Thursday, March 14, 2013

சவூதியின் நவீன நாட்டாமைகளும் அடிமைகளும்!

அரேபிய செல்வந்தரின் வீட்டில் வேலை செய்யச் சென்ற ரிஸானா  நஃபீக்கை சவூதி அரேபிய நீதிமன்றம் கொலை செய்தது அநீதியானது. இளம் குற்றவாளிகளுக்குக் கொடூரமான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கிற சர்வதேச சிறார் உரிமைச் சட்டத்தை மீறியுள்ளது சவூதி அரசு. ரிஸானா நான்கு மாத அரேபியக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. பதினேழு வயது ரிஸானாவிற்குக் குழந்தை வளர்ப்பு அனுபவமில்லை. குழந்தையின் இறப்புக்கான காரணங்களை பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளில் கண்டறிய முடியும். ஆனால், தவாத்மி காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கும் தடயவியல் சோதனைக்கும் உட்படுத்தவே இல்லை. புலன்விசாரணை மற்றும் வழக்குவிசாரணையில் ரிஸானாவிற்கு மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவில்லை. வழக்கு ஆவணங்களை வழங்கவில்லை. நவீன அறிவியலின் புலனாய்வு, தடயவியல், மருத்துவ சோதனைகள் எவையும் இல்லை. இந்திய கிராமங்களின் நாட்டாண்மை பஞ்சாயத்து முதியவர்களின் அடாவடித்தனம் போன்ற தீர்ப்பு இது.

சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் அயல்நாட்டுப் பெண்கள் வீட்டுவேலை செளிணிகிறார்கள். அதில் இலங்கைப் பெண்கள் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர். அயல்நாட்டுத் தொழிலாளர்களின் சேவையில்லாமல் போனால் சவூதி செல்வந்தர்களின் வீடுகள் வழக்கம் போல சொகுசாக இயங்கமுடியாது. ஆனாலும் சவூதிக்கு வீட்டுவேலைக்குச் செல்லுகிற பெண்கள் அரேபிய செல்வந்தர்களின் வீடுகளில் அனுபவிக்கிற கொடுமைகளும் துயரங்களும் வேதனைகளும் ஏராளம். முதலில் அவர்களது கடவுச்சீட்டு உட்பட அனைத்து ஆவணங்களும் பறிக்கப்படுகின்றன. வீடுகளுக்கு உள்ளேயே அவர்கள் முடக்கப்படுகிறார்கள். வெளியாட்களோடு தொடர்புகொள்ளவோ வெளியே செல்லவோ அனுமதிப்பதில்லை. உறங்குகிற சில மணிநேரங்கள் தவிர  ஓய்வு என்பதே இல்லை. எந்நேரமும் ஓய்வில்லாத வேலை, வேலை. முறையாக ஊதியம் கொடுப்பதில்லை.  அவர்கள் நவீன அடிமைகள். இன்னும் 50க்கும் மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி சவூதி அரேபிய சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களில் எத்தியோப்பிய, இந்திய, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய பெண்களும் உண்டு. சவூதி அரேபியாவின் மிக மோசமான நீதிபரிபாலனையும், விசாரணை அமைப்புகளும் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. கிராம நீதிமன்றங்களும் கோத்திரத்தலைவர்களின் கூட்டங்களும் சொல்பவை நீதியாகிறது. கை, கால்களை வெட்டுதல், தலை வெட்டுதல் என்று நிகழ்கால சமூகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் ஷரிஆவின் பெயரால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஷரிஆ சட்டம் பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையைக் கோரவும் மன்னிக்கவும் அதிகாரம் வழங்குகிறது. அது எவ்வகையிலும் நீதி வழங்க உதவாது. இத்தகைய சட்டங்களால் தான் ரிஸானாக்கள் பலியாடாக்கப்படுகிறார்கள்.

ஷரிஆவில் மாற்றம் கோருகிறது இன்றைய இஸ்லாமிய சமூகம்
நபிகள் வாழ்ந்த காலத்தில், அன்றைய அரேபிய சூழலில் உருவாக்கப்பட்ட சட்டத்தை இன்றைய காலத்திற்கு அப்படியே பொருத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. மெக்காவிலிருந்து 70 தோழர்களோடு மெதீனாவிற்குச் சென்று அரசை உருவாக்கினார் நபிகள் நாயகம். அங்கே அவர் பழங்குடி மக்களை வழிமுறைப்படுத்த ஷரிஆவை நெறிப்படுத்தினார். 1440 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய சமூகத்தின் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் ஷரிஆ பொருந்தியிருக்கலாம். அதனால் தான் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப ஷரிஆவில் மாற்றம் செய்வது அவசியமென்கிற குரல் இஸ்லாமிய மதத்திற்குள் எழுப்பப்படுகிறது. ஆனால் நீதிபரிபாலனையிலும் தண்டனை மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபடுகிற ஆண்-மையவாத அடிப்படைவாதிகள் இக்குரல்களை இஸ்லாமிற்கு எதிரானதாகத் திசைதிருப்புகிறார்கள். ஆனால், மனித உரிமை கோட்பாடுகளை உள்வாங்குகிற சமூகங்களும் சட்டங்களுமே நவீன உலகில் வளர்ச்சிப் பாதையில் மற்ற சமூகங்களோடு இணையாகப் பயணிக்கமுடியும். இனியும் ரிஸானாக்களின் உயிர் வாழும் உரிமையைப் பழமைவாதமும் சட்டங்களும் கொலைசெய்ய அனுமதிக்கக்கூடாது.

(தமிழ் ஆழி, பெப்ருவரி 2013 இதழில் எழுதியது)

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com