Wednesday, September 15, 2004

நீதிதேவதையின் கண்களை கட்டி...

மீபத்தில் ஒரு நீதிபதி “தமிழ் மக்களுக்கு நீதிமன்றங்கள் கோவில்கள், நீதிபதிகள் கடவுள்களை போன்றவர்கள்... நீதிமன்றங்களை விமர்சனம் செய்தால் விளைவுகளை சந்திக்க வெண்டும்” என்று தனது முறையில் கூறியிருந்தார். எந்த அளவு நடைமுறை வாழ்வில் இது உண்மையானது? பல வழக்குகளின் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது!...

தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழவெண்மணி என்ற விவசாயம் செய்கிற சாதாரண தொழிலாழர்களின் அழகிய ஊர். 1968 இல் உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடிய டிசம்பர் மாதம் 25 ம் தேதி நள்ளிரவு பொழுது. இருட்டில் தீபந்தங்கள் ஏந்திய உருவங்கள் 40 ஓலை குடிசைகளில் தீவைத்து வீட்டில் இருந்த 44 தலித் மக்களை எரித்து, சாம்பலானதை உறுதிபடுத்திய பின்னர் நகர்ந்தனர். தப்பியது சிலர் மட்டும். எதற்கு இந்த கொடுமைத்தனம்? யார் செய்தது இந்த வன்செயலை?

அந்த பகுதி நிலத்தை சொந்தமாக்கி வைத்திருந்த பண்னையார்களுக்கு காலங்காலமாக கூலி அடிமைகளாக இருந்தவர்களது குடிசையும், வாழ்வும் தீயில் கருக்கப்பட்டது! காரணம் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதர்க்காக. திட்டமிட்டு இந்த வன்கொடும் பாதகத்தை செய்தது அந்த பண்ணையார்களும், அடியாட்களும். வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இந்த கொடும் செயலில் பாதிக்கப்பட்டவர்கள் கண்களால் பார்த்ததை முறையிட்டும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேடிக்கையும் விந்தையானதும் கூட. பண்னணயார்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடமாட்டார் என நீதிமன்றம் கருதி விடுதலை செய்தது. இப்படி "பொய்யான" குற்றத்தை பண்ணையார்கள் மீது சுமத்தியதற்காக அந்த உயிர்பிழைத்த அப்பாவிகளுக்கு தண்டனை வழங்கியது. இது உண்மை வரலாறு...

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கொலை பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது ஒரு நீதிமன்றம். 21 நபருக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்த கழிப்பில் அப்போதைய விசாரணை அதிகாரி "வாய்மையே வெல்லும்" என்றார். மேல் முறையீட்டில் அவர்கள் குற்றமற்றவர்களாக 19 பேர் விடுதலையானார்கள். வாய்மை தான் வென்றது, அது வரை வருடக்கணக்கில் சிறைக்கொடுமை, விசாரணை கொடுமைகளை சந்தித்த அந்த குற்றமற்றவர்களுக்கு என்ன நீதி? யார் வழங்க முடியும்? இழந்த விடுதலை காலத்தை எது ஈடு செய்யும்?

வரலாற்று காலம் முதல் இன்றுவரை ஒரு தீர்ப்புக்கும், இன்னொரு தீர்ப்புக்கும் முரண்பாடுகள் ஏன்? முதலில் குற்றம் செய்ததாக தண்டனை கொடுக்கும் நீதிமன்றம், பின்னர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லும் சூழல் ஏன்? வழக்குகளில் உண்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்வது எது? சாட்சிகளும் வாதங்களும் தானே? நல்ல வழக்குரைஞர்களும், அழுத்தமான (பொய்)சாட்சிகளும் கிடைத்தால் எந்த குற்றமற்றவனும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது! இது தான் பலரது வாழ்வின் இருண்ட உண்மை.

குற்றம் செய்யாமல் சிறை கொட்டடியில் தன்டனை பெற்றதர்க்கு என்ன நீதி வழங்கமுடியும்? மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டவை தான் நீதிமன்றங்களும், சிறைசாலைகளும், தண்டனை முறைகளும், தீர்ப்புகளும். இன்றைய நீதிமன்றங்களுக்கு எது வழிகாட்டி? மன்னனின் தீர்ப்புகளையும், ஊர்த்தலைவனின் தீர்ப்புகளையும் தட்டிகேட்க முடியாதது எப்படியோ அதுபோன்ற நடைமுறைதான் இன்றைய நீதிமன்ற நடைமுறையும்.

தனது மகன் பசுவின் கன்றை தேர் சக்கரத்தில் கொன்றதர்க்காக நீதி கேட்டு மணியடித்த பசுவுக்கு நீதி வழங்கும் வண்ணம் மகனை தேர் சக்கரத்தில் நசுக்கிய மனுநீதி சோழன் கதையை நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மறந்துவிடக்கூடாது! குற்றமற்றவனை தண்டிப்பது நீதிதேவதையின் கண்களை கட்டி பேனாவினால் பலாத்காரம் செய்வது தானே தவிர வேறென்னவாக இருக்க முடியும்? சமீபத்து பல தீர்ப்புகள் நீதிக்கு என்ன விலை என்ன கேட்க வைத்து விடுமோ?

நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், அதன் நடைமுறைகளும் மனிதனால் நடத்தப்படுபவை தான். ஆனால் அவற்றில் மனிதனேயம், நீதி, நேர்மை இருக்கிறதா? இதை விவாதிப்பதால், விமர்சனம் செய்வதால் தண்டிக்கபட்டாலும் துணிந்து விவாதம் செய்வோம். நீதியை காப்பாற்றவும்! நீதி தேவதையின் மாண்பை காப்பாற்றவும். வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com