Friday, June 30, 2006

ஜெனிவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்...

ஜூன் முதல் வாரம் ஜெனிவா சென்று ஐ.நா வின் தொழிலாளர் நலன் பற்றிய அமைப்பான International Labour Organisation (http://www.ilo.org) நடத்திய “சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்” கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் employment relationship பற்றிய தலைப்பில் விவாத கூட்டத்தில் பங்கெடுத்து, உலக அளவில் இளம் வயது தொழிலாளிகளது பிரச்சனை பற்றி 5 நிமிடங்கள் உரையாற்றினேன். இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் அரச பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள், முதலாளிகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ குழுக்கள் பிரதிநிதிகள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய விவாதம் ஒப்பந்த தொழிலாளர்கள், நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டு எந்தவிதமான பாதுகாப்புகளும் அற்ற தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றியதான சூடான விவாதமாக இருந்தது. வழக்கம் போல தொழிலாளர் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வண்ணமாக அமெரிக்க அரச பிரதிநிதிகளின் பேச்சு அமைந்திருந்தது. அதற்கு துணையாக நியூசிலாந்து, கானடா, சுவிஸர்லாந்து என பணம் படைத்த நாடுகளின் கூட்டணி அமைந்தது. அதற்கு நேர்மாறாக ஆப்பிரிக்க நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா தலைமையில் தொழிலாளர் உரிமைக்காக முழக்கமிட்டன. தனியாக லெபனான் தொழிலாளர் உரிமைக்கு குரல் கொடுத்து திறந்த சந்தை பொருளாதாரத்தை வார்த்தைகளில் கடுமையாக சாடியது.

விவாதத்தின் இடைவேளையில் தென்னாப்பிரிக்க அரச பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினேன், மனநிறைவான ஒரு சிறு உரையாடலில் அவர்களது மனிதமாண்பு கண்டு வியந்தேன். இந்திய அரச பிரதிநிதிகளை சந்தித்த வேளை வழக்கத்திற்கு மாறான மாற்றம் தெரிந்தது. இந்த விவாதத்தில் தொழிலாளர்கள் சார்பாக பேச்சாளராக திரு.பட்டேல் என்ற இந்திய வம்சாவழி தென்னாப்பிரிக்க தொழிற்சங்கவாதி நேர்த்தியான புள்ளி விபரங்களுடன் ஓயாது கருத்துக்களை வைத்து வாதாடினார். அமெரிக்க பிரஜையான முதலாளிகள் தரப்பு பேச்சாளர் விடாப்பிடியாக தனது கருத்துக்களை வைத்து முதலாளித்துவத்திற்கான சேவையை செய்தார். மிகவும் சிக்கலான, கடுமையான இந்த விவாதத்தை நெறிப்படுத்திய தலைமையை நெதர்லாந்து நாட்டின் அரச பிரதிநிதியான பெண்மணி மிகவும் நேர்த்தியாக நகைச்சுவையுடன் நடத்தினார்.

மூன்று ஆண்டுகளாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வந்தாலும் இந்த முறை முந்தைய தமிழக அரசின் அரசு ஊழியர் பிரச்சினை மனதில் வர Freedom of Association என்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் சார்ந்த பிரிவின் உயர் அதிகாரியை சந்தித்து உரையாடினேன். சட்ட வல்லுநரான அவருடன் கலந்துரையாடியதில் திரட்டிய தகவலில் முந்தைய தமிழக அரசின் சர்வதேச தொழிலாளர் விதி மீறல் பற்றிய வழக்கில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்ப்பு பற்றிய தகவல் கிடைத்தது. செல்வி. ஜெயலலிதாவின் முறைகேடான இந்த நடவடிக்கையை இன்னும் மனதார பாராட்டி தன்னைத்தானே தட்டிக் கொடுக்கிறவர்களுக்காக இந்த வழக்கின் தகவல்கள் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்... தொழிலாளர் உரிமையும் வாழ்வும் சிறக்கட்டும்!

திரு

Tuesday, June 27, 2006

தென்னாப்பிரிக்காவில்...

வலையுலக நண்பர்களுக்கு,

கறுப்பின விடுதலைக்காக நிறவெறி அடக்குமுறையை நீண்ட போராட்டத்தில் வென்ற நெல்சன் மண்டேலா வாழ்கிற தென்னாப்பிரிக்காவிலிருந்து அனைவருக்கும் வணக்கம். நேரமின்மை, இணைய இணைப்பு கிடைக்காமை காரணமாக வலைத்தளத்தில் சற்று ஓய்வு நேரம். தென்னாப்பிரிக்காவில் வாழுகிற வலையுலக நண்பர்கள் யாராவது இருப்பின் தொடர்பு கொள்ளலாம் என தோன்றியதால் இந்த அறிவிப்பு. தென்னாப்பிரிக்காவில் என்னை தொடர்பு கொள்ள கைத்தொலைபேசி எண்: 0027 78 1766674.

விரைவில் முழுவேகத்துடன் படைப்புகளுடன் சந்திப்போம்.

திரு

Wednesday, June 14, 2006

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை..

பூகோள ரீதியாக இந்தியாவின் கீழே கண்ணீர் துளி போல அமைந்திருக்கும் இலங்கை இன்று இரத்தத் துளியாக மாறியிருக்க காரணம் எது? சுதந்திர இலங்கை அமைய பெற்ற பின்னர் சிங்கள இனவெறிக்கு இலங்கையை நகர்த்திய பண்டாரநாயகாவின் ஆட்சியும் அதை தொடந்து வருகிற இனவெறி கொள்கைகளும் அடிப்படை காரணம். பல படுகொலைகளை, யுத்தங்களை, இடப்பெயர்வுகளை சந்தித்து நார்வே நாட்டின் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ரணில் விக்கிரம சிங்கே தலைமையில் அமைந்த அரசும் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிக சமாதானம் கொண்டுவந்தது.

விமான குண்டு வீச்சுக்களை சந்தித்து பழக்கப்பட்டுப்போன மக்களும் பாதிக்கப்பட்ட தென்னை, பனை மரங்களும் குண்டு சத்தங்களை கேட்டு பல மாதங்கள் கடந்திருந்தது. சமாதானம் பேச கைகோர்த்தபடி புலிகள் இயக்கத்தை உடைக்கும் 'சாணக்கிய' வேலையில் ஈடுபட துவங்கி வடக்கு, கிழக்கு என பிரிவினையை தூண்டி கிழக்கு மாகாண தளபதி கருணாவை பகடைக் காயாக பயன்படுத்தியது. அதை தொடர்ந்து வெடித்த மோதலில் பிரபாகரன் அனுப்பிய படையால் கருணாவும் அவரது அணியினரும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு துரத்தப்பட்டனர். தொடர்ந்து மறைமுகமாக மோதல் துவங்கியது. இந்த மோதலை உருவாக்கிய பெருமை றா, சி.ஐ.ஏ மற்றும் இலங்கை அரசை சார்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட, புலிகள் மறைமுக தாக்குதலை துவங்க இன்று சமாதான புறாவின் இறக்கை பறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சாகடிக்கப்படுகிறது. இந்த மறைமுக யுத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்கள். குடும்பம் குடும்பமாக படுகொலை, பாலியல் பலாத்காரம், காணாமல் போதல் என ஒரு பக்கம். பயத்திலும் பீதியிலும் குடும்பம் குடும்பமாக மண்ணை, உறவுகளை இழந்து படகில் ஆபத்தான பயணம் செய்து 'அகதி' என்ற முத்திரை குத்தப்பட்டு இராமேஸ்வரம் கரையில் சேர்வது இன்னொரு பக்கம். தமிழகம் நோக்கி வரும் வளியில் ஆபத்தில் சிக்கி பிணங்களாக கரையில் ஒதுங்குவது இன்னொரு அவல நிலை. இப்படியான இவர்கள் வாழ்வில் எதற்காக இந்த சோகங்கள்.

சமீபத்தில் இலங்கை, மன்னார் வாங்காலையில் தமிழ்க் குடும்பம் ஒன்றை படுகொலை செய்து வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டதில் சிறு வயது குழந்தைகள் இருவரும் அடக்கம். வீட்டு கூரையில் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் அளவு இந்த சிறார்கள் செய்த கொடுந்தவறு என்ன? தமிழர்களாக ஒரு தமிழ் குடும்பத்தில் இலங்கை அரசின் ஆளுகையில் பிறந்தது அவர்கள் செய்த தவறா? தந்தையை கண் முன்னே கட்டி தொங்க விட்டு கதற கதற கொலை செய்ததை பார்த்த சாட்சிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதாலா? இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய வெறியர்கள் அந்த மழலைகளின் அன்னையாரை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை இரவோடு இரவாக நடத்தியது யார்? அந்த பகுதியில் பகல் வேளையில் இராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும்,கொடிய ஆயுதங்களுடன் மாலை வேளையில் நடமாடியதாகவும் அப்பகுதி மக்கள் சாட்சியளிப்பதில் சந்தேகம் இராணுவத்தை நோக்கி செல்கிறது.

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்படி தமிழர்களுக்கு எதிரான கொலைகள் அதிகரித்து வருவது அரசாங்கம் சமாதானம் மீது நம்பிக்கை இல்லாமல் படுகொலைகளை மீண்டும் ஆயுதமாக கையில் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்தவர்களையோ, வாங்காலை படுகொலையில் ஈடுபட்டவர்களையோ இதுவரை கைது செய்து முறையான விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாராக இருப்பினும் மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களும் குற்றவாளிகளே.

இலங்கை அரச அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்களை மூடி நடத்துகிற படுகொலைகளே இலங்கை என்ற அவரது ஒற்றை தேச கொள்கையை உடைக்கப் போகிற வலுவான ஆயுதம். முரண்பாடுகளின் முடிவு மோதல்களும், மோதல்கள் பிரிவினையிலும் முடிவது அறிவியல் தத்துவம். இலங்கை, தமிழீழம் என இரண்டு தேசங்களை உருவாக்க இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் படுகொலைகளில் ஈடுபட, உலகக்காவல்காரனும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மனித உரிமைகளை சவப்பெட்டியில் ஆணியடித்து அடக்கம் செய்கிறது. விடுதலைக் குரல் கொடுத்த மக்கள் வென்றதும் வல்லமை பொருந்திய அரசுகள் வீழ்ந்ததும் வரலாற்றின் பக்கங்களில் பலவற்றை காணலாம். அந்த பட்டியலில் விரைவில் தமிழீழ மக்களும், இலங்கை அரசும் இரு வேறு இடங்களில் இடம் பெறுவர். எல்லைக் கோடுகளை விட மனித மதிப்பீடுகள் உயர்ந்தவை. விடுதலைக்காக எல்லையை பங்கிடலாம், எல்லைக்காக மனித மாமிசத்தை கூறு போடலாமா?


திரு