Sunday, August 06, 2006

ஞானம் அணுகுண்டு அழிவில் பிறக்கும்! (மீள் பதிவு!)

இன்று உலகில் அமெரிக்கா முதல் அணுகுண்டு போட்டு ஹிரோஷிமா வாழ் மக்களை கொன்று அழிவை ஏற்படுத்திய நாள். அதன் நினைவாக இந்த மீள் பதிவு!

ஹிரோஷிமா நகரம், ஜப்பான். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத குளிரில் ஒரு நண்பகல் பொழுது. அந்த அமைதி பூங்காவில் நின்ற பொழுது என் ஒவ்வொரு அணுவும் நடுக்கத்தால் மோதியது. இந்த மண்ணில் அமைதிக்கு தான் எத்தனை சோதனை! யுத்த வெறி பிடித்த ஒவ்வொரு முரட்டு மனமும் தரிசிக்க வேண்டிய தலம் அது. கருகிய மனித வரலாற்றின் கருவறை அது. அந்த இடத்தில் ஞானம் பிறக்காதவர்களுக்கு போதி மரத்தடியிலும் புத்தி வராது! அந்த பொழுதை நினைக்கையில் இன்றும் காலங்கள் சுழல்கிறது நான் காணாத ஒரு மனித வரலாறை நோக்கி...

காலை பொழுது 8.15 மணி 6ஆம் நாள் ஆகஸ்டு மாதம் 1945. அமெரிக்காவின் எனோலா ஹே என்ற போயிங் B- 29 குண்டு வீச்சு விமானம் அந்த அழகிய நகரில் வீசிய "சின்னப் பையன்" என்ற அந்த அணுகுண்டில் பிறந்தது பேரழிவின் பிறப்பிடம். மனித இன வரலாற்றில் பேரழிவை தந்த ஆயுதம். பள்ளிக்கு சென்ற குழந்தையின் சடலம் கூட மிச்சமில்லை. சாப்பாடு கரியாகி உறைந்த நிலை. கட்டிடங்களின் பாகங்கள் ஆவியாக மாறியது. கடிகாரம் நின்றது! காலமே உறைந்தது.. இரண்டாம் உலக யுத்தத்தை நிறுத்திய இந்த வெடிசத்தம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தது!

விடை தேடும் பல கேள்விகள் மனதில்... எதற்காக இந்த உயிர்வேட்டை? உலக யுத்தம் முடிவுக்கு வந்த வேளை அணுகுண்டின் அவசரம் ஏன்? உலகை யார் அடக்கி ஆழ்வது என்ற வெறியில் கருக்கப்பட்டது பல்லாயிரம் உயிர்கள். அந்த வெறி தான் அடங்கியதா? அதன் எல்லை தான் என்ன? பல லட்சம் யூதர்களை கொன்றழித்த ஹிட்லருக்கும், பல்லாயிரம் ஜப்பானியர்களை அழித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமெனுக்கும் என்ன தான் வேறுபாடு? அதிகார வெறி கொண்டு அன்று எழுந்த அமெரிக்க தேசத்தின் இரத்த வேட்டை என்றுதான் முடிவுக்கு வரும்?

நினைவுகள் இந்திய தேசம் நோக்கி பறந்தது...

100 கோடி மக்களில் 35% பேர் வறுமையில் வாடும் நாட்டில் எதற்கு அணுகுண்டு? பசித்தவனுக்கு தட்டில் கொஞ்சம் புளூட்டோனியமோ, யுரேனியமோ கொடுக்க முடியுமா? உயிரை கொடுக்க முடியாத நமக்கு எது உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியது? மனித உரிமை மீறல்களும், வறுமையும், வேலையில்லாமையும், சமூக சீர்கேடுகளுமாக இருக்கும் மனித சமுதாயத்துக்கு தீர்வு அணுகுண்டுதானோ?

அணுகுண்டுகள் வைத்திருப்பது தான் பாதுகாப்பு, அது தான் வல்லமையுள்ள நாட்டுக்கு அடையாளம் என்ற கருத்துக்களை நம்புபவர்களுக்கு சில கேள்விகள். எனது பக்கத்து விட்டிற்கும் எனக்கும் பகை என்றால் என் சக்திக்கு ஏற்ப நானும் ஆயுதங்கள் வைத்திருக்கலாமா? ஆயுதமும் ஆயுதமும் மோதினால் எது தான் வெற்றி பெறும்?

அணுகுண்டு சோதனையில் வெற்றி பெற்ற வேளை விழா கொண்டாடியவர்கள், பசியால் மக்கள் மடிந்தவேளை என்ன செய்தார்கள்? ஒரு கனியும் விளையாத நிலத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து யுத்தம் செய்யும் அவலம் காஷ்மீர் பகுதியில் மட்டும் தான் நடக்கிறது. அணுவெறி கொண்டு அலையும் மானிடர்களே! மனிதம் சுவாசிக்க ஒருமுறை ஹிரோஷிமா நகரம் சென்று வாருங்கள்! புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுதாக்குதலின் அழிவில் பிறக்கும்! வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

6 பின்னூட்டங்கள்:

dondu(#11168674346665545885) said...

"எனது பக்கத்து விட்டிற்கும் எனக்கும் பகை என்றால் என் சக்திக்கு ஏற்ப நானும் ஆயுதங்கள் வைத்திருக்கலாமா? ஆயுதமும் ஆயுதமும் மோதினால் எது தான் வெற்றி பெறும்?"
பக்கத்து வீட்டிடம் ஆயுதம் உண்டு, ஆனால் உன்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை என்ற நிலை நீங்கள் கூறியதை விட மோசமாயிற்றே.

"இந்த மண்ணில் அமைதிக்கு தான் எத்தனை சோதனை!"
என்ன செய்வது யுத்தத்தை ஆரம்பித்த நாடு ஆயிற்றே. அதுவும் எப்போது தாக்கக் கூடாதோ அப்போது தாக்கி சூன்யம் சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட நாடாயிற்றே.

"பல லட்சம் யூதர்களை கொன்றழித்த ஹிட்லருக்கும், பல்லாயிரம் ஜப்பானியர்களை அழித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமெனுக்கும் என்ன தான் வேறுபாடு?"
ஹிட்லர் ஒரு இனத்தைக் குறிவைத்து அவர்களைக் கொலை செய்தான். ட்ரூமன் செய்ததால் உலக மகா யுத்தம் நின்றது.

அது சரி, ஜப்பானிடம் இந்த அணுகுண்டு இருந்திருந்தால் என்ன செய்திருக்கும் என்பதை யோசித்துப் பார்ப்பீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Clown said...

மனிதனின் இமாலய அறிவியல் வளர்ச்சியால் அவனை நல்ல மனிதனாக்க முடியவில்லை.ம்ம்ம்...

thiru said...

dondu(#4800161) said...

//பக்கத்து வீட்டிடம் ஆயுதம் உண்டு, ஆனால் உன்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை என்ற நிலை நீங்கள் கூறியதை விட மோசமாயிற்றே.//

பக்கத்து வீட்டில் பட்டாக்கத்தி என்றால் நம் வீட்டில் வெடிகுண்டா? பக்கத்து வீட்டில் வெடிகுண்டென்றால் நம் வீட்டில்? இதன் முடிவு எங்கே செல்லும்? அமைதி ஆயுதமுனையில் பிறக்கும் என நம்புகிறீர்களா?


//என்ன செய்வது யுத்தத்தை ஆரம்பித்த நாடு ஆயிற்றே. அதுவும் எப்போது தாக்கக் கூடாதோ அப்போது தாக்கி சூன்யம் சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட நாடாயிற்றே.// ஆம்! அதனால் சோதனைக்குள்ளானது அப்பாவி மக்களும் குழந்தைகளும்.


//ஹிட்லர் ஒரு இனத்தைக் குறிவைத்து அவர்களைக் கொலை செய்தான். ட்ரூமன் செய்ததால் உலக மகா யுத்தம் நின்றது.

அது சரி, ஜப்பானிடம் இந்த அணுகுண்டு இருந்திருந்தால் என்ன செய்திருக்கும் என்பதை யோசித்துப் பார்ப்பீர்களா?//

அது சரி! ஹிட்லர் செய்தால் கொலை. அமெரிக்கா செய்தால் ஜனநாயம், அமைதிக்கான யுத்தம்! உலக யுத்தம் முடிவுக்கு வந்த வேளை அமெரிக்காவின் அணுப்பசிக்கு முதல் சோதனைக் களமாக அமெரிக்கா பயன்படுத்தியது ஹிரோஷிமா! சோவியத் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் நடந்த அதிகார வல்லமையின் போட்டியில் தனது நிலையை வெளிப்படுத்த அமெரிக்கா பயன்படுத்திய கொலைக்களம் ஹிரோஷிமா. வரலாற்றின் மறுபக்கங்களில் விரிவாக இதைப் பற்றிய நிகழ்வுகளைக் காணலாம். நீங்களும் படித்திருப்பீர்கள்! மற்றபடி யாரிடம் அணுகுண்டு இருந்ததும் என்பதல்ல பிரச்சனை.

முதல் முறை உங்களது பின்னூட்டம் என் பதிவில். நன்றி!

Unknown said...

அணுகுண்டை இந்தியா ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை.நம் அருகே உள்ள சீனா அணுகுண்டு வைத்திருந்தது.பாகிஸ்தான் அணுகுண்டை தயாரிக்க வேகவேகமாக முனைந்து கொண்டிருந்தது.நாம் மட்டும் சும்மாவா இருக்க முடியும்?

//பக்கத்து வீட்டில் பட்டாக்கத்தி என்றால் நம் வீட்டில் வெடிகுண்டா? பக்கத்து வீட்டில் வெடிகுண்டென்றால் நம் வீட்டில்? இதன் முடிவு எங்கே செல்லும்? அமைதி ஆயுதமுனையில் பிறக்கும் என நம்புகிறீர்களா?//

பக்கத்து வீட்டுக்காரன் பட்டாக்கத்தி வைத்துருப்பதால் நாமும் அதையே தான் வைத்திருக்க வேண்டுமா அல்லது அதற்கு குறைவான பிச்சுவா வைத்திருக்க வேண்டுமா?அவனவன் சக்திக்கு தகுந்த மாதிரி ஆயுதம் வைத்திருந்தால் தான் தப்பிக்க முடியும்.மனித இனம் தோன்றிய நாளிலிருந்து சண்டை,போர் இவர் வராமல் இருந்திருக்கா?

அமைதி வரும்போது வரட்டும்.அதுவரை தற்காப்பு செய்து கொள்வதில் தவறில்லையே?

Anonymous said...

உலகில் உள்ள பல நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்வாக உள்ளதே? பக்கத்து வீட்டுக் காரனோடு போட்டி போட்டு ஆயுதம் வைத்திருக்கத் தெரியும் ஆனால் தன் குடிகளைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. வாழ்க்கைத் தரத்திலும் போட்டி போட வேண்டியது தானே?
சரி, அப்படியே பார்ப்போம். பக்கத்து நாட்டான் எது வைத்திருக்கிறானோ அது மாதிரி அல்லது அதனிலும் ஒரு படி மேலே போயி ஆகனும் என்னா அமெரிக்காவுக்குப் பக்கதில் உள்ள கனடா என்ன ஒரு அணு ஆயுத நாடா? இல்லை. கனடாவுக்கு அமெர்க்காவிடமிருந்து இராணுவ ரீதியான அச்சுறுத்தல் இருக்கா? இல்லயே!
ஒன்னு தெரிஞ்சுக்க, எல்லா நாடுகளும் ஏதோ ஒரு நாட்டிற்காவது அயல் நாடாகத் தான் இருக்கு. முடிவில் எல்லா நாடும் நாச ஆயுதங்களோடு தான் இருக்கும்.

Unknown said...

//வாழ்க்கைத் தரத்திலும் போட்டி போட வேண்டியது தானே?//

இங்கே பாகிஸ்தானை விட வாழ்க்கை தரம் நல்லா தான் இருக்கு.அமெரிக்கா மாதிரி வாழ்க்கை தரம் வர முயலணும்.அதற்கும் அணுகுண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

//அமெரிக்காவுக்குப் பக்கதில் உள்ள கனடா என்ன ஒரு அணு ஆயுத நாடா? இல்லை. கனடாவுக்கு அமெர்க்காவிடமிருந்து இராணுவ ரீதியான அச்சுறுத்தல் இருக்கா? இல்லயே! //

ஆனா நமக்கு பக்கத்து நாடு கனடா இல்லையே?பாகிஸ்தான் ஆச்சே.அது கிட்டேருந்து நமக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தல் இருந்துகிட்டே இருக்கே?

//ஒன்னு தெரிஞ்சுக்க, எல்லா நாடுகளும் ஏதோ ஒரு நாட்டிற்காவது அயல் நாடாகத் தான் இருக்கு. முடிவில் எல்லா நாடும் நாச ஆயுதங்களோடு தான் இருக்கும்//

அப்படி எல்லா நாடும் ஆயுதத்தோடு இருக்கும்போது நாமும் ஆயுதத்தோடு இருப்பதில் தப்பில்லை.அப்படி இருந்தா தான் தப்பிக்க முடியும்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com