Friday, September 01, 2006

குமாரசாமியின் தோற்றப்பிழை

இட்லிவடையின் http://idlyvadai.blogspot.com/2006/09/8.html பதிவில் தமிழ்நேசன் என்கிற குமாரசாமி (எது உண்மை பெயர் தெரியவில்லை) என்பவர் பதிந்த பின்னூட்டத்தின் விளைவாக இந்த பதிவு. பொதுநலன் கருதியதாக அவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பக்க சார்புதன்மையையும், பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்களையும், பெரியார் கருத்துக்களையும் ஆபாசமாக சித்தரிக்க முற்பட்டிருக்கிறார்.

அவரது பின்னூட்டம் அடைப்புகளுக்குள் காணலாம். மற்றவை எனது பதில்.

//குமாரசாமி a dit...
பொது வேண்டுகோள்

தமிழ் மணம், மணம் வீசவில்லை.

வரவர அழுகல் நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டது

சில மேன்மைக்குரிய பதிவாளர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கிறார்கள்//


ஆண்டாண்டுகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள் பற்றி விவாதிக்கிற வேளைகளில் நாற்றமடிக்கிறது என்றால் அந்த அவலத்தை அனுபவிக்கும் வேதனை மிக்க மனிதர்களது வாழ்வு எப்படி இருக்கும்? பார்ப்பனீயத்தை, அதன் கருத்தியலை, அதன் தாக்கத்தை கண்டிக்கிற வேளைகளில் பார்ப்பன இனத்தில் பிறந்த எல்லோரையும் தாக்குவதாக ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? ஆதிக்க சாதியில் பிறந்தும் இந்த நாட்டில் சமூகநீதிக்காக உழைத்த இன்னும் உழைக்கிற நல்லவர்கள் இருக்கிறார்கள். அடக்கப்பட்ட சாதிகளில் பிறந்தும் தனது சக மனிதனை அடக்க துடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த மாறுபாடும் இல்லை. இதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் விதியாகுமா? தமிழ்மணத்தில் வருகிற பெரும்பான்மையான விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த எல்லோரையும் தாக்குவது நோக்கமல்ல. அப்படி ஒரு தோற்றப்பிழையை உருவாக்க முயலாதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

பார்ப்பனீயத்தை ஏன் குறிவைத்து பதிவுகள் வருகின்றன ? சாதீய ஒடுக்குமுறையும் அதில் இந்துமதம் எப்படியெல்லாம் பங்காற்றுகிறது என்பது பற்றிய விவாதங்களை திசைதிருப்புவது யார்? விமர்சனங்கள் வருகிற வேளைகளில், கிண்டலும் குதர்க்கமுமாக கேலிபேசுவதும், ஆதாரங்களை மறுப்பதை விட்டு விட்டு பிற இனத்தவரை வசைபாடுவது எதனால் ? மனிதர்களை நாயை விட கேவலமாக நடத்தும் மனுநீதியின் கேவலம் அம்பலப்படும் வேளைகளில் ஆவேசமடைவது யார் ? சக மனிதர்களை நாய் பேய் கவிதைகள் புனைந்து தான் தேவலோக த்து மைந்தர்களாக நடந்துகொள்வது யார் ? அநீதிகளை ஒப்புக்கொள்வது அதை திருத்தி மறுசீரமைக்க முதல் படியாக அமையும், வார்த்தைகளால் அதை பூசி மொழுகுவது அநீதிகள் தொடர உதவும். இது பெரியார் வ்ழியினர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

//அவர்கள் நினைக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது அவர்கள் மொழியில் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவர்கள் அந்த சமூகத்தில் 10% பேர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் (90%) நன்றாகப் படித்து நல்ல வேலைகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்//

படித்து நல்ல வேலையில் இருபதால் ஒருவர் சக மனிதனை மனிதனாக மதித்து அவனது உரிமைகளை ஆச்சாரங்கள், ஆகமங்கள் என்ற பொய்யன சாக்குகளில் மிதிக்கமாட்டார் என்கிறீர்களா ? ஆதிக்க சாதியினரின் அதிகாரம் ஆட்டம் காண்கிற வேளைகளில் பதட்டமான பதிவுகளை வலையேற்றி வக்கிரமாக சந்தோசப்படும் அதிகம் படித்து வெளிநாடுகளில் உயர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, இலக்கிய வியாதிகளை என்ன என்பது ? படிப்பிற்கும் பண்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கிறதா? இதை நினைக்கையில் ஒரு நடந்த சம்பவம் நெஞ்சை உறுத்துகிறது.

தமிழகத்தின் நெற்கிடங்கு என போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி என்கிற கிராமத்தில் 1968ல் டிசம்பர் 25ம் நாள் நள்ளிரவில் 40 விவசாயிகளைன் குடும்பங்களை உயிருடன் வீட்டில் வைத்து தீவைத்து கொழுத்தினார்கள். கொல்லப்பட்டது கூலி விவசாயிகளான சாதி அடிமைகள். கொன்றவர்கள் ஆதிக்க சாதியினர். எதற்காக? அரைப்படி நெல் கூலி அதிகமாக கேட்டு போராடியதற்காக ஆண்டைகள் கொடுத்த தண்டனை அது. இந்த கொடுங்குற்றம் நீதிமன்ற வழக்கானது. நீதி வழங்கியவர்கள் குறிப்பிட்ட செய்தியும் உங்களது வார்தைகளும் ஏனோ ஒத்து போகிறது. “குற்றம் சாட்டபட்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்தானவர்கள் என்பதால் இவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்ய வாய்ப்பிலை என நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே அவர்களை விடுதலை செய்தும், பொய்குற்றம் சுமத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை" என தீர்ப்பு வழங்கியது. நம் நீதி நியாயம் பேசும் தன்மை எதிலிருந்து பிறக்கிறது என்ற வேடிக்கையை பாருங்கள். படித்தவன், உயர் பதவியில் இருப்பவன், வெளிநாட்டில் உயர் அந்தஸ்தில் இருப்பவன் சாதிவெறியில் இல்லை என்பது உண்மையா? இல்லை இது ஒரு தோற்றப்பிழையே.

//அரசு படிப்பதற்கு, வேலைகளுக்கு என்று கோட்டா வைத்து அவர்களை ஓரங்கட்டியபோதும் அவர்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்தமாக அந்த சமூகத்தைச் சாடுவதில், குப்பைகளைக் கொட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதைப் போன்றதாகும் அப்படிப்பட்ட செயல்கள்//

படிப்பதற்கும் வேலைக்கும் இட ஒதுக்கீடு ஏன் ஏற்படுத்தவேண்டிய நிலை இந்தியாவில் ஏற்பட்டது? அந்த அடிப்படை காரணத்தை அறிந்து சக வலைப்பதிவாளர்களுக்கு சொல்லுங்களேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டின் பின்னரும் இந்தியாவின் கிராமங்களில், நகரங்களில் படிப்பில், வேலையில் முன்னேற முடியாத முட்டுக்கட்டைகள் இருக்கிறது என்ற பேருண்மையை இந்தியாவில் சென்று மக்களின் வாழ்வை நேரடியாக கண்டுணர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். ஓரங்கட்டப்பட்டது அடிமைப்படுத்தப்பட்ட சாதியினரே தவிர ஓரங்கட்டி வைத்திருப்பது ஆதிக்க சாதியினரை அல்ல. இது தான் கண்கூடான உண்மை. இட ஒதுக்கீடு மட்டும் இல்லாத இந்தியா எப்படியிருக்கும்? முடவர், விழியிழந்தோர், உடல் வலுவானவர், நோயாளி என அனைவரையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் வைத்து ஓட விட்டு போட்டி நடத்துவது போன்றது. இட ஒதுக்கீடு நோயினால் வாடும் குழந்தைக்கு அதிகம் சத்தான உணவு வழங்கி சமசீர் நிலைக்கு கொண்டுவருவது போன்றது. இதனால் மற்றவர்களை பட்டினியால் வாட சொல்லவில்லை.

//முதலில் எழுதுபவர்கள் தங்களுடைய நிலைமையை உணரவேண்டும். அவர்கள் மீது குப்பைகளை கொட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? அதற்குத் தமிழ் மணம்தான் கிடைத்ததா? வேறு ஊடகங்களே இல்லையா?

பெரியார் மீது இவர்களுக்குக் காதலென்றால் - அவருடைய கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு போகவேண்டு மென்றால் - அதை மட்டும் எழுதட்டும்//

எதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதை தீர்மானிப்பது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார சூழல்களும் அதன் காரணங்களும். எழுதுவதற்கான அதிகாரத்தை தருவது சமூகத்தின் அவலங்களும் அடக்குமுறைகளும் அதை ஆதரிப்பவர்களுமே என நம்புகிறேன். தமிழ்மணம் வலைப்பூக்களின் திரட்டி, அந்த விதத்தில் அதன் விதிகளுக்குட்பட்ட பதிவுகளே அனுமதிக்கப்படுகின்றன. தமிழ்மணம் கருத்து சுதந்திரத்தை நம்பி அனுமதிக்கிறது என அறிகிறேன். அந்த விதத்தில் பிடிக்காத விவாதங்களை படிக்காமல் இருப்பது நல்லது. பிடித்தவர்கள் படித்து தங்களது சொந்த அறிவால் தெளிவடையட்டும். குறிப்பிட்ட விதமான கருத்துக்களை மட்டுமே எழுதவேண்டும் என கட்டளையிட யாருக்கும் அனுமதியில்லை. பலர் தங்களது மிக அரிய சிறப்பான எண்ணங்களை, போராட்டங்களை, அனுபவங்களை, திறமைகளை, (உண்மையான) ஆன்மீக சிந்தனைகளை வலைப்பூக்களில் பகிர்ந்து வருகின்றனர். இருந்தாலும் வலைப்பூக்களில் வருகிறவை எல்லாம் உண்மை என சொல்வதற்கில்லை. பொய்யான வரலாற்று திணித்தல், மதவெறி, சாதிவெறியை கட்டிக்காத்தல், கலாச்சார காவல், காழ்ப்புணர்வு என கலவையாக கிடக்கிறது. ஆபசமான பதிவுகளை தமிழ்மணத்திற்கு தெரிவிக்கும் நடைமுரையும் இருக்கிறது. அதன் மீது தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியும் வழங்கியிருக்கிறது. இதில் தமிழ்மணத்தை குறை சொல்வதற்கில்லை. ஒட்டுமொத்தமாக பெரியார் கருத்துக்களை எழுதுவதோ, பார்ப்பனீயத்தை வெளிப்படுத்துவதோ ஆபாசம் என்பதா? இது கண்டிக்கப்பட வேண்டிய தோற்றப்பிழை.

//இப்படிக் காறி உமிழ்ந்துகொண்டே இருப்பதற்கும்,
தொண்டை வரண்டு போகும் அளவிற்கு விடாது குறைப்பதற்கும்தான் பெரியார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனாரா? இப்படி இவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் என்னைப் போன்ற பெரியார் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்களும், அந்த இயக்கத்தை விட்டு விலக நேரிடும்//

சமூக அவலங்களை கருத்துக்களால் விவாதிப்பதும், வெளிச்சத்துக்கு கொண்டு வருவதும் குரைப்பதாக கருதினால் குரைப்பது கடமையாக இருக்கட்டும். அடக்குமுறையாளர்களையும் அவர்களது கருத்துக்களையும் பார்த்து குரைப்பதால் விடியல் பிறக்கட்டும். பெரியார் இந்த பணியை தான் செய்து பார்ப்பனீய ஆதிக்க கட்டமைப்பை தகர்க்க துவங்கினார். இன்னும் அந்த பணி முழுமை பெறாமையால் தொடரவேண்டிய பாதை நீண்டது. அய்யா பெரியார் விட்ட பணியை அவரவர் சொந்த அறிவில் பகுத்தறிந்து சிந்தித்து இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப தொடர்வது சமூகக்கடமை. இந்த சமூகப்பணி தங்களது சொந்த விருப்பங்களுக்கு எதிரானால் இயக்கத்தை விட்டு விலகுவோம் என பூச்சாண்டி காட்டுவதால் சமூக சீர்திருத்த பணிகள் நின்றுவிடுவதில்லை. பெரியார் தான் உருவாக்கிய இயக்கத்தில் யாரையும் அதிகார அடக்குமுறையில் பிடித்து வைத்தவர் அல்ல. உண்மையான பெரியார் உணர்வாளர்களுக்கு இது தெரியும்.

//படித்து, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இவர்கள் இப்படித் தமிழ் மணத்தில் கத்தி (ச்) சண்டை போட்டுக்கொண்டிருப்பது இவர்களுடைய நிறுவன உயர் அதிகாரிகளுக்குத் தெரியுமா?
தங்கள் புகைப்படம், அலுவலக முகவரியுடன் தங்கள் எழுத்துக்களைப் பதிவு செய்யும் தைரியம் இவர்களுக்கு ஏன் இல்லை? //

நானும் இதையே இந்த பின்னூட்டம் இட்ட நபருக்கும் அவர் ஆதரவு தெரிவித்து குறிப்பிடுகிற நபர்களுக்கும் முன் வைக்கிறேன். பின்னூட்டத்தை பதிந்த குமாரசாமி தனது பெயர் தமிழ்நேசனா இல்லை குமாரசாமியா என்பதில் குழப்பம் அப்படி இருக்கையில் பிறரை கேட்க என்ன தகுதியிருக்கிறது? முகமூடிகளை கழைந்து எல்லோரும் தங்களது சொந்த அடையாளங்களை முன் வைக்கட்டும் அப்போது தானாக வெளிப்படைத்தன்மை வரும். சொந்த அடையாளங்கள் பற்றிய கேள்விகள் எழுந்த வேளைகளில் பலர் புனை பெயரில் எழுத காரணம் ஏன் என விளக்கமிட்டுள்ளார்கள்.

//அந்த துணிச்சலைப் பெரியார் இவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா? ஆகவே இவர்கள் திருந்த வேண்டும்! இவர்களின் ஆபாச எழுத்துக்கள் தமிழ் மணத்தில் தடை செய்யப்பட வேண்டும்

இல்லை என்றால் கண்ணியமாக எழுத & படிக்க விரும்பும் வாசகர்கள் தமிழ் மணத்தை இவர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விட்டு வேறு ஊடகங்களுக்குப் போக வேண்டியதுதான்//

பெரியார் எல்லா தைரியத்தையும் தந்திருக்கிறார். ஆபாச எழுத்துக்களை எழுதுவது யாராக இருப்பினும் கண்டிக்கபட வேண்டியவர்கள். அப்படிப்பட்ட செயல்கள் தடுக்கப்பட வேண்டும். பெரியார் கொள்கைகள் பேசி எழுதுவது ஆபாசம் என்ற தோற்றப்பிழையை உருவாக்கினால் இந்த அறிவை என்ன என்பது ? எனது பதிவுகளில் வந்த ஆபாசம் கலந்த பின்னூட்டங்களை அனுமதிக்கமல் வந்திருக்கிறேன், இன்னும் அதையே செய்வேன் இது யாரையும் திருப்திப்படுத்த அல்ல, எழுத்தில் நேர்மையையும், பண்பையும் கடைபிடிக்கும் தன்மை.

//எந்த சமூகத்திற்குத்தான் தன் சாதிப்பெருமை இல்லை? மருத்துவர் அய்யா கட்சிக்காரர்கள் வன்னியரைத்தவிர மற்றவர்கள் அன்னியர் என்கிறார்களே - அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு, கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் பேரவை என்று மாவட்டத்திற்கு ஒரு சாதி , இனச் சங்கம் தலை துக்க்கிக் கொடி பிடித்துக் கொண்டு இருக்கவில்லையா? அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு. //

எந்த சாதி ஆதிக்கம் செலுத்தினாலும் எழுதப்படல் வேண்டும், அவை சமூகத்தின் சாளரங்களில் வெளிச்சத்திற்கு வரும் வேலைகளில் மட்டுமே ஆதிக்கத் தன்மை மறையும். அந்த விதத்தில் எழுத்தாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய கடமையுண்டு. ஆதிக்கம் யார் செய்தாலும் கண்டிக்கும் துணிவு பெரியார் வழியை உண்மையாக கடைபிடிப்பபவர்களுக்கு உண்டு.

//ஆகவே சாதி இனச் சண்டைகள் நமக்கு வேண்டாம் (வலைப் பதிவாளர்களுக்கு) எழுத்தாளன் என்றாலே எல்லோருக்கும் பொதுவானவன். ஆகவே சாதிகளை மறந்து மனிதர்களை நேசிப்போம். மனிதநேயத்தோடு மட்டும் இருப்போம். //

எல்லோருக்கும் இந்த கருத்துக்கள் பொருத்தமானது. அனைவரும் சமம், வீதியில், சமூக அமைப்பில், கோயிலில்.... என எல்லா இடங்களிலும் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள். உயர்குலம், தாழ்ந்த குலம் என பிறப்பில் இல்லை என்பதை நடைமுறையாக்குவோம். இதை மறுக்கிற கொள்கை, மதங்களை மறுசீரமைப்போம். அப்போது இந்த மனிதநேய கனவு மெய்படும்.

//இனிமேலாவது அறிஞர் திரு.C.N.அண்ணாதுரை அவர்கள் சொல்லிக்கொடுத்த கண்ணியத்தோடு அனைவரும் எழுதுவோம்! //

அய்யாவும் அண்ணாவும் தந்த கண்ணியத்தில் தான் எழுதுகிறோம். அண்ணா ஆரியமாயை எழுதி விழிப்புணர்வு தந்தவர். முடிந்தால் யாராவது ஆரியமாயை பற்றியும் வலையேற்றுவார்கள். கிடைக்கும் போது தவறாமல் படிக்கவேண்டிய நல்ல புத்தகம் அது.

//இவர்கள் திருந்தவில்லை என்றால் - தமிழ் மணம், ஆபாச எழுத்துக்களுக்குப் பதிலடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகளைக் கட்டிகொண்டு தொடர்ந்து வேடிக்கை பார்க்கும் என்றால் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுவோம். //

வெளியேறுவது அவரவரது விருப்பம் சார்ந்தது. ஆபாசத்தை அனைவரும் வெறுக்கவேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆபாசத்திற்கு தமிழ்மணத்தில் வேலையில்லை. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது ஆபாசம் என்றால், பார்ப்பனீயம் ஆபாசமானதா?

//நான் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவனல்ல - அதை
நினைவில் வைத்துக்கொண்டு முதல்வரியில் இருந்து
மீண்டுமொரு முறை அனைவரும் படியுங்கள் //

யார் எந்த சாதி என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு கவலையில்லை. பார்ப்பனர் என்று குறிப்பிடுகிற சாதியில் பிறந்த எல்லோரையும் திட்டுவது வேறு, பார்ப்பனீயத்தை கடைபிடிப்பவர்களை வெளிப்படுத்துவது வேறு. பார்ப்பனர் என்ற் சாதியில் மட்டுமல்ல பிற சாதிகளிலும் சாதிவெறியர்கள், மதவெறியர்கள் இருக்கிறார்கள். இது பார்ப்பனீயம் என்கிற கருத்தியலின் தாக்கமும் அது இந்து மதத்தில் அடிப்படையான கட்டமைப்பை கொண்டதன் விளைவு. இந்த சாதி வ்எறி என்கிற தொற்றுவியாதி சாதி அடுக்குகளில் தொடர்கிறது.

நான் எந்த சாதியையும் சாராதவன். பார்ப்பன சாதி என்று சொல்லப்படுவதில் பிறந்த மனதிற்கினிய நல்ல குணம் படைத்த மனிதர்கள் பலர் நட்பும் உறவும் கொண்டவன் நான். அவர்களை மனிதர்களாக சமமாக மதிக்கிறேன். பார்ப்பனீய ஆதிக்க கருத்தியல் கொள்பவர் யாராக இருப்பினும் அவர்களது கருத்தியலை (நபர்களையல்ல) எதிர்க்கிறேன். நான் எல்லா உரிமையும் நிறைந்த மனிதன்! எல்லா அடையாளங்களையும் விட மனிதன் என்பதில் பெருமையடைகிறேன், பொறுமையாக படித்து சிந்தித்து தான் இந்த பதிலை எழுதியுள்ளேன்.

மனிதனை மனிதனாக சம உரிமையுடன் மதிக்கும் நிலை உருவாகட்டும், வீதி முதல் கோயில் வரையும் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சமஉரிமை கிடைக்கட்டும். பிறப்பில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுவோம். அதை மறுப்பவற்றை கழைவோம். அதுவரை பெரியார் கருத்துக்களும் பார்ப்பனீய, சாதி, மதவெறி எதிர்ப்பும் தொடரட்டும்.

திரு

22 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

நல்லா பொருமையாக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்... மிக அருமை...


//இட ஒதுக்கீடு மட்டும் இல்லாத இந்தியா எப்படியிருக்கும்? முடவர், விழியிழந்தோர், வலுவானவர், நோயாளி என அனைவரையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் வைத்து ஓட வீடு போட்டி நடத்துவது போன்றது. //


அய்யா, 100% உண்மை....


நன்றிங்க.. பதிவுக்கு..

Anonymous said...

உங்கள் கருத்துக்கள் சீர்மையானவை. சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகள் பார்ப்பன துவேசத்தால் திசை மாற்றப்படுவதை புரிந்து கொள்ளுங்கள். சட்டையில் கறையேற்படுத்தி சிதறிய கவனத்தில் பணம் களவாடுவதற்கும் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதவர் என்று சண்டை மூட்டிவிட்டு தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் வேறுபாடு இல்லை.

Anonymous said...

maha mosamana padhivu.
do something constructively to the society.
instead dont do the mud slinging.
there is no difference between the so called brahmin and you,
because u r crying for achieving his status.
so do some good work for the society.
stop this nonsense.

Regards
Mayil samy.
toronto

Anonymous said...

kizh venmani issue
kanda devi issue
pappapatti keeri patti issue
issues in western districts
not even a single brahmin has his role.
try to correct the society and stop this anti social anti humanisitic topics
mayilsamy
toronto

thiru said...

நன்றி சிவபாலன்! உண்மைகள் சிலருக்கு கசக்கும்.

thiru said...

அனானிகளுக்கு,

மீண்டும் பதிவை படியுங்கள்! ஒரு கருத்தியலை அதன் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதை முட்டாள்தனம் என்றால் அதை தொடர்ந்து செய்வேன். எனது இந்த பதிவு எந்த தனிப்பட்ட சாதியில் பிறந்தவர்களுக்கும் எதிரானதல்ல. பார்ப்பனீயம் யாரை பிடித்திருந்தாலும் அதை எதிர்ப்பது கடமை.

மயில்சாமி, பார்ப்பன சாதியினரின் அடையாளத்தை பெற துடிக்கிற அளவு அவசியம் எனக்கில்லை இல்லை. மனிதனாக இன்னும் முழுமை பெற தவிப்பு உண்டு. தாங்களுக்கு புரிந்து கொள்ள ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என யோசியுங்கள்.

Anonymous said...

yes
truth is bitter,
the role of brahmins in all social clashes is nil...
yes this truth is bitter to all.

you are 100% right
but hard to accept this fact.
what to do Thamiz manam is becoming thamiz naatram
Regards
mayilsamy

thiru said...

மயில்சாமி உங்களது மனக்குமுறலால் படித்து புரிந்துகொள்ள சிக்கல் இருப்பதாக உணர்கிறேன். அதனால் தான் தமிழ்மணம் மீது சேற்றை இறைக்கிறீர்கள். அவசரம் வேண்டாம், பொறுமையா மீண்டும் படியுங்கள்! :)

Anonymous said...

Thiru,

Thx for the reply,
we all outside india doing lot for people and thinking so globally and trying to become global citizens
still my own brothers in TN , oh no
a group has wasted their lives in 1960
1970's
pl dont do this mistake again,
Life is wide, do something in the field, dont try to spread hatred towards any fellow human beings.
wht to say,
i understood the contents that is why am writing to you again and again.
anbudan
Mayil

Anonymous said...

anbin Thiru,

sikkal enakkilai,
ungallukku,
anbe sivam,
advonre unmai, try to spread this
anbu mayil

கோவி.கண்ணன் [GK] said...

பார்பனீயத்தை எதிர்ப்பதை ஒட்டுமொத்த பார்பனர்கள் எல்லோரையும் எதிர்பதாக சிலர் விசமம் செய்து திசைத் திருப்புவது எல்லோரும் அறிந்ததே.

அதை நன்றாக தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்

Anonymous said...

anbin kovi avargale,
yarum edhaiyum disai
thiruppa muyalavillai.
anbal velvadhai ariyungal.
illai enil
veruppu nammiye azhikkum
vidadhu anbudan mayil

Anonymous said...

To All,

Naan arindha varaiyil
ella Brahmana nanbargalum
jaadhi parthu udavavillai,
i know a guy (BR)who contributes almost 200$ everymonth for a social cause in back home,for a non caste based organization.
i know another guy (BR)who is also the socalled sect does a lot of work here in local as well in back home for cancer institute.
i know many of them, but not even a single is botherd to speak caste
they are far ahead and thinking globally
try to think globally.

anbirkum undo adaikkum thaz

Vidadhu anbudan mayil

Anonymous said...

To All,

Thamiz manam manakka udavungal.

anbu,
arivu,
kalai,
ilakkiyam,
ariviyal,
aya kalaigal patri ezhudhungal.
Themadura thamizosai ulgelam paravattum

Mudivaga yaraium verukkadha
vidhada anbudan
Mayilu

கோவி.கண்ணன் [GK] said...

//Anonymous said...
anbin kovi avargale,
yarum edhaiyum disai
thiruppa muyalavillai.
anbal velvadhai ariyungal.
illai enil
veruppu nammiye azhikkum
vidadhu anbudan mayil
//

மயிலு ? 16 வயதினிலே மயிலா !

பெரியாருக்கு சந்தனம் பூசினதை வைத்து ஒரு கும்பல் புலகாங்கிதம் அடைஞ்சப்ப இந்த மயிலு அங்கேயும் போயி கூவி இருக்கலாமே !

மயிலே உங்களுக்கு அன்புக்கும், கொள்கைக்கும் வித்யாசம் தெரியவில்லையே !

thiru said...

அன்பின் மயிலு,

எல்லோரும் முழு சம உரிமை படைத்த மனிதன் என சிந்தித்து செயல்படுவதை விட உயர்ந்த சிந்தனை எது? அது தான் என் வழி! உலகமெங்கும் பறந்து திரிந்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்னால் சக மனிதர்களை நாய்களை விட கேவலமாக நடத்தும் கருத்தியலை அரவணைக்க இயலவில்லை.

இரக்கத்தினால் உதவிகள், சேவைகள் செய்கிற உங்களது நண்பர்களை மனதார பாராட்டுகிறேன்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாமா? எல்லா சாதியினரும் சமமா? எல்லா சாதியினரும் கற்பகிரகத்தில் நுழையலாமா? என உங்கள் நண்பர்களை கேட்டுப்பாருங்கள்.

ஆகமம், ஆச்சாரம், சாத்திரம், வேதம் என காரணம் சொல்லாமல் என்ன பதில் வரும் பாருங்கள்.

உங்கள் அன்பிற்கு நன்றி மயிலு!

எல்லா துறைகளிலும் ஆர்வமும் உண்டு எழுதியும் வருகிறேன்! உங்கள் தூண்டுதலுக்கு நன்றி!

thiru said...

நன்றி கோவி.கண்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

நன்றிங்க.. பதிவுக்கு..

Anonymous said...

anbu mikka Thiru,

you are talking of this Archakas in temple.
that we have achieved in 1960's
go to any ISKCON temple, you can see even a Black by birth will do pooja, wear sacred thread and worship the lord krishna ,
and no body including all the so called brahmins denied or degraded them because they were respected as brahmins because of their way of life.
brahminism is a way of life, if somebody claims by birth they are idiots,
similarly if somebody keep on mudslinging the minority community whose role is none in all clashes in TN
they cheat themselves,

Again insisting you, dont try to find fault with people
try to send the message of love to all in the world.
already hatred is spread enough , you need not have to spread separately.
if somebodey says anbu is differnt from principle, i again pity them.
my only principle in life is love all , including all animals, nature , fellow humans, society
i have never been ill treated and my way till today has worked out well, my society is full of love there is no place for hatred.
if you still believe there is a differnce
please visit nearast ISKCON temple, see the equality,
every religion has some weaknesses it is not the religion , but the frenzied misintrepreters who spoils the religion.

so again what to say
may love win you all.

vidadhu migunda anbudan

Mayilsamy
vazhga vaiyagam

thiru said...

//Anonymous said...
anbu mikka Thiru,

you are talking of this Archakas in temple.
that we have achieved in 1960's
go to any ISKCON temple, you can see even a Black by birth will do pooja, wear sacred thread and worship the lord krishna//
எனது பதிவு பார்ப்பனீயம் பற்றியது அதற்க்கு பதில் சொல்லாமல் வாதத்தை அன்பு அன்பு என திசை திருப்ப வேண்டாம்.

Your statement is false. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக த்மிழக அரசு ஆணை பிறப்பித்ததும் உச்சநீதிமன்றத்தில் சென்று அதற்கு தடை வாங்கியதும் கடந்த மாதம் நடந்து முடிந்திருக்கிறது. திருப்பதி, திருச்சி திருவரங்கம், உச்சிபிள்ளையார் கோயில், சுசீந்திரம், சிதம்பரம், வடபழனி, தஞ்சை பெரிய கோவில் என எந்த கோவிலில் பார்த்தாலும் இன்றும் ஆதிக்கசாதியினர் மட்டுமே அர்ச்சகர்கள். நீங்கள் அன்பில் தீர்வு என்பது ஆதிக்க சக்திகளுக்கு போதிக்க வேண்டியது. பிற மனிதர்கள் எல்லாம் கீழானவர்கள் பிறப்பிலிருந்து என வேதங்களில் உருவாக்கி வைத்து மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களுக்கு இதை சொல்லுங்கள். உங்களது மனிதபண்பு அப்போது வெளிப்படும். அடிபடுபவனை பார்த்து அன்பு செய் என போதிப்பது மிக எளிது!

ISKCON கோயில் நடத்துகிற ஹரே கிருஸ்ணா இயக்கத்தின் கோயில்களில் சமமாக மனிதர்களை மதியுங்கள் என அன்பை போதிக்கிறார்களா? கறுப்பாக பிறப்பது எல்லாம் பார்ப்பனர் அல்லாதார் என்னும் உங்கள் பார்வையே சரியானதல்ல. இங்கு பார்ப்பனீய கொள்கை சக மனிதனை சம உரிமை பெற்ற மனிதனாக மதிக்கிறதா இல்லையா என பதிலளியுங்கள்.

//and no body including all the so called brahmins denied or degraded them because they were respected as brahmins because of their way of life. brahminism is a way of life, if somebody claims by birth they are idiots,//
பிராமணீயம் என்பது வாழ்க்கை முறை என்றால் அதற்கான விதிமுறைகள் என்ன? பார்ப்பனராக பிறக்காத ஒருவர் அந்த விதிகளை பின்பற்றினால் பிராமணீய வாழ்க்கையை கடைபிடிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கற்பகிரகத்தில் நுழைய அனுமதிக்கப்படுவாரா? அவர் வேதங்களில் சிறந்து விளங்கினால் அவரை திருவரங்கம் கோயிலில் அர்ச்சகர் ஆக்குவார்களா? இதனை தெளிவுபடுத்துங்கள்.

//similarly if somebody keep on mudslinging the minority community whose role is none in all clashes in TN they cheat themselves,//

இதுவும் பொய்யானது! ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பரப்பி பல இடங்களில் மோதலை உருவாக்கியதில் பல பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு. திரு.இல.கணேசன் பரப்பிய வெறியில் மண்டைக்காடு கலவரம் உருவாகி பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மத மோதல்கள் அதன் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் முக்குலத்தோர் உருவாக்கிய பல சாதிமத மோதல்களுக்கு பின்னால் பார்ப்பனீய சிந்தனையுள்ள இந்துத்துவ இயக்கங்கள் இருப்பதை மறுக்க இயலாத உண்மை.

//Again insisting you, dont try to find fault with people
try to send the message of love to all in the world.
already hatred is spread enough , you need not have to spread separately.//

வெறுப்பை பரப்புவது எனது நோக்கமல்ல. வெறுப்பை சாதி அடுக்குகளில் உருவாக்கி அதை கட்டிக்காத்து வரும் உண்மையை சொல்லி நீதி கேட்பது வெறுப்பா? சங்பரிவார இயக்கங்கள் இந்தியாவில் உருவாக்கி வருகிறது அன்பா?

தேவாலயங்களை தீ வைப்பது, மசூதி இடிப்பது, பாலியல் பலாத்காரம், படுகொலைகள் இது தான் அன்பா? குஜராத் படுகொலைகளை ஆதரித்தும், கொலைகார நரேந்திரமோடியை ஆதரித்து பார்ப்பனீயம் வளர்ப்பது அன்பா? இது தான் நீங்கள் போதிக்கிற சிவமா?

//if somebodey says anbu is differnt from principle, i again pity them. my only principle in life is love all , including all animals, nature , fellow humans, society

i have never been ill treated and my way till today has worked out well, my society is full of love there is no place for hatred.//

உங்களுக்கு பிரச்சனையில்லை என்பதால் இந்தியாவில் இந்த அடிமைத்தனத்தில் வாழ்கிற மக்களுக்கு பிரச்சனையில்லை என சொல்லாதீர்கள். அது தவறானது. வெறுப்பை உருவாக்குவது என் நோக்கமல்ல. பிறப்பில் எல்லோரும் சமம் என்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பது என் கனவு! அந்த சமுதாயம் எவரையும் தாழ்ந்தவராக ஒதுக்கி வைக்ககூடாது!

//if you still believe there is a differnce please visit nearast ISKCON temple, see the equality,
every religion has some weaknesses it is not the religion , but the frenzied misintrepreters who spoils the religion.//
ஏற்கனவே மதுராவில் இருக்கிற கோவில்கள் உட்பட கிருஸ்ணர் கோயில்கள் பலவற்றில் சென்றிருக்கிறேன்! சமஉரிமையை எந்த கோயிலிலும் காணவில்லை. ஆதிக்கசாதியினர் மந்திரம் ஓத அடிமைகள் வெளியே காத்திருந்து வழிபடுவது தான் நான் கண்ட உண்மை. இந்து மதத்தின் வேதங்களில் சாதி இல்லை என்கிறீர்களா? அப்படியானால் இந்த விவாதம் அவசியமில்லை. ஏற்கனவே இது பற்றி தங்கமணி அவர்கள் பதிவில் விவாதித்து விளக்கியுமாயிற்று!

//so again what to say
may love win you all.//

அன்பு எல்லோருக்கும் வரவேண்டும்! அது சக மனிதனை சமமாக மதிப்பதிலிருந்து வரவேண்டும்! Love is not charity!

நன்றி!

Anonymous said...

நல்ல பதிவு .மண்டைக்காடு கலவரம் இல கனேஷனின் வெறிப்பேசினால்தானா

Anonymous said...

நல்ல பதிவு .மண்டைக்காடு கலவரம் இல கனேஷனின் வெறிப்பேசினால்தானா

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com