட்ட நின்று பார்க்கும்!
கை கொட்டி சிரிக்க வைக்கும்!
கண் சிமிட்டி அழைக்கும்!
கதற வைத்து வேடிக்கை பார்க்கும்!
வாழவைக்கும் கனவுக்கவிதை நினைவுகள்!

அதிகாலையில் குளத்துக்கு குளிக்க போனால் வருவது 9 மணிக்கு. போவது குளிக்க மட்டும் தான்... ஆனால் அதற்குள் நடக்கும் ஆட்டங்கள் தான் எத்தனை? அக்கறையுடன் அடிக்க விரட்டி, பாசமாய் பழைய சோற்றை பிசைந்து தரும் அம்மாவின் பாசவாசனை இன்னும் நெஞ்சில் நினைவாய்...

மார்கழி பனி காலையின் அழகிய கனவு கலைந்தது போல இருக்கிறது. கண்விழித்து பார்க்கையில் உலகமே மாறி இருக்கிறது! என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா வாழும் உலகை நான் பார்க்க முடியவில்லை. உலகம் மாறுகிறது. நமது கலாச்சாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய முடியுமா எதிர்காலத்தில்? என் கிராமத்து குழந்தைகள் அண்ணாமலை தொடரை பார்க்கும் சோனி தொலைக்காட்சி பெட்டி எப்படி வந்தது எங்கள் விளையாட்டுகளை மறக்கடிக்க? எங்களது குடும்ப உரையாடலை தொலைத்து "மெட்டி ஒலி"தொலைக்காட்சி தொடரில் மௌனமாக்கிய மாயம் எது?

பள்ளிக்கு போகும் போது புகைகக்கி தார் உருக்கும் அந்த பூத வண்டியும், கருப்பு தார் படிந்த உடையுமாய் நெருப்பில் பாதை போட்ட அந்த முகம் மறந்த மனிதர்கள் எங்கே? மண்பாதையில் புரண்டு, மரங்களின் பசுமையை சுவாசித்து சொந்தங்களுடன் வாழ்ந்த என்னை நாடு விட்டு நாடு செல்ல வைத்தது எது? பத்து பைசா கிடைத்தாலே அழகிய முயல் கிடைத்தது போன்ற அந்த சந்தோசம்... இன்றைய கிரெடிட் கார்டு உலகில் தொலைந்தது எப்படி?

பசிக்கு பொரித்த கோழிக்கறியும், வறுத்த உருளை கிழங்கு சிப்ஸ், பர்கர், என உலகெங்கும் பரந்து கிடக்கும் இளைய தலைமுறையின் அமெரிக்காவின் சாப்பாட்டு கடைகள். தாகத்துக்கு கொக்கோ-கோலா, பெப்சி என நம் உணவு பழக்கத்தை மாற்றியது எது?

“போறாளே பொன்னுத்தாயி பொல பொல என்று கண்ணீர் விட்டு…” என கருத்தம்மா பாடல் வரிகளில் நனைகிற என் மண் வாசனையின் ஏக்கம்... தேடி, அடுக்கி எடுக்கிறேன் என் சிதறிய நினைவுப் புதையல்களை! வருகிறேன் என் நினைவுகளை சுமந்த படி...

நினைவுகளுடன்...
திரு

1 கருத்துக்கள்:

Anonymous said...

romba alaga solli irukinga.. sindhikka vaikkum pathivu...

intha avasara ulagil, tv yin akiramippilum, puthiya kalacharathilum, nam tholaithathu nam vazhlkkaiyai.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com