Wednesday, September 15, 2004

மக்களாட்சியும், மாயங்களும்...

ந்த வருடம் ஆசிய நாடுகளுக்கு தேர்தல் ஆண்டு. பழைய பகைவர்கள் ஒன்று சேர்வதும், புதிய பகைவர்கள் உருவாவதும் என தினம் ஒரு அரசியல் வேடிக்கை நமது நாடுகளின் அரசியல் அரங்கில். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா என தேர்தலை சந்திக்கும் நாடுகளின் பட்டியல் ஆசியாவில் நீள்கிறது. என் நினவுகளில் தேர்தல்களில் அழைத்து செல்கிறேன்...

எனக்கு 8 வயதிருக்கும் போது ஒரு தேர்தல் காலம் அது. உடைந்த குரலில் ஒலிபெருக்கியில் வாக்குறுதிகளை கேட்ட அந்த வேளைகளில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு. ஒவ்வொரு ஒலி பெருக்கி வண்டியிலும் (கட்சி பேதம் பார்க்காமல் தான்) அவர்களது அறிக்கை காகிதங்களை பெறுவது அப்போதெல்லம் ஒரு வித விளையாட்டு... புழுதி கிழப்பி சென்ற அந்த வாகனங்களும், அந்த வாக்குறுதி குரல்களும் இன்னும் நெஞ்சில்...

அதே அரசியல்வாதிகள் இன்னும் அரசியல் வானில்! வாக்குறுதிகள்?

தேர்தலை சந்திக்கிற இந்த நாடுகள் எல்லாம் “மக்களாட்சி அமைப்பு முறையை (!)” பின்பற்றி வருகிறது. "மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்யும் ஆட்சி முறை மக்களாட்சி" என்ற அருமையான தத்துவம் அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நடை முறையில் என்ன? யார் இந்த மக்கள்? மக்களுக்காக யார் முடிவுகளை எடுப்பது?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் வி.பி.சிங் ஆட்சியை 11 மாதங்களில் ரதயாத்திரை மூலம் கவிழ்த்து மத வெறியை தூண்டியவர் திரு.அத்வானி. இதன் பின்னர் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். ஆனால் இன்று திரு.அத்வானி இந்தியாவின் துணை பிரதமர். இன்றும் ஒரு ரதத்தில் பவனி வருகிறார் பிரதமர் ஆகும் கனவுகளுடன்.

கடந்த முறை அமெரிக்காவில் தேர்தல் நடந்த போது பல்லாயிரம் கறுப்பின மக்களின் வாக்களிக்கும் தகுதியை முறைகேடுகள் வழி திரு.ஜார்ஜ் புஷ் இன் ஆதரவு அதிகாரிகள் தடுத்தனர். படையினரின் வாக்குகளை விதி மீறல்கள் மூலம் குவித்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதை உலகமே கண்டு சிரித்தது. உண்மையில் வெற்றிபெற்றது அல்கோர், பாவம் அமெரிக்க மக்களும் உலகமும் ஒரு சர்வாதிகாரி உலக வல்லரசின் தலைவர் ஆனார்.

இலங்கையில் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ரணில் அரசை தந்து அதிகார பலத்தில் கலைத்தார் திருமதி.சந்திரிகா. விடை தெரியாத நிலையில் சமாதான முன்னெடுப்பும், மக்களும் விடியலை எதிர்பார்த்தபடி மீண்டும் வாக்குச்சாவடிகளுக்கு ஆயத்தமாகின்றனர்.

பிலிப்பைன்ஸில் எஸ்டரடா என்ற முன்னாள் நடிகர் ஊழல் நிறைந்த ஆட்சியை தந்ததால் மக்களின் வாழ்வு படுபாதாளத்துக்கு சென்றது. எஸ்டரடாவின் ஆட்சியை மக்கள் ஒன்று சேர்ந்து வீழ்த்தியதில் திருமதி.குளோரியா மக்கபாகல் அராயோ ஆட்சியில் வந்தார். மீண்டும் அதே ஊழலும் கொடுமைத்தனமும். அந்த மக்களின் வாழ்வில் இன்னொரு தேர்தல் இன்னொரு ஊழல்வாதியை நோக்கி...

இந்தோனேசியாவில் இராணுவ சர்வாதிகாரி சுகார்த்தோ வின் ஆட்சியை மாணவர் புரட்சி மூலம் தூகியெறியப்பட்டதன் பின்னர் தொடர்ந்த குழப்பங்களை எதிர்த்து கிளம்பியவர் திருமதி.மேகாவதி சுகர்ணோ புத்திரி. இந்தோனேசியா சந்தித்த நல்ல தலைவரான திரு.சுகர்ணோ வின் மகளான இவர் முன்னைய இராணுவ அடக்குமுறையாளனை விட மோசமானவர் என மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆட்சி செய்கிறார்...

இந்தியாவில் பொருளாதாரதுடன் ஊழலும் போட்டி போட்டு வளர்கிறது. காஷ்மீர் யுத்ததில் இறந்த இராணுவத்திற்கு சவப்பெட்டி வாங்கியது முதல் அரசு பத்திரங்கள் வரை ஊழல். பிரதமர் அலுவலகம் முதல் கிராம அதிகாரி வரை ஊழல். மதவெறி படுகொலைகள் என பரந்து கிடக்கும் இயலாமையின் மீது நின்று மீண்டும் திரு.வாஜ்பாய் தேர்தலில் வருகிறார். கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல். 5 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொல்லி ஆட்சியில் வந்தவர்கள் முதலில் வேலையில் இருந்தவர்களை வேலையை விட்டு அனுப்பினார்கள்.

பதவி வெறி பிடித்து அலைந்து தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவதில் நமது அரசியல் தலைவர்கள் வள்ளல்கள். அவர்களது வீண் பேச்சுக்களில் ஏமாற்றப்படுவது மக்கள் மட்டுமல்ல. மக்களாட்சி என்ற தத்துவமும் தான்.

காலமெல்லாம் கண்ணீருடனும், எதிர்கால கனவுகளுடன் விடியலை நோக்கி விம்மி அழுகிற இதயங்களுக்கு தேர்தல் என்பது என்ன ஆறுதலை தர முடியுமோ. காலமும், நல்ல செயல் படைத்த தலைவர்களும் தான் தீர்மானிக்க முடியும். இல்லையெனில் மக்களாட்சி என்பது ஒரு உழுத்து போன தத்துவமாக மாறி விடும்.

மீண்டும் அதே புழுதிகிளப்பும் வண்டியும், உடைந்த குரல்களும், துண்டறிக்கைகளும், மக்கள் கூட்டமும் என எங்கள் வீதிகள்...இந்த முறை எங்களை ஆள்வதற்கு யாரோ? விடை தெரியா நினைவுகளுடன் வாக்குச்சாவடிக்கு நானும்... வருகிறேன் என் நினைவுகளுடன்

நினைவுகளுடன்...
திரு

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com