Monday, May 01, 2006

மேதினமும் தொழிலாளர் நிலையும்

சூசேன், 20 வயது பெண், தன்னோடு சேர்த்து 10 பேர் தையற்கலை பயிலும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார். குமாசி, கானா நாட்டில் (ஆப்பிரிக்கா) இவரைப் போல பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்த வித வருமானமோ, ஊதியமோ வழங்கப்படுவதில்லை. உணவு, தங்குமிடம், போக்குவரத்து அனைத்திற்கும் உறவினர்களை சார்ந்து வாழவேண்டிய நிலை. சுமார் 3000 ரூபாய் கூட பெறுமதியில்லாத தையல் எந்திரம் வாங்க இவர்கள் ஆசைப்படுவது ஒரு நிறைவேறா கனவு.

டேவிட், 25 வயது, வேலைதேடி பல நேர்காணல்கள், திறனுக்கான பயிற்சிகள் என அலைந்தும் பல வருடங்களாக வேலையில்லாமல் ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு இளைஞன். அரசு கொடுக்கிற வேலையில்லா கால நிவாரணத்தை நம்பியே வாழ்க்கை. அந்த நிவாரணத்தையும் அரசின் பொருளாதார கொள்கைகள் பறித்து வருகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியாத கவலை இவருக்கு.

ஹூலியோ, 24 வயது, பராகுவே நாட்டில் (அமெரிக்கா கண்டம்) வேலையில்லா இளைஞன். இவரது அண்ணா ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அவரது உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என்பதால், ஹூலியோவுக்கு வேலை மறுக்கப்பட்டது.

இங்கா, 26 வயது பெண், பெல்ஜியம் நாட்டில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்கிறார். அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் பாதுகாப்பற்ற, கடினமான சூழலில் இவரது வேலை. இவர் வேலை செய்கிற நிறுவனம் தொழிலாளர் பாதுகாப்பிற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இங்காவின் கைகளில் நிரம்பியிருக்கிற காயங்கள் வேலைத்தள விபத்துகளுக்கு சாட்சியாக இருக்கிறது.

துசாந்த் மற்றும் பரிவள இருவரும் 21 வயது நிரம்பிய இளைஞர்கள். இலங்கையில் சுமார் 20 உணவு விடுதிகள் நடத்துகிற "நீலகிரிஸ்" நிறுவனத்தின் கொழும்பு கிளையில் இவர்கள் பணிபுரிகிறார்கள். மாதம் 800 இந்திய ரூபாய் ஊதியம் என வேலையில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு 600 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. எந்த வித சமூக பாதுகாப்பு திட்டமும் இவர்களுக்கு இல்லை. இந்த உணவு விடுதியில் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக நேர உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. தினமும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11.30 வரை தொடர்ந்து வேலை செய்யும் இவர்கள் 60 பேருக்கு தங்க ஒரே அறை.

கோடிக்கணக்கான இளையோர் (ஆண்களும், பெண்களும்) உலகமெங்கும் (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில்) இந்த மாதிரியான நிலையை சந்திக்கிறார்கள். பகுதிநேர வேலை, ஒப்பந்த வேலை, அமைப்புசாரா துறை, ஏற்றுமதி சார்ந்த தொழில், வீடுகள், விடுதிகள், கட்டிட வேலை, விவசாயம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இவர்கள் பணிபுரிகிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டங்களான மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, ஓய்வு கால உரிமைகள், விடுமுறைகள் என்பவை இவர்களுக்கு முழுமையாக இல்லை. ஒப்பந்த வேலைகளிலும், ஏற்றுமதி சார்ந்த வேலைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு தொழிற்சங்கத்தில் சேர உரிமையில்லை. வீட்டுவேலைகள், பூக்களை வளர்க்கிற பண்ணைகள், ஏற்றுமதி சாந்த நிறுவனங்களில் பணிபுரிகிற பெண்கள் பாலியல் துன்புறுத்தல், பாலியல் கொடுமை, வன்முறை போன்றவைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நல்ல வாழ்க்கை, ஊதியம் என ஆசை காட்டப்பட்டு கடத்தப்படுகிற இளம்பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கை ஆதாரங்களை தேடி நகரங்களுக்கும் பிற நாடுகளுக்கும் செல்லுகிற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமான நெருக்கடிகள், புறக்கணிப்பு, சுரண்டல், மோசடிகளுக்கு பலியாகிறார்கள்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மணிநேர வேலை என்ற அடிப்படை கோரிக்கைக்கான போராட்டம் சிக்காகோவில் நடந்ததன் விளைவு, 8 மணி நேர வேலை என்பது சட்டரீதியான உரிமையானது. இந்த போராட்ட வரலாறு தான் மேதினமாக உருவெடுத்தது. 1919ல் உலக தொழிலாளர் அமைப்பு உருவாக்கிய முதல் ஒழுங்குமுறை 8 மணிநேர வேலை பற்றியது. 120 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மேதினத்தில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் என்ன என்பது சிந்திப்பது நமது கடமை. உலகமெங்கும் அதிகநேர வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். அரசாங்கங்கள் வேலை நேரத்தை முறைப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கிறது. அதே வேளையில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. அடுத்த 8 ஆண்டுகளில் சுமார் 100 கோடி புது பணியிடங்கள் உருவாக்கினால் மட்டுமே உலக அளவில் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள முடியும். இதற்கு வேலை நேரத்தை வரைமுறைப்படுத்தல் அவசியமாகிறது.

உலகமயமாக்கல் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை, வேலை அனைத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது. கல்வி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவ வசதி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு, ஏழைகளை வளர்ச்சியிலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. ஒரு சாரார் மட்டுமே வளர்வதற்கான திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் என பெயரிடப்பட்டு பாமர மக்களின் வாழ்வை அழிக்கும் கொள்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது. வசிப்பிடம் இல்லாதவர்கள், வேலையில்லாதவர்கள், வறியவர்கள் என இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

காலதாமதம் செய்யாமல் சமூக பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி புறக்கணிக்கப்பட்டவர்களை பாதுக்காப்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமை.

சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு வரைமுறைகள் விதிமுறைகளை சட்டரீதியான உரிமையாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவது தொழிலாளர் வாழ்வில் பாதுகாப்பை தரும். இதை செய்ய அனைத்து நாடுகளின் அரசுகளும் முன் வரவேண்டியது இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது. தொழிலாளர் பாதுகாப்பின் வழியாக தான் நிரந்தர மற்றும் பாதுகாப்பான உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் உருவாக்க முடியும்.

வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து (ஊதியம் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை குறைக்காமல்) நடைமுறைப்படுத்தி புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம். இன்றைய எந்திரமயமாக்கப்பட்ட சூழலில் வேலை நேர குறைப்பு உற்பத்தி திறனை பெருக்கவும், தொழிலாளர் மனநிலை மற்றும் அறிவுத்திறனை வளர்க்க உதவும். இவை அனைத்தும் வளர்ச்சியை நோக்கியதாக அமையும்.

இவற்றை செய்ய அரசுகளும், நிறுவனங்களும் முன்வருமா? இவர்களை செயல்பட வைக்கும் கடமை மீண்டும் தொழிலாளர் வர்க்கத்திடம். ஒன்று சேருவோம் மேதினத்தில்! உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்!! மேதினம் வாழ்க! மேதின தியாக வீரர்கள் தந்த ஊக்கம் வெற்றியை தேடி தரட்டும்!!!

திரு

2 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

Mr.Thiru

It is good Blog.

thiru said...

நன்றி சிவபாலன்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com