Wednesday, September 15, 2004

நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை

2000 ஆண்டின் தொடக்க காலம் அது... அந்த குளிர் காலையில் புது டில்லியிலிருந்து புறப்பட்ட எங்கள் புகையிரதம் (ரயில் வண்டி தான்!) அமிர்தசரசு மண்ணில் நின்றதும் நான் வைத்த முதல் காலடியில் என் கால்கள் கூசின. என் எண்ணங்கள் பகத்சிங்கின் நினைவில்...

யார் இந்த பகத்சிங்?
பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலைக்காக இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்த நேரமது. அந்த 28 வயது நிரம்பிய வாலிபன் தனது சக தோழர்களுடன் விடுதலைக்கு கவனத்தை ஈர்க்க நாடளுமன்றத்தில் வெடிகுண்டுகளை எறிந்தான். துண்டறிக்கைகளும், கோசங்களும் ஆங்கிலேயனை வெறி கிளப்பியது. கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டான். இராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள், அவனிடமிருந்து வந்த பதில் உயிர் வாழ ஆசை என்பதல்ல! அந்த விடுதலை வீரன் "என் தாய் மண்ணுக்கு விடுதலை வேண்டும்...என் கண்களை திறந்தபடி என்னை தூக்கி கொல்லுங்கள்! என் தாய் மண்ணை பார்த்த படியே சாக வேண்டும்!" என்றான்.

இன்று நாங்கள்? "உயிர் மண்ணுக்கு! உடல் குஷ்புவுக்கு!" என்கிறோம்... விடுதலைத் தாயே! எங்கே தவறு செய்தோம்? சின்ன வயதில் எங்களுக்கு பேய் கதைகளும், கடவுள் புராணங்களையும், மன்னர்களையும் மண்டைக்குள் திணித்த எங்கள் "விடுதலை பெற்ற இந்தியா"! காந்தி உட்பட சிலரைத் தவிர வீரர்கள் எல்லோரையும் எங்களுக்கு மறைத்ததாலா?

அப்போதெல்லாம் விடுதலை நாள் என்றதும் என் மனதில் வருவதெல்லாம் அந்த ஆறஞ்சு சுளையின் சுவை கொண்ட இனிப்பும், அன்று மட்டும் எங்கள் கைகளில் திணிக்கப்பட்ட வண்ணக் காகித கொடியும். இது தான் விடுதலை என நினைத்து விடுதலையை (அந்த இனிப்பைத்தான்) வாங்க காசு தேடிய நாட்கள் தான் எத்தனை! வளர்ந்த போது தான் தெரிந்தது விடுதலை என்பது வேறு சமாச்சாரம் என்பது! அதைத் தான் இன்னும் தேடுகிறேன்!...

அன்றைய நாள் மாலைப்பொழுது.... சீக்கிய மதத்தின் புனிததலமான பொற்கோவிலில் நின்ற வேளை. எமது இராணுவத்தின் "நீல நட்சத்திர நடவடிக்கையின் விளைவுகள்" நெஞ்சை அடைத்தது. ஒன்றாக கூடி வாழ வந்த எமக்குள் எது தனி தேசங்களை கேட்கத் தூண்டியது? இராணுவத்தின் கொட்டடிகளில் சிதைக்கப்பட்ட உயிர்களை திருப்பித்தர இயலுமா?

தேசபற்று என்பது ஒருவகையில் ஒரு வெறி தான்! சேர்ந்து வாழ்வதால் வஞ்சிக்கப்படும் என் சகோதரனுக்கு பிரிந்து போய் தனி வாழ்க்கை அமைக்க அவனுடைய பங்கை கொடுக்க எப்படி விருப்பமில்லையோ அதே வெறி! தொடர்ந்த பயணத்தில் பாகிஸ்தான் - இந்தியா "வாகா எல்லையில்" நின்ற கணத்தில் விடுதலை தான் என்ன என ஆயிரம் கேள்விகள்! என் பாகிஸ்தானிய சகோதரனையும், என்னையும் பிரிக்கும் அந்த இராணுவ வேலியிலும், துப்பாக்கி குண்டுகளிலும் விடுதலை தேவதையின் கற்பு களங்கப்படுகிறதை கண்டேன்! இரு பகுதிகளின் மக்களையும் எளிதாக பழக விடாத இராணுவம் என் தேசதுக்கே சொந்தமானாலும் அது ஆக்கிரமிப்பு படைகளே!

கலங்கிய கண்களுடன் பாகிஸ்தானிய முகம் தெரியா என் உறவுகளை பார்வைகளால் தொட்டு கனத்த மனதுடன் திரும்பினேன். அப்போது தான் புரிந்தது இராணுவத்தின் தொல்லைகள். அதோடு அழித்துப் போட்டேன் ஒருகாலத்தின் என் இராணுவ கனவுகளையும், மாணவ பருவத்தின் "தேசிய மாணவர் படை" (இராணுவ) பயிற்சியின் சான்றிதழையும்.

அப்பொது உதித்தது என் சிந்தையில் "எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை, நான் மனிதன்". யார் இந்த சில மனிதர்கள் என்னை இந்த நாட்டில் அனுமதிக்கலாமா அல்லது கூடாதா என்ற முடிவை எடுக்க? யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது? எல்லைகளற்ற தேசங்களும், அடக்குமுறையில்லா அமைப்புகளும் இல்லாமல் போனது ஏன்? உலகில் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தான் எத்தனை விதங்களில்?தேசங்கள் தோறும் விடியலைத் தேடி அலையும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிகீற்று என்று தான் வருமோ? நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

1 கருத்துக்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தமிழ் வலைப்பதிவு தொடக்கி, தமிழ்மணத்தில் இணைந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் நண்பரே!

-மதி

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com