Sunday, August 12, 2012

டெசோ நாடகமும், வேதனைச் சுழலுக்குள் தமிழ் மக்களும்.

காலையில் டெசோ மாநாடு துவக்க உரையில் திரு.மு.கருணாநிதி ஆற்றிய உரையின் அடிப்படையில் சில குறிப்புகளை எழுதவேண்டிய அவசியம் வருகிறது.


படத்தில்: 2009 வன்னி இனப்படுகொலையின் போது தமிழ் மக்களின் இடப்பெயர்வு.
பல மாதங்களாக "டெசோ வருகிறது, தலைவர் அழைக்கிறார்" போன்ற விளம்பரங்களால் திமுகவின் மாநாடு அழைப்புகள் நிறைத்திருந்தது. வழக்கமாக நடத்தப்படுகிற கட்சி மாநாடுகளிலிருந்து இம்மாநாடு சற்று வேறுபட்டிருக்கிறது. அதன் பேசுபொருள் ஈழத்தமிழர்களைச் சுற்றிய திமுக அரசியல். இம்முறை சிறப்பு அழைப்பாளர்களாக அயல்நாட்டு முகங்கள், மேடையில் உணர்ச்சி கொப்பளிக்கும் பாடல்கள், கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நேரடி ஒளிபரப்பு, சிறப்பு விளம்பரப் படத்தொகுப்பு. அனைத்தும் கருணாநிதியின் புகழ்பாடும் படியாக மிக இலாவகமாகப் பின்னப்பட்டிருக்கிறது. 2009ல் மாமன்னர் திரு.மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த போது இந்த மாநாட்டிற்குக் காட்டுகிற முயற்சியில் பாதியை தமிழக மக்களைத் திரட்ட காட்டியிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்குமா? குறைந்தபட்சம் முத்துக்குமாரின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து விழித்த தமிழர்களுக்குச் செய்திகளும், காட்சிகளும் சேராமல் தடுத்த படுபாதகச் செயலை செய்யாமலே தடுத்திருக்கலாமே! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உக்கிரமாக நடந்த இரத்தம் காய்வதற்குள் "செம்மொழி மாநாடு" என்ற பெயரில் மாமன்னர் குடும்பம் சகிதம் அரசு பணத்தில் பாராட்டு மழையில் நனைந்தார். "செம்மொழி மாநாடு" நடத்தவில்லையென்று "தமிழ்த்தாய்" சாகத் தவம் கிடந்தாரா? செம்மொழி மாநாட்டிற்குப் பதிலாக "ஈழம் இனப்படுகொலை எதிர்ப்பு மாநாடு" நடத்தியிருக்கலாமில்லையா? அழுவதற்கும், குமுறுவதற்கும், உலக அமைப்புகளுக்கு ஒற்றைக்குரலில் கோரிக்கை எழுப்பவும் வாய்ப்பு கிடைத்திருக்குமே. அன்றைக்கு ஆட்சி அதிகாரம் கையிலிருந்த போது "ஈழம்" என்ற சொல்லை விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பரத்தட்டிகளில் அகற்றி, தட்டிகளைக் கிழித்தது திமுக அரசின் காவல்த்துறை. இன்றைக்கு மேடையில் திமுக கண்ணீர் வடிப்பது எதற்காக? இழந்த சென்னைக் கோட்டை அதிகாரத்திற்காகவா அல்லது இருக்கிற டில்லி அதிகாரத்தைத் தக்க வைக்கவா?

இனப்படுகொலைக்கும், அரசியல் உரிமைகள் மறுப்பிற்கும் உள்ளான மக்களின் நீதிக்கான போராட்டத்தின் நியாயத்தை இடப்பங்கீடு கோரிக்கை அளவிற்கு மாற்றி உப்புசப்பில்லாத தீர்மானங்களை முன்மொழிகிறது டெசோ. படுகொலைக்கும், பல்வேறு வடிவங்களிலான இழப்பிற்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகத்தைத் தனது அரசியல் சுயநலத்திற்காவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துகிற கயமைத்தனத்தைத் தொடராமல் இருப்பதே ஈழத்தமிழர்களுக்குக் கருணாநிதியும், திமுகவும் செய்கிற பெரும் உதவியாக இருக்கும்.

இன்றைய நிலையில் உலகமெங்குமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து மாநாடுகளைக் கூட்டுவது பணம் இருக்கிற அமைப்புகளுக்கு மிக எளிதாக சாத்தியமாகிற விசயம் தான். இதிலொன்றும் அதிசய சாதனைகளில்லை. இத்தகையக் கார்ப்பரேட் மாநாடுகளின் பேசுபொருள்களும், முன்னிலைப்படுத்தப்படும் நபர்களும், பேசப்படுகிற விசயங்களும், தீர்மானங்களும் தான் அதன் அரசியலை தீர்மானிக்கின்றன. 
  • ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அதில் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் நீதி விசாரணை எதுவுமில்லாமல், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காணாமல் போகவைத்தலும், ஆட்கடத்தலும், கொலைகளும், மிரட்டல்களும் தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படுகிறது. பாதுகாப்பும், நீதியும், நிவாரணமும் இல்லாத சூழலில் இழப்புகளுக்கு உள்ளான தமிழ் மக்களின் புலம்பெயர்வு அதிகமாகி வருறது.
  • ஈழத்தில் தமிழ்மக்களின் நிலங்களும், வளங்களும், கலாச்சாரமும் இலங்கை அரசின் ராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கிறது. கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், உண்மையிலேயே டெசோவிற்கு ஈழத்தமிழர்கள் மீது அக்கறையிருக்குமானால் குறைந்தபட்சமாகச் சில அடிப்படை தீர்மானங்களையாவது நிறைவேற்றி ஐ.நாவிற்கும், இந்திய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கிற செயல்களை தொடர்ந்து செய்யும்.
  1.  உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பையும், உடனடி நிவாரணத்தையும், நிலங்கள், கலாச்சாரம், வாழ்வை, உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்கிற பொறிமுறையை ஐ.நா நேரடி தலையீட்டில் உருவாக்க வேண்டும்.
  2. பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களையும், நீதியையும் வழங்க வேண்டும். சிறைகளில் வாடுகிற அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டு அவர்களுக்கு முறையான நீதியையும், நிவாரணத்தையும் வழங்கல். காணாமல் போகவைக்கப்பட்ட மக்கள் குறித்த உண்மைநிலையைக் கண்டறிந்து வெளியிடல் இவற்றை ஐ.நா பொறிமுறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
  3. இனப்படுகொலையைச் சர்வதேச அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்தவும், நீதி வழங்கவும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  4. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதை அங்கீகரித்து, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அவர்களே தீர்மானிக்கிற சூழலை ஐ.நா உருவாக்க வேண்டும்.
இத்தகைய தீர்மானங்களையும், அரசியல் அழுத்தம் உருவாக்குகிற செயல்திட்டங்களையும் கார்ப்பரேட் விளம்பரக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது. மற்றக் காரணங்கள் பல இருப்பினும் புதுடில்லியின் வெளியுறவுத்துறையின் கொள்கையைத் திமுக அச்சுப்பிசகாமல் ஏற்றதன் விளைவாகவுமே இனப்படுகொலையின் உக்கிரம் நிறைவேறியது. வார்த்தைகளில் காட்சிப்படுத்த முடியாத துயரங்களில் வாடுகிற ஈழத்தமிழர்களின் நெஞ்சை மீண்டும் கிழிப்பது போன்றது அரசியல் அழுத்தமற்ற இத்தகைய வெற்று நாடகங்களை நடத்துவது. இந்த நாடகங்கள் குற்ற உணர்வைத் தமிழக மக்களின் மீது மீண்டும், மீண்டும் சுமத்துவதுடன், தமிழ் மக்களை வேதனைச் சுழலுக்குள் தள்ளுகிறது.

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com