Monday, May 01, 2006

மேதினம்! உரிமைகளின் பிறப்பு!

சின்ன வயதில் பள்ளிக்கு சென்று வரும் காலமது. சிகப்பு சட்டையிலிருந்த அந்த வேறுபட்ட மனிதர்களின் கொடி அசைவும், முழக்கமும் எதிரொலியாக இன்னும் மனதில்! மேதினம் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! என்ற அந்த முழக்கம் புரியாத காலமது. மேதினம் என்றதும் இந்த சிகப்பு மனிதர்கள் மனதில் வந்து போனார்கள். என் நினைவலைகள் மேதின வரலாறை நோக்கி...காலப்போக்கில், கோயம்புத்தூரில் Pricol தொழிற்சாலையில் பணி செய்தவேளை மேதினம் என்பது விடுமுறை என்பதால் மனதுக்கு இனித்தது. ஆனாலும் விடுமுறைக்கான காரணம் புரியவில்லை. ஒப்பந்தவேலையில் இருந்த எனக்கும் நண்பர்களுக்கும் நிரந்தர வேலை என்பது கனவு.

இப்போதெல்லம் இந்தமாதிரி கனவு நிறைவேறாமல் பல்லாயிரம் பேர். அன்று 12 மணி நேரம் வேலைக்கு 15 ரூபாய் சம்பளம் தந்த ஆலை இன்று வளர்ந்திருக்கிறது பலரது உழைப்பை விழுங்கியபடியே!பணியில் நமக்கு இருக்கிற அனைத்து உரிமைகளுக்கும் (அடிப்படை குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு சட்டங்கள், 8 மணி நேர வேலை வரையறை, ஓய்வூதியம், பணிபாதுகாப்பு முதலியன) அடைப்படி காரணம் மேதினம்! வருடம் ஒருமுறை வரும் இந்த நாள் தேர்திருவிழா மாதிரி நம் மக்களை சென்றடையவில்லை. இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.

வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.

மேதினம், 8 மணிநேரம் வேலை என்பது பொதுவுடமை கொள்கையாளர்களுக்கு (கம்யூனிஸ்டு) மட்டுமானதல்ல, எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைத்த உரிமை.இன்று அந்த உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது? கட்டாய அதிகநேர வேலை (ஓவர் டைம்) உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) நெறிமுறைகளும், விதிகளும் (abolish Forced Overtime convention) தடை செய்துள்ளது. நடைமுறையில் இந்த உரிமை எப்படியிருக்கிறது? பல நாடுகளில் 12-16 மணி நேரம் வேலை என்பது இன்றைய வழக்கமாக இருக்கிறது. தொழிலாழர்களின் பல உரிமைகள் (ஓய்வு ஊதியம், சேமநல நிதி, விடுப்பு, காப்பீடு, பணிபாதுகாப்பு, மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, பணியில் பெண்ணுக்கு சம உரிமை, பறிக்கப்பட்டு வருகிறது. அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக தொழிலாளர் உரிமையை மறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றி வருகிறது. பல இலட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிப்படைந்து வருகிறார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா என பல வளரும் நாடுகளில் தொழிலாளர்களது உரிமையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பறித்து வருவது அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

உரிமைகளை பெறுவதென்பது எளிதானதல்ல! கிடைத்த உரிமையை பாதுகாப்பது வளரும் தலைமுறைக்கும், வருங்கால உலகுக்கும், வேலை அமைப்பு முறைக்கும் வழங்கும் பாதுக்காப்பாக அமையும்! நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு கிடக்கிற உலகின் கண்ணீரை துடைக்க நாம் என்ன செய்யபோகிறோம்? மேதினம் வாழ்க! மேதின தியாகிகள் வாழ்க! உலகமெங்கும் தொழிலாளர் உரிமை வளரட்டும்!

திரு

இன்றைய நாளின் தேவை கருதிய மீள்பதிவு இது.

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com