Wednesday, September 15, 2004

புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுகுண்டு

ஹிரோஷிமா நகரம், ஜப்பான். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத குளிரில் ஒரு நண்பகல் பொழுது. அந்த அமைதி பூங்காவில் நின்ற பொழுது என் ஒவ்வொரு அணுவும் நடுக்கத்தால் மோதியது. இந்த மண்ணில் அமைதிக்கு தான் எத்தனை சோதனை! யுத்த வெறி பிடித்த ஒவ்வொரு முரட்டு மனமும் தரிசிக்க வேண்டிய தலம் அது. கருகிய மனித வரலாற்றின் கருவறை அது. அந்த இடத்தில் ஞானம் பிறக்காதவர்களுக்கு போதி மரத்தடியிலும் புத்தி வராது! அந்த பொழுதை நினைக்கையில் இன்றும் காலங்கள் சுழல்கிறது நான் காணாத ஒரு மனித வரலாறை நோக்கி...

காலை பொழுது 8.15 மணி 6ஆம் நாள் ஆகஸ்டு மாதம் 1945. அமெரிக்காவின் எனோலா ஹே என்ற போயிங் B- 29 குண்டு வீச்சு விமானம் அந்த அழகிய நகரில் வீசிய "சின்னப் பையன்" என்ற அந்த அணுகுண்டில் பிறந்தது பேரழிவின் பிறப்பிடம். மனித இன வரலாற்றில் பேரழிவை தந்த ஆயுதம். பள்ளிக்கு சென்ற குழந்தையின் சடலம் கூட மிச்சமில்லை. சாப்பாடு கரியாகி உறைந்த நிலை. கட்டிடங்களின் பாகங்கள் ஆவியாக மாறியது. கடிகாரம் நின்றது! காலமே உறைந்தது.. இரண்டாம் உலக யுத்தத்தை நிறுத்திய இந்த வெடிசத்தம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தது!

விடை தேடும் பல கேள்விகள் மனதில்... எதற்காக இந்த உயிர்வேட்டை? உலக யுத்தம் முடிவுக்கு வந்த வேளை அணுகுண்டின் அவசரம் ஏன்? உலகை யார் அடக்கி ஆழ்வது என்ற வெறியில் கருக்கப்பட்டது பல்லாயிரம் உயிர்கள். அந்த வெறி தான் அடங்கியதா? அதன் எல்லை தான் என்ன? பல லட்சம் யூதர்களை கொன்றழித்த ஹிட்லருக்கும், பல்லாயிரம் ஜப்பானியர்களை அழித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமெனுக்கும் என்ன தான் வேறுபாடு? அதிகார வெறி கொண்டு அன்று எழுந்த அமெரிக்க தேசத்தின் இரத்த வேட்டை என்றுதான் முடிவுக்கு வரும்?

நினைவுகள் இந்திய தேசம் நோக்கி பறந்தது...

100 கோடி மக்களில் 35% பேர் வறுமையில் வாடும் நாட்டில் எதற்கு அணுகுண்டு? பசித்தவனுக்கு தட்டில் கொஞ்சம் புளூட்டோனியமோ, யுரேனியமோ கொடுக்க முடியுமா? உயிரை கொடுக்க முடியாத நமக்கு எது உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியது? மனித உரிமை மீறல்களும், வறுமையும், வேலையில்லாமையும், சமூக சீர்கேடுகளுமாக இருக்கும் மனித சமுதாயத்துக்கு தீர்வு அணுகுண்டுதானோ?

அணுகுண்டுகள் வைத்திருப்பது தான் பாதுகாப்பு, அது தான் வல்லமையுள்ள நாட்டுக்கு அடையாளம் என்ற கருத்துக்களை நம்புபவர்களுக்கு சில கேள்விகள். எனது பக்கத்து விட்டிற்கும் எனக்கும் பகை என்றால் என் சக்திக்கு ஏற்ப நானும் ஆயுதங்கள் வைத்திருக்கலாமா? ஆயுதமும் ஆயுதமும் மோதினால் எது தான் வெற்றி பெறும்?

அணுகுண்டு சோதனையில் வெற்றி பெற்ற வேளை விழா கொண்டாடியவர்கள், பசியால் மக்கள் மடிந்தவேளை என்ன செய்தார்கள்? ஒரு கனியும் விளையாத நிலத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து யுத்தம் செய்யும் அவலம் காஷ்மீர் பகுதியில் மட்டும் தான் நடக்கிறது. அணுவெறி கொண்டு அலையும் மானிடர்களே! மனிதம் சுவாசிக்க ஒருமுறை ஹிரோஷிமா நகரம் சென்று வாருங்கள்! புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுதாக்குதலின் அழிவில் பிறக்கும்! வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com